Wednesday 29 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஒரு கோப்பை மனிதம்- மு.கீதா (கவிதை நூல்)

அண்மையில் படித்த புத்தகம் : ஒரு கோப்பை மனிதம் (கவிதை நூல்)
ஆசிரியர்                                         : மு.கீதா (தேவதா தமிழ்)
வெளியீடு                                       : கீதம் பப்ளிகேஷன்ஸ்,சென்னை-96  044-24960231
முதல் பதிப்பு                                 :2014 ,மொத்தப்பக்கங்கள்: 72 விலை ரூ 60.00

                              ஆசிரியராகப் பணியாற்றும் மு.கீதா அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தன்னுடைய velunatchiyar.blogspot.com  வலைப்பூவிலும், முக நூலிலும் எழுதிய கவிதைகளின் தொகுப்பு எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். " "சமூகத்தோடு என்னைப் பிணைத்த எனது எண்ணங்களே கவிதைகளாய் நெய்து உங்கள் மனங்களை வலைவீசிப் பிடிக்கின்றன . எனை வார்த்த கவிதைகளும் , என்னால் வார்க்கப்பட்ட கவிதைகளும் தொகுப்பாய் மலர்ந்துள்ளன " என்று சொல்லும் என்னுரையே கவித்துவமாகத்தான் இருக்கிறது.

                       கவிதை என்பது சமூகம் சார்ந்ததாக, நம்மைச்சுற்றி நிகழும் அவலங்களை எடுத்துக்காட்டுவதாக அமையும்போதுதான்  கவிதையாக நம்மைப்போன்றோருக்கு தோன்றுகிறது. மு.கீதா அவர்களின் கவிதைகள் பலவும் அப்படி சுட்டிக்காட்டுகின்றன, நல்ல கவித்துவமும் கற்பனையும் மிக்க வரிகளால் ., எடுத்துக்காட்டாக ஒரு கவிதை 'பருவத்தின் வாசலில்'

"பள்ளியிலும் வீட்டினிலும்
        பட்டாம்பூச்சியான
               பறத்தலுடன்
ரசனையான வெகுளிச்சிறுமி
சிந்நாட்கள் காணாத நிலையில்
      சின்னதொரு சிரிப்புடன்
       வெட்கமுமாய் மீண்டும்
           துழாவிய போது
கண்ணீரில் மிதந்த கண்களுடன்
            குழறலாய்க் கூறினாள்
சிறகுகள் வெட்டப்பட்டதை  " நமது நாட்டைப் பொறுத்த அளவில் ,பெண் குழ்ந்தைகளுக்கு சிறகுகள் வெட்டப்பட்டு, சிந்தனைகளுக்கு விலங்கிடப்படுவதுதானே ,பருவமடைதல். அதை மிக நேர்த்தியாகக் கூறுகின்றார்.

                       அனுபவத்தை அப்படியே கவிதையாக ஆக்குகின்றார் சில கவிதைகளில். 'மழையோடு ' பக்கம் (14), 'தொடர் வண்டிப் பயணத்தில் ஒரு நாள்' பக்கம் 22, 'சுட்டிக்காற்று' பக்கம் 55 போன்றவை அனுபவம் சார்ந்த கருத்து சொல்லும் கவிதைகளாய் இந்த நூலில் . சில வரிக் கவிதைகள் என்றாலும் , சில கவிதைகள் சுருக்கென ஊசி குத்துவது போல எதார்த்ததை எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக 'பேசு பொருளாய் ' கவிதை பக்கம் 57, 'கானல் நீர் ' கவிதை பக்கம் 61 போன்றவை.

                        பெண் கவிதை எழுதுவது குறைவு , அதிலும் பகுத்தறிவு , மத மறுப்பு சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதும் பெண் கவிஞர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட ஒருவராக மு.கீதா திகழ்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரியது .
இந்து நாம் ...?

நான்கு வர்ணம்
ஒன்று இணைந்து
ஒரே வர்ணமாகையில்
சாதியோழிந்து
சனங்கள் சேர்ந்து
மகிழ்ந்தொலிப்போம்
இந்து நாம் என்று ......   பக்கம் 64.
சுடுகாட்டில் கூட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சுடுகாடு என்று வைத்துக்கொண்டு 'இந்து நாம் ' என்று பேசுவது எவ்வளவு அபத்தமானது என்பதனை சாதி ஒழியட்டும் ,பிறகு இந்து என்று பேசுவோம் என்று அழுத்தமாகச்சொல்கின்றார் இக்கவிதையில். அதனைப் போலவே 'மனுதர்மம்' என்னும் கவிதை

"காலில் பிறந்தோன்
உந்தியில் உதித்தோனுக்கும்
உந்தியில் பிறந்தோன்
மார்பில் பிறந்தோனுக்கும்
தீட்டென்று தீயிட்டுக்கொள்ள
மூடர்களே மூவருமே தீட்டு
நெற்றி பிறந்தோனுக்கென
சூளூரைத்தது மனுதர்மத்தின்
                         உயிர் நாடி  "  பக்கம் 28
நெற்றியில் பிறந்தோமென்று சொல்லிக்கொள்பவர்களின் மேலாண்மையையும், மற்றவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் மிகச்சுருக்கமாக ஆனால் தெளிவாகச்சொல்லும் கவிதையாக இக்கவிதை

              சமூகத்தின் கோரமுகத்தைக் காட்டுவதாக 'பட்டாசு கனவில் 'பக்கம் 15, ' பார்க்க முடிகின்றதா உங்களால்' பக்கம் 20, ;'கானல் நீராய் 'பக்கம் 24, 'கதவு இல்லா குடிசையில் ' பக்கம் 27 போன்ற கவிதைகள்,
 " பார்க்க முடிகின்றதா உங்களால் " கவிதையில் கடைசியில்
" ஆண் இனத்தின்
   அவமான சின்னங்களை
   நிலம் பிளப்பது போல்
   நீர் விழுங்குவது போல்
  தீ உண்ணுவது போல்
எழும்பும் பெண்ணினம் " எனும்  வரிகள் அநீதி கண்டு கனல் கக்கும் வரிகளாக இருக்கின்றன.

                          26,10.2014 மதுரையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் 3-வது  மாநாட்டில் இந்த நூலை புதுக்கோட்டை கவிஞர் நா.முத்து நிலவன் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். இந்த நூலைப் படிக்க, படிக்க சொல்வதற்கு நிறைய இன்னும் இருப்பதை உணர்கின்றேன். திருச்சியைச்சார்ந்த திராவிடர் கழக்த்தோழர் வி.சி.வில்வம் அவர்களின் சகோதரி , இந்த நூலின் ஆசிரியர் மு.கீதா அவர்கள். " ஆசிரியர் தொழிலை மிகவும் அர்ப்பணிப்போடு, ஈடுபாட்டோடு செய்யக்கூடியவர், குழந்தைகளோடு குழ்ந்தையாக அமர்ந்து , குழ்ந்தைகள் மனதில் இடத்தைப்பிடித்து, பாடத்தைக் கற்பிப்பவர். சமச்சீர் கல்வி வருவதற்கு முன்பே , பலவிதமான முயற்சிகள் மூலம் கற்பித்தலை மேம்படுத்தியவர். நல்ல ஓவியர். பகுத்தறிவாளர், பெரியாரியலைப் பின்பற்றுபவர் " என்று தன் சகோதரியைப் பற்றிய செய்திகளைச்சொன்னார் வி.சி.வில்வம். மு.கீதாவின் 3-வது நூல் இது. இன்னும் பல நூல்களைப் படைக்கும்  ஆற்றல் உடையவராக மு.கீதா திகழ்கின்றார். இன்னும் பல நூல்களைப் படைக்க வேண்டும்.

            " எப்போது ஒரு கலை சமகால நிகழ்வுகளைப்  பதிவு செய்கிறதோ அப்போதுதான் அது உண்மையான படைப்பாகிறது " என்று வைகறை தன்னுடைய மதிப்புரையில் கூறுவதுபோல , சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்த ஒரு கவிதைப்புத்தகமாக, " பண்பட்டுப்போன உள்ளம் அவருக்கு(மு.கீதாவுக்கு). மகிழ்ச்சி , பரிதவிப்பு, ஆதங்கம், ஆக்ரோஷம், வேதனை என ரசித்து ருசித்து அறுசுவையுடன் படைத்திருக்கிறார் இவ்விருந்தை " என அணிந்துரையில் கனடாவின் இனியா கூறுவதைப்போல பல உணர்வுகளின் வடிகாலாக இக்கவிதைகள் இருக்கின்றன.
                            முன்ன்ரையில் ' உங்கள் கவிதைகளை உங்கள் வலைப்பதிவில் நித்தம் ரசித்துப் பருகிவரும் எனக்கு விதவிதமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன. அவை உடனடிப்புன்னகை, நீடித்த சிந்தனை எனப்பல வகைப்படுகின்றன " என மைதிலி (makizhnirai.blogspot.com)  கூறுவதைப் போல நீடித்த சிந்தனை அளிக்கும் கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு உள்ளது.

                       புதுக்கோட்டை கவிஞர் நா.முத்துநிலவன், அவரது வாழ்க்கை இணையர் மல்லிகா(பி.எஸ்.என்.எல்) அவர்களோடு நிறையத்தோழர்கள், தோழியர்கள் வலைப்பதிவர் 3-வது மாநாட்டிற்கு வந்திருந்தனர். அதில் பல தோழியர்கள் தங்களுக்கென வலைத்தளங்களை வைத்துள்ளனர். தொடர்ந்து படைப்புகளை, தங்களது கருத்துக்களை வலைத்தளங்களில் பதிகின்றனர் என்பது பாராட்டிற்குரியது. புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்கம் என்பது இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருக்கிறது என்பதும், இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, உற்சாகப்படுத்தும் , வழிகாட்டும் பெருமைக்குரியவராக கவிஞர் நா.முத்து நிலவ்ன் இருக்கின்றார் என்பதும்  மகிழ்ச்சிக்குரியது. நமது பாராட்டுக்குரியது. புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்க உறுப்பினர்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பாக 'ஒரு கோப்பை மனிதம் ' நூல் வெளியிட்டு விழா அமைந்தது.

                        'ஒரு கோப்பை மனிதம் ' கவிதை நூலைப் படித்துப்பாருங்கள். விலை ரூ 60-தான். வாங்கிப் படிக்கலாம்.மற்றவர்களையும் படிக்கச்சொல்லலாம். படித்துவிட்டு நூலின் முகவரிக்கு நாலு வரி எழுதிப்போடலாம். அதுவே உண்மையான ஊக்குவிக்கும் செயலாக இருக்கும்.












16 comments:

Geetha said...

வணக்கம் அய்யா,
நல்லதொரு விமர்சனமாய் உணர்கின்றேன்..பிறர் எடுத்துரைக்காத அல்லது தவிர்க்க நினைக்கின்ற கவிதைகளைக்குறிப்பிட்டுள்ளீர்கள்..உங்கள் வாழ்த்து மேலும் என்னை ஊக்குவிக்கின்றது..நன்றி...

Geetha said...

வணக்கம் அய்யா
இக்கட்டுரை உள்ள உங்கள் வலைப்பூவை என் வலைப்பூவில் உங்கள் அனுமதியுடன் இணைத்துள்ளேன் என்பதைத்தெரிவித்துக்கொள்கின்றேன்

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான விமர்சனம் ஐயா...

Short Minutes said...

மு. கீதா அவர்களுக்கு என மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்..

மேலும், நாவில் நெழிந்ததை சற்றே அழகு படுத்தி எழுதும் பலர் தங்களைக் கவிஞர் என்று சொல்லிக் கொல்லும் பொழுது மூன்று நூல்கள் வெளியிட்டும்.. இன்னும் இயற் பெயரை மட்டும் வைத்திருப்பது மேலும் ஒரு சிறப்பு...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

தங்களின் விமர்சனம் உளப்பூர்வமாகவும், கூடுதலோ குறைவோ இல்லாமலும் சரியாக இருப்பதை உணர்ந்து பாராட்டுகிறேன் அய்யா. “பெண் கவிதை எழுதுவது குறைவு , அதிலும் பகுத்தறிவு , மத மறுப்பு சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதும் பெண் கவிஞர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட ஒருவராக மு.கீதா திகழ்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரியது “ என்பது மிகவும் சரியான பார்வை. தங்களின் நூல்வெளியீட்டு விழாச் சிறப்புரையும் கச்சிதமாக மட்டுமின்றி கம்பீரமாகவும் இருந்தது அய்யா. எல்லா்வற்றுக்கும் நன்றி.

Yarlpavanan said...


சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

Rathnavel Natarajan said...

அருமையான மதிப்புரை.
வாழ்த்துகள்.

முனைவர். வா.நேரு said...

வணக்கம் தோழியரே, "நல்லதொரு விமர்சனமாய் உணர்கின்றேன்" நன்றி...

முனைவர். வா.நேரு said...

மிக்க மகிழ்ச்சி.

முனைவர். வா.நேரு said...

நன்றி, வருகைக்கும், வாசிப்பிற்கும், பாராட்டிற்கும்.

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே ...

முனைவர். வா.நேரு said...

"உளப்பூர்வமாகவும், கூடுதலோ குறைவோ இல்லாமலும் சரியாக இருப்பதை உணர்ந்து பாராட்டுகிறேன்" . நன்றி ,தோழரே .தொடர்ந்து இயங்குவோம்...

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா.

முனைவர். வா.நேரு said...

பாராட்டிற்கு நன்றி அய்யா. படித்து உடனே கருத்து இட்டுள்ளமைக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

மதுரையில் தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்வினை அளித்தது ஐயா

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றி , எனக்கும் தங்களைப் போன்றவர்களை சந்தித்தல் மிக்க மகிழ்ச்சி.