Sunday 9 February 2014

நிகழ்வும் நினைப்பும் (18) :இறையன்புவின் படைப்புலகம்

மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 'இறையன்புவின் படைப்புலகம் '; என்னும் தலைப்பில் நிகழ்ந்த ஆய்வரங்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாழும்போதே படைப்பாளி, தனது படைப்புகள் குறித்த பாராட்டுக்களையும் , விமர்சனங்களையும் நேரிடையாக்க் கேட்பது அரிது. அதிலும் யூ.சி.ஜி. யும் , ஒரு கல்லூரியும் இணைந்து, படைப்பாளியின் படைப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆய்வரங்கம் நடத்துவது அரிது, அரிது. எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுகளுக்கு முன்னால் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்புகள் பற்றி நடந்தது. அதனைப்போல திரு. வெ.இறையன்பு அவர்களின் படைப்புகள் பற்றி 8, 9 நாட்களில் நடந்த ஆய்வரங்கம் குறிப்பிடத்தக்க நிகழ்வு.

                                        சென்னையில் 8.2.2014 அன்று நடந்த கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டு  தொடங்கி வைத்திருக்கின்றார். ம்துரையில் திரு. பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையேற்று ஆய்வரங்கத்தை முடித்து வைத்தார்கள். காலை 10 மணிக்கு திரு.வெ.இறையன்பு அவர்கள் 'வையத் தலைமை கொள் ' என்னும் தலைப்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பயிலும்  மாணவ மாணவிகளுக்கு  அருமையான உரையை நிகழ்த்தினார். தலைமைப் பண்பு என்றால் என்ன. ஒரு நிர்வாக்த்தில் தேவைப்படும் தலைமைப்பண்பு, புதிதாகக் கண்டு பிடித்தவர்கள் எல்லோருமே 35 வயதிற்குள்தான், நிறுவனங்கள் இன்று அனுபவசாலிகள் தேவை என்று கேட்பதில்லை, அனுபவசாலிகள் புதிதாக சிந்திப்பதில்லை, மாற்றி யோசிப்பதில்லை என்பதையெல்லாம் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். பின்பு மாணவ , மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு மாணவன் தேர்வில் இப்படிக்கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள் என்று ஒரு புதிரைக் கேட்க, புதிரெக்கல்லாம் பதில் சொல்லி , தேர்வாகி வந்து விட்டோம் , அய்.ஏ.எஸ்.தேர்வு குறித்து , படைப்புகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்றார். உண்மைதான், என்ன கேள்வி கேட்பது என்பது புரிந்தாலே , பல விசயங்கள் எளிதாகப் புரிந்து விடும். நான்கு அறைகளில், கட்டுரையாளர்கள் 'இறையன்புவின் படைப்புகள்' பற்றி
 கட்டுரைகள் வாசித்தார்கள். மொத்தம் 190 கட்டுரைகள், மூன்று பாகங்களாக புத்தகங்கள் 'இறையன்புவின் படைப்புலகம்' என்னும் தலைப்பிலே வெளியிடப்பட்டது.

                                    190 கட்டுரையாளர்கள், பல துறை சார்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்கள் சார்ந்தவர்கள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணை வேந்தர் மதிப்பிற்குரிய நல்.ராமச்சந்திரன் அவர்கள். , கவிஞர் வைரமுத்து அவர்கள், பேரா. டாக்டர். கு.ஞானசம்பந்தன் அவர்கள்,முன்னாள் நீதிபதி சந்துரு    போன்றவர்கள் இறையன்புவின் படைப்புகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பதிந்துள்ளார்கள். 190 கட்டுரையாளர்களில் நானும் ஒருவனாக எனது கருத்தினைப் பதிந்து, கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். அந்த வகையில் சார்பாளராகவே கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பேரா. டாக்டர். கு.ஞானசம்பந்தன் அவர்கள், தனது கட்டுரையில் எனது முனைவர் பட்ட ஆய்வினை, 'இறையன்புவின் படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ' என்னும் தலைப்பில், அவரது நெறியாளுகையில் மேற்கொண்டதைக் குறிப்பிட்டிருந்தார்.

                                            திரு.பொன்ன்மபல அடிகளாரின் உரை ஆற்றொழுக்காய், ஆழ்ந்து இறையன்புவின் படைப்புகளை படித்து உள்வாங்கியதன் அடையாளமாய் அருமையாக அமைந்தது. தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ம.திருமலை அவர்கள், எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன்  போன்றோர் அவர்களுக்கே உரித்தான பாணியில் தங்கள் உரையைத் தந்தனர்.முனைவர் ம.திருமலை அவர்கள், இந்த நிகழ்வுக்குக் காரணம் பேரா. நம்.சீனிவாசன் அவர்கள் என்பதனையும், அவரின் தனித்தன்மையையும் மிக அருமையாக பதிவு செய்தார்.

                                    பேரா. நம்.சீன்வாசன் அவர்கள் தனித் தன்மை வாய்ந்தவர். நேர்மையின் வடிவமாகத் திகழ்பவர். தன் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவர்களின் அன்பினைப் பெற்றவர்(அரங்கில் நம்.சீனிவாசன் என்றவுடன் எழுந்த கைதட்டல இதனை நிருபித்தது).திராவிடர் கழகத் த;லைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். எதைச்செய்தாலும் முழுமையாகச்செய்ய வேண்டும் என மெனக்கிட்டுச் செய்பவர். மிக அபூர்வமான ,ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் மன்னர் கல்லூரியில் நடைபெறக் காரணமாக இருப்பவர். கல்லூரி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பினை தனது அணுகுமுறையால் பெற்றுக் கொள்பவர். கல்லூரியின் செயலாளர் அய்யா விஜயராகவன், மற்றும் மற்ற  நிர்வாகிகளின் மதிப்பினைப் பெற்றவர்.  நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருந்து, தனது பெயர் இருந்தாலும் ,இல்லையென்றாலும் கவலைப்படாதவர். மிக அருமையான தமிழ்ப்பேராசிரியரை, தமிழ்ப்பல்கலைக் கழக்த்தின் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை அவர்கள் உளமாற , மனதர்ரப் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது. பெரியாரியலை வாழ்வியலாகக் கடைப்பிடிக்கும் பேரா. நம்.சீனிவாசன் அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டு , நம் எல்லோருக்கும் கிடைக்கும் பாரட்டுதானே!. முடிவில் திரு வெ.இறையன்பு அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.  உணர்ச்சியும் எழுச்சியுமாக , அவர் ஆற்றிய உரை , கேட்டவர்களின் மனதில் ஆழமாய்ப் பதிந்த உரை. முழு நாள் முழுவதும் மதுரை ஆடிட்டர் திரு சண்முகசுந்தரம் அவர்கள், கோடைப் பண்பலை வானொலி இயக்குநர் திரு.சுந்தர.ஆவுடையப்பன் அவர்கள் , தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு.பசும்பொன் அவர்கள், திராவிடர் கழக மண்டலச்செயலாளர் திரு.மீ.அழகர்சாமி மற்றும் நண்ப்ர்களோடு .ஒரு மாறுபட்ட அனுபவமாக அமைந்த நிகழ்வாக , எனக்கு  இந்த நிகழ்வு அமைந்தது.

2 comments:

கருப்பையா.சு said...

இறையன்பு அவர்களை ஒரு இலக்கியவாதியாக மட்டுமே எனக்குத் தெரியும். அவருடைய எழுத்துக்கள் சமூகத்திற்கு உரமாக இருந்து பல விழுதுகள் தோன்றினால் அதுவே அவருக்கு மகிழ்ச்சி தரும் என்று கருதுகிறேன். இது போன்று, பல கல்லூரிகளில் அவர் உரை நிகழ்த்த வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு அவர் ஒரு விடிவெள்ளி என்று தான் எனக்கு தோன்றுகிறது.

முனைவர். வா.நேரு said...

'பல விழுதுகள் தோன்றினால் அதுவே அவருக்கு மகிழ்ச்சி தரும்' .எழுதுவதற்கான அவரின் நோக்கமும் அதுவாகத்தான் தோன்றுகிறது. நல்லவற்றை சுட்டிக் காட்டுவதும், அதன் மூலம் இன்னும் பலர் நன்மை செய்ய முன் வரவைப்பதுமே, அவரின் நோக்கமாக அவரின் எழுத்திலும், பேச்சிலும்,செயலிலும் தென்படுகின்றது.