Thursday 5 September 2013

அண்மையில் படித்த புத்தகம் : ஆதலினால் காதலித்தேன்

அண்மையில் படித்த புத்தகம் : ஆதலினால் காதலித்தேன்
நூலின் ஆசிரியர் : பொள்ளாச்சி அபி
பதிப்பகம் : சிவச்சந்திரா பதிப்பகம் , புதுச்சேரி -3
முதல் பதிப்பு : 2012
மொத்த பக்கங்கள் : 184, விலை ரூ 120

எழுத்து.காம் என்னும் இணைய தளம் தமிழில் கவிதை, கதை எழுதுபவர்களின் வேடந்தாங்கல். பல நாட்டு பறவைகள் வந்து அடையும் வேடந்தாங்கல் போல , பல நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் படைப்புக்களைப் பதியவும், பதிந்ததைப் பலர் படித்து கருத்து கூறவும் தமிழர்களுக்கு மிக்க வாய்ப்பாய் அமைந்த பொது எழுத்து மேடை. இணையத்தின் நேர்மறையான பலனின் விளைச்சல் எழுத்து.காம் இணையதளம். அதில் நான் எழுதிய 'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே ' என்னும் சிறுகதை , சிறந்த சிறுகதையெனத் தேர்ந்த்டுக்கப்பட்டு அதற்காக தபாலில் சான்றிதழும் , அருமையான இரண்டு புத்தகங்களும் எனது வீடு நோக்கி வந்தன, அவற்றில் ஒன்று இந்த 'ஆதலினால் காதலித்தேன் ' என்னும் புத்தகம் மற்றொன்று அய்யா தி.அமிர்தகணேசனின் 'ழகரக்காரனின் முக நாக்கு ' என்னும் புத்தகம் .

ஆதலினால் காதலித்தேன் என்னும் நூல் தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் தன் வரலாறு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தத் தன் வரலாறு , அவரின் வாழ்க்கைப்போக்கில் குறுக்கிட்ட பெண்களின் வரலாறு. காதலிப்பது என்பதை அன்பு செலுத்துவது என்னும் பொருள் எடுத்துக்கொண்டு அவர் அன்பு செலுத்திய பெண்களையும், அவரிடம் அன்பு காட்டிய பெண்களையும் பற்றிய வரலாறு..இந்தப் புத்தகம் ' சாதி மதங்களை மறுத்து சமத்துவம் நாடி இரு மனம் கலந்து திருமணம் புரிந்த காதலர்கள் அனைவருக்கும் ' எனக் குறிக்கப்பட்டு இருக்கிறது முதல் பக்கத்திலேயே. 'ஈர்ப்பினோடு ஒன்றிவிடுவதான வெற்றியே காதல் ' என அரிய நாச்சியும், 'சரமாகத் தொடுக்கப்பட்ட சாராம்சங்கள் ' என சோழவந்தான் புலமி அம்பிகாவும் முன்னுரை அளித்திருக்கின்றார்கள். ' சுய அனுபவங்களின் உணர்வுகளும் உன்னதங்களும் கலந்த ஒரு கலவையாக இக்குறு நாவல் நம்மை நெகிழச்செய்கிறது ' என புலமி அம்பிகா குறிப்பிடுவது உண்மை..

உண்மையாக, நேர்மையாக எழுதப்படும் எதுவும் படிக்கும் வாசகனை ஈர்க்கும். தன் முனைப்பு இல்லாமல் , தன் வாழ்வின் நிகழ்வுகளை விவரித்துக்கொண்டு செல்லும் பாணியால் படிப்பவரை ஈர்க்கின்றார் இந்த நூல் ஆசிரியர். இந்த குறு நாவலில், பொள்ளாச்சி அபியின் தன் வரலாறு உண்டு, வர்ணனை உண்டு, கதை உண்டு, சில பக்கங்களின் நிகழ்வுகள் கவிதைகளாகவே உண்டு, அவர் எழுதிய திரை இசை மெட்டில் அமைந்த பாடல் உண்டு , காதலிப்பவர் படும் அவஸ்தைகள் உண்டு, காதலிக்க நினைப்பவர்கள் கருத வேண்டியவை எவை, எவை எனப் பட்டியல் உண்டு ,அனைத்தும் கலந்த் கலவையாக ஆனால் உண்மை என்பதே பக்கங்களைக் கோர்க்கும் நூலாக இருக்கின்றது. அதுவே இந்த குறு நாவலின் வெற்றியாக இருக்கின்றது. மொழியின் வாயிலாக தன் வாழ்வை மொழிந்து , இந்த அற்புதமான இலக்கியத்தைக் கொடுத்திருக்கின்றார் பொள்ளாச்சி அபி.

எழுத்து.காம் இணையதளத்தில்  எழுதும் பலரின் கவிதைகள், ஒரு அத்தியாத்தைத் தொடங்கும்முன் இருக்கும் தலைப்புக் கவிதைகளாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தன் சக எழுத்தாளர்களையும் மதிக்கும் மாண்பு தெரிகின்றது. அப்படி பாரதிராஜ்,அகாரா, முத்து நாடன், பிரபா பன்னீர்செல்வம், எஸ்.ராஜேந்திரன், நவீன்குமார்,சங்கரன் அய்யா, காளியப்பன் எசேக்கியல், இன்போ அம்பிகா, ரமேஷ் ஆலம், தூ.சிவபாலன், கவிதாயினி, கோமதி, நாணல், தம்பு, சி.பொற்கொடி, பொ.கவியமுதன், ஹரிஹரி நாராயணன், புலமி அம்பிகா, பாஷா ஜமீல், அனிதபாலா, நிலா சூரியன், ஜாவித் மியாண்டெட், ரெள்த்திரன், பொள்ளாசி அபி, அகன், அனுசரண், தமிழ்தாசன் எனப் பலரின் கவிதை வரிகள் முகப்பு வரிகளாக மின்னுகின்றன அத்தியாயங்களின் நுழைவு வாயிலில். அதனைப் போலவே ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் படங்களோடும் ஆரம்பிக்கின்றது.

தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு போராட்டமாக இருந்தது என்பதனை பொள்ளாச்சி அபி பல இடங்களில் குறிப்பிடுகின்றார். 'இப்போதெல்லாம் எனக்குப் பட்டறையில் இரவு நேரப்பணியும் கொடுக்கப்பட்டது. மிக் நீளமான அளவுள்ள் இரும்பு ராடுகளை , கட்டிங் மிஷின் மூலம் , குறிப்பிட்ட நீளமுள்ளவையாக அறுத்து வைப்பது ...' அதில் நேரத்தை தொழில் நேர்த்தியின் மூலம் மிச்சப்படுத்தி , ' அடுத்த் நாள் இரவுப்பணிக்குச்சென்றபோது , ஒரு நோட்டையும் எடுத்துச்சென்றேன். ஓய்வின்போது எதையாவது எழுதலாம் என்று நிறையக் கருத்துக்களை மனதில் அசை போட்டுக்கொண்டேன்.அதனைச்சிறியதும் பெரியதுமான கவிதைகளை நோட்டில் பதிவும் செய்தேன். அழுக்கும் , எண்ணெய்ப் பிசுக்கும் .மையின் நீலமும், எழுதாத இடத்தின் வெள்ளையுமாக , அந்த நோட்டே ஒரு சிறிய வானவில் போல எனக்கு மிகவும் ரசிக்கத்தக்க வண்ணம் காட்டியது. வாரம் ஒரு முறை அதனை வீட்டிற்கு எடுத்து வந்து, அதில் எழுதப்பட்டவற்றை விரித்தோ, சுருக்கியோ, திருத்தி மற்றொரு நோட்டில் எழுதி வைக்கவும் தவறவில்லை " (பக்கம் 50) - படாத பாட்டிலும் பொள்ளாச்சி அபியின் ஈடுபாடு எனக்கு மார்க்ச்சிம் கார்க்கியின் இளைய வயது வரலாற்றை ஞாபகப்படுத்தியது. பசியை ஆற்ற ஓடி ஓடி பல்வேறு தொழில்களை வேலைகளைப் பார்த்த மார்க்ச்சீம் கார்க்கி புத்தகத்திற்காகவும் ,எழுதவதற்காகவும் பட்ட பாடு , ஆனால் அவரின் ஆர்வம்தான் மார்க்ச்சீம் கார்க்கியின் ஏழ்மையைத் தொலைத்து , உலகப் புகழைத் தந்தது, தமிழில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் எனப் பலரைச்சொல்ல முடியும். வயிற்றுப்பாட்டுக்கு படாத பாடு பட்டதோடு வாசிப்பையும் , எழுதுவதையும் கை விடாதவர்களை.. அவர்களைப் போல பொள்ளாச்சி அபி எனக்குத் தெரிகின்றார். விளிம்பு நிலை மக்களின் துயரத்தை தனது எழுத்துக்களில் பதியும் பொள்ளாச்சி அபி இன்னும் நிறைய எழுத வேண்டும்.

தான் எழுத வேண்டும் என்று முடிவுசெய்தபோது ' எழுதுவதை தாய், தந்தை, சகோதரி, இன்னும் யார் படிக்கக்கேட்டாலும் தைரியமாய் கொடுக்கும் வகையில் படைப்புகள் இருக்கவேண்டும் என்று எனக்குள் ஏற்பட்ட தீர்மானம் இறுகிக்கொண்டே வந்தது ' (பக்கம் 51) என்னும் நூல் ஆசிரியரின் முடிவு எழுத வேண்டும் என்று நினைக்கும் எல்லோரும் மனதில் எடுத்துக்க்கொள்ள வேண்டிய முடிவு.

உள்ளடக்கங்களைப் பற்றி எழுதினால் , பக்கம் பக்கமாக எழுத இயலும் என்றாலும் பெண்களின் நிலை பற்றிப் பேசும் பக்கங்கள் 54-55, சரோவினைப் பற்றிய பதிவுகள் 45-46...,தாகீராவிடம் ஏற்பட்ட காதல், அதனை எதார்த்தமாக இருவரும் எதிர்கொண்ட விதம்- 'அவ்வாறான தேவைகள் எதுவும் இப்போது எனக்கில்லை'பக்கம் 68 , நூலகத்திற்குச்சென்று படித்தது ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் 'தாய் , தந்தை , நட்பு, சினிமா,என்ற எல்லாமும் எனக்குக் கற்றுக் கொடுத்ததை விட புத்தகங்கள் மிக அதிகமாக- நாம் நன்றாகப் புரிந்து கொள்ளும்வரை , பொறுமையாய் நிறையக் கற்றுக் கொடுத்தது ' பக்கம் -73 , ' உடனடி பணப்பலன் கிடைக்கிறது என்பதற்காக நான் ஒரு சுமை தூக்கும் -கலாசித் தொழிலாளியாக மாறிப்போனேன்' பக்கம் 91 போன்ற செய்திகளைக் கொண்டே நிறைய எழுதலாம்.

பாட்டு பாடியதற்காக இன்னொரு முறை படகில் சுற்றி வரச்செய்து பாராட்டிய படகோட்டியின் பரிசு ' அந்த எளிமையான மனிதரின் வலிமையான செய்கை ' பக்கம்-127 , மாரிமுத்து என்னும் ஆசிரியரைப் பார்த்த்வுடன் .... 'ஆசிரியர்கள் எப்போதும் இரண்டாவது தாய் தந்தையர்கள் அல்லவா ? ' பக்கம் 151 போன்று நுட்பமான செய்திகள் நூல் முழுக்க பரவிக்கிடக்கின்றன. தொழிற்சாலை, அதில் தொழிற்சங்க ஈடுபாடு, தன்னைப் போலவே தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட பிரேமாவின் சந்திப்பு, இருவருக்கும் ஏற்படும் காதல், 'அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாமல் அநீதி களைய முடியாது ' என்பது தொழிற்சங்கக்கோஷம் என்றாலும் , ஆர்ப்பரித்துப் போராடி அநீதி களைந்ததற்காக அநியாயமாக முதலாளிகளால் வேலையை ராஜினாமா செய்யச்சொல்லப்பட, யாருக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களே அமைதியாக இருக்கும் எதார்த்தம் , பின்பு தனித்தொழில் , மத மறுப்புத் திருமணமாய் முடிந்த காதல் என மிக எளிமையான தன் வரலாற்று நூலாக அமைந்துள்ளது அருமை. அக்பரும், பிரேமாவும் ஒரு மனதாய் இணைந்தது மட்டுமல்ல, இல்லறத்தில் சிறந்த, நல்லறம் புரியும் பறவைகளாய் இருபது ஆண்டுகளுக்கும் மேலாய் சமூக பிரிவினைகளுக்கு சாட்டையடி இணையராய் வலம் வருவது வாழ்த்தலுக்குரியது, பாராட்டுக்குரியது. எழுத்து ஆற்றல் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, அவரை எழுதத் தூண்டி, அந்த எழுத்தை புத்த்கமாகக் கொண்டு வந்து,'ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாய் ' இப்புதின ஆசிரியருக்கு அமைந்த தோழர் அகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு இரண்டு மாத இடைவெளிக்குள் , தன்னுடைய மனதில் பதிந்த சுவடுகளை , வண்ணக் கோலமாய் வரைய நூல் ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு வாய்ப்பு அளித்த எழுத்து இணையதளம் மிகுந்த பாராட்டிற்கும் , நன்றிக்கும் உரியது. அதனைப் போலவே எழுத்துவில் பொள்ளாச்சி அபி எழுத , எழுத ஊக்குவிக்கும் அருமருந்தாய் அமைந்த பின்னூட்டங்கள், அதனை எழுதிய எழுத்துத் தோழர்கள், தோழியர்கள் அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நூல் எழுத்து.காம்- இணையதளத்தின் வெற்றி, அதில் இணைந்துள்ள தோழர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் . 'ஆதலினால் காதலித்தேன் ' புத்தகத்தை வாங்கிப் படித்துப்பாருங்கள், வீட்டு நூலகத்தில் பாதுகாத்து வையுங்கள்.

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அன்புத் தோழர் நேரு அவர்களுக்கு வணக்கம். சிறுகதைக்குக் கிடைத்த பரிசுநூலுக்கு இதைவிடச் சிறந்த பரிசை நீங்கள் தரமுடியாதுதான். தங்கள் தளத்தில் அதிகமாக இயங்க நேரம் ஒதுக்குங்கள். அது இன்றைய நம் சமூகத் தேவையும்கூட. நம்மைப் போலும் சிந்திப்பவர்களின் கருத்துகள் நிறையப் பேரைச் சென்று சேரவேண்டும் என்பதாலேயே தங்கள் வலைப்பக்கத்தை எனது வலை-இணைப்பில் தந்திருக்கிறேன். நட்பு வலை விரியட்டும்.

முனைவர். வா.நேரு said...

"தங்கள் தளத்தில் அதிகமாக இயங்க நேரம் ஒதுக்குங்கள். அது இன்றைய நம் சமூகத் தேவையும்கூட." மிக்க நன்றி தோழரே. தங்களின் க்ருத்திற்கு, முயற்சி செய்கிறேன் இன்னும் கொஞ்சம் அதிகமாக்க,