Thursday 16 November 2017

அவனொரு பதோபோபு .............

                                              அவனொரு பதோபோபு .............

முற்றும் துறந்த
முனிவர் போல
அவன் முகம்
முழுக்கத் தாடி.....

பற்றற்ற துறவிபோல
எப்போதும் அவன்
உடலில் காவி .....

வாயைத்  திறந்தாலே
தத்துவம்....
வாழ்க்கை எனும்
நிலையாமை....
அமைதியாக வாழ
பிரார்த்தனை
ஒன்றே வழி ........

காயமே இது பொய்யடா...
காற்றடித்த பையடா....
புஸ்ஸென்று ஒரு நாள்
உயிர் போய்விடும்.....
ஆன்மிகவே உங்கள்
மனதைச்
செம்மைப்படுத்தும்
செழுமைப்படுத்தும்...

எப்போதும் அமைதி
தழுவுவது போல
அவன் முகத்தில் பாவனை....

எதிர்முகாம்காரன் என்றாலும்
ஏதோ ஒழுக்கமாக
வாழ்பவன் போலும்
என எண்ணியிருந்த வேளை

உடன் பயிலும் தோழி சொன்னாள்
" நாங்கள் அந்த ஆளுக்கு
வைத்திருக்கும் பெயர் "பதோபோபு "
என்றாள்
புரியவில்லை என்றேன் நான்

விரிவாக்கம் அவள் சொல்ல
அவனது உடைகளைப்
பார்த்த பின்னும்
அவனது உரைகளைக்
கேட்டபின்புமுமா
இப்படி ஒரு பெயர் என்றேன்

" போங்க சார்,
அவர் என்ன உடை
வேண்டுமானாலும் உடுத்தட்டும்
அந்த ஆள் உதிர்க்கும்
வார்த்தைகள் உன்னதமாகக்
கூட இருக்கட்டும்
ஆனால் உண்மையைச்
சொல்வது கண்கள்

எங்களுக்குத் தெரியும் சார்
வாழ்க்கையில் எத்தனை
ஆண்களைப் பார்க்கின்றோம்
எத்தனை பேரோடு
அலுவலகத்தில் பழகுகின்றோம்....
சத்தியமாச்சொல்றேன் சார்
இந்த ஆள் நல்லவன் இல்லை " என்றாள்

பொதுவில் இருக்கும்போது
தத்துவமா பேசுகிறான்
தனியாக மாட்டிக்கொண்டால்
சே,சே,அசடு வழியுறான்....
தனிமையாய்ப் பார்க்கும்போது
கண்கள் பார்த்துப்பேசுவதில்லை
வெறிபிடித்த ஏதோபோல
அங்குமிங்கும்
உடல் முழுக்க அவனது
கண்கள் அலையும் .....

பரபரக்கும் அந்த ஆளின்
உடல் மொழிகள்
உண்மை சொல்லும் எங்களுக்கு
மனது முழுக்க அழுக்கு
அதை மறைக்க
போடும் வேசமும்
வீசும் வார்த்தைகளும்
எங்களுக்குத் தெரியும் சார்
அவனொரு பதோபோபு
அதுதான்
பசுந்தோல் போர்த்திய புலி " என்றாள்....

                                                                               வா.நேரு,
                                                                               17.11.2017,காலை 9.00மணி


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படித்தான் பலரும்இருக்கிறார்கள்

முனைவர். வா.நேரு said...

ஆமாம், அய்யா நன்றி வருகைக்கும் கருத்திற்கும்