Wednesday 21 August 2013

பொய்மை ஆடைகள்

கதை கவிதை
எழுதும்
எழுத்தாளன் இவன் !
கொஞ்சம் கவனமாகப் பழகு!
இவனிடத்தில் என்றான் நண்பன் !
ஏன்? என்றேன் நான்

எழுத்தாளனின் வேலை
கவனித்தல் மட்டுமே !
கவனித்ததை பின்பு
காகிதத்தில்
கொட்டுவது மட்டுமே !

மின் அஞ்சல் போலவே
மூளை அஞ்சலில்
ஏற்றி வைப்பான் எழுத்தாளன்
தன் முன்னால் தென்படும்
முரண்பாடுகள் அத்தனையையும் !

என்றோ எடுத்தால்
எழுது கோலின் கால்களுக்குள்ளே
மூளை அஞ்சல்
பதிவுகள் எல்லாம்
மொத்தமாய் வந்து வந்து
கொட்டி நிற்கும்.

கொட்டுகின்ற மூளை அஞ்சல்
எதிரி என்றோ நண்பன் என்றோ
உறவு என்றோ
எதுவும் பார்க்காது அவ்விடத்தில் !

அன்று மனதில் விழுந்த
முரண்களை எல்லாம்
மொத்தமாய் காகிதத்தில்
முக்கி முக்கி
கொட்டித் தீர்க்கும்
பிரசவிக்கும் தாய்போல !

எழுத்துப் பிரசவத்தில்
அழகு நிலா பிள்ளைகளும்
இலக்கியமாய்ப் பிறக்கலாம்!
அய்யகோ ! அவலட்சணம்
எனச்சொல்லும் பிள்ளைகளும்
பிறக்கலாம் !

ஆனால் பிறக்கின்ற
குழந்தை அம்மணமாகத்தான்
பிறக்கும் !
நீ இட்டுக் கட்டிய
பூசி மெழுகிய
பொய்கள் எனும்
ஆடைகள் எல்லாம்
அவிழ்ந்து அங்கே
அம்மணமாய் உண்மைகள்
சிரிக்கும்போது
கழற்றப்பட்ட ஆடைக்காரனாய்
நீயும் கூட இருக்கலாம் !
நீ போட்டு மெழுகிய
பொய்மை ஆடைகள் எல்லாம்
அங்கே அக்கு அக்காய்
கழற்றப்படலாம் !

ஆதலால்
பார்த்துப்பழகு !
உண்மையாகப் பழகு !
கதை கவிதை
எழுதும் அவனிடம்
பார்த்துப் பழகு !
கவனமாகப் பழகு !
உண்மையாகப் பழகு ! என்றான்.


எழுதியவர் : வா.நேரு
நாள் : 7-Aug-13, 7:30 am
நன்றி : எழுத்து.காம்

No comments: