Monday 30 April 2018

எங்களது கனவில் ஒரு மேதின நாள் ....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உலகம் முழுதும் இருக்கும்
உழைக்கும் மக்கள் எல்லாம்
இன்புற்று இருக்கும் நாள்....

உழைத்து உழைத்து உருக்குலைந்து
உண்ணும் உணவிற்காக அலைந்தலைந்து
அல்லல்படும் இந்த நாள் போல் அல்லாது
அந்த நாளில்
எல்லோரும் உழைப்பதுவும்
உழைக்கும் அனைவருக்கும் உணவு
உறுதிபடுத்தப்படுவதுமான நாளாக
அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உண்டு கொழுக்க சிலரும்
உணவின்றி உழைத்து சாக பலருமாய்
இருக்கும் இந்த நாள் போலல்லாது
அந்த நாளில்
அவரவரால் முடிந்த உழைப்பு
ஆனால் அனைவருக்கும்
தேவையான அவரவர் உணவு
அவரவர் தட்டில் வந்து
நிரம்பி வழியும் நாளாய் அந்த நாள்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

கடவுளின் நெற்றியில் இருந்து
பிறந்தவர்கள் நாங்கள் என்னும்
உளறல்கள் எல்லாம் ஒழிந்து
உலகில் பிறக்கும் அத்தனை
குழந்தைகளும் பேதமில்லாமல்
கறுப்பென்றும் சிவப்பென்றும்
வேற்றுமைகள் காட்டாது
உயர்சாதியென்றும் தாழ் சாதியென்றும்
பிறக்கும்போதே சாதி ஏற்றத்தாழ்வு
ஏணிப்படிகளில் பொருத்தாது
பிறக்கும் குழந்தைகள் எல்லாம்
மனிதக் குழந்தைகளாய்
பிறக்கும்  நாளாய்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

சாதியா ? அப்படியென்றால்.....என்னது ?
மதமா ? அப்படியென்றால் ....தெரியாது ?
கடவுளா ? நன்றாக வாழத் தேவையா அது ?
என்னும் கேள்விகளோடு
இனிவரும் ஓரிரு தலைமுறைகளில்
எங்களது பிள்ளைகளின் பிள்ளைகள்
பிரசவிக்கும் பிள்ளைகள் எழுப்பும்
கேள்விகளால் நிரப்பப்படும் நாளது .....

உலகம் ழுழுவதும் இருக்கும்
செல்வமெல்லாம் ஓரிருவர் கையில்
இருக்க அல்ல! அல்லடா அல்ல !
என ஆர்ப்பரித்து உழைக்கும் கூட்டம்
உலகச்சொத்துக்களையெல்லாம்
பொதுவாக்கும் காலமது .....
தனியுடமை அழிந்து
பொது உடமை செழித்து
தந்தை பெரியார் காணவிரும்பிய
பொது உரிமையோடு மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க வாழும் காலம் அது.....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
அந்த நாளை நோக்கி நகர்வதற்காக
தந்தை பெரியாரின் தடி இருக்கிறது..
அண்ணல் அம்பேத்கரின் சுட்டும் விரல் இருக்கிறது....
ஓங்கிய கைகளோடு புரட்சியாளர் லெனின்
போட்டுத்தந்த முழக்கங்கள் இருக்கிறது ....
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்
தோழர் லெனினும் போட்டுத்தந்த
பாதை தெளிவாகவே எங்கள்
இளைஞர்களின் கண்களில் தெரிகிறது....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
ஆணும் பெண்ணும் சமமாய்
வர்க்கப்பேதம் ஒழிந்து
வர்ணபேதம் அழிந்து
மனித நேயம் தழைத்து
உலகமெல்லாம் ஒரு நாடாய்
உழைக்கும் மக்களெல்லாம் ஒரு வீடாய்
செழித்துக்குலுங்கும் அந்த நாள்...
அந்த நாள் ! அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது!

                                                               வா.நேரு ....
                                                மேதின(மே-1,2018) வாழ்த்துகள் அனைவர்க்கும்


6 comments:

anandam said...

அருமை அண்ணே..

முனைவர். வா.நேரு said...

அண்ணே! நன்றி ....வருகைக்கும், கருத்திற்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

மே தின வாழ்த்துகள்

முனைவர். வா.நேரு said...

தங்களுக்கும் எனது மேதின வாழ்த்துகள் அய்யா...

iramuthusamy@gmail.com said...

மேதினக் கவிதை நன்று. மே தின வாழ்த்துகள்

முனைவர். வா.நேரு said...

அய்யா,வணக்கம், வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.....