Thursday 25 December 2014

நிகழ்வும் நினைப்பும்(27) - PK - இந்தித் திரைப்படத்தைப் பாருங்கள்.

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் , முன்னாள் நீதிபதி அய்யா பொ. நடராசன் அவர்கள் ஒரு இந்திப்படத்தைப்பாருங்கள் என்று பரிந்துரைத்தார். கடந்த 50 ஆண்டுகளாக, இந்தி எதிர்ப்புப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இந்திப்படமே பார்க்காத நான் இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப்போய்ப்பார்த்தேன் என்றார். நேரு, கட்டாயம் சென்று பாருங்கள் என்றார். நானும் எனது மகன் சொ.நே.அன்புமணியும் இணைந்து மதுரை, விசால்மகாலில் நடைபெறும் அந்தத் திரைப்படம் 'PK'  படத்தினைப் பார்த்தோம். மொழி ஒன்றும் அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டார்கள். சில இடங்களில்  ஆங்கிலத்திலேயே பேசினார்கள்.
                                கடவுளை, மதத்தை , சாமியார்களைக் கிழி, கிழி என்று கிழித்து நார் நாராய்த் தொங்கவிட்டிருக்கின்றார்கள். ஆனால் அதனை நகைச்சுவை வடிவத்தில் கொடுத்திருக்கின்றார்கள், நாங்கள் சென்ற நேரத்தில்(இன்று 25.12.2014 மதியம் அரங்கு நிறைந்திருந்தது. (வெளியில் ஒரு டிக்கெட் கிடைக்குமா என்று ஊழியர்கள் ஒருவரை ஒருவர் யாருக்காகவோ கேட்டுக்கொண்டிருந்தார்கள், இல்லை என்றார்கள்). படத்தின் ஆரம்பித்தில் இருந்து ஆரம்பிக்கும் கடவுளைப் பற்றிய கேள்விகள் , எதார்த்தமாகவும் உண்மையாகவும் இருப்பதால் ஆத்திகர்களும் உட்கார்ந்து கைதட்டுகின்றார்கள். ராங்க் நம்பர் என்னும் விசயத்தை வைத்து, எல்லாக் கடவுளுமே ராங்க் நம்பர்தான் என்பதையும் , நம்ப கடவுளைக் காப்பாத்துகிறோம் என்று சொல்லி மதவாதிகள் செய்யும் கேடுகளையும் மிகத் தைரியமாகக் காட்டியிருக்கின்றார்கள். எத்தனை கடவுள்கள், எத்தனை மதங்கள், ஒவ்வொரு மதங்களுக்குமான வேறுபாடுகள் ( ஒருத்தர் சூரியன் உதயமானதுக்குப்பிறகுதான் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றார்கள், இன்னொருவர் சூரியன் உதயமாவதற்கு முன் சாப்பிடவேண்டும் என்று சொல்கின்றார்கள், ஒரு கடவுளுக்கு ஒயின் உகந்தது, இன்னொரு கடவுள் முன் அந்தப்பெயரைச்சொன்னாலே விரட்டுகின்றார்கள் , ஒவ்வொரு கடவுளை நம்புகிறவர்களுக்கும் ஒவ்வொரு வழிமுறைகள், உடைகள், வழிபாடுகள் ....இந்த வேறுபாடுகளை மிக நுட்பமாக காட்டியிருக்கின்றார்கள். )ஏன் இத்தனை வேறுபாடு, கடவுளை மனிதன் படைத்ததால்தான் இத்தனை என்பதனை ஆத்திகர்களும்  உணரக்கூடிய அளவிற்கு கொடுத்துள்ளார்கள். .

                                  பிரமாணட அரண்மனைகளில் வாழும் சாமியார்கள், அவர்களின் வேடம், ஏதேனும் பிரச்சனையை சமாளிக்க முடியவில்லை என்றால் மவுனவிரதம் என்பது, பஜனை பாடல்களைச்சத்தம் போட்டுப் பாடவைப்பது , அடியாட்களின் துணையோடு கேள்விகேட்பவர்களை அடித்து உதைத்து எறிவது என்று சாமியார்கள் செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் விலாவாரியாகக் காட்டப்பட்டிருக்கின்றன. வேற்று கிரகவாசியிடம் இருந்து திருடி வைக்கப்பட்ட ரிமோட்டை விலைக்கு வாங்கிய  சாமியார், அந்த ரிமோட்  கடவுள் தனக்கு கொடுத்தது என்றும் அதனை மிகப்பெரிய கோவிலாக கட்டி உள்ளே வைக்க கடவுள் கட்டளையிட்டிருக்கின்றார் என்று சொல்லி மக்களிடம் பணம் பறிப்பது, காற்றிலிருந்து சங்கிலியை வரவைக்கும் சாமியாரின் தகிடுத்தனத்தை பக்தரே கேள்வி கேட்பது ( சாயிபாபா இந்த மாதிரி சங்கிலியை மறைத்துவைத்து எடுத்ததை பி.பி.சி. காட்டியது. நமது தோழர்கள் அந்த வீடியோவை ஊர் ஊராகக் காட்டினார்கள். ) , சாமியார்கள் எல்லாம் ராங்க் நம்பர்கள், அவர்களை நம்பக்கூடாது என்பது மிக அழுத்தம் திருத்தமாகச்சொல்லப்பட்டிருக்கிறது.

                         பிறக்கும்போதே கடவுள் மதச்சின்னத்தோடு அனுப்புகிறாரா என்று பிறந்த  குழ்ந்தையைத் தூக்கிப்பார்ப்பது, சிவன்  வேடம் போட்ட நபரை கடவுள் என்று சொல்லி கழிப்பறையில் பூட்டிவைத்து விசாரிப்பது அப்புறம் துரத்துவது  என்ற பகுதியில் எல்லாம் திரையரங்கு முழுவதும் கைதட்டல் ஆரவாரம் கேட்டது. கோயில் , சர்ச் , மசூதி என்று தன்னுடைய பிரச்சனையைத்தீர்ப்பதற்காகப்போவது, எந்தக் கடவுளும் தீர்த்துவைக்கவில்லை என்றவுடன் குழம்புவது , ஏன் தீர்க்கவில்லை என்று கேள்விகேட்பது என்று அமீர்கான் படம் முழுவதும் தூள் கிளப்புகின்றார்.
ஒரு டீக்கடை வியாபாரிக்கும் , பக்தி வியாபாரிக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுவது அருமை. டீக்கடைக்காரர் பால் வாங்கவேண்டும், இடத்திற்கு வாடகை கொடுக்கவேண்டும், டீ வேண்டுமா வேண்டுமா என்று கேட்க வேண்டும். ஆனால் பக்தி வியாபாரிக்கு எந்த முதலும் தேவையில்லை என்று சொல்லி, கீழே கிடந்த கல்லை எடுத்து , மரத்திற்கு கீழே வைத்து ஒரு சாந்துப்பொட்டை வைத்துவிட , போவோர் வருவோர் எல்லாம் கீழே விழுந்து கும்பிட்டு பணத்தைப்போட்டுப்போவதைக் காட்டுவது அருமை. எந்த வித உழைப்பும் இல்லாமல், பணம் ஈட்டுவதற்கு ஒரு கல்லும், பொட்டும் போதும் என்பதைக் காட்டுவது , எதார்த்தமாகவும் ஆனால் அழுத்தமாகவும் பார்ப்போர் மனதில் பதிகின்றது.  'இந்து டாக்கீஸ்-திரை விமர்சனம் ' என்ற பகுதியில் 'தி இந்து தமிழ்' பத்திரிக்கையில் மிக நன்றாக படத்தைப் பற்றிக் கருத்து  (24.12.2014) எழுதியிருந்தார்கள்.

                                                மனிதவாழ்க்கை என்பது பிரச்சனைகளால் நிரம்பியிருக்கிறது. பிரச்சனையை தீர்க்கமுடியாத மனிதர்கள் , பிரச்சனை தீரும் என்று கடவுளை நம்புகிறார்கள், வழிபடுகிறார்கள், ஆனால் பிரச்சனை கடவுள் நம்பிக்கையால் தீருவதில்லை. எந்தக் கடவுள் நம்பிக்கையாளரின் பிரச்சனையும் கடவுள் நம்பிக்கையால் தீருவதில்லை என்பதனை வேற்றுக்கிரகவாசியின் விசாரணை என்ற பெயரில் காட்டியிருக்கின்றார்கள். . அதனைப்போலவே கடவுள் நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் பயம். பயத்தைப் பயன்படுத்தி சாமியார்கள் எப்படி எல்லாம் பணத்தைப் பறிக்கின்றார்கள் என்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

                                    திரைப்படம் என்பது மிகப்பெரிய ஊடகம். நாம் செய்யும் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு நேர் எதிராக இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றன. நம்ம ஊரில் மாரியத்தா படம் எடுத்து , தியேட்டரில் கூடப் பெண்களைச் சில நேரம் சாமியாட விட்டுவிடுகின்றார்கள்.. அதற்கு நேர் எதிரான படம் இது. எவ்வளவு பெரிய கடவுள் நம்பிக்கையாளன் என்றாலும் அவனை அசைத்து யோசிக்க வைக்கும் படமாக வந்திருக்கிறது. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் ,இந்தப் படத்தைப் பார்த்த அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கின்றார். தனது கூர்மையான எழுத்துக்களால் எப்போதும் வாசிப்பவரை சிந்திக்க வைக்கும் எழுத்தாளர் வே.மதிமாறன் இப்படம் பார்த்த அனுபவத்தை பேஸ்புக்கிலும் தனது வலைத்தளத்திலும் பதிவு செய்திருக்கின்றார். நீங்களும் கட்டாயம் இந்தப்படத்தைப்பாருங்கள். அனுபவத்தைத் தோழர்களோடும், இணையத்திலும் பதிவு செய்யுங்கள். இந்தப் படத்தை எடுத்த ராஜ்குமார் ஹிரானி, நடித்த ஆமிர்கான், அனுஷ்கா என அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள். படத்தைப் பார்த்துவிட்டு, என்னைப்பார்க்க சொன்ன , அய்யா ஓய்வு பெற்ற நீதிபதி பொ. நடராசன் அவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு, ' நம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய படம் " என்றேன். ஆமாம்  என்றார்.

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் பார்க்கிறேன் ஐயா

anandam said...

அய்யா நீதிபதி அவர்கள் என்னிடமும் சொன்னார். இன்னும் பார்க்கவில்லையே என்ற ஏக்கத்தினை தூண்டிவிட்ட பதிவு இது அண்ணா...

தமிழ் ஓவியா said...

படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது விமர்சனம்.

முனைவர். வா.நேரு said...

அய்யா, கட்டாயம் பாருங்கள். தங்கள் எண்ணத்தைப் பகிருங்கள். நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

முனைவர். வா.நேரு said...

அண்ணே, நன்றி, இன்று பிறந்த நாள் காணும் அகிலையும் அழைத்துச்சென்று பர்ருங்கள் .

முனைவர். வா.நேரு said...

நன்றி, பாருங்கள், தங்கள் எண்ணத்தை தங்கள் வலைத்தளமான தமிழோவியாவில் பதியுங்கள். பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கும் வலைத்தளம் தங்கள் வலைத்தளம். எட்டாம் ஆண்டிலும் தொடரும் தங்கள் தொண்டிற்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், தொடர் பணியாய் செய்யும் தங்கள் பணி தொடரட்டும், தொடரட்டும்.

கருப்பையா.சு said...

தோழர்.சுந்தரராஜன் மூலம் இப்படம் பற்றிய தகவல் கிடைத்தது. தரமான ஒரு திரைப்படம் வந்துள்ளது மகிழ்ச்சி தான். ஆனால், நீண்ட நாட்களாக நான் திரைப்படம் பார்ப்பதில்லை. என் குழந்தையின் விருப்பத்திருக்காக அதிகம் விலை கொடுத்து ' சிவாஜி" படம் பார்த்ததால் கிடைத்த அனுபவம் தான் அது. கருப்பு பணத்தை ஒழிப்பதாக எடுக்கப்பட்ட படத்திற்கு , அனுமதிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக பணம் கொடுத்து பார்த்தது என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. அத்தோடு படம் பார்க்க சினிமா அரங்கிற்கு போவது நின்று போனது. நடிகர் ரஜினிக்கு மிகவும் நன்றி.
பி.கே போன்ற சில நல்ல படங்கள் அவ்வப்போது வருவதும் உண்டு. குறிப்பாக , வழக்கு எண் 18/9, சூது கவ்வும் மற்றும் மூடர்கூடம் போன்ற படங்கள் என்னை கவர்ந்தது உண்மை. ஆனால் , திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் படிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை மாற்ற முடியும் என்று நான் நம்பத்தயாராக இல்லை. அப்படங்கள் சில நாட்கள் சுவாரசியத்தைத் தந்து விட்டு மறைந்து விடும் என்பதே உண்மை . திரைப்படங்கள் மக்கள் மனதை மாற்றும் திறன் கொண்டிருந்தால் நம் நாட்டில் கௌரவக்கொலைகள் நடைபெறாது (கடந்த 20 மாதத்தில் 40 கௌரவக்கொலைகள் நடந்துள்ளதாக பத்திரிக்கை செய்தி வந்துள்ளது.). சாதிப்பூசல்கள் மறைந்திருக்கும். அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்திருக்க முடியும் ! இவைகள் ஏன் நடைபெறவில்லை?.
மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திரைப்படம் வேறு, நிகழ கால வாழ்க்கை என்பது வேறு என்று பகுத்தறிந்து வாழ்கிறார்கள். அதனால், நல்ல படங்கள் கூட மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் இப்போது இல்லை என்பதே கசப்பான உண்மை!. இருந்தாலும் , நம்பிக்கையுடன் இத்தகைய நல்ல படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை நாம் வரவேற்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முனைவர். வா.நேரு said...

அண்ணே, விரிவான தங்கள் கருத்திற்கு நன்றி. தந்தை பெரியார் சொன்னதைப்போல மூளைக்குள் போடப்பட்ட விலங்கை உடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதாக இல்லை. பெற்ற பிள்ளையா, பொய்யாகக் கற்பிக்கப்பட்ட சாதியா என்னும்போது சாதிக்காக பெற்ற பிள்ளையைக் கொல்லும் கொடுமையை என்னவென்று சொல்ல ? எங்கு போய் முட்டிக்கொள்ள ....ஆனால் அத்தனையையும் தாண்டித்தான் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டியிருக்கிறது. பெரும்பாலான மூடநம்பிக்கைகள் இன்றைக்கு ஊடகங்களால்தான் பரப்பப்படுகின்றன. அதிலும் திரைப்படங்களின் பங்க்ளிப்பு மிகப்பெரியது. இருட்டுக்குள் தெரியும் வெளிச்சமாய் இப்படம் தெரிகிறது. இன்னும் பல வெளிச்சங்கள் வருவதற்கு மக்களின் கருத்தும் துணை செய்யும் ."மாற்றம் என்ற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தும் மாறும் " - விதைப்போம் , விளையும் ஒருநாள்- நமது வாழ்நாளில் இல்லையென்றாலும் நமது வாரிசுகள் வாழ்நாளுக்குள் விளையும். எனும் நம்பிக்கையோடு.