Thursday 9 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : மதமும் அறிவியலும் -கே.ஆர்.பாலாஜி

அண்மையில் படித்த புத்தகம் : மதமும் அறிவியலும்
ஆசிரியர்                                          :  கே.ஆர்.பாலாஜி
வெளியீடு                                         : ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14
முதல்பதிப்பு                                    : 2014, மொத்த பக்கங்கள் : 104, விலை ரூ 65

                                                                      ' மதமும் அறிவியலும்' என்னும்  இந்தப்புத்தகத்தை மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் த்லைவர் அண்ணன் சுப.முருகானந்தம் அவர்கள் கொடுத்து    படிக்கச்சொன்னார். படித்து முடித்து விட்டு , எனக்கு இந்த நூலில் சில விமர்சனங்கள் இருக்கின்றன, நான் அதனை பதியப் போகிறேன் என்றேன். தாராளமாகப் பதியுங்கள் என்றார்
.
                        மதம் என்றால் என்ன , அறிவியல் என்றால் என்ன என்பதனை தன் மகனுக்கும் தனக்குமான உரையாடலில் இருந்து ஆரம்பித்து, மிக எளிமையாகக் கதை கூறும் பாணியில் நூலினைக் கொண்டு செல்கின்றார் பாலாஜி. மதம் என்றால் என்ன, மத வழி அணுகுமுறைகள் எவையெவை என்பதனையும், அறிவியல்-அறிவியல் வழி அணுகுமுறை என்றால் என்ன என்பதனையும் சொல்லிச்செல்கின்றார்.
" கடவுள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திதான்  பிரபஞ்சத்தைப் படைத்து இயக்கி வருகிறது என்ற நம்பிக்கை, அந்தக் கடவுளை வழிபடுவதற்கான சடங்குகள், இவற்றோடு இணைத்து வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் ஆகியவற்றின் தொகுப்பே மதம் என்ற பொருளில் விக்கிபீடியா என்னும் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது " பக்கம் 15 எனக்குறிப்பிட்டு மதத்திற்கு ஏங்கெல்ஸ் தரும் விளக்கமும் தருகின்றார். மதங்கள் எப்படி உருவாகின, எப்படி இன்றைய நிலைமைக்கு வந்தன என்பதனைச்சுட்டுகின்றார். இந்துமதம், கிறித்துவமதம், இஸ்லாமிய மதம் போன்ற மதங்களின் தோற்ற வரலாறுகளைக் கூறுகின்றார்.

                             " ஒழுங்காகவும் முறையாகவும் தொகுக்கப்பட்ட அறிவே அறிவியல் " பக்கம் 28 எனக்கூறும் நூலாசிரியர்  அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் பல விளக்கங்களைக் கூறுவதையும், மதம் தோன்றிய காலத்திலிருந்து மாறாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதையும் , அதற்கு எதிராக அறிவியல் அடிப்படையில்  ஆராய்ந்தவர்களைத் துன்பறுத்தியதையும் கூறுகின்றார்.

                           அடுத்தடுத்த பகுதிகளில் பிரபஞ்சத்தின் தோற்றம்-இயக்கம் பற்றியும் உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியும் அறிவியல் கூறுவதை மிக எளிமையாகப் புரியும்படி எடுத்துக்காட்டுக்களோடு விளக்குகின்றார். பர்ணாமக் கொள்கைக்கு எதிராக மத நூல்கள் இருப்பதை பக்கம் 50,51 களில் எடுத்துக்காட்டுகின்றார். அடுத்து சமுதாய வளர்ச்சி பற்றியும் , அடிமைகளாக இருந்த மனித இனம் பற்றியும், முதலாளித்துவ, சோசலிச முறைகள் பற்றியும்  இந்த்  நூல் பேசுகின்றது.

                          சமுதாயப் பிரச்சனைகள் என்னும் தலைப்பில் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அலசப்படுகின்றன. மதம் எப்படி எல்லாம் மனிதர்களை மதம் பிடித்தவர்களாக ஆக்குகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் விளக்கப்படுகின்றது. அடுத்து அறிவியலின் மறுபக்கம் என்னும் பகுதியில் அறிவியல் கருவிகளை கைகளில் வைத்துக்கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகள் உலக அழிவிற்கான சூழல் கேடுகளை விளைவிப்பதை விளக்குகின்றது.

                      இந்த அத்தியாயம்வரை எளிமையாக விளக்கி வந்த நூலாசிரியர் தீர்வு என்ன என்னும் பகுதியில் சோவியத் நூல்களை மொழி பெயர்ப்பவர் போல மாறிவிடுகின்றார். " மனிதர்கள் ஏற்படுத்திய சமுதாய் சக்திகள், அதாவது உற்பத்திச்சாதனங்களின் தனியார் உரிமை, சந்தைப் பொருளாதாரம், அதனால் ஏற்படும் ஏற்றதாழ்வுகள், பிறகு சாதி மற்றும் மதத்தினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மனித வாழ்க்கையைத் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன.
                          உற்பத்திச்சாதனங்கள் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைந்து சம்த்துவத்துக்கான பாதையை நோக்கிச்சமுதாயம் திரும்பும். மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சமூக சக்திகள் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் . அப்படி வந்து விட்டால் , புரியாத சக்திகளைப் பற்றிய மனதின் பிரதிபலிப்பு தேவையற்றதாகி விடும். அதாவது ,புரியாத சமூக சக்திகள் எதுவும் இருக்காது.

                            இதயமற்ற ஏறறத்தாழ்வுகளைக் கொண்ட சமுதாயம் , இதயம் உள்ள சமுத்துவம் கொண்ட சமுத்துவமாக மாறும் பொழுது , மதத்திற்கான தேவை  குறைந்து படிப்படியாகச் சாதி மதங்களற்ற சமுதாயமாக மாறிவிடும்  " பக்கம் 102 . மேலே சொன்னவை உடோப்பியா கருத்துக்களாக இருக்கின்றனவே தவிர எதார்த்ததை எதிரொலிக்கும் விதமாக இல்லை. ஒரு அன்னியத்தன்மை வந்து நாம் வாசிக்கும்பொழுதே ஒட்டிக்கொள்கின்றது.  மேலும் பக்கம் 99-ல் " பொதுவாக நாத்திகவாதம் பேசுபவர்கள் மதத்துடன் முட்டி மோதி ஜெயித்து விடலாம் என்றே போராடுகின்றனர். ..."  என்று குறிப்பிடுகின்றார். 21-ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் மதத்தைக் குறித்த மதிப்பீடுகள் வெகுவாக மாறியுள்ளன. மதத்தை விட்டுப் பெரும்பாலானவர்கள் வெளியே வந்து தங்களை மதமற்றவர்கள், கடவுளை நம்பாதவர்கள் என அறிவிக்கின்றனர். ஆனால் நாத்திகவாதம் பேசுபவர்கள் , கொச்சை நாத்திகவாதிகள் என்று 60-களில் பேசிய இடதுசாரிகள் போலவே இந்த நூலின் ஆசிரியரும் பேசுகின்றார்.

                          அண்ணல் அம்பேதகர் 1930-களில் எழுதியபோதே , இந்த நாட்டில் புரட்சி வராது , ஏனெனில் இங்கு  இருக்கும் சாதி அமைப்பு முறை புரட்சி வரவிடாது என்றார்.  ,சாதி  தொழிலாளர்களைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஒன்று சேரவிடாத ஏணிப்படி சாதித்தட்டுகளில் அமர்ந்திருக்கும் சாதி உணர்வு தொழிலாளர்கள் தங்கள் சாதி மதப்பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்,  80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நாட்டில் உள்ள பொதுவுடமை இயக்கங்கள் ஏன் தேய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதனை இந்த நூலின் கடைசி அத்தியாயம் உணர்த்துகின்றது. ஏதோ இரவல் மொழியில் பேசுவது போலவே 'தீர்வு என்ன' என்னும் கடைசி அத்தியாயம் இருக்கின்றது.

                       இந்த நூலை வாசித்தவுடன் எனக்குத் தோன்றிய உணர்வைப் பதிந்திருக்கின்றேன். நான் பதிந்ததை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசித்துப்பாருங்கள்.   உங்கள் கருத்துக்களையும் மறுமொழியாய் பதிவிடுங்கள்.


               

3 comments:

தருமி said...

நல்ல ஆய்வு.
நூலைப்பற்றிய தகவலுக்கு நன்றி

தருமி said...

தகவலுக்காக

முனைவர். வா.நேரு said...

நன்றி பேராசிரியர் அவர்களே.