ஈரோட்டு வானில் கவிதை
பாடிக்கொண்டிருந்த வானம்பாடி ஒன்று இன்று விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கவிதை புனைவதே
தன் வாழ்க்கை என்று தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துப் பாடிக்கொண்டிருந்த பறவை அது.
ஈரோட்டுச்சூரியனின்
வெம்மையை
வார்த்தை கூடுகளுக்குள்
குவித்து வைத்த கவிஆடியே !
ஈரோட்டுத் தந்தையையும்
தமிழையும்
இரு கண்களாய்
கவி புனைந்த
புரட்சிக் கவிஞரின்
வழி என்பதாலோ
நீ உனை
ஈரோடு தமிழன்பன்
என அழைத்துக்கொண்டாயோ ?
வண்ணங்களில்
வர்ணம் தீட்டும்
வித்தை கற்றதாலோ
வார்த்தைகளில்
சிற்பம் கட்டும்
வல்லமை பெற்றாயோ?
எத்தனை புதுமைப்
பூக்களை பூக்கவிடும் முய்ற்சி
உன் கவிதைத் தடாகத்தில்
ஹைக்கூ என்றாய்
கற்றுக் கொண்டோம்
சென்ரியூ என்றாய்
அறிந்துகொண்டோம்
லிமரைக்கூ என்றாய்
தெரிந்து கொண்டோம்
வினாக்களால் கவிதை என்றாய்
விடைகளைத் தேடுதல்
வினாக்களால் மட்டுமே
சாத்தியம் எனப் புரிந்து கொண்டோம் !
தமிழ் இலக்கியத்தின்
பக்கங்களில்
பாப்லோ நெருடோவை
அமரவைத்தாய் !
இளைப்பாறுதல் இல்லா
'இலக்கியப் படைப்பாளியே !
எண்பதுகளில் அடிவைக்கிறாய்!
இறுமாப்பு எய்துகிறோம்
உன் படைப்புகளால் !
வாழிய ! வாழிய !
உன் புகழ் வாழிய !
வா. நேரு -
நன்றி : எழுத்து.காம்- 18.2.2014
11 ஆண்டுகளுக்கு
முன் எழுதிய கவிதை. அய்யா தன்னுடைய 92-ஆம் வயதில் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்திருக்கின்றார்
.நம் காலத்தில் வாழ்ந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வீரவணக்கத்தை பகுத்தறிவு
எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன். தனது கவிதைகளால்
அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் என்றென்றும் வாழ்வார். தமிழ் இலக்கிய உலகம் இருக்கும்வரை
அவரது புகழ் வாழும்.அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும், தோழர் அகன் போன்ற
அவரது கவிதை வழி வளர்ப்புப் பிள்ளைகளுக்கும் எனது ஆழ்ந்த வருத்தtத்தைத் தெரிவிக்கிறேன்.
முனைவர்
வா.நேரு, மாநிலத்தலைவர்,
பகுத்தறிவு
எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.

No comments:
Post a Comment