Tuesday 28 November 2017

ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை - திருக்குறளின் பாயிரம் ......

ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை - திருக்குறளின் பாயிரம்                                                                                                              (முனைவர். வா.நேரு)

திருக்குறள் தமிழர்களின் வாழ்வியல் இலக்கியம். 'மனத்துக்கண் மாசிலன் ஆகி' வாழும் வழிமுறை சொல்லும் மக்கள் இலக்கியம். 'கற்க...நிற்க அதற்குத் தக ' எனக் கற்பதற்கும் வாழ்வதற்குமான 'தொட்டனைத்தூறும் மணற்கேணி'யைச்சுட்டிக் காட்டிய இலக்கியம். 20 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் கற்பவரை எல்லாம் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் அறிவுக் காந்த இலக்கியம். திருக்குறளை கற்றறிந்தோர் 'தாமின்புறுவது உலகின் புறக்கண்டு ' மனம்மகிழ்பவராக, தாம் இன்புற்ற குறளின் கருத்தை மற்றவர்களுக்கும் எழுதவேண்டும், சொல்லவேண்டும் எனும் வேட்கை கொள்கின்றனர். அறிஞர் ஜி.யூ.போப்,செக்கோஸ்லாவாக்கிய மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுபலவில் ,வீரமாமுனிவர் எனக் கற்றறிந்த பல வெளிநாட்டினவரை சுண்டி இழுத்த,இன்றும் இழுக்கும் அறிவுப்பெட்டகம் திருக்குறள். பல வெளி நாட்டவரெல்லாம் கண்டுகொண்ட அறிவுப்பெட்டகத்தை தமிழகத்தில் இருக்கும் தமிழர் பலர் அறியாமல் இருக்கின்றனரே, அவர்களிடத்தில் இதனை கொண்டு போய் சேர்ப்பது எங்ஙனம் எனச்சிந்திக்கும், செயலாற்றும் பல அறிஞர்கள் தமிழகத்தில் உண்டு. அவர்களில் ஒருவர் நான் அறிந்த வேளாண் பொறியியல் அறிஞர் க.சி. அகமுடை நம்பி அவர்கள். கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக திருக்குறள் கருத்தரங்கங்களை தன்னுடைய வேப்பந்தோப்பில் நடத்தி, பின்னர் பங்களித்தோரின்  கருத்துக்களைக் கட்டுரைகளாக கொண்டுவரும் அரும்பணியை 'கைமாறு வேண்டா, கடப்பாடு மாரி மாட்டு ' செய்து வருகின்றார். இந்த வருடம் அவர் தேர்ந்தெடுத்துக்கொடுத்த தலைப்பு 'முப்பாலின் முன்னுரை-பாயிரம் என்பதாகும்.
                      'ஒரு நூலுக்கு இன்றைய காலங்களில் முன்னுரை என அமைவதுபோல பாயிரம் என்பது திருக்குறளுக்கு முன்னுரை எனக்கொள்ளலாம்' என்பார் சுப.வீரபாண்டியன் தனது 'குறள் வானம் ' என்னும் நூலில். முன்னுரை என்பது நூலின் முதல்பாகமாக நிற்பது. ஆனால் பாயிரம் என்பது அறத்துப்பாலின் ஆரம்ப அத்தியாயங்கள்.இப்பாயிரம் அறத்துப்பாலுக்கு மட்டுமல்ல, பொருட்பாலுக்கும் காமத்துப்பாலுக்கும் இதுவே பாயிரம் என்பர்.  திருக்குறளின் பாயிரமாக  நான்கு  அதிகாரங்கள், 40 குறள்கள்  திருக்குறளில் இருக்கின்றன. சில உரையாசிரியர்கள் முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்து என எழுத புலவர் குழந்தை 'இறை நலம்' என்று சொல்கின்றார். சிலர் 'இறை வாழ்த்து','கடவுள் வாழ்த்து '  எனவும் எழுதுகின்றனர்.

முப்பாலின் இரண்டாம் பாலாகிய பொருட்பாலின் முதல் அதிகாரம் 'இறைமாட்சி'. பொருட்பாலின் மற்ற அதிகாரங்களுக்கு முன் உள்ள இறைமாட்சி அதிகாரம் முன்னுரை போல  இறை என்று சொல்லப்படும் அரசன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.அரசன் ஏறுபோல் ஆட்சி நடத்துவதற்கு 'படை,குடி கூழ், அமைச்சு, நட்பு,அரண் ' தேவையென இந்த அதிகாரத்தின் முதல் குறள் வரையருக்கின்றது.அரசனுக்கு 'அஞ்சாமை, ஈகை, அறிவு,ஊக்கம்,தூங்காமை,கல்வி,துணிவு ' போன்ற குணநலன்கள் வேண்டும் என அடுத்தடுத்த குறள்களில் பட்டியல் இருக்கின்றது..'அறனிழுக்காது அல்லவை நீக்கி ' அரசாட்சி அமைய வேண்டும் எனத் தன விருப்பத்தை திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் சொல்கின்றார். 'இயற்றல்,ஈட்டல், காத்தல், காத்த வகுத்தல் ' அரசின் கடமை என்று சொல்கின்றார்.அரசன் 'காட்சிக்கு எளியவனாய், கடுஞ்சொல் அல்லனேவனாக, இன்சொல்லால் ஈத்தளிக்க வல்லவனாக, ' இருந்தால் என்னென்ன சிறப்புகள் என்பதனை இந்த 'இறைமாட்சி 'அதிகாரத்தில் கூறுகின்றார். 'செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன்' இப்படிப்பட்ட அரசனாக இருந்து 'முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' மக்களால் இறை என்று போற்றப்படுவான் என்று சொல்கின்றார். இந்த அதிகாரம் முழுவதும் பார்த்தால் ஓர் அரசன் இறைவன் என்று போற்றப்படுகின்ற அளவிற்கு புகழ் பெற வேண்டுமானால் அவனுடைய குணநலன்கள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதையெல்லாம் விளக்கி கூறுகின்ற திருவள்ளுவர் அரசனையே இறை என்றும், தெய்வம் என்றும் மக்கள் கருதுவார்கள் என்னும் கருத்துப்படவும் சொல்லியிருப்பதைக் காணமுடிகின்றது. இந்த 'இறைமாட்சி ' என்னும் அதிகாரத்தின் தொடர்ச்சியாக பொருட்பாலில் உள்ள ' செங்கோன்மை' , 'கொடுங்கோன்மை', 'வெருவந்த செய்யாமை ' என்னும் அதிகாரங்களையும் நாம் பார்க்க வேண்டும்.அரசனின் கடமையை வலியுறுத்தி, நல்ல நாட்டின் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது 'செங்கோன்மை ' அதிகாரம். ஒரு கொடுங்கோளனிடம் நாடு மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என்பதனை 'கொடுங்கோன்மை' அதிகாரமும், 'வெருவந்த செய்யாமை ' அதிகாரமும் வலியுறுத்துகிறது. 

முப்பாலின் முதல்பாலாகிய அறத்துப்பாலில் முதல் அதிகாரம் 'இறை வாழ்த்து ' ஆகும். .கடவுள் என்று ஒருவர் இருக்கின்றார். அவர் கையில் ஒரு மிகப்பெரிய சூப்பர் கணினி  வைத்திருக்கின்றார். இந்த உலகத்தில் உள்ள சுமார் 600 கோடி மக்களும் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையெல்லாம் கணினி  திரையில் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். மனிதர்கள் பிறப்பதை, இறப்பதை அவர்தான் முடிவு செய்கின்றார். ஒருவன் இப்பிறப்பில் எப்படி பிறப்பது என்பதை சென்ற பிறவியில் அவன் என்னென்ன செய்தான் என்பதை கணினி மெமெரியில் இருந்து எடுத்து முடிவு செய்து மனிதனாகவோ, பன்றியாகவோ,கழுதையாகவோ, மாற்றுத்திறனாளியாகவோ பிறக்கவைக்கிறான் என்று மதவாதிகள் உலகில் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்கின்றார்கள். எல்லாம் வல்லவன் என்று சொல்கின்றார்கள்,தாங்கள் செய்யும் பாவத்தையெல்லாம், குற்றத்தையெல்லாம் கணினித் திரையில் கடவுள் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார், அதனால் அந்தப்பாவத்திலிருந்து தப்பிப்பதற்கு பரிகாரங்கள் செய்தால், பாவ மன்னிப்பு கேட்டால், புனித யாத்திரை போனால் தங்களுடைய குற்றத்தையெல்லாம் கடவுள் மன்னித்து விடுவார், அதனை எல்லாம் சூப்பர் கணினி மெமரியில் இருந்து முழுவதுமாக அழித்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.அதற்காகவே கடவுள் இருப்பதாகச்சொல்லப்படும் மத வழிபாட்டுத்தலங்களுக்குச்சென்று கதறுகின்றார்கள், கண்ணீர் வடிக்கின்றார்கள், அழுது புலம்புகின்றார்கள். அழுவதனால்,புலம்புவதனால்,அரற்றுவதால்,கெஞ்சுவதால் தங்களின் குற்றங்களையெல்லாம் கடவுள் மன்னித்துவிடுவார் என நம்புகின்றார்கள்.இன்னும் சிலர் கடவுளுக்காக என விலங்குகளை வெட்டிப் பழி கொடுக்கின்றார்கள். யாகங்கள் எனத் தீயை வளர்க்கின்றார்கள்.விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் உட்பட பலவற்றையும் தீயுக்குள் இட்டு பொசுக்கின்றார்கள். தாங்கள் இப்படி எல்லாம் செய்தால், சடங்குகள் செய்தால் கடவுள் தனக்கு அருள் பாலிப்பார் என நம்புகின்றார்கள். .

ஆனால்   திருவள்ளுவர் தனது இறை வாழ்த்து அதிகாரத்தில் சமூகத்திற்கு தலைவன்  என்று ஒருவன் இருந்தால்,அவன் இறைவன் என்ற அளவிற்கு அழைக்கப்பட வேண்டுமென்றால்  அவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும், என்னென்ன பண்பு நலன்களைப்பெற்றிருக்கவேண்டும் எனப்பட்டியலிடுகின்றார். எப்படி பொருட்பாலில் ஒரு மன்னன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என வரையறைத்துச்சொல்கின்றாரோ அப்படி அறத்துக்கு தலைவனாக ஒருவன் இருந்தால் அவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் எனச்சொல்கின்றார்.பொருட்பாலில் திருவள்ளுவர் சொன்ன குணங்களைக் கொண்ட மன்னன் எவரும் எந்த நாட்டையும் ஆண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தனது மனக்கண் முன்னால் ஒரு மன்னன் எப்படிப்பட்ட குண  நலங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்கின்றாரோ அப்படித்தான் அவர் சொல்லியிருக்கும் அறத்தலைவன்  என்ற  ஒருவனின் பண்பு நலன்களையும் சொல்லியிருக்கின்றார் எனக்கொள்ளலாம்." கடவுள் வாழ்த்து என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கும் இவ்வத்தியாயம் கடவுளைக் குறிக்கவோ, கடவுளை வாழ்த்தவோ அல்லாமல் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிப்பதேயாகும். இதை ஆத்திகர்கள் பொருள் உணராமலும் கடவுளைப்புகுத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்டும் இந்த அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று பெயர் கொடுத்து பொருத்தமில்லாத தன்மையில் கடவுளை இழுத்துப்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது என் கருத்து " எனும்  தந்தை பெரியாரின் கருத்து இங்கு நோக்கத்தக்கதாகும்.  தந்தை பெரியார் முதல் அதிகாரத்தை 'பண்பு நலன் ' என்று எழுதுகின்றார். முதல் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு குறளும் எப்படி பண்பு நலனைக் குறிக்கிறது என விவரிக்கின்றார்.இதனை விரிவாக வேண்டுவோர் பெரியார் களஞ்சியம் 37 -திருக்குறள் வள்ளுவர் என்னும் புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.

திருக்குறளின் பெருமையே அது உலகப்பொது மறை என்பதுதான். எல்லா மதத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கொண்டாடும் வாழ்வியல் நூல் திருக்குறள். ஆனால் ஒவ்வொரு மதத்தைச்சார்ந்தவர்களும் தங்கள் மதக்கருத்தை ஏற்றுவதற்கு 'கடவுள் வாழ்த்து; அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். பொதுவாக சொல்லப்பட்டிருக்கும் சில சொற்களை தங்கள் மதக்கடவுளைக் குறிக்கும் சொற்கள் என ஏற்றுக்கொண்டு , அதற்கேற்ப விளக்கம் அளிக்கின்றார்கள். அதனால்தான்
"வள்ளுவர்க்கு நிறமில்லை மதமும் இல்லை
மதங்கட்கப் பாலிருந்தே குறள் செய்துள்ளார்
உள்ளசிறு மதங்குறிக்கும் சொற்கள் கொண்டே
உவகையோடு தத்தமது மதத்தில் சேர்த்துத்
தெள்ளிவைத்த நீறிடுதல் திருமண் சார்த்தல்
செழும்பிண்டி அமர்ந்தானைச் சேர்ந்தான் என்னல்
தள்ளிவைத்த மரபென்று பேசல் யாவும்
சரியென்று தோன்றவில்லை என் கருத்தில் " என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.நமக்கும்தான் சரியென்று தோன்றவில்லை.வாஸ்து சாஸ்திரம் என்னும் மூட நம்பிக்கைக்கு ஆதரவாக ஒருவர் கடவுள் வாழ்த்துக்குறட்பாக்களைப் பயன்படுத்தி இருப்பதை இணையத்தில் பார்த்தேன்.புரட்சிக்கவிஞர் கவிதைதான் நினைவில் வந்தது.இப்படி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தும் அதிகாரமாக இந்த 'இறை வாழ்த்து' அதிகாரம் இருக்கின்றது,  

மனித வாழ்க்கைக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்பது என் போன்றோர் கருத்தாகும். உலகம் முழுவதும் நல்லவனாக வாழ்வதற்கு, வாழ்க்கையில் மனமகிழ்ச்சியோடு நிம்மதியாக வாழ்வதற்கு  கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்ற கருத்து இன்றைக்கு மேலோங்குகின்றது. திருவள்ளுவரும் நீ இந்தக் கடவுளை கும்பிட்டால்தான், இந்தச்சடங்கை செய்தால்தான் நீ நன்றாக வாழ்வாய்,இல்லையென்றால் நரகத்திற்குப் போவாய் என எந்தக் குறளிலும் சொல்லவில்லை. இல்லாத கடவுளைத் தேடி , இருக்கும் மனிதர்கள் துன்புறுவதும், இல்லாத கடவுளுக்காக இருக்கின்ற மனிதர்கள் எனது கடவுள் பெரிது,எனது மதம் பெரிது  எனத் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதும்,மண்டையை உடைத்துக்கொள்வதும் நம்மை இன்று வேதனைப்படுத்தும் நடவடிக்கைகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதனைப்போல சண்டையிருந்திருக்கும், மண்டை உடைதல் இருந்திருக்கும்.அதனை நீக்குவதற்கு எண்ணிய திருவள்ளுவர் அறத்திற்கு என ஒரு தலைவன் இருந்தால், அவன் இறைவன் போன்றவன் என்று போற்றப்படவேண்டுமென்றால் இந்த இந்தக் குணங்கள் வேண்டும் என்று பாடியதாகத்தான் திருக்குறளின் 'இறை வாழ்த்து ' இருக்கின்றது. திருவள்ளுவர் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை என்பது போலவே இருக்கின்றார் என்றும் சொல்லவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாயிரத்தின் இரண்டாவது அதிகாரமாக 'வான் சிறப்பு ' இருக்கிறது. மழை பொய்த்துப்போனதால் ஏற்பட்ட கொடுமைகளை இன்றைக்கு நாம் நம்முடைய வாழ்வில் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். குடிப்பதற்கும் ஏன் குளிப்பதற்கும் கூட மதுரையின் பல பகுதிகளில்  பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக்கொண்டிருக்கின்றோம். 'தண்ணீர், தண்ணீர் ' எனப் பொதுமக்கள் காலி குடங்களுடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் காட்சியை மதுரையிலும் அதனைச்சுற்றி இருக்கும் கிராமங்களிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏன் மழை பெய்யவில்லை ? என்னும் கேள்வி எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. தோப்பாக நடப்பட்ட தென்னை மரங்கள்,மாமரங்கள், கொய்யா மரங்கள்  எல்லாம் தண்ணீர் இல்லாமல் கருகிக் காட்சி தரும் நிலை நமக்கெல்லாம் கண்ணீரை வரவழைக்கிறது.தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன. மரங்கள், விலங்குகள், மனிதர்கள் எனத் தமிழ் நாடே தண்ணீருக்காக அலையும் நிலையில் 'வான் சிறப்பு ' என்னும் அதிகாரத்தைப் படிக்கின்றபொழுது அய்யன் திருவள்ளுவர் 20 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படிச்சொல்லியிருக்கின்றார் என வியக்க முடிகின்றது.'வான் நின்று உலகம் வழங்கி வருவதால்தான்' உலகம் இயங்குகின்றது என முதல் குறளிலேயே சொல்கின்றார்.மழை இல்லையெனில் 'வியனுலகத்து உள் நின்று உடற்றும் பசி' , ' ஏரின் உழாஅர் உழவர்', 'பசும்புல் தலை காண்பது அரிது ' எனப் பல குறள்களில் என்னென்ன நிகழும் என்பதனை நமது மனக்கண் முன்னே நிறுத்துகின்றார்.

மழை ஏன் பெய்யவில்லை என்பதற்கு அறிவியல்முறையிலான ஆராய்ச்சிகள் காடுகளின் அழிப்பும், மரங்களின் குறைப்பும் காரணம் எனச்சுட்டுகின்றன. ஓசோன் படல ஓட்டையும்,கரியமில வாயுவின் அதிகரிப்பும் மழை பெய்வதைத் தடுக்கின்றன என விவரிக்கின்றன. ஆனால் 21-ஆம் நூற்றாண்டில் மழை பெய்யவில்லை என்பதற்காக அவரவர் கடவுளுக்கு அந்தந்த மதத்தைச்சார்ந்தவர்கள் தங்கள் பிரார்த்தனை மூலம் கோரிக்கை வைக்கின்றனர். சிலர் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்னும் மூட நம்பிக்கை வளர்த்து அதனால் தங்கள் வயிற்றை வளர்க்கின்றனர். ஆனால் நம்மைப்பொன்றவர்களுக்கு மழை பெய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிந்தாலும், மழை பெய்ய வைப்பதற்கான வழிமுறைகள் தெரிந்தாலும் திடீரென்று சென்னையில் சென்ற ஆண்டு கொட்டித்தீர்த்ததுபோல கொட்டித்தீர்க்கும் மழையை நிறுத்தும் வழி தெரியவில்லை. எதிர்காலத்தில் மின்சுவிட் மூலம் மின் விளக்கை நிறுத்துவது போல ஏதோ ஒரு கருவியால் கொட்டும் மழையைத் தடுத்து நிறுத்த வழி காணக்கூடும். அல்லது மழை பெய்யென கருவி மூலம் அறிவியல் அறிஞர்கள் கட்டளை இட்டவுடன் பெய்யக்கூடும். ஆனால் இன்றைய நிலையில் ஆக்குவதும் மழையாய், அழிப்பதும் மழையாய் உலகில் இருக்கிறது. அதனைத்தான் வள்ளுவர் 'எல்லாம் மழை ' எனச்சொல்கின்றார் எனக்கொள்ளலாம்.

மனிதனின் உடம்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது என்று சொல்கிறது மருத்துவ அறிவியல். உடல் இயங்க, உலகம் இயங்க தண்ணீர் தேவை, அதற்கு மழை தேவை.மழை இன்மையால் இன்றைக்கு பயிர்கள் காய்வதும்,காயும் பயிரைப் பார்த்து உழவர்கள் உயிரை மாய்ப்பதும் தொடர்கதையாகத் தொடர்கிறது.ஆட்சியிலிருப்பவர்களின் கடைக்கண் பார்வை கூட விவசாயிகள் பக்கம் திரும்பாத நிலைமையில், தமிழகத்தின் விவசாயிகள் திகைத்துப்போய் நிற்கின்றார்கள். கிராமத்தை விட்டு வெளியேறிப்பிழைப்பதற்கும் வழியின்றி, உழது பயிரிட நீரும் இன்றி,உண்பதற்கும் உணவும் இன்றி தவித்து நமது விவசாயிகள் நிற்கும் நிலைமை மிகப்பெரிய கொடுமையும் அவலமுமாகும்.காவிரி தடுக்கப்படும் நிலையில் , வைகை வறண்டு நிற்கும் நிலைமையில் வானின் சிறப்பை உணர இதனைவிடப் பொருத்தமான, வருத்தமான காலம் அமையப்போவதில்லை. வானின் சிறப்பை உணர்வதோடு வாழ்வு சிறக்க பெய்யும் மழை நீரை சேகரிப்பதும், தடுக்கப்படும் காவிரியை ஒற்றுமையாய் நின்று தமிழகத்திற்கு கொண்டுவருதலும் இன்றைய தேவையாகும்.


'நீத்தார் பெருமை' என்பது பாயிரத்தின் மூன்றாவது இயலாகும். இந்த இயலின் தலைப்பிற்கு 'இல்லற இன்பத்தைத் துறந்து ,பொது நலம் புரியும் பெரியாரது பெருமை கூறுதல் ' என்பார் புலவர் குழந்தை. நல்லொழுக்கத்தில் நின்று தீய ஒழுக்கங்களைத் துறந்தாரது பெருமையே எல்லாப்பெருமைகளிலும் மேலான பெருமையெனக்கொள்வர் எனச்சுட்டுகின்றார் முதல் குறளில். இந்த உலகம் என்பது எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கின்றது. அதில் எத்தனையோ பேர் பிறந்தனர், மறைந்தனர். 'வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி ' என ஒரு கவிஞர் பாடியதுபோல மறைந்தவர் எத்தனை கோடி எனக்கணக்கெடுக்க இயாலாது. அதனைப்போல பொது நலம் புரியும் பெரியோரின் பெருமை என்பது உலகில் இறந்தவர்கள் எத்தனை பேர் எனக்கணக்கெடுப்பது போலாகும்,எண்ண இயலாத, கணக்கிட இயலாத பெருமைக்குரியவர்கள் நீத்தார் என வள்ளுவர் சொல்கின்றார்.
'தன் பெண்டு, தன் பிள்ளை ,சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு,தானுண்டு ' எனும் மாந்தர்களைப் பெருவாரியாகப்பெற்றிருக்கும் இன்றைய உலகத்தில் தன்னலம் ஓங்கி நிற்போரே பெரும் விழுக்காடு உள்ளனர். பொது நலம் புரிபவரது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, தன்னலம் கருதாது பொது நலத் தொண்டு ஆற்ற வருவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது.

சாமியார்கள் என்பவர்கள் வேறு, நீத்தார் என்பது வேறு என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய இந்தியா சாமியார்களின் இந்தியா. கார்பரேட் சாமியார்கள்,காவி உடை உடுத்தியிருந்தாலும் உள்ளத்தால், நடத்தையால் ஆடம்பர விரும்பிகள்.யமுனை போன்ற நதிகளை நாசப்படுத்துபவர்கள். காடுகளை அளித்து, யானைகளைக் கொன்று ,தியானம் செய்ய வாருங்கள் என மலைகளுக்குள் மாளிகை அளிப்பவர்கள். மல்லிகைப் பூக்களைப் பரப்பி அதன் மேல் படுப்பவர்கள். குளீரூட்டப்பட்ட கார்களில் பயணிப்பவர்கள், ஆடம்பரமான பங்களா வாசிகள் தங்கள் இடத்திற்கு வருவதற்காக ஆசை வார்த்தைகளை அள்ளி எறிபவர்கள்.டாலர்களாக வருமானம் பார்ப்பவர்கள்.பணக்காரர்களின் கருப்பப்பணத்தை பதுக்கி வைக்க, பாதுகாத்து வைக்க உதவுபவர்கள்.மனிதர்களாகவே கருதப்பட வேண்டாத கார்ப்பரேட் சாமியார்களை  திருவள்ளுவர் கூறும் நீத்தார்களோடு ஒப்பிடுதல் கூடாது.
துறவறவியலுக்கு முன்னுரையாக இந்தக் குறள் அமைந்திருப்பதை நாம் காணலாம்.
'செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலதார் " என்னும் குறளோடு 'பெரியாரைத் துணைக்கோடல் ' என்னும் அதிகாரத்தின் குறள்களை ஒப்பிட்டு வியந்து பார்க்கலாம். அதனைப்போலவே
'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் " என்னும் குறளோடு 'இன்சொல்','பயனில சொல்லாமை ' அதிகாரங்களின் குறள்களோடு ஒப்பிடுகின்றபோது, நீத்தார் பெருமை அதிகாரம் மற்ற பல அதிகாரங்களின் கருத்துக்களுக்கு முன்னோட்டமாக அமைந்திருப்பதைக் காணலாம்.


அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்திற்கு 'அறத்துப்பாலில் கூறப்படும் பலவகையான அறங்களையும் பொதுவகையில் சிறப்பித்துக்கூறுதல் ' என்பார் புலவர் குழந்தை.அறத்துப்பாலில் இடம் பெற்றிருக்கும் இல்லறவியலுக்கும் துறவியலுக்கும் பொதுவான அறங்களை சிறப்பித்துக்கூறுதல் என எடுத்துக்கொள்ளலாம்.பெரும் உரைக்கு முன்னால் கொடுக்கப்படும் அறிமுக உரை போல அறத்துப்பாலில் சொல்லப்போகும் அறங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தும் இயலாக அறன் வலியுறுத்தல் இருக்கின்றது. அறம் என்று சொல்லுமிடத்து தமிழர்கள் நம் அறமும்,ஆரியர்கள் அறமும் வெவ்வேறு என்பதனை உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும், அப்போதுதான் திருக்குறளின் அறன் வலியுறுத்தலின் மேன்மையும் கருத்து திண்மையும் புலப்படும்.அறம் 'சிறப்பீனுஞ்செல்வமு மீனும் ' என்றும், 'அறத்தினூஉங்காக்கமுமில்லை ' என்றும் 'அறத்தான் வருவதே ' இன்பம் என்றும் அறத்தினால் விளையும் விளையும் விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றார் திருவள்ளுவர். அறம் என்றால் என்ன என்னும் கேள்விக்கு ' மனத்துக்கண் மாசிலன் ஆதல் ' என்றும், 'அழுக்காறு,அவா,வெகுளி, இன்னாச்சொல் ' இந்த நான்கும் இல்லாததே அறம் என்றும் விளக்கம் அளிக்கின்றார். அறத்துப்பாலில்'இன்சொல், பயனில சொல்லாமை,வாய்மை,வெகுளாமை,புறங்கூறாமை, அவாவறுத்தல் ' என்னும் அதிகாரங்கள் மிக விரிவாக ஒவ்வொன்றைப்பற்றியும் விளக்கும் நிலையில் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் அழுக்காறு, அவா,வெகுளி, இன்னாச்சொல் எனும் நான்கு குணங்களும் வெறுக்கப்படவேண்டியவை, அவை இல்லாததே அறம் என்று  தெளிவாக்குகின்றார்.

திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். தமிழகத்தில் புத்த மதம் மேலோங்கியிருந்த காலம் அது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்திய துணைக்கண்டத்தில் ஆரியத்திற்கு எதிராக எழுந்த மிகப்பெரிய கலகக்குரல் புத்தரின் குரல். 'புத்தர் காலப் பார்ப்பனர்களும்,பார்ப்பனியமும் கங்கைச்சமவெளியை பெரிதும் நடுக்குற செய்துகொண்டிருந்தது.அதனால் எங்கும் யாகச்சாலைகளும், பர்ணச்சாலைகளும் அதிகரித்தன. சமூக வாழ்க்கை ஸ்தம்பித்து ,ஆட்சியதிகாரம் வர்ணாசிரம சநாதன தர்மத்திற்கு கைகட்டி,வாய் பொத்திச்சேவை செய்தது. ஆகவேதான் சத்தியர்களான மகாவீரரும், புத்தரும் அவரவர் இயக்கத்தைத் தொடங்கினர். இவை சமூக வாழ்வை, அப்போதிருந்த அரசுகளைப் புரட்டிப்போட்டன " எனச்சொல்வார் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசர்.தமிழ் நாடு அன்றுமுதல் இன்றுவரை ஆரியக்கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கும் நாடுதான்.ஆரியக்கருத்துக்கள் தமிழகத்தில் சிலரால் பரப்பப்பட்டபோது அதற்கு எதிராக மிக வலுவாக எழுந்த இலக்கியம் திருக்குறள் ஆகும்.

ஆரியர்களுக்கு எப்படியெல்லாம் படியளக்கவேண்டும் என மனுநீதி போன்ற நூல்கள் பட்டியலிட்டு அதுதான் அறம், தர்மம் என்று சொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் அறம் என்றால் என்ன என்பதனை அழுத்தம் திருத்தமாக வரையறுத்து அதனை விளக்கி அறத்துப்பாலை அமைத்தவர் வள்ளுவர். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மின்சாரம் இல்லை, புகை வண்டி இல்லை, கணினி இல்லை, விமானம் இல்லை, இன்றைக்கு இருக்கும் பல வசதிகள்  வாய்ப்புகள் அன்று இல்லை. ஆனால் வள்ளுவர் காலத்தில் இருந்த பசியும் பட்டினியும் இன்றைக்கும் இருக்கின்றது. 'நல்லார் கண் பட்ட வறுமை' இன்றைக்கும் இருக்கின்றது,பல மோசடிகள் புரிந்து பணம் ஈட்டும் கயவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். 'மெய்ப்பொருள் காண்பது அறிவு ' என்பது சிலரிடத்தில் மட்டும்தான் இன்றைக்கு இருக்கின்றது, அன்றைக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.எனவேதான் தான் விரும்பும் உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதனை  அத்தனை குறட்பாக்களிலும் இணைத்துக்கொடுத்திருக்கின்றார்.

ஆரியர்கள்,திராவிடர்கள் என்பது கட்டுக்கதை, அப்படி ஒன்று இல்லை என்று சொல்பவர்களுக்கு மறுப்பாக அறிவியல் ஆய்வு விளக்கம் கொடுத்திருக்கின்றது. திராவிட நாகரிகமாகிய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்பு ,வேறு கண்டங்களிலிருந்து வேற்று இன மனிதர்கள் சமஸ்கிருத மொழியோடும், வேறுபட்ட கலாச்சாரத்தோடும்  இந்தியாவிற்குள் புகுந்திருக்கின்றார்கள் என்று டி.என்.ஏ.எனப்படும் அறிவியல் ஆய்வு  நிருபித்திருக்கின்றது.(தி தமிழ் இந்து - நாளிதழ்-03.07.17)  வேற்று கண்டத்திலிருந்தும், வேற்று மொழியோடும் நம் நாட்டிற்குள் புகுந்தவர்கள் கடவுள் என்னும் பெயரால் செய்திருக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. புத்தரும், சித்தர்களும், பெரியாரும் தொடுத்த போர்களைப்போலவே திருவள்ளுவரும் ஆரியத்திற்கு எதிராக போர் தொடுத்திருக்கின்றார் தனது குறள்களால். .தொன்மை மிக்க திராவிடர் இனத்தை, தமிழர்களை தன் வயப்படுத்துவதற்காக யாகங்கள் என்னும் வேள்விகளில் ஆடு, மாடு,குதிரை போன்றவற்றை பலியிட்டு,விலங்குகளை பலியிட்டால் மோட்சம் கிடைக்கும் என்று சொன்ன நேரத்தில், கொல்லாமையை பேசியிருக்கின்றார் திருவள்ளுவர்.

பசுக்கள் எல்லாம் வேள்வியில் சுட்டு திண்பதற்காக ,ஆரியர்களுக்காகத்தான் படைக்கப்பட்டது, வேள்விக்குள் பசுக்கள் போடப்பட்டு, பொசுக்கப்படும்போது, வேகவைக்கப்படும்போது அது பசு வதையல்ல' என்று சொல்லப்படும் ஆரிய அதர்மத்திற்கு எதிராக ,'சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங்கடை ' என்று பாடியவர் திருவள்ளுவர். அவி சொரிதலே மிகப்பெரிய புண்ணியம் தரும் என்று ஆரியர்கள் சொல்லி மன்னர்களை, அரசர்களைத் தங்கள் வயப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் 'ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று ' என்று எழுதியவர் திருவள்ளுவர். இதனைப்போல வேதத்திற்கு மறுப்பாய், மநு நீதிக்கு மறுப்பாக அமையும் பல குறள்களை சுட்டிக்காட்ட இயலும்.

             இன்றைக்கு ஒரு பேராபத்து நம்மைச்சூழ்ந்திருக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்,ஒரே மொழி,ஒரே வரி எனப் பன்முகம் கொண்ட இந்தியத்துணைக்கண்டத்தை ஒற்றையாக்க ஆட்சியதிகாரத்தை வைத்து ஆரிய அமைப்புகள் துடித்து நிற்கின்றனர்,. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கியத்தால் ஆரியத்திற்கு எதிராக போர் தொடுத்த திருவள்ளுவர் கொடுத்த திருக்குறளை கைகளில் வைத்து சபதம் ஏற்போம். எனது மொழி தமிழ் மொழி, எனது பண்பாடு தமிழ்ப்பண்பாடு, எனது இனம் திராவிட இனம். இந்தியத்துணைக்கண்டத்தில் இணைந்து இருப்பதற்காக இவைகளையெல்லாம் இழக்க வேண்டுமென்றால் நாம் யோசிக்கலாம், ஆனால் இனி வரும் தலைமுறை யோசிக்காது, மாற்று இனத்திடம் மண்டியிடாது என்பதனை மட்டும் இன்றைக்கு இருப்பவர்களுக்கு சொல்லி வைப்போம்.அதற்கு உறுதுணையாக திருக்குறள் என்றைக்கும் நிற்கும்.



கட்டுரைக்கு உதவிய நூல்கள் :
1) பெரியார் களஞ்சியம் 37- திருக்குறள் வள்ளுவர்-டாக்டர் கி.வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை-7.
2) குறள் வானம்- அறத்துப்பால்- சுப.வீரபாண்டியன், வானவில் புத்தகாலயம், சென்னை-17
3) புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும் - க.திருநாவுக்கரசு ,மீநா பதிப்பகம், சென்னை-2.
4) திருக்குறள் புலவர் குழந்தையுரை, சாரதா பதிப்பகம், சென்னை-14

No comments: