Saturday 9 January 2021

அண்மையில் படித்த புத்தகம் : கடுகு வாங்கி வந்தவள் (ஒரு அனுபவக் கதை)...பி.வி. பாரதி

 அண்மையில் படித்த புத்தகம் : கடுகு வாங்கி வந்தவள் (ஒரு அனுபவக் கதை)

நூல் ஆசிரியர் கன்னடத்தில்  :  பி.வி. பாரதி

மொழி பெயர்ப்பு தமிழில்     :  கே.நல்லதம்பி

வெளியீடு                   :  நியூ செஞ்சுரி புக்  ஹவுஸ்(பி) லிமிடேட்,சென்னை-98

முதல் பதிப்பு                : ஜீலை 2015,மொத்த பக்கங்கள் 121, விலை ரு 100

கற்பனைகளை விட உண்மை நிகழ்வுகள் எப்போதும் உற்சாகம் தரும். அதுவும் மரணம் தனக்கு வரப்போகிறது என்று நினைத்து பயந்த நேரத்தில்,சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் மரணத்தை வென்ற கதை என்றால் ,எவருக்கும் படிக்கும் ஆசை வரும்.அதுவும் இந்தக் கொரனா நேரம்,மனிதர்கள் பலர் பயந்து போய் இருக்கும் நேரம்.நிலையாமையை ஒவ்வொருவரும் உணரும் நேரம். ஆனால் மனித குல வரலாற்றை அறிந்தவர்கள் இதனைப்போல ஆயிரக்கணக்கான கொள்ளை நோய்களைக் கண்டு,கடந்துதான் மனித இனம் இன்று நிலைத்து இருக்கிறது,நாளையும் நிலைத்து நிற்கும் என்பதனை அறிவார்கள்.

மொத்தம் 121 பக்கங்கள் மட்டுமே உள்ள இந்த நூல் ஒரு தன் அனுபவப் பகிர்வு நூல். உண்மையை அப்படியே சொல்லிச்செல்வதால் வலிமையான நூலாக இந்த நூல் விளங்குகிறது.

சமர்ப்பணம் என்று "புற்று நோய் போராளிகளுக்கும், அவர்களின் போராட்டங்களுக்கும்,உறுதுணையான டாக்டர்களுக்கும்,எல்லா வகையான மருத்துவ உதவியாளர்களுக்கும் " என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்தவுடனேயே இது ஒரு வேறுபட்ட நூல் எனத்தோன்றியது.உண்மைதான்,மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதனை எதிர்த்து சிகிச்சையின் மூலம் வெற்றி பெற்ற பி.வி.பாரதியே இந்த நூலின் ஆசிரியர். ஆதலால் தனது அனுபவத்தை, தனது வேதனையை, தன்னைச்சுற்றி இருந்தவர்கள் செலுத்திய அன்பை,மருண்டு ஓடியவர்களின் பயத்தை,ஆறுதலாய் தாய் மடியாய் ஆதரித்த தோழி ஜோதியை எனத் தனக்கு ஏற்பட்ட 2 வருட கடுமையான,கொடுமையான அனுபவத்தை விவரிக்கும் நூலே இந்த நூல்,


" வாழ்வின் படிப்பினைகளைப் பெற பலரும் பல இடங்களைச்சுட்டுவர். சிறைச்சாலையை அனுபவமளிக்கும் ஆசான் என்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட வாழ்வைச்செதுக்குமிடம் மருத்துவமனைகள்தாம்....வாழ்வை எழுதலாம். ஆனால் மரணத்தை எழுதுதல்  இயலாது. 'கடுகு வாங்கி வந்தவள்' மரண வாயிலின் நுனியை உணர்த்தும் சாகசம்" எனத் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகப்பேராசிரியர் இரா.காமராசு குறிப்பிடுகிறார்.மருத்துவமனை கொடுக்கும் வாழ்வின் படிப்பினைகள் பல.தனக்கு மட்டுமே ஒரு நோய் வந்ததாகக் கருதிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தபின்பு, தன்னைப்போன்ற பலரைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வை பாரதி அழகாக சித்தரித்துள்ளார். தனக்கு வந்த நோயை மிக இலகுவாக எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாகக் கடந்து செல்லும் மனிதர்களை முதன்முதலாகப் பார்த்தபொழுது ஏற்பட்ட அதிர்ச்சியை பதிவு செய்திருக்கிறார்.


தனித்தனி அத்தியாயங்கள் இல்லை. நிறைய வர்ணனைகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இயல்பான ஆனால் மனதில் நம்பிக்கை ஊட்டும் மனப்பான்மையோடு இரண்டாவது கட்டத்தில் இருந்த புற்று நோயை வென்ற கதை. புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக தான்  8 முறை எடுத்துக்கொண்ட கிமோ சிகிச்சை அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வலிகள்,வேதனை போன்றவற்றை நகைச்சுவையோடும் எதார்த்தத்தோடும் விவரித்திருக்கின்றார்.தனது கணவர்,தனது அப்பா,அம்மா,மகன் என அனைவரும் அன்போடும் அதே நேரத்தில் மாற்றங்களோடும் தன்னைக் கவனித்துக்கொண்டதை நன்றாகவே விவரித்திருக்கின்றார்.நோயால் பாதிக்கப்பட்ட நேரத்திலும் தான் சினிமா,டிராமா எனக் கலந்து கொண்டதை எழுதியுள்ளார்.


நோய் வாய்ப்பட்டதற்காக ஒரு சமையல்கார அம்மாவை பணியில் அமர்த்த,சமைக்கவே பழகாத அந்த அம்மாவின் சமையலைப் பற்றிய விவரிப்பும், தனது கணவர் அதற்குப் பின்பு பெண்கள் மீதிருந்த பொதுவான அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கும் பகுதி நல்ல நகைச்சுவையோடு அமைந்த பகுதி.தான் ஒரு ஆரியர் வீட்டுப்பெண் என்பதனைக் குறிப்பிடும் அவர் " இது போலான நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம், மேல்பார்வைக்கு சிரிப்பாக தெரிந்தாலும் ,உள்ளுக்குள்ளே 'நான் ஹிந்து மதத்தவளாக இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும்? என்னும் விஷயம் வருத்தப்படச்செய்தது.நாம் மனிதர்களை,சாதி,மத அடிப்படையில் அளக்கிறோமே,அப்போது அவர்களுக்கு உள்ளுக்குள்ளே எவ்வளவு வலிக்கும் என்று யோசித்தபோது கவிஞர் நிஸார் அகமத் அவர்களின் 'உங்களோடு இருந்தும் உங்களைப் போலாகாமல் ; என்ற கவிதை நினைவுக்கு வந்து ஏனோ மனது கலங்கியது "(பக்கம் 84)  என்றும் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.


தான் சந்தித்த சில கொடுரமான மனிதர்களைப் பற்றியும் பி.வி.பாரதி எழுதியுள்ளார், " உண்மையாகவும் மனிதருக்குள் இத்தனை கொடூரம் இருக்கும் என்று நான் அறிந்து கொண்ட தருணம் அது. "கேன்சர் வந்தவர்கள் எல்லாம் இறந்துவிடுவார்கள் என்று நினைத்தால், நீங்கள் இந்த நோயைப் பற்றி இன்னும் அப்டேட் ஆகவில்லை.இப்போது விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட்டது " என்றேன் " என்று குறிப்பிடுவதைப் போல ,பலர் வேண்டுமென்றே சுட்டிக் காட்டி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலப் பேசியதைப் பதிவு செய்கிறார்.பின்பு ஒரு வேண்டுகோள் வைக்கிறார். " ஒரு கேன்சர் நோயாளிக்குத் தன் நோயைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்திருப்பதால்,எங்கயோ பார்த்த,கேட்ட அர்த்தமற்ற பேச்சுகளைச்சொல்லியே ஆகவேண்டும் என்கின்ற பிடிவாதம் வேண்டாம்.நீங்கள் அங்கே இங்கே கேட்டதை எல்லாம் நாங்கள் சுயமாக அனுபவித்து முடித்திருப்போம்.அதனால் எங்களுக்கு உங்களை விடவும் அதிகமாகவே தெரியும்.ஏன் என்றால் இது உங்களுக்கு வெட்டிக்கதை.எங்களுக்கோ வாழ்வு-சாவின் பிரச்சனை.எங்களை எங்கள் தைரியத்துடன் வாழவிடுங்கள்.தயவுசெய்து எங்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள்.நாங்கள் மென்மையானவர்கள் "என்று சொல்லி முடிக்கின்றார். மொழி பெயர்ப்பினைச்செய்த திரு.கே.நல்லதம்பி அவர்களைப் பாராட்டவேண்டும்.புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்த நான், முடித்த பின்புதான் புத்தகத்தை வைத்தேன். அந்த அளவிற்கு நீரோட்டமாக ஓடிய நடை.  


விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்த நான் இரண்டு ஆளுமைகள் இந்த நூல் பற்றிய எழுதிய மதிப்புரையைப் படித்தேன்.ஆதலால் சுருக்கமாக எழுதிவிட்டு அவர்களின் கட்டுரையையும் இணைத்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதனையும் படிக்கலாம்.

http://writerpaavannan.blogspot.com/2016/11/blog-post.html


https://www.hindutamil.in/news/supplements/penn-indru/55848-.html

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் என்பதை தங்களின் விமர்சனம் உணர்த்துகிறது
நன்றி ஐயா

முனைவர். வா.நேரு said...

ஆமாங்க அய்யா, முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கும் எனது மகளுக்கு, அவர்கள் கல்லூரியில் பாடமாக வைத்துள்ளார்கள்.தற்செயலாகக் கண்ணில் பட்டது. எடுத்து படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியவில்லை. படித்து முடித்த பின்புதான் எழுத்தாளர் முருகேசபாண்டியன்,பாவண்ணன் அவர்களின் மதிப்புரையையும் பார்த்தேன். இணைத்து விட்டேன். நன்றி...வருகைக்கும் கருத்திற்கும்