Sunday 23 September 2018

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம்..சுப்ரபாரதி மணியன்

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம் (குறு நாவல்கள் தொகுப்பு )
நூலின் ஆசிரியர்             : சுப்ரபாரதி மணியன்
வெளியீடு                   : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98.
முதல் பதிப்பு                : டிசம்பர் 2011, 208 பக்கங்கள், விலை ரூ 125 /-
மதுரை மாவட்ட மைய நூலக எண் : 215669



                           
                            தமிழில் சிறுகதைத் தொகுப்புகள் உண்டு,நாவல் உண்டு ஆனால் இந்த நூல் குறு நாவல்கள் தொகுப்பு என இருந்தது. ஒவ்வொரு குறு நாவலும் சுமார் 35, 40 பக்கங்களில் ஏழு தலைப்புகளில் இருக்கும் நூல். கடைசிக் கதையான மரபு சிறுகதை வடிவில்தான் உள்ளது. ஒவ்வொரு குறு நாவலும் வெவ்வேறு களங்களை, தளங்களை தன்னகத்தே கொண்டு தனித்தன்மையாக விளங்குகின்ற தொகுப்பாக இந்த நூல் இருக்கின்றது.
.
                           தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் தான் நம்முடைய கட்சி வாக்குகள் பெற முடியும், செல்வாக்கு பெறமுடியும் என்று கருதி , சில தறுதலைகள் தலைவர்கள் என்னும் பெயரில் வெறித்தனமாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், முதல் கதையான 'நகரம்'90 ' தனித்துவம் பெறுகின்றது. எளிய மனிதர்களின் வாழ்வில் மதக்கலவரம் எவ்வளவு துயரங்களைக் கொண்டுவரும் என்பதனைத் தனது அனுபவத்தின் மூலமாகவே உணர்ந்த காரணத்தால் துயரம் தோய்ந்த எழுத்துகளால் இந்தக் கதையை எழுதியுள்ளார் போலும்.ஓய்வு பெற்ற வாழ்க்கை வாழும் மல்லேஸ், அவளின் மகள் சாந்தா,அவரின் மகன் பிரகாஷ்,அவரின் மனைவி சரஸ்வதி என செகந்தராபாத்தில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பத்தை நமது கண் முன்னால் கொண்டுவரும் கதையாசிரியர் அடுத்தடுத்து பழைய நகரத்திலும் புதிய நகரத்திலும் மதக் கலவரம் பரவும் விதத்தை விவரிக்கின்றார். இரண்டு மதத்தவரும் கொன்று குவித்த மனிதர்கள். எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் தாங்கள் பிறந்த மதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசியெறியப்பட்ட மனிதர்கள் என அவர் விவரிக்கும் விதம் கொடுமையாக இருக்கின்றது.

" கும்பலா வர்றாங்களாம்வீட்டுக்குள்ள புகுந்து கொழந்தைக,பெரியவங்க வித்யாசம் பாக்காமே குத்துறாங்களாம்.ஒரு குத்துன்னு இல்லை, சாகுறவரைக்கும் ..பேப்பர்ல போடறான் பாருங்க,கோரம் "
ரத்தத்தில் மிதக்கும் பிணங்கள்.மொத்தமாய் பிணக்குவியலாய் வீடுகளில் கிடந்தவர்கள்.தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகள், வீடுகள்..யாரின் வேலை? எந்த மிருகம் தன் விசுபரூபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறது ? " பக்கம் 9.....கடைசியில் மல்லேஸ் வீட்டிலும் கத்திக்குத்து விழுகின்றது. "சரஸ்வதிக்கு வயிற்றில் குத்து. பிரகாஷ்க்கு தலையில் வெட்டு .மல்லேஸ்ஸேன் வலது கை சதை தொங்கிக்கொண்டிருந்தது. சாந்தாவுக்குப் பின்புறத்தில் குத்து,குப்புற ரத்தத்தில் இருந்தாள். அஜ்மத் அலி அசைவற்றிருந்தான் " என அனைவருக்கும் நிகழ்ந்த கொடுமைகளை விவரிக்கும் கதை ஆசிரியர், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கலவரம் அடங்கியதைக் குறிப்பிடுகின்றார். மருத்துவமனையில் படுத்திருக்கும் மல்லேஸ் உள்ளிட்ட நோயாளிகளைப் பார்க்க புது முதலமைச்சர் வருகின்றார். " இத்தனை பலி எதுக்குடா? உனக்கு நாற்காலி வேணுமுன்னுதானா? ? " உரத்துக்கேட்க வேண்டும் என நினைத்தார் மல்லேஸ்(பக்கம் 38 ) ......நிகழ்காலத்தில் சமூகப் பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய கதை இது. மத வெறி அமைப்புகளை, எந்த மதமாக இருந்தாலும் ஊக்குவிப்பது என்பது நல்ல பாம்பை வீட்டிற்குள் வரவைப்பது போன்றது என்பதனை இக்கதையை வாசிப்பவர்கள் உணரலாம். 



                    சாகப்போகும் சீனிவாசன், தன் நிலையிலிருந்து மாறி சாகப்போகும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றும் நிகழ்வைச்சொல்லும் குறு நாவல் 'வாழ்வின் தீர்வு'. எளிமையான மனிதர்கள், ' சீனிவாசா...சீனிவாசா .." " கடவுளைக் கூப்பிடுகிறாயா ..." இல்லை, அவன் செத்தே பல நூற்றாண்டுகள் ஆகின்றன. என் பெயர்தான் சீனிவாசன்.என பெயரை நானே சொல்லிக்கொள்கிறேன்.இதில்தான் எத்தனை சந்தோஷம் " (பக்கம் 45) ....நிறைய உரையாடல்கள் தனக்குள்ளும் சுற்றி இருப்பவர்களுடனும் சீனிவாசன் நிகழ்த்துகின்றான். அதில் கேலி,கிண்டல்,தத்துவம், ஞானம் என அனைத்தும் கலந்ததாக இருக்கின்றது. 

                   "இருள் இசை" என்னும் தலைப்பே இருண்மையைக் குறிப்பிடுவது போல கதையும் எதிர் விளைவைச்சொல்லும் கதைதான். புல்லாங்குழல் வாசிப்பையும், பாடல் பாடுவதையும் தொழிலாகக்கொண்ட ஜெகன் , தான் பிறந்த ஊரில் தனக்கென யாரும் இல்லாத நிலையில் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போவதும் அங்கு பழைய நினைவுகளையும் இன்றைய எதார்த்தையும் இணைத்து பார்ப்பதையும் கதையாக ஆக்கியிருக்கின்றர் சுப்ரபாரதி மணியன்.கால் நூற்றாண்டாக சொந்த ஊருக்குப் போகாமல் இருப்பது என்பதே தனிமைப்பட்டு போவதுதான்.கிராமத்தில் நிலவும் சாதி, அதன் அடுக்குமுறை, அதில் தன்னை சாதிப்படிக்கட்டில் ஒரு இடத்தில் நிறுத்திப் பார்க்கும் உடன் படித்தவர்கள் என விவரிக்கின்றார். வித்தியாசமான கற்பனையும் எதார்த்தமும் கலந்து படைக்கப்பட்ட குறு நாவல் 'இருள் இசை'.

                   பண்ணையாரின் ஆசை நாயகி என்று பெயர் எடுத்த பெண்ணைப் பற்றியும் அவளின் வாழ்க்கை பற்றியும் கடைசியில் பஞ்சம் வந்தபோது பண்ணையார் அனுப்பி வைத்த நெல் மூட்டையை அவிழ்த்துக்கூடப்பார்க்காமல், பண்ணையாரின் மனைவியால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணைப் பற்றிய கதை 'கவுண்டர் கிளப்' .

                  சிக்கல்களாக இருக்கும் வாழ்க்கை, சின்னச்சின்ன விசயங்களில் கூட ஏற்படும் மனத்தாங்கல்களை ,கோபத்தைக் கூட வெளியே காட்டிக்கொள்ள இயலாமல், கோபத்தை விழுங்கி வாழும் வாழ்க்கையில் தீர்வாக குடிப்பதும் ,புகை பிடிப்பதும் ஆகிவிடுமா என்னும் கேள்விக்கு விடையாக விவரிக்கும் குறு நாவலாக ,இந்த நூலின் தலைப்பான 'வேறிடம் ' என்னும் அமைந்திருக்கின்றது.

                  அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களாக வளரும் அடியாட்கள், அவர்களின் அடிதடிகள், அதில் ஒரு ஓவியக்காரனின் மனதில் பதிந்த நிகழ்வு, அந்த நிகழ்வினை வரைந்த ஓவியக்காரன், அதனால் ஏற்படும் இன்னல்கள் என விவரிக்கும் கதை 'வர்ணங்களில் ' என்னும் கதை.

                  கலவரம், கலவரத்திற்கு காவலாக வரும் ஒரு போலிஸ்காரனிடம் அநியாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சுகந்தி, அவளுக்கு துணையாக நியாயம் கேட்க துணை நிற்கும் அவளின் கணவன் என விவரிக்கும் கதை 'இன்னொரு நாளை '.

                   "முன்பெல்லாம் நூலுக்கு பற்றாக்குறை இல்லாமல் கைத்தறி துணிகளுக்கு கிராக்கியும் இருந்த போது இப்படி அந்தத் தெருவில் நடந்து போகிறபோது  தெருமுழுதும் பாடுகிற மண் புழுதியும் ,தூசியும், கற்களும் மொத்தமாய் தெருவும் சடக் சடக் என்கிற நெய்கிற தறிகளின் சப்தத்தை எதிரொலிக்கும்.ஆனால் அந்தச்சத்தம் நின்று போயிருந்தது முழுவதுமாய் " என நெசவையும் , நெய்யும் மனிதர்களைப் பற்றியும் விவரிக்கும் கதை 'மரபு '.இந்தக் கால்தா, இந்தக் கைதா என்னும் குரலினைக் கேட்கும் நடேசு அழுவதை நூலாசிரியர் விவரிப்பதை வாசிக்கும்போது " கை வீசம்மா, கை வீசு, மிட்டாய் வாங்கலாம் கை வீசு " எனப் பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அழுதுகொண்டே பாடுவதைக் கேட்பது போல இருந்தது.

                மொத்தத்தில் இந்தத் தொகுதியில் உள்ள கதைகள், உற்சாகமூட்டும் கதைகள் இல்லை, ஆனால் உண்மையைச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன. அலங்கார வார்த்தைகள் இல்லை, ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் மனிதர்களைப் பற்றிய விவரிப்புகள் உள்ளன. பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் துணைக்கோட்டப்பொறியாளராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றிருக்கும் சுப்ரமாரதி மணியன் இதுவரை 7  நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு பயண அனுபவக்கட்டுரைகள் என 35 புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பது பாரட்டிற்குரியது.

             நூலின் ஆரம்பித்தில் உல்ள 'சுப்ரபாரதி மணியன் : சில விமர்சனக்குறிப்புகள் " என்னும் பகுதி, பல்வேறு இதழ்கள், எழுத்தாளர்கள் பார்வையில் சுப்ரமணிய பாரதி- எனும் எழுத்தாளரைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. மிக அருமையான குறிப்புகள் இவை. முதன் முதலில் சுப்ரமணிய பாரதி என்னும் எழுத்தாளரை வாசிப்பவருக்கு அவரைப் பற்றிய ஒரு புரிதலை இந்தப் பகுதி தரும்.

           பதிப்பகத்தார் தங்கள் பதிப்புரையில் " கதைகளில் வரும் ஒவ்வொரு வரியிலும் மனித உணர்வுகளை உயிரோட்டமாகப் பின்னிக் காட்டுகிறார் நூலாசிரியர்.இவை போன்ற கதைகள் மனித இதய வாசலைத் திறந்து காட்டி ,மனித நேயம் என்கிற வாசனையை வீசச்செய்யும் என்று நம்பலாம். மனித வாழ்க்கையின் கூர்மையை சுய நலக்காரர்கள் மழுங்கடித்துக்கொண்டிருந்தாலும் எழுத்தாளர்கள் தங்கள் பேனா முனையால் கூர் தீட்டவே முனைத்து நிற்கிறார்கள் " என்று குறிப்பிடுகின்றார்கள்.உண்மைதான். சில கதைகளில் விவிரிப்பு கொஞ்சம் கூடுதலாகவே  இருந்தாலும், சுப்ரபாரதி மணியன் தன்னுடைய பேனா முனையால் மனித நேயத்தை கூர் தீட்டவே இக்கதைகளை எழுதியிருக்கின்றார் எனலாம். 

               





No comments: