Sunday 21 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : இந்தியக் குடிசை...பெர்னார்தன் தெ.சென்பியர் (பிரஞ்சு மொழி)....

அண்மையில் படித்த புத்தகம் : இந்தியக் குடிசை
நூல் ஆசிரியர்              : பெர்னார்தன் தெ.சென்பியர் (பிரஞ்சு மொழி)
தமிழில் மொழி பெயர்ப்பாளர் : தேசிகப்பிள்ளை
வெளியீடு                  : திராவிடர் கழக (இயக்க ) வெளியீடு,பெரியார் திடல்,சென்னை-7
                            தொலைபேசி எண்: 044-26618163
முதல் பதிப்பு               : 1967 (சிந்தனை பதிப்பகம்) ,இரண்டாம் பதிப்பு 2014
மொத்த பக்கங்கள்           :68 விலை ரூ 35



                            இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்தியக் குடிசை என்னும் தலைப்பிற்கு கீழ் (224 ஆண்டுகளுக்கு முன்பு ரூசோவின் மாணவர் 1790-ல் எழுதிய இந்திய சமூகம் பற்றிய புதினம்) என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.அடுத்து சிந்தனைப் பதிப்பகம் வெளியிட்ட அட்டைப்படம். அதற்குப் பின்னால் பெர்னார்தன் தெ சென்பியர் பற்றிய அறிமுகம்.பெர்னர்தன் தே சேன்பியர்(Bernardin de Saint -Pierre) பிரெஞ்சு நாட்டின் புகழ் மிக்க எழுத்தாளர்.பொறியியல் வல்லுநர்.இயற்கை விஞ்ஞானி;பகுத்தறிவாளர், நூலாசிரியர்....கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

பதிப்புரையினை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்திருக்கின்றார்.அவர் தனது பதிப்புரையில் "இந்தியத் துணைக்கண்டத்தின் சமுதாயச்சீரழிவிற்கு மூல முதற்காரணம் பார்ப்பனியம் என்பதை புத்தரில் தொடங்கி இராமலிங்கர் வரை பலர் நீண்ட காலந்தொட்டு வெளிப்படுத்தி வந்துள்ளனர்.....இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் நமக்குப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சு நாட்டுக்காரர் எழுதிய இந்த புதினம்(நாவல்) ஏராளமான செய்திகளைத் தருகிறது.....இந்நூலை இந்த தலைமுறைக்கு வெளிச்சமூட்டும் வகையில் பெரியார் ஆவணக்காப்பகம் வெளியிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தலைமுறை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்தப்புத்தகம். 

                              இந்தப் புத்தகத்தினை நான் இரண்டு மூன்று முறை வாசித்திருந்தாலும் கூட ,மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் அ.முருகானந்தம் அவர்கள் இந்தப் புத்தகம் பற்றி மிகச்சிறப்பாக ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.பத்தாம் வகுப்புத்தான் படித்தவர் என்றாலும் கூட உலக அனுபவத்தோடு இணைத்து அவர் சொன்ன விதம் எனக்கு மிக ஈர்ப்பாக இருந்தது. அவரது மொழியிலேயே இனி இந்தப் புத்தகத்தின் கதை  பற்றி....                                      

"ஆங்கில நாட்டில் ஆங்கில எழுத்தாளர்கள் சங்கம் என்று ஒன்று இருக்கிறது. நமது நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருப்பதுபோல. அதில் இருக்கும்  20 மெம்பர்கள் உலகம் முழுவதும் போகின்றார்கள். அந்த நாட்டு அரசாங்கம் அதற்கு பண உதவி செய்கின்றது. உலகத்தில் உள்ள எல்லா பகுதிக்கும் போய் ஆய்வு செய்வதுதான் நோக்கம்.ஒவ்வொருவர் கையிலும் 3500 கேள்விகள். அதற்கு அவர்கள் பதில் பெற வேண்டும். அதன் மூலம் உண்மை அறிய வேண்டும். அதில் ஒருவர், ஒரு பண்டிதர்  இந்தியாவிற்கு வருகின்றார். அவர் எடுத்தவுடன் இந்தியாவிற்கு வரவில்லை .முதலில் ஆலந்து நாடு, பின்பு பிரான்ஸ் நாடு, துருக்கி,எகிப்து அரபு நாட்டிற்கெல்லாம் சென்றுவிட்டு கடைசியில் இந்தியாவில் இருக்கும் .காசி நகரத்திற்கு வருகின்றார். அங்கு ஒரு இடத்தில் தங்குகின்றார்.அங்கு இருக்கும் அந்தணர்களோடு கலந்து உரையாடுகின்றார். அவர் இதுவரை சேமித்த ஆவணங்கள் மலைப்பை உண்டாக்குகின்றன.  90 சாக்குகளில் எடுத்து வந்த ஆவணங்கள் ஏறத்தாழ  9550 பவுண்டுகள் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு கொண்டுவந்தும் இதில் உண்மை இருக்கிறதா,இல்லையே என்பது அவருக்கு சோர்வைத் தருகின்றது. 

ஆவணங்களில் நிறைய தகவல்கள் இருக்கு.வரலாறுகள்,சிற்பங்கள்,ஆறுகள், தத்துவங்கள் என எல்லாவற்றைப்பற்றியும் தகவல்கள் எல்லாம் இருக்கு ஆனா எல்லாமே  முரண்படுது. உலகத்தில் எதுவுமே உண்மை இல்லையோ என்று நினைக்கின்றார். முரண்பாடுகளின் குப்பையாக தகவல்கள் இருக்கின்றதே எனப் பார்க்கின்றார். ஒரு நாட்டில் ஒரு மதம் என்று சொல்கிறான்.ஆனால் உண்மை இல்லை.இரண்டு மனிதர்கள் இருக்கிறாங்கே..அவர்களிடம் ஒற்றுமை இல்லை..எல்லாமே தவறா? ...எல்லோமே குப்பையா எனும் கேள்வி குடைகின்றது ...3500 கேள்விகள் கொண்டுவந்தால் கிட்டத்தட்ட 17500 பதில்கள். ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. ஒரு கேள்விக்கு 5 பதில்கள்...இதைக்  கொண்டுபோய் இலண்டனில் கொடுத்தால், எத்தனை பேர் வேலையை கெடுப்பது அவர்கள் வேலையைக் கெடுத்து .இந்தப் பண்டிதரைப் போல இன்னும் 19 பேர் இருக்காங்களே..அப்ப எவ்வளவு தீர்வுகள்... 3.5 இலட்சம் பிரச்சனைகள். இந்தப்பிரச்சனைகளுக்கு யாரிடம் தீர்வு கேட்பது ....என்று காசியில் உட்கார்ந்து அந்தப் பண்டிதர் புலம்புகின்றார். அப்போ அந்தக் காசியில் இருக்கும் இரண்டு அந்தணர்கள்,  அவர்கள் சொல்கிறார்கள். எங்க நாட்டிலே, ஒரிசா கோவிலில் இருக்கும் தலைமை.அந்தணர் பெரிய அறிவாளி-அவருகிட்டே கேள்விகேட்டா உங்கள் சந்தேகமெல்லாம்  தீர்ந்து விடும் என்று சொல்கிறார்கள்...

உடனே அந்தப் பண்டிதர் இந்திய நாட்டில் இருக்கும் ஆங்கிலேயர்களுக்கான சங்கத்தை அணுகுகின்றார். அவர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்து தருகின்றனர். அப்ப எல்லாமே நடைதான்.கார்,பஸ் எல்லாம் கிடையாது. நடக்க முடியவில்லையென்றால் பல்லக்கில் தூக்கிப்போவார்கள். அந்தப் பண்டிதர் போகும்  பல்லாக்கைத் தூக்கிட்டு போக 4 பேர். மாத்து கைக்கு 4 பேர். காசியிலிருந்து கல்கத்தா போய், கல்கத்தாவிலிருந்து ஒரிசாவில் இருக்கும் அந்தப் பூரி ஜெகனாதர் கோவிலுக்குப் பல்லாக்கிலே போகின்றார். 11-வது நாள்தான் போய்ச்சேருகின்றார். பல்லக்குத் தூக்க ஆள்,சமைக்க ஆள், ஒட்டகம், 25 பேருக்கு மேல் ஆட்கள் எனப் படையோடு போவது போல போகின்றார். அங்கே போனா அவ்வளவு எளிதாக அந்த தலைமை அந்தணரைப் பார்க்க முடியவில்லை.நீ பேண்ட் சர்ட்.போட்டு வந்திருக்க..சூ போட்டிருக்க .பரங்கி இனத்தை சேர்ந்தவன். உன்னை நாங்கள் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கின்றார்கள்.எப்படியாவது நான் அவரைப் பாக்கணும்ன்னு பண்டிதர் கெஞ்சுகின்றார்.அப்ப எல்லாத்தையும் கழட்டு..நாங்க சொல்ற மாதிரி உடையை உடித்திக்கிட்டு உள்ளே வா என்று சொல்ல ஆடையை மாத்திக்கிட்டு ,காவி வேட்டியைக் கட்டிக்கிட்டு உள்ளே போகின்றார். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னாலேயே அவரை உட்காரவைத்து விடுகின்றார்கள். எங்க நாட்ல் அந்தணர்க்கு முன்னால் எவ்வளவு எவ்வளவு தூரத்தல ஒவ்வொருத்தரும் உட்காரணும்ன்னு நடைமுறை இருக்கு, அதனாலே நீ அப்பாலே உட்காரு என்று சொன்னவுடன் அந்தப் பண்டிதர் .குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் உட்கார்கின்றார்.

தலைமை அந்தணர்க்கு இருக்கும் வசதி நம்ம நாட்ல மன்னருக்குக் கூடக்கிடையாதே என்று பண்டிதர் நினைக்கும் அளவிற்கு அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள்.தலைமை அந்தணருக்கும் இந்தப் பண்டிதருக்கும் இடையில் திரைகள் இருக்கு. ஆனாலும் பண்டிதருக்கு எப்படியாவது உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் தலைமை அந்தணரிடம் கேள்விகளைக் கேட்கின்றார். முதல் கேள்வி உலகில் எல்லாமே பொய்யாத் தெரியது. அப்ப, உண்மையை எந்த வழியாக அறிந்து கொள்வது ? பதில்: அந்தணர்கள் வழியாகத்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.அடுத்த கேள்வி : .உண்மையை எங்கே போய்த்தேட முடியும் ? பதில் : வேதங்களில்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் அது அந்தணர்களுக்குத்தான் தெரியும்.சரி, கேட்ட பதிலை  யார் கிட்ட சொல்றது? பதில் : யார் கிட்டேயும் சொல்லக்கூடாது. எல்லோருக்கும் உண்மையை தெரிவிக்காத கடவுள் குற்றவாளிதானே ? என்று பண்டிதர் கேள்வி கேட்கின்றார் பதில் இல்லை,பேசாம இருக்கின்றார்கள்.யார் கிட்டேயும் சொல்லாமல் மறைத்து வைத்துத்திருக்கிற அந்தணர்கள் குற்றவாளிகள்தானே என்று கேட்க பண்டிதரை அடிக்க அந்தணர்கள் பாய்கின்றார்கள். தாக்கப்பாய்கின்றார்கள்.குழப்பம் ஏற்படுகின்றது.உடனே தலைமை அந்தணர் பண்டிதரை வெளியேறச்சொல்கின்றார்.

இரவு ஆகிவிட்டது. இப்போது இந்த இருட்டில் எங்கே போவது. இரவில் தங்கி பகலில் போகிறேன் என்று சொல்கின்றார். இல்லை நீ மிலேச்சன். கோயிலுக்கு அருகில் நீ தங்கக்கூடாது என்று சொல்கின்றார்கள். விதிப்படி தங்கக்கூடாது என்று சொன்னதால் பண்டிதர் கிளம்பி விடுகின்றார். அப்போது மின்சாரம் கிடையாது. இரவோடு இரவா மறுபடியும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல்லக்கில் அவரை உட்காரவைத்து தூக்கிச்செல்கின்றார்கள். போகும் வழியில் பயங்கர மழை...இடி மின்னல்...சூறாவளிக்காற்று .... ஒதுங்க எங்கேயாவது இடம் கிடைக்குமா என்று பார்க்கின்றார்கள். பாதுகாப்பான ஒரு இடம் போலத்தெரிய அடர்ந்த செடி,கொடிகளை அகற்றி விட்டு..ஒரு பாறைக்குக் கீழே போறாங்க .அதற்கு கீழே ஒரு சமவெளி இருக்கு . விளக்கு தெரியுது ...ஆள் நடமாட்டம் இருக்கிற.மாதிரி இருக்கு தூரத்திலே..சரி அங்கே போனா இந்த மழைக்குத் தப்பிக்கலாம் என்று எண்ணி நிற்கின்றார்கள். தூரத்தில் இருக்கும் நிலைமையைப் பார்த்துவர பல்லாக்கு தூக்கி ஒருத்தன் போறான்.

போனவன் திடுத்திடுவென அலறி அடிச்சுடிக்கிட்டு வர்றான். ஏதோ மிருகம்தான் இருக்கு போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு பண்டிதர் துப்பாக்கியை தயார் செய்கின்றார். ஓடி வந்தவன் 'அய்யோ, அங்கே பறையன் இருக்கான், பறையன் இருக்கான், குடும்பத்தோடு இருக்கிறான் " என்று அலறுகின்றான். பண்டிதன் கேட்கிறான் ' பறையன் என்றால் யார்? அவனும் மனுசன் தானே,அவனும் இந்தியன்தானே ' என்று கேட்கின்றான். ஆமாம், அவனும் இந்தியன்தான், ஆனால் அவன் பார்க்கக்கூடாதவன், தீண்டப்படதகாதவன் என்று சொல்கின்றான். அவனைத் தொட்டால் ஒன்பது  பிறவி அளவிற்கு எந்தக்கோவிலுக்குள்ளும் போகக்கூடாது . அவனைத்தொட்டால் அந்தப்பாவத்தை போக்க ஒன்பது தடவை கங்கையில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அந்தணர் கொடுக்க ,தலையில் இருந்து கால்வரைக்கும் மாட்டு மூத்திரத்தை வைத்து கழுவிக் குளிக்க வேண்டும்" என்று பலவிதமாகச்சொல்கின்றான். நாம் அங்கு போகக்கூடாது என்று அனைவரும் சொல்கின்றார்கள். ஆனால் பண்டிதர் நான் போகின்றேன் என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் தன்னந்தனியாக அந்த குடிசை இருக்கும் இடத்தை நோக்கிப்போகின்றார். 

அங்கே குடிசையில் இருக்கும் மனிதரைப் பார்க்கின்றார். பண்டிதரைப் பார்த்து பயப்படுகின்றான். நான் விருந்தினரை உபசரிக்கும் தகுதியில்லாதவன் என்று சொல்கின்றார். பண்டிதர் மறுத்து அவனோடு இணக்கமாகப் பேசுகின்றார்.அந்த குடிசை மனிதன் மிகச்சிறப்பாக .பழங்கள்,சாப்பாடு எல்லாவற்றையும் அளித்து அவனது மனைவி பரிமாற சாப்பிடச்செய்கின்றான். இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இரவு கட்டிலைக் கொடுத்து பண்டிதரைப் படுக்கச்சொல்ல நன்றாக உறங்கி விடுகின்றார். காலையில் பார்த்தால் குடிசை மனிதனும் அவனது மனைவியும் இடம் இல்லாமல் ஓரமாக உட்கார்ந்திருக்கின்றார்கள். அவர்களின் பெருந்தன்மையையும்விருந்து உபசரிப்பையும் பார்த்து வியக்கின்றார். பின்பு குடிசை மனிதனோடு பண்டிதர் பேச ஆரம்பிக்கின்றார். 

.உண்மையை எங்கே தேடுவது என்ற கேள்வியை பண்டிதர் கேட்க , குடிசைவாசி  நான் படிக்காதவன். உண்மையை அறிவைக் கொண்டு தேடாதே .நல்ல உள்ளத்தோடு தேடு. அறிவு உணர்ச்சி வசப்படும். ஆனால் நல்ல உள்ளம் அப்படி உணர்ச்சி வசப்படாது..நல்ல எண்ணத்தோடு கேள்.நல்ல உள்ளத்தோடு தேடு. உண்மை கிடைக்குமென்று சொல்கின்றார். உண்மையை ..எங்கே தேடுறது.?...இயற்கையில்தான் தேடவேண்டும். இயற்கை மட்டும்தான் உண்மை.நீ சாக்கு சாக்காக வைத்திருப்பது எல்லாம் பொய். முரண்களால் ஆக்கப்பட்ட புழுகு மூட்டைகள்..இயற்கையை கண்ணுக்கு முன்னால் பார்க்கிற..அதில் உண்மையைத்தேடு.எழுது வைத்திருக்கிற எழுத்துக்கள் எல்லாம் மாறும் .இயற்கை இருந்தது...இயற்கை இருக்கிறது. இயற்கை இருக்கும்.இதைப் படித்தவுடன் அய்யா சொன்ன கருத்துக்கள்  ஞாபகம் வந்தது. நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே, சிந்தி, ஒப்பிட்டுப் பார், உண்மை என்று உணர்ந்து கொண்டால் ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டு விடு என்றார். அப்படி அந்தக் குடிசையில் இருப்பர் சொல்கின்றார். பண்டிதர் . கண்ட உண்மையை அனைவரிடமும் கூறலாமா ? என்று கேட்க நன்மக்களிடம் கூறலாம் என்று சொல்கின்றார். பண்டிதர் வியந்து போகின்றார்

 எல்லாமே வேதத்தில் இருக்கிறது, ஆனால் அது அந்தணர்களுக்கு மட்டும்தான், அடுத்தவர்களுக்கு சொல்லமாட்டோம் என்று சொல்லும் அந்தத் தலைமை அந்தணர் அவ்வளவு செல்வாக்காக, மன்னரை விட அதிக அதிகாரம் படைத்தவராக இருக்கின்றார்கள். நீ அறிவில் அற்புதமாக இருக்கிறாய் ? நீ ஏன் இப்படி காட்டிற்குள் இருக்கின்றாய் என்று கேட்டபோது அந்தக் குடிசை வீட்டில் இருக்கும் பறையன் தன் வரலாறை சொல்ல ஆரம்பிக்கின்றார். நீ சொன்ன அந்த அந்தணர்கள் மிகத்தந்திரமாக சில ஏற்பாட்டை செய்துகொண்டார்கள். அவர்கள் பிரம்மா என்னும் கடவுளின் தலையில் இருந்து பிறந்ததாகவும், நாங்கள் எல்லாம் காலில் இருந்து பிறந்ததாகவும் எழுதி வைத்துக்கொண்டார்கள்.பின்பு எங்களைக் கடவுளின் பேரைச்சொல்லி ஒதுக்க ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல பிரம்மா என்னும் கடவுள் ஒரு தடவை உணவு கேட்டபோது மனித சதையைகடவுளுக்கு நாங்கள் படைத்ததாக சொன்னார்கள். பொய்யை திருப்பித்திருப்பி சொல்ல, சமூகம் அதனை நம்ப ஆரம்பித்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் நான் இயற்கையோடு நடந்தேன். நகரத்தை விட்டு வெகுதூரம் வந்து இங்கு வந்து வசிக்கின்றேன். நாங்கள் இன்பமாக நிம்மதியாக இருக்கின்றோம். என்று சொல்ல இந்தப் பெண் என்று பண்டிதர் கேட்கின்றார்.

            எங்களை பகலில் பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்ததால் இரவில் மட்டும் வெளியே வந்தேன். எனக்கு நகரத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அப்படி ஒருமுறை நகரத்திற்கு சென்று அரண்மனைக்குச்சென்றேன். அங்கு மாட மாளிகை, கூட கோபுரம் இருக்கிறது. ஆனால் அங்கு இருக்கும் அரசனுக்கோ மக்களுக்கோ நிம்மதி இல்லை. என்னை அறிந்துகொண்டு எனக்கு உணவு கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆதலால் சுடுகாட்டில் தங்கினேன். பிணத்திற்கு வைக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டு அங்கு வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு,மூன்று இரவுகளில் இந்தப்பெண் மட்டும் தனியாக வந்து அழுதுகொண்டிருப்பதைப்பார்த்தேன். இந்தப்பெண் பார்ப்பணப்பெண். இவளது கணவன் இறந்துவிட்டான். அந்தக் கணவனின் இறந்த உடலோடு இந்தப்பெண்ணையும் சேர்த்து எரிக்க இருந்தார்கள். ஆதலால் சாகப்போவதை எண்ணி, ஏற்கனவே தனது அப்பாவின் சிதையோடு உயிரோடு எரிக்கப்பட்ட அம்மாவின் சாம்பலைப் பார்த்து, பார்த்து இந்தப்பெண் அழுதுகொண்டிருந்தாள். நான் இவரிடம் என்னோடு நீ வந்தால் உயிரோடு வாழலாம், இன்பமாக வாழலாம் என்று எனது விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சரி என சம்மதித்தார். இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து வெகுதூரம் வந்து இங்கு அடர்ந்த காட்டிற்குள் இன்பமாக ஒரு குழந்தையோடு வாழ்கின்றோம் என்று தெரிவிக்கின்றார். அந்த இன்பமான சூழலைப் பார்த்து பண்டிதர் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றார். அந்தக் குடிசைவாசி, அவனது மனைவி, அவர்களின் குழந்தை, ஒரு நாய், ஒரு பூனை அருகருகில் என மகிழ்ச்சி பொங்கும் இல்லமாக அந்தக் குடிசை இருப்பதை பண்டிதர் காணுகின்றார்.

 தன்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் சரியான விடை கிடைத்ததால் குடிசைவாசிக்கு ஏதாவது பரிசு கொடுக்க பண்டிதர் விரும்புகின்றார். எதையும் வாங்குவதற்கு மறுக்கும் குடிசைவாசி, புகைக்குடி குழாயை மட்டும் பெற்றுக்கொள்கின்றார். பிரிய முடியாமல் பிரியும் மன நிலையில் பண்டிதர் அந்த இந்தியக் குடிசையை விட்டு வெளியே வருகின்றார்.ஜெகந்னாத்து கோவிலில் இருக்கும் அந்த அந்தணரைவிட ஆயிரம் மடங்கு இன்பம் உள்ளவனாக, அறிவு உள்ளவனாக நீ இருக்கிறாய் . நீ துன்பத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று சொல்கின்றாய். கேள்விகளுக்கு விடை சொன்னாய்...உலகம் முழுவதும் தேடினேன்...உன்னிடம்தான் எனக்கு பதில் கிடைத்தது என்று மகிழ்ந்து குடிசைவாசியை கட்டித்தழுவி விடைபெறுகின்றார். அவரது நாட்டிற்கு சென்று இந்த பதில்களை ஆங்கில எழுத்தாளர் சங்கத்தில் சமர்ப்பிக்கின்றார். தன்னிடம் வருபவர்களுக்கு, குடிசைவாசி சொன்ன பதில்களையே அறிவுரையாகச்சொல்கின்றார்.

        மிகச்சின்ன புத்தகம். ஆனால் ஏகப்பட்ட விசயம் உள்ளே இருக்கு. படிக்க, படிக்க நமக்கே வியப்பாகவும், உண்மையை தெரிஞ்சுக்கிற வாய்ப்பாகவும் இருக்கு " என்று அ.முருகானந்தம் ஏறத்தாழ 35 நிமிடங்கள் இந்தப்  புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.


 68 பக்கங்களே உள்ள இந்தப் புதினத்தைப் பற்றி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூடப்பேச இயலும். ஒரு தாழ்த்தப்பட்டவரும், பார்ப்பனப்பெண்ணும் இணைந்து எவ்வளவு இன்பமாக,வாழ்கின்றார்கள் என்பதனை ஒரு 220,230 ஆண்டுகளுக்கு முன்னால் கதையாகச்சொன்ன புத்தகம் மிக மிக முக்கியமான புத்தகம். பார்ப்பனர்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் புத்தகம்.திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற,அம்பேத்காரிய பொதுவுடமைத் தோழர்கள் கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள். படியுங்கள்.
 மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச்சொல்லுங்கள்.

2 comments:

Unknown said...

224 ஆண்டுகளுக்கு முன்பு ரூசோவின் மாணவர் 1790-ல் எழுதிய இந்திய சமூகம் பற்றிய புதினம்... அரிய நூலின் ஆய்வு மிக அருமை...!

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றி செந்தில் வருகைக்கும் கருத்திற்கும். சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் புத்தகத்தை அய்யா ஆசிரியர் அவர்கள் எங்களைப் போன்றவர்களிடம் இந்தப்புத்தகம் உங்களிடம் இருக்கிறதா?படித்திருக்கிறீர்களா எனக் கேட்டபோது இல்லை என்றோம். அய்யா கு.வெ.கி.ஆசான் அவர்களைப் பற்றி ஆசிரியர் அவர்கள் முன்னுரையிலும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தப்புத்தகத்தின் பழைய பிரதி தங்களிடம்(அய்யா கு.வெ.கி. ஆசான் அவர்களின் இல்லத்தில்) இருந்துதான் பெற்று,புதிப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை திராவிடர் கழக அமைப்புச்செயலாளர் மதுரை வே.செல்வம் கூட்டத்தில் குறிப்பிட்டார்.நன்றி செந்தில்,ஒரு அரிய கருத்துப்பெட்டகத்தை காப்பாற்றி வைத்திருந்து சமூகத்திற்கு அளித்தற்கு....