Wednesday 31 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : பெண் விடுதலை இன்று ...க.வி.இலக்கியா

அண்மையில் படித்த புத்தகம் : பெண் விடுதலை இன்று
ஆசிரியர்                   : க.வி.இலக்கியா
பதிப்பகம்                  : விடியல் பதிப்பகம்
முதல் பதிப்பு              : 2016, 60 பக்கங்கள்,விலை ரூ 60

                              சென்ற சனிக்கிழமை 27.10.2018 மாலை,தூத்துக்குடி ஏ.பி.சி. கல்லூரிக்கு முன்னால் உள்ள பெரியார் மையத்தில் உண்மை வாசகர் வட்டம் சிறப்புக்கூட்டம். தூத்துக்குடி மண்டலச்செயலாளர் மானமிகு அய்யா பால்.இராசேந்திரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 'திராவிட இயக்க சிந்தனைகள் ' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். சனிக்கிழமை இரவு அங்கு முடித்து விட்டு தூத்துக்குடி-கோவை துரித வண்டியில் பயணம் செய்து ,மறு நாள் (28.10.2018) காலை பொள்ளாச்சியில் த.மு.க.எ.சங்கத்தின் சார்பாக தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். வரவேற்புரையில் ஆரம்பித்து நன்றியுரைவரை ஒவ்வொருவரும் முத்திரை பதித்த நிகழ்வு(விரிவாக எழுத நினைத்திருக்கின்றேன்). வாசகன் வைரமுத்து அவர்கள் 'பரியேறும் பெருமாள் ' திரைப்படம் பற்றியும், தோழர் கலைக்கோவன் அவர்கள் எனது முதல் சிறுகதைத்தொகுப்பான 'நெருப்பினுள் துஞ்சல் 'பற்றியும் ,அடுத்து மெளனம் ரமேசு அவர்கள் 'நானும் ஆட்டத்தில் இருக்கேன்' என்னும் கவிதைத் தொகுப்பு பற்றியும் விமர்சனம் செய்தார்கள். தோழர் கலைக்கோவனின் விமர்சனம் மிக சிறப்பாக, சிறுகதைகளையும் அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளையும் இணைத்து அருமையாக அமைந்தது.



                          நிகழ்வு முடியும் நேரத்தில் நான் பேசலாமா எனக் கேட்டு ஒரு பெண் பேச ஆரம்பித்தார். உள்ளத்தில் இருந்தும், கோபமாகவும் அவரது உரை இருந்தது,தெளிவாகப் பேசினார், ஆனால் சமூக நீதி பற்றியோ,உண்மையான பெண் விடுதலை பற்றியோ,சாதிக்கொடுமைகள் பற்றியோ முழு புரிதல் இல்லாமல் இருப்பதாக இருந்தது. அவரது கேள்விகளுக்கு தோழர் கலைக்கோவன் நன்றாக விளக்கம் அளித்தார். நான் தந்தை பெரியாரை, அம்பேத்கரைப் படியுங்கள் என்றேன். நான் அதனைச்சொன்னவுடன் அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. பெரியாரை நான் படித்திருக்கின்றேன்.அம்பேத்கரை படிக்கின்றேன். கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல், பெரியாரைப் படியுங்கள், அம்பேத்கரைப் படியுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்டார். பின்பு கூட்டம் முடிந்து கீழே இறங்கும்போது,தூத்துக்குடி கூட்டத்திற்கு போகும்போது படிப்பதற்க்காக நான் கொண்டு சென்ற 'பெண் விடுதலை இன்று 'என்ற புத்தகத்தை அவரிடம் கொடுத்து ,இதனைப் படியுங்கள், நன்றாக இருக்கிறது, உங்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என்று சொல்லி எனது தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு வந்தேன்.

                            இன்று 31.10.2018 தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த தோழியர் ,தோழர் மிக்க நன்றி. அந்தப்புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டேன். இந்தப்புத்தகத்தைப் படித்தபின்பு எனது பார்வை முழுவதுமாக மாறியிருக்கிறது. ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. நீங்கள் கொடுத்த புத்தகம் பற்றி பேஸ்புக்கிலும் எழுதியிருக்கின்றேன் என்றார். அவரது அனுமதியோடு அவரது புத்தக விமர்சனத்தை அப்படியே கீழே கொடுத்திருக்கின்றேன்.பேஸ்புக்கில் "முகில் நிலா தமிழ் " என்னும் பெயரில் அவர் எழுதியிருப்பது

"இன்று வாசித்த நூல். இந்நூலின் ஆசிரியர் க.வி. இலக்கியா.. பெண் விடுதலை இன்று என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை நூல் இது.

இந்நூல் பொருளாக்கம், பண்டமாக்குதல், என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்கிறது..

பொருளாக்கத்தில்
கலாச்சாரப்பொருளாக்கம், சுயபொருளாக்கம், பாலியல் பொருளாக்கம் என்னும் மூன்று கூறுகளை உள்ளடக்கி அலசி ஆய்கிறது...!

கலாச்சாரப்பொருளாக்கம்

இத்தலைப்பினை அடியொட்டி குறிப்பிடப்படுபவற்றில் மிக முக்கியமாய் நான் கருதுவது " மதங்களும்.,சாதிகளுமே பெண்ணை அடிமையாக்கிய முதல் காரணி என்பதே"

இந்ததலைப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள மனுதர்மம் பெண்ணை மனுசியாககூட கருதவில்லை என்பதை ஆசிரியர் குறிப்பிட்டுக்காட்டுகிறார்...

பார்ப்பானிய கோட்பாடுகளான பிரதிலோமா, அனுலோமா, பித்ர சவர்ணயா,மத்ர சவரணயா முறைகளின் மூலம் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பதை விவரிக்கும் ஆசிரியர்

பெரியார் கோரிய பெண் உரிமைகளனெ மணவிலக்கு, கல்யாண விடுதலை, விதவை மறுமணம், குழந்தை திருமணம் தடுப்பு, சுயமரியாதைத் திருமணம், சொத்துரிமை ஆகியவை பெண்களை விடுதலை செய்வது மட்டுமல்லாது, சாதியக்கட்டமைப்பையும் அசைத்துப்பார்க்கும் என்ற நம்பிக்கை பற்றியும் அது இன்று நடவாமல் போனதற்கான காரணிகள் குறித்தும் விவரிக்கிறார்...

அதில் தாழ்ந்த சாதியை சார்ந்த வாரிசுகள் உயர்சாதியில் ஊடுருவாமல் தடுக்கவே கெளவரவக்கொலைகள் நிகழ்த்தப்படுகிறதென்ற நிதர்சனத்தையும் முன் வைக்கிறார்..

சுயபொருளாக்கம்
என்னும் தலைப்பின் கீழ். பெண்களின் ஆடை,அணிகலன், சொத்துசேர்த்தல் ஆகிய காரணிகளால் பெண் படித்தும் இன்றும் வீட்டைவிட்டுமட்டுமே வெளிவந்திருக்கிறாள் என்பதையும். பொருளாதார சுரண்டலுக்கு அப்பெண்ணே அதீத காரணியாகிறாள் என்பதையும் விளக்கிக்கூறுகிறார்

ஆணாதிக்கத்திலிருந்து மீண்டும் தனக்குதானே விலங்குகளைப் பொறுத்திக்கொண்டு பெரும் சுமைதாங்கியாய் அவள் வாழ்கிறாள் என்ற நிதர்சனத்தை முகத்தில் அறையும்படி விளக்குகிறார்

சமூக வேறுபாடுகளை உருவாக்குவதில் ஆண்களைக்காட்டிலும் பெண்களே அதிமுக்கிய காரணியாவதை வருத்தத்தோடு தெரிவிக்கிறார்...
தனிவுடமைக்கு எப்படி பொதுநலனை பாதிக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்குறார்..

பாலியல் பொருளாக்கம்

என்னும் தலைப்பின் கீழ்

பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுவதில்லை என்பதையும்., அதன் பின்னனியில் இருக்கும் சமூக வன்முறைகளான வறுமை, வேலையின்மை, பொருளாதார நிலையின்மை, பெரும் அளவிலான மக்களின் இடப்பெயர்வு, சமூக விழுமியச் சீரழிவு, அந்நியமாதல், அதிகரிக்கும் குடிப்பழக்கம், இயற்கை பேரழிவுகள், பாலியல் வன்முறைகள், அதிகரிக்கும் உடல்-உளம் சார்ந்த நோய்கள், கையறுந்த நிலையில் வாழ்க்கை, செயலற்றுக் கிடக்கும் அரசு இயந்திரம் என மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் சமூகக்கட்டமைப்பின் உருக்குலைவே காரணியென்கிறார்..

பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில் இருந்து விலகி அது ஒரு சமூக நோய் என்ற கண்ணோட்டத்தில் பார்வியடச் சொல்கிறார்...

அடுத்ததாக
பண்டமாக்குதல்

அடிப்படைத்தேவைகளான உணவு, உடை ,இருப்பிடம் ஆகியவை பண்டமாக்குதலில் நுகர்வியமாகவும், தனிச்சொத்தாகவும் மாறியதால் இந்த பண்டமாக்குதலை சுற்றயே கல்வி,வேலைவாய்ப்பு, திருமணம், குடும்பம், உடல்நலம், அரசியல், மொழி, தேசியம், கலாச்சாரம், மதம், விழுமியம்,அறிவியல் என அனைத்தும் பின்னப்பட்டுள்ளதை விவரிக்கிறார்.

காரல்மார்க்ஸ், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களை மூலமாக்கி இக்கட்டுரையை எல்லோருக்கும் புரியும்வண்ணம் எழுதியுள்ள ஆசிரியர் க.வி.இலக்கியா அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை...

இந்நூல் வாசிப்பின் மூலம் சமூகத்தோடான எனது அணுகுமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

இந்நூல் என் கரங்களுக்கு வரக்காரணியான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டமும், அதில் நான் பேசிய தத்துபித்து உளர்களும், அதற்கு வாய்ப்பளித்த பொள்ளாச்சி அபி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்...

இதை வாசியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடைகிடைக்குமென எனக்குக் கொடுத்த வா.நேரு அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்

பெண் விடுதலை என்பது சமூகவிடுதலையும் சேர்ந்ததுதான் என்பதையும்.. சமூக நோய்களுக்கு தீர்வு காணாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதையும். இன்பமும்,திருப்தியுமாய் வாழ்வதற்கான வழிகளை உண்டாக்க வேண்டியது பெண்களுக்கும் கடமை என்பதையும் அறிந்துகொண்டேன்."

         நான் இந்த வாரம் இந்தப் புத்தகத்தைப் பற்றித்தான் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் முகில் நிலா தமிழ் புத்தகத்தை முழுமையாக வாசித்து ,உள்வாங்கி எழுதியிருக்கின்றார். இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் க.வி.இலக்கியா அவர்களுக்குப் பாராட்டுகள். 'பெண் விடுதலை இன்று' என்னும் தலைப்பில் உள்ள இந்தப்புத்தகம் இன்றைய சூழலை, பெண் விடுதலையை தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர்,காரல்மார்க்ஸ் கருத்துக்களின் மேற்கோள்களோடு கொடுக்கப்பட்டுள்ள புத்தகம். படித்துப்பாருங்கள். படிக்கச்சொல்லுங்கள்.  

No comments: