Wednesday 15 October 2014

அவரவர் வழியில்.......வா. நேரு

                                    
அவரவர் வழியில் 
அவரவர் 
எவரெவரோ எதிரில் 
வருவாரெனினும் 
அவரவர் வழியில் 
அவரவ்ர் 

முகம் சுருக்கி 
கூரிந்து நோக்கி 
முன் பகையை 
மனதில் நிறுத்தி 
முகத்தில் மட்டும் 
புன்னகையோடு 
வணக்கம் வைப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

உனக்கும் அவனுக்குமான 
என்றோ முடிந்த 
பகையை இன்றைக்கும் 
கிளறி விட்டுத் 
திகுதிகுவெனத் 
தீயாய் இனி எரிய 
பழைய நெருப்பின் 
புகை ஏதும் இருக்கிறதா 
என்று வாயைக் 
கிண்டிப்பார்ப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

அதிகாரப் பதவியில் 
அச்சடித்த பொம்மையாய் 
ஆமாம் சாமி போட்டுவிட்டு 
வீட்டுக்கு போனபின்பு 
அது செய்ய வேண்டும் 
இது செய்ய வேண்டும் 
என அடுக்கி 
துணைக்கு வா நீயென 
அழைப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

நெய் ஊற்றிச் 
சோறிட்டாலும் 
எவ்வளவு வெண்ணெயில் 
உருக்கியது இது 
எனக் கேள்வி கேட்டு 
இன்னும் கொஞ்சம் 
அதிகமாக நெய் உருக்க 
கற்றுக் கொடுத்திருப்பேன் 
விபரம் பத்தவில்லை 
உனக்கு இன்னும் 
எனக் குறை தேடிச்சுட்டுபவர் 
வரக்கூடும் எதிரில் 

எவனையும் என் 
வலைக்குள் எளிதில் 
வீழ்த்திட இயலும் 
என இறுமாப்பாய் 
வண்ணத் தோலும் 
வர்ணப்பூச்சும் 
மயக்கும் மொழியும் 
பேசுவோர் எவரேனும் 
வரக்கூடும் எதிரில் 

எவரெவர் எதிரில் 
வரினும் 
எதற்காக அவர் உன் 
அருகில் வருகின்றார் 
எனும் தன்மை 
அறியும் தகுதி 
உனக்கு இருப்பின் 
அவரவர் வழியில் 
அவரவர் !


  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 12-Sep-14, 8:58 pm
  • Nantri: Eluthu.com

3 comments:

தமிழ் ஓவியா said...

அருமை அய்யா அருமை. யதார்த்தத்தை சுட்டி சூடு தணித்திருத்திருக்கிறீர்கள் அய்யா

Geetha said...

உண்மை..சில நேரங்களில் முகமூடிகள் மனதைக் குழப்பி விடுகிறது அய்யா...

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழியரே , வருகைக்கும் தங்கள் கருத்திற்கும்.