Friday, 29 May 2026

கரப்பான் பூச்சிகளின் ‘ தீ பரவட்டும்….’

 #CJP

     கரப்பான் பூச்சிகளின் ‘ தீ பரவட்டும்….’

 

எங்கேயோ பற்றும் பொறி

எரிதழலாய் மாறி

வேண்டாதவற்றை எல்லாம்

எரித்து முடித்து அணையும்..

 

அப்படித்தான் ஒரு பொறி..

‘இந்த நாட்டு இளைஞர்கள்

எல்லாம் கரப்பான்பூச்சிகள்’

எனும் சொல் ‘கனம் கோர்ட்டார்’

அவர்களின் வாயில் இருந்து

உதிர்ந்ததால்  கிளம்பியது…

 

சமூக ஊடகம் பற்றி எரிகிறது..

கரப்பான் பூச்சி ஜனதா தளம்

எனும் பெயரில் இளம்வயதினர்

ஒன்று கூடுகிறார்கள்….

இருவேறு இந்தியாவாக இந்தியா..

இதற்கு யார் காரணம் ? எனும்

கேள்வியை இயல்பாக எழுப்புகிறார்கள்…

 

குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல்

குப்பை மேட்டில் குடியிருக்கும்

கோடான கோடி மக்களின் இந்தியா ஒன்று!

கொழுத்துப்போய் பக்தியெனும் பேரில்

பல்லாயிரம் லிட்டர் பாலை

ஆத்துக்குள் ஊத்திப் பாழாக்கும்

அவாளின் இந்தியா ஒன்று!..

 

உழைக்க நாங்கள் தயார் !ஆனால்

வேலை கொடுப்பாரில்லை..

என 30 கோடி இளைஞர்கள்

காத்திருக்கும் இந்தியா ஒன்று !

முறுக்குக் கடை வையுங்கள் இளைஞர்களே

என வாயில் வடை சுட்டு

பத்து இலட்சம் மதிப்புக்கு கோட்டு

போட்டு உல்லாசமாய் இருக்கும்

‘உயர் பதவியினர்  ‘ இந்தியா ஒன்று !

 

அமெரிக்காவில் போட்ட வழக்கை

இரத்து செய்யும் ஆற்றல் பெற்ற

அதானிகளின் இந்தியா ஒன்று!

வழக்குக்கு என அழைத்துச்சென்று

கேட்பாரற்று தாக்கப்பட்டு

பிணமாய்த் திரும்பும் அப்புராணிகளின்

இந்தியா இன்னொன்று !..

 

சமூக ஊடகங்களில் இளைஞர்கள்

எழுப்பும் கேள்விகள்..

அவர்களின் பாடல்கள்…

அவர்களின் நியாயமான

கோபக் குமுறல்கள்.…

அதற்கு விழும் ஆதரவுக் குறியீடுகள்..

தொடர்ந்து ஏறும் பின்தொடர்வோர்

எண்ணிக்கைகள் என

இந்தியா முழுவதும் பரவும் தீ..

புதிய இந்தியாவைச் சமைக்கும் தீ

எனத் தெரிகிறது..

‘தீ பரவட்டும், பரவட்டும் தீ ‘

                                        வா.நேரு,

                                        29.05.2026

 

No comments: