Tuesday 13 March 2018

வாழ்த்துகள், பாராட்டுகள்.....

மதுரையில் 10.03.2018 அன்று விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.


தனது அனுபவத்திலிருந்தே கூட்டத்தில் மெதுவாக பேச்சினை ஆரம்பித்த தோழியர் கொ.செந்தமிழ்ச்செல்வி அவர்கள்  மிகச்சிறப்பாக தனது வாதங்களை முன்வைத்தார். தந்தை பெரியாரின், அன்னை மணியம்மையாரின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புகளை உரையில் தொட்டுக்காட்டினார். தான் ஒரு ஆசிரியராகப் பணியாற்றுவதையும் ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு இன்னும் பெண்கள் செல்லவேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதனைக் குறிப்பிட்டார். இணையத்தில் பதிவிடும் ஒரு பெண்ணாக பேஸ்புக்கில், வாட்ஸ் அப்பில் பதிவிடும்போது, கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க இயலாத கோழைகள்  எப்படியெல்லாம் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதனைக் குறிப்பிட்டார். அதற்காக அஞ்சிடப்போவதில்லை, பெண்களுக்கு கிடைத்திட்ட மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாட்ஸ் அப், பேஸ்புக் -அதனை முழுமையாக பதிவிடுவோம் என்று சூளுரைத்தார். எப்படியெல்லாம் தந்தை பெரியார் பற்றி, திராவிடர் இயக்கம் பற்றி தெரியாமல் பதிவிடுவதையும் சிலர் தெரிந்துகொண்டே நரித்தனம் செய்வதையும் எடுத்துரைத்தார்.தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என்று சொன்னதால் ஏற்பட்ட எழுச்சியை,ஒற்றுமையை குறிப்பிட்டு பார்ப்பனர்கள் எந்த நாளும் திருந்தப்போவதில்லை என்பதைக் குறிப்பிட்டார். ஏறத்தாழ 90 நிமிடங்கள் அரங்கத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர் உரையாற்றிய விதம் அருமை. தோழியருக்கு பாராட்டுகள். திருவாரூரிலிருந்து மதுரை விடுதலைவாசகர் வட்டக்கூட்டத்திற்காக வருகை தந்து பெரியாரியம், எதிரிகளின் தகிடுதத்தங்கள்,பெண்களின் கடமை,உழைக்கும் மகளிர் தினம்,  அன்னை மணியம்மையார் அவர்களின் சிறப்பு, அத்தனை கேலிகளையும் வசவுகளையும் அவர் தாங்கிக் கொண்டு தந்தை பெரியாருக்கு உறுதுணையாக இருந்த விதம், அய்யா அவர்களின் மறைவுக்குப்பிறகு உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றியது, அய்யா அவர்களின் அறக்கட்டளையைக் காப்பாற்றியது மட்டுமல்ல தன்னுடைய சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு அளித்தது என அன்னை மணியம்மையாரின் சிறப்புக்களை பட்டியலிட்டு   சிறப்புரையாற்றியது அருமையாக இருந்தது. வாழ்த்துகள், பாராட்டுகள்.....

முனைவர்.வா.நேரு,
தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.

No comments: