Wednesday 27 November 2013

நிகழ்வும் நினைப்பும்(10) : கால தாமதமும் தண்டனையும்

இன்று(26.11.2013)  காலை மதுரை தியாகராசர் கல்லூரி விலங்கியல் துறைப்பேராசிரியர் திருவள்ளுவன் மற்றும் மதுரைக் கல்லூரி கணிதப் பேராசிரியர்  தர்மலிஙகம் ஆகியோரைச் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பேரா.திருவள்ளுவன் அவர்கள், தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் கதையைச்சொன்னார். டாக்டருக்குப் படித்தவர் கிராமத்தைச்சேர்ந்தவர். சில மைல் தூரம் நடந்து வந்து பேருந்தைப் பிடித்து , மருத்துவக்கல்லூரிக்கு வரும்போது , வகுப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வரும் நிலை. தினந்தோறும் இதனைப்போல் இந்த மருத்துவ மாணவர் தாமதாக வருவதைப் பார்த்த , ஆசிரியர் கண்டிக்கின்றார். நாளை முதல் இப்படி வரக்கூடாது என்று சொல்கின்றார். மருத்துவ மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கப்பணமில்லை. கிராமத்திலிருந்து வருவதற்கு , ஒரு பேருந்தை விட்டால் வேறு வழியில்லை, தினந்தோறும் மிகக் கடினமாக 3 மைல் 4 மைல் நடந்து,பின்பு  பேருந்தைப் பிடித்து  ஏறி வந்து வகுப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வருவதைத் தவிர வேறு வழியில்லை. கண்டிக்கும் ஆசிரியர், சில நாட்களில் வகுப்பிற்கு உள்ளே வராதே, வெளியில் நில் எனச்சொல்ல, வெளியில் தினந்தோறும் பல்  நாட்கள் நிற்கின்றார். வெளியில் நிற்கும் நேரத்தில் , அந்த அரை மணி நேரத்தில் ஜன்னல் வழியாகப் பாடஙளைக் கேட்டு,குறிப்பு எடுத்து நல்ல மதிப்பெண் பெறுகின்றார். சில நாட்களில், இவரது நேரத்திற்கு வர இயலாமை,ஏழ்மையப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள் , வகுப்பிற்குள் அனுமதிக்கின்றார்கள்.Winning the heart என்று சொல்வார்களே , அப்படி பேராசிரியர்களிடம் தனது பக்க நியாயத்திற்காக சண்டை போடாமல், பொறுமையாகத் தனது நிலையை உணர்த்திய மருத்துவ கல்லூரி மாணவர் தன்னுடைய பொறுமையான அணுகுமுறையால் வெற்றி பெற்றார்.  பின்பு படித்து இன்று புகழ் பெற்ற மருத்துவராக இருக்கின்றார் எனச்சொன்ன போது என் கண்கள் பனித்தன.
                                   
                                     வெளியில் வந்தவுடன் என் அருகிலிருந்த மகன் சொ. நே. அன்புமணி ஏன் இதைக் கேட்டு, உணர்ச்சி வசப்ப்பட்டீர்கள் என்றான். எனக்கும்  கூட இப்படி அனுபவம் உண்டு என்றேன் அவனிடம். 1980-களில் தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியில் +2 படித்தபொழுது, சாப்டூரில் இருந்து காலையில் 7 மணிக்குப் பேருந்து. அதனை விட்டால் 8.50 க்குத் தான் பேருந்து. ஒன்று காலையில் வெகு சீக்கிரம் கிளம்பி 9 மணிக்குப் பள்ளிக்கூடத்திற்கு 7.30க்கு போய் விடுவேன். அப்படி இல்லையென்றால் 8.50 பேருந்தில் போனால் 9.30 க்குத்தான் பள்ளிக்குப்போக முடியும். அப்பொழுது +1 வேதியியல் ஆசிரியர் சுதந்திர மணி என்பவர். என்ன , உனக்கு மட்டும் 9.30 க்குப் பள்ளிக்கூடமா, மற்றவனுக்கெல்லாம் 9-ம்ணிக்கா என்பார். ஆனால் வகுப்பிற்கு உள்ளே சென்று அமர அனுமதிப்பார். எனது அம்மா ஆசிரியரென்றாலும் காலையில் 3 மணிக்கு எழுந்து, மாடுகளுக்கு தண்ணீர் வைத்து, இரையப் போட்டு, பால் பண்ணைக்காரர்களுக்கு பாலைக் கறந்து ஊத்தி , 5 பிள்ளைகளையும் பார்த்து பள்ளிக்கு அனுப்பி என்று இயந்திரம் போல வேலை பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு மட்டும் காலை 7 மணிக்குள் சோறாக்கி கொடுத்து விடுவது சாத்தியமில்லை, 7 மணிக்குப் போகும் சில நேரஙகளில் பழைய சோறோடு போவேன். சில  நாள் 8.50 வண்டிக்குப் போனேன். சுதந்திர மணி சார் நம்மை, 9.30 மணிக்கு அனுமதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு போனேன். ஒரு நாள் தலைமை ஆசிரியர் பள்ளியைச்சுற்றி வரும்போது , என்னக்கூப்பிட்டு, என்ன் லேட்டாக வருகிறாய் என்றார். அப்படியே அழைத்துக்கொண்டு, வேதியியல் ஆசிரியரிடம் வர, சுதந்திர மணி சார் என்னைக் காப்பாற்றுவார் என நினைக்க, தலைமை ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். " அய்யா, இவனுக்கு மட்டும் பள்ளிக்கூடம் 9 மணிக்குப் பதிலாக, 9.30க்குத்தான், தினந்தோறும் இப்படித்தான் வருகின்றான் " என்று சொல்ல, திட்டும் அடியும் விழுந்தது. நான் வேண்டுமென்றே செய்யவில்லை, தாமதமாக வந்தது , எனது சூழல் , வசதியின்மை அப்படி இருந்தது. புரியாமல் நம்மைத் திட்டுகிறார்களே என்று பல நாள் வலித்தது. பின்பு கால ஓட்டத்தில் மறைந்து போன நினைவுகளை பேரா.திருவள்ளுவன் சொன்ன நிகழ்வு ஞாபக்ப் படுத்தியதால் கண் கலங்கினேன் என்றேன் என் மகனிடம். " உங்களோடு துயரமப்பா, ஆ,ஊன்னு உடனே பிளாஸ் பேக் போயி விடுவீங்க  " என்றான் என் மகன் என்னிடம் .  " என்ன செய்வது, அன்பு ,இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும் வசதியும் , வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை " என்றேன். " பேருந்தில் அதிகக்கூட்டம் இருக்கும், பேருந்திற்குள் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல், பேருந்தின் மேற்கூரையில் (டாப்பில்)ஏறிப் பல நாட்கள் போயிருக்கின்றோம். கரண்ட் வயர் வரும்போது மட்டும் ,குனிஞ்சிக்க, குனிஞ்சிக்க , கரண்ட் வயர் வருது " என்று கத்து வோம். அப்படித்தான் நாங்கள் படித்தோம என்றேன்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மலரும் நினைவுகள் என்றுமே சுகமானவை.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே !ஆமாம், நேற்றைய நிகழ்வுகளை நினைத்தால் இன்று வாய் விட்டுச்சிரிக்கலாம்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

தங்களின் இயல்பான பதிவில் கடந்த தலைமுறையின் கடின உழைப்பும் புரிந்தது. எனக்கும் இதுபோல ஆனால் வேறுமாதிரி அனுபவம் உண்டு தோழரே! எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. பெரும்பாலான நாள்கள் சாலை மின்விளக்கிலும், வீட்டில் “சிம்னி“ விளக்கிலும்தான் படித்தேன். 11ஆம் வகுபபுப் படிக்கும்போதுதான் எங்கள் அப்பா அரிக்கேன் விளக்கு வாங்கித் தந்தார் என்றால், என் பிள்ளைகளுக்கு அரிக்கேன் விளக்கை விளங்கிக்கொள்ளவே ஒருவாரம் ஆயிற்று (சந்தையில் போய் வாங்கிக்கொண்டு வந்து காட்டினால்... இது நைட்லேம்ப் ல? என்றான் என் மகன்!) இப்ப...? இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு வாய்ப்பும் அதிகம் இடையூறும் அதிகம். சிறப்பான பதிவு.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே! பதிவுகளிலாவது கடந்து வந்த பாதையை ,இன்றைய தலைமுறைக்குச்சொல்ல முயல்வோம் என்பதுதான் எனது முயற்சி.