Wednesday, 18 June 2025

பெரியவர்களின் கடமை- முனைவர் வா.நேரு

 குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய பழக்கங்களில் மிக முக்கியமானது நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் பழக்கம் ஆகும். அதனை வெறும் சொற்களால் சொல்லி, குழந்தைகளுக்கு  நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த முடியாது. அதற்கு வழிகாட்டிகளாக பெற்றோர்களாகிய நாம் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் மாதத்திற்கு இருமுறையாவது நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் நமக்கு இருக்கவேண்டும். அப்படிச் செல்கிறபோது, நம் குழந்தைகளையோ அல்லது வயதானவர்கள் என்றால் தங்கள் பேரக் குழந்தைகளையோ அழைத்துச் சென்றால், குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டு விடும். வளர்ந்த நிலையில் அவர்கள் தாங்களாக நேரத்தை, நாள்களை ஒதுக்கி நூலகத்திற்குச் செல்ல ஆரம்பிப்பார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒருமுறை லண்டன் சென்றபோது, எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது,
எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டு அந்த விடுதியில் தங்கினாராம். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் புத்தகங்கள் மீது இருந்த விருப்பம் பற்றி, அவரின் வாசிப்பு நாட்டம் பற்றித் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக் காதலும்‘ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஒரு சிறிய புத்தகமாகவே வந்திருக்கிறது. புத்தகங்களை வாசிப்பதிலும், புத்தகங்களைச் சேர்ப்பதிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இருந்த விருப்பம் நமக்குப் பெரும் வியப்பைத் தருகிறது.


உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நன்றாக வாழவேண்டும், சமத்துவம் வேண்டும், சமூக நீதி வேண்டும், பாலின சமத்துவம் வேண்டும். ‘எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்‘ என்று விரும்பியவர்கள் மாமேதைகள் எல்லாம் புத்தகங்களைக் காதலித்திருக்கிறார்கள், புத்தகங்களை விரும்பியிருக்கிறார்கள்,தேடித்தேடிப் போய் படித்திருக்கிறார்கள். பொதுவுடைமைக் கருத்தைத் தன் புத்தகங்கள் வாயிலாக விதைத்த தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் லண்டன் நூலகத்தில் செலவழித்த  நேரம் பற்றியும், உணவு, உறக்கம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது நோக்கத்திற்காகத் தேடித்தேடி புத்தகங்களை வாசித்த அவரின் நூலக நேரம் பற்றியெல்லாம் அவரின் வாழ்க்கை வரலாற்றில் படிக்கிறபோது நமக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.




ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் காரிலேயே மும்பை சென்றிருக்கிறார். விமானத்தில் செல்லாமல் ஏன் மூன்று நாள்கள் காரிலேயே பயணம் செய்து மும்பை சென்றீர்கள் என்று கேட்டபோது பத்துப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருந்தது என்று சொன்னாராம் அறிஞர் அண்ணா. படிப்பதற்காக எளிதான விமானப் பயணத்தை விட்டுவிட்டு, கடினமான கார் பயணத்தை அண்ணா அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.  இன்றைக்கு ஆடியோ புத்தகங்கள் வந்து விட்டன. காரிலோ மற்ற வாகனங்களில் செல்லும் போதோ, காதில் நாம் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டால், நாம் விரும்புகிற புத்தகத்தை இன்னொருவர் வாசிக்க, பொறுமையாக நாம் கேட்டு உள்வாங்கிக்கொண்டே போகலாம். நாம் வாசிப்பதை எளிதாக்க எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. ஆனால், புத்தகத்தை வாசிக்கும் அல்லது வாசிப்பதைக் கேட்கும் பழக்கம் என்பது குறைந்துகொண்டே போகிறது என்பது இன்றைய வருந்தத்தக்க நிலைமை.



நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் பெற்றோர்களுக்குப் பெரும் சுமை குறையும். தனியாக அதைச் செய், இதைச் செய் என்று குழந்தைகளுக்குக் கட்டளை இட்டுக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வாசிப்பின் மூலமே பலவற்றை அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே திருத்திக்கொள்வார்கள். கவலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளைத் தாங்களே தேடிக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்வார்கள்; செதுக்கிக் கொள்வார்கள்.


திருமணத்தின்போது தாம்பூலத்திற்கு மாற்றாக சிறு நூல்களை அச்சிட்டு வழங்கலாம் என்று தந்தை பெரியார் அவர்களே வலியுறுத்தி
யுள்ளார்கள். வீரமணியே சொன்னார், “அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்கி
றீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டுமானால் ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம்” என்று சொன்னார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த நூல் இன்றைக்கும் நமக்குக் கிடைக்கிறது.

பெரும்பாலான நம், தோழர்கள் கடைப்பிடிக்கும் பழக்கம் நமது இல்ல விழாக்களுக்கு வருபவர்களுக்கு நூலினைப் பரிசாகக் கொடுத்து
அனுப்புவது. எல்லோரும் இதனைக் கடைப்பிடிக்கவேண்டும். எளிய முறையில் நடைபெறும் திருமணங்களிலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இந்த நூல் பரிசுக்கு என்று ஒதுக்க வேண்டும். வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச்சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பெரியவர்களுக்குக் கொடுக்கக்கூடிய ஆகச்சிறந்த பரிசும் கூட ஒரு புத்தகம்தான். நமது இல்ல விழாக்கள் என்று சொல்கிறபோது தந்தை பெரியார் இயக்கத்தவர்கள் மட்டுமல்ல, நமது உறவினர்கள், நமது நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள். அவர்களுக்கு நம் இயக்கத்து கருத்துகளும் அடங்கிய நூல்களைக் கொடுப்பதென்பது மிகப்பெரும் பரிசாகவும் நமது கருத்துகள் பரவும் விதமாகவும் அமையும்.

இல்ல விழாக்களில் வருகிறவர்களில் பெரும்பாலோர் புத்தகப் பரிசு என்பதை விரும்பக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு எழுத்தாளரின் 2500 புத்தகங்களைப் பதிப்பகத்திலிருந்து விலைக்கு வாங்கி, தன் வீட்டுத் திருமணத்திற்கு வந்த எல்லோருக்கும் ஒரு பையில் வைத்து அளித்தார். எல்லோரும் மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொண்டு சென்றார்கள். ‘புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்’ என்பது சீனப் பழமொழி. நமது திராவிட இயக்கக் கருத்தியல்களும் ஒரு பூந்தோட்டம்தான்.

புத்தகங்களைப் பரிசாகப் பெறுகின்றபோது, அதுவும் நூலாசிரியரின் கையினால் பெற்றோம் என்றால் அதனைப் படித்து முடித்து, அதனைப் பற்றிய நமது கருத்தினை அவருக்குத் தெரிவிப்பதும் மிகவும் தேவையானதாகும். ஆசிரியர் அய்யா அவர்கள், தான் விரும்பிப் படித்த நூலினைப் பற்றி, வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பில் எழுதினால் நூலாசிரியர்கள் பெறும் மகிழ்ச்சியை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். 75 வயதினைக் கொண்டாடிய தனது வாழ்க்கையினை’விறகு வண்டி முதல் விமானம்வரை’ என்னும் நூலினை எழுதிய, மதுரை திராவிடர் கழகத்தின் காப்பாளர் சே.முனியசாமி அவர்கள், அய்யா ஆசிரியர் அவர்கள் தனது நூலினைப் பற்றி எழுதியதும் அப்படி ஓர் ஆனந்தக் கூத்தாடினார். மகிழ்ந்தார். நமது தலைவர் அவர்களின் வழியைப் பின்பற்றி அவரின் தொண்டர்களாகிய நாமும் நமது இயக்க நூல்களை,இயக்கத்தவர் எழுதி இருக்கும் நூல்களை வாசிப்பதும், வாசித்து முடித்தபின்பு அந்த நூலைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் கூட நமது கடமையே ஆகும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 16-30

Saturday, 7 June 2025

அறிவு முதலீடு- முனைவர் வா.நேரு

 



அனுபவங்கள்தான் புத்தகங்கள் ஆகின்றன. ஒவ்வொரு நூலுக்குள்ளும் ஓராயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன.ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கும் நூலகங்களுக்குள் நுழைந்து, நாம் அங்கிருக்கும் புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும்போது, பல ஆயிரம் பேர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அதுவும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதிர்ப்பில் எழுந்தவை. அறிவில் முகிழ்த்தவை. களத்தில் விளைந்தவை.காலத்திற்கும் அறிவையும் ஆற்றலையும் விதைப்பவை. எனவேதான் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்களை மறைத்து வைக்கவே நமது பரம்பரை எதிரிகள் அன்றுமுதல் இன்றுவரை
விரும்புகிறார்கள். மறைக்கிறார்கள். ஆனால், நமது தலைவர்கள், நமது திராவிட இயக்கப் புத்தகங்கள் எளியவர்களின் கைகளில் சென்றடைய வேண்டும் என விரும்பினார்கள்,
விரும்புகிறார்கள். ஆதலால்தான், தந்தை பெரியார் காலந்தொட்டு, குறைந்த விலையில் நமது கருத்து நூல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நட்டம் என்றாலும் பரவாயில்லை என்று அச்சடித்துக் கொடுக்கிறார்கள்.

‘ஞானசூரியன்’ வெளிவந்தவுடன், ‘குடிஅரசு’ இதழில் அதுபற்றி அறிமுகம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

‘‘ஞானசூரியன் என்ற புத்தகம் கானாடுகாத் தான் திருவாளர் வயி.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் வேண்டுகோளின் பேரில்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களால் எழுதப்பட்டது. இது முழுதும் ஆரியர்களின் வேதம், சாஸ்திரம், புராணம், சாமி என்பவைகளின் புரட்டுகளை வெளியாக்கும் கருத்துக் கொண்டே எழுதப்பட்டதாகும். இதில், பெரும்பாலும் வேதத்திலும் மற்றும் பல ஆரிய ஆதாரங்களிலும் உள்ள சுலோகங்களை எடுத்து எழுதி அவற்றுக்கு ஏற்பட்ட பொருள்களையும் எழுதி அப்படி ஏன் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டு நம்மை நம்பச் செய்து வருகிறார்கள் என்பதற்கு உள்ள அவ்வாரியர்களின் சூழ்ச்சியும் கெட்ட எண்ணமும் சுயநலமும் பளிங்கு போல் வெளியாக்கப்பட்டிருக்கின்றன.’’ (ஆசிரியர் அவர்கள்,வாழ்வியல் சிந்தனைகள், உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ(3)
– ‘விடுதலை’ 28.04.2025).

சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்த நூலில்தான் 16 வருடங்களாக ஆராய்ந்து, இந்தியா முழுவதும்,நேபாளம்,காஷ்மீரம் (அப்போது தனி நாடாக இருந்தது),சிலோன் முதலிய பல தேசங்களுக்குச் சென்று முற்கால, தற்கால வழக்க ஒழுக்கங்களை அறிஞர்களை நேரில் கண்டும் கேட்டும், தமிழர்கள் ஏமாந்து கிடக்கும் தன்மையை அறிந்து இந்த நூலை எழுதியதாகக் குறிப்பிடுகின்றார்.

‘ஞான சூரியன்’ போன்ற 169 புத்தகங்கள் திராவிட இயக்கத்தவர்க்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளன. ‘ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளை முன்னிட்டு, 8 நாட்களுக்கு  10% முதல் 50% சிறப்புத் தள்ளுபடியில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக(இயக்க) வெளியீடுகள் விற்கப்பட்டன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், மஞ்சை வசந்தன் உள்ளிட்ட பலரின் படைப்புகள், 169 புத்தகங்கள் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் கொடுக்கப்பட்டன.

ரூபாய் 9665 மதிப்புள்ள குடிஅரசு தொகுதிகள் 5000 ரூபாய்க்கும், ரூபாய் 3650 மதிப்புள்ள வாழ்வியல் சிந்தனைகள்-18 தொகுதிகள் ரூபாய் 2500க்கும் இன்னும் பல தொகுப்புகளாகப் புத்தகங்கள் விற்கப்பட்டன.இவையெல்லாம் நமது தோழர்கள் தங்கள் வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்னும் அடிப்படை நோக்கத்தில் விற்கப்பட்டவை – விற்கப்படுபவை. திராவிடர் கழகத்துத் தோழன் என்றால் அவரிடம் சில புத்தகங்கள் கட்டாயம் இருக்கும் என்ற நம்பிக்கை தோழமைக் கட்சியினரிடம் இருக்கிறது. அதனை இன்னும் வலுப்படுத்தும் விதமாக இப்படிப்பட்ட விற்பனைகள் அமைகின்றன. எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் நமது இயக்கப் புத்தகங்கள் இருக்கும் சிறிய நூலகம் அந்த வீட்டுக்குள் இருப்பது என்பது நமது தோழரின் வீடு என்பதைப் பறைசாற்றும்.

மதுரைத் தோழர்களில் புத்தகங்கள் மீது அளவற்ற ஆசையும் கவனிப்பும் காட்டுபவர் தோழர் ப.சடகோபன் அவர்கள். பல ஆண்டுகள் மதுரையில் நடமாடும் புத்தக நிலையமாக யாழ் வாடகை நூலகம் வைத்திருந்தவர். தான் படித்த இயக்கப் புத்தகங்களை, மற்ற தோழர்களும் படிக்கவேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கிடுபவர். சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் பெரியார் பகுத்தறிவு நூலகம் & ஆய்வகம் வாசலில் ப.சடகோபன் அவர்கள்  அச்சிட்டு வெளியிட்ட, புத்தகங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்னும்  துண்டறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. அந்தத் துண்டறிக்கையை அங்கு பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

‘‘தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒரு நூலகம் (புத்தகசாலை) வைக்கவேண்டும் என்று கனவு கண்டவர் பேரறிஞர் அண்ணா.அவர்கள்.’’ பாதுகாப் பான அறை – படுக்கை அறை சமையலறை – பூஜையறை – இவை எல்லாம் இருக்கும் – புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஓர் அறை தேடிப்பாருங்கள் மிகமிகக் கஷ்டம்.
பல வீடுகளிலே தூண்களின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத்தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால் புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள் – பதில் கூறமாட்டார்கள்; ஒரு புன்னகை தோன்றும். பைத்தியக்காரா! இது வீடு நீ என்ன இங்கு வந்து புத்தக சாலை கேட்கிறாயே, என்று பொருள் அந்தப் புன்னகைக்கு…

வீட்டுக்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும் – வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போகப் போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். என்றார் பேரறிஞர் அண்ணா.’’

திராவிட இயக்கத்தவர் என்றால் அவர், திராவிடர் கழகமாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக்கழகமாக இருந்தாலும் அல்லது மற்ற திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அடிப்படையில் அவர்களின் இல்லங்களிலே இருக்கவேண்டியது நூலகமே. அந்த நூலகத்தில் முதலில் இடம் பெறவேண்டியவை தந்தை பெரியாரின் நூல்கள்.பின்பு மற்ற திராவிட இயக்க நூல்கள், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சிக்கவிஞரின் கவிதைத் தொகுப்புகள் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் போன்றவை.கட்டாயம் இருக்கவேண்டும்.இவற்றைச் சிறுகச் சிறுகச் சேகரிக்கவேண்டும்.

புத்தகம் என்பது அறிவு முதலீடு. நமக்கு மட்டுமான முதலீடு மட்டுமல்ல; நமது குழந்தைகள்,அவர்களின் குழந்தைகள் என்று  நமது பரம்பரைக்கு உண்மையாக  நாம் போட்டு வைக்கும் முதலீடு என்பது நல்ல புத்தகங்கள். நாம் நமது திராவிட இயக்கத்தில் இருக்கிறோம், பணியாற்றுகிறோம் என்று சொன்னால் அதற்கு அடையாளமாக இருப்பது நமது வீட்டில் இருக்கும் புத்தகங்கள் வைத்திருக்கும். சிறு நூலகம்தான். எனவே, வீட்டில் சிறு நூலகம் வைப்பதை நமது  இயக்கக் கடமைகளில் ஒன்றாகக் கொள்வோம். நூலகங் களில் இருப்பது போல நம் வீட்டில் இருக்கும் நூல்களைப் பட்டியலிடுவோம்.அதனைக் கணினியில் அல்லது ஏடுகளில் எழுதி, முறைப்படுத்தி வைப்போம். அந்த நூல்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.






நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 1-15,2025

Thursday, 22 May 2025

மேனாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்புரை:

 27-04-2025 ஞாயிறு மாலை 5-30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின் படி முன்னாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன் முத்து ராமலிங்கம் அவர்களின் 85வது பிறந்தநாள் விழா-வாழ்த்தரங்கம்...மேனாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்புரை:

 

அனைவருக்கும் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்குப் பிறந்தநாள் விழா அதற்குப் பாராட்டு என்ற அடிப்படையிலே, தாய்க் கழகத்தின் சார்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் அவர்களும் ,ஆசிரியர் வீரமணி அவர்களும் நேரடியாகவே வந்து வாழ்த்தினால் எவ்வளவு  மகிழ்ச்சியும் உணர்ச்சியும் இருக்குமோ அதே உணர்வை நான் இங்கே உங்களிடம் பெற்று இருக்கிறேன் என்பதை மிகுந்த பணிவோடு நன்றியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தந்தை பெரியாருடைய கொள்கை, கோட்பாடு என்பது நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற பொழுது என் உள்ளத்திலே பதிந்து விட்ட ஒன்று. சோழவந்தான் இரயில்வே நிலையத்திற்குத்   தந்தை பெரியார் அவர்கள் வருவார். அவர் மூன்றாம் வகுப்பில் தான் வருவார். நாங்கள் எல்லாம் சந்தோஷமாகப் போய் அவரோடு உட்கார்ந்து பேசுவோம், கேள்வி கேட்போம். அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லுவார். அவ்வளவு எளிமையாகப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது என்னுடைய உள்ளத்தில் ஏற்பட்ட தாக்கம் என்னவென்றால் இவ்வளவு பெரிய தலைவர் ,தீர்க்கதரிசி .எளிமையாக சாதாரண மக்கள் வரக்கூடிய மூன்றாம் வகுப்பு. அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்து எந்த விதமான காம்ப்ளக்ஸ் இல்லாமல்,  ஏற்றத்தாழ்வு இல்லாமல், நாங்கள் எட்டாவது, ஒன்பதாவது  படிக்கிற பசங்க நாங்க  கேட்கிற கேள்விக்கு, அதை உள்வாங்கிக் கொண்டு பதில் சொன்ன அந்தப் பக்குவம் எங்களுடைய உள்ளத்திலே பசுமரத்தாணி போல ஆழமாகப்பதிந்தது. எளிமையான வாழ்க்கை, இனிமையான அணுகுமுறை, எவரையும் கடிந்து கொள்ளாத அந்தப் பண்பு எங்களை ஈர்த்துவிட்டது.

 

எனது தாயார் ஆன்மீகத்தில்  ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். அவர் சொன்னதைக் கேட்டது எட்டாம் வகுப்புவரை.  அப்படியே அய்யா கொள்கைக்கு மாறி விட்டேன்.  நாவலரின் சகோதரியைச் சோழவந்தானில்தான் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.அவரது தங்கையின் கணவர் ஆவுடையப்பன். அவர்தான் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய முதல் மதுரை மாவட்டச் செயலாளர் .ஆதலால் அடிக்கடி நாவலர் சோழவந்தானுக்கு வருவார். வரும்போது அந்த வைகைக் கரையின் ஆற்றுமணற்பரப்பிலே நாவலர் வந்து ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் பேசுவார். அந்தப் பேச்சைக் கேட்பதற்காக நாங்கள் போவோம். அப்போது திராவிட இயக்கத்தினுடைய கருத்து எங்கள் உள்ளத்தில் பதிந்து விட்டதுஅன்றைக்கு ரொம்ப மோசமான மூடப்பழக்க வழக்கங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்கள் இதுதான் கிராமத்தையே பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. அய்யா அடிக்கடி வாடிப்பட்டி கூட்டத்திற்கு வருவார்.அன்றைக்கு  வாடிப்பட்டி என்பது திராவிடர் கழகத்தின் ஒரு முக்கியமான மையமாக இருந்தது

 

அப்போதெல்லாம் பேசும்போது கேள்வி கேட்பார்கள், இப்ப மாதிரி கிடையாதுதுண்டு சீட்டில் எழுதிக் கேள்வி கேட்பார்கள். ஒரு முறை  சி.பி. சிற்றரசு-விடம் ஒரு கேள்வி கேட்டார்கள் நீ எந்த நாட்டுக்குச் சிற்றரசு என்று?.அதைப் படித்துவிட்டு கனம் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்  எந்த நாட்டிற்குச் சக்கரவர்த்தியோ அந்த நாட்டிற்கு நான் சிற்றரசு என்று பதில் சொன்னார்.என்.வி.என்.சோமு சட்டக் கல்லூரியில் என்னோடு உடன்படித்தார். அவர் என்.வி. நடராஜனுடைய மகன். அப்போது தந்தை பெரியாரைப் பற்றி நிறையச் செய்திகளை அவர் சொல்லுவார். தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய சிக்கனக்காரர் நாம் அறிவோம் ஆனால் எதற்குச் செலவழிக்க வேண்டுமோ அதற்கு மிகப் பெரிய அளவில் செலவழித்தவர் தந்தை பெரியார். அப்படி அவர் சார்ந்த சொத்துக்களை எல்லாம் அவர் என்ன சொந்தக்காரருக்கு எழுதி வைத்தாரா?, இல்லை.இந்த நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவச் சுயமரியாதை அறக்கட்டளையை உருவாக்கி அதற்கு நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களையே தலைவர் ஆக்கினார். இன்றைக்குத் தந்தை பெரியாரின் கொள்கைகள் இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவுவதற்கு  அவரது சிக்கனமும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

 

பெரியாருடைய கொள்கை என்பது உலகம் முழுவதும் தேவைப்படுகின்ற ஒரு கொள்கை. பெரியார் கொள்கை இல்லையென்றால் நானே இல்லை நான் ஒரு வக்கீல் ஆகி இருக்க முடியுமா?.  நாங்கள் குத்தகைக்கு நிலம் பெற்றிருந்த அய்யர் வீட்டிற்கு எங்கள் அம்மா கூட்டிப் போச்சு.அய்யர் அப்பா அப்பயே டாக்டரா இருந்தாரு. அவங்க கிட்ட போய் எங்க அம்மா கேட்டுச்சு. தம்பி படிக்கணும்னு சொல்றான்,சேர்க்கலாமான்னு .உடனே அய்யர் வேண்டாம்,வேண்டாம்.இதோடு படிப்பை நிப்பாட்டிவிட்டு  விவசாய வேலையைப் பார்க்கச்சொல்லுஎன்று சொன்னார்.அது எனக்கு ஒரு மிகப்பெரிய பாதிப்பைக் கொடுத்தது. என்னடா படிக்க வேண்டும் என்று கேட்கிறோம் அவர்கள் டாக்டராக,வக்கீலாக இருக்கிறார்கள். நம்மளை மட்டும் விவசாயம் பார்,ஆடு,மாடு மேய் என்று சொல்கிறார்களே என்று. படித்தோம். வாழ்க்கையில் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு படித்தோம்.

 

படித்த பின்பு படிப்பு எங்களுக்கு மட்டும்தான் என்ற பார்ப்பனர்கள் மனப்பான்மை எங்களுக்கு இல்லை .அப்போது இந்தச் சமுதாயம் எப்படி இருந்தது? எல்லோரும் ஏழை . பஞ்சம். பஞ்சத்தை முன்னிட்டு கஞ்சி காய்ச்சி ஊத்துனாங்க. ஏழை மக்கள் பட்ட கஷ்டங்களை இப்போது உங்களுக்குச் சொன்னால் கூட விளங்காது. அவ்வளவு கஷ்டப்பட்டார்கள் .அவ்வளவு சங்கடங்கள், படிக்க முடியாத சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழல்.எது எடுத்தாலும் பேய் பிசாசு மூட நம்பிக்கை. எனவே அந்தச் சூழ்நிலையில் இருந்து, நாமெல்லாம் படிச்சு இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்று சொன்னால் அது ஒட்டுமொத்தமாகத் தந்தை பெரியாரின் உழைப்பையே சாரும்.  நெஞ்சை உயர்த்தி நாம் சொல்லலாம்,இது எங்களுக்குத் தந்தை பெரியாரால் கிடைத்த வாழ்க்கை என்று.

 

அதனால்தான் அண்ணா அவர்கள் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், அவர் தந்தை பெரியார் என்று சொன்னார். எனவே பெரியார் என்பது ஒரு திருப்புமுனை, பெரியார் என்பது ஒரு சகாப்தம், பெரியார் என்பது நமக்கெல்லாம் என்றைக்கும் வழிகாட்டக்கூடிய திசை காட்டக்கூடிய ஒரு கலங்கரை விளக்கம். அப்படித்தான் தந்தை பெரியாரை நம்முடைய தமிழ் சமுதாயம் எடுத்துக் கொள்கிறது.  பெரியார் தன்னுடைய கொள்கை அடிப்படையில் ஒரு   நிறுவனத்தை உருவாக்கி, அய்யா வீரமணி அவர்களிடம் இந்த இயக்கத்தையும் இந்தக் கொள்கையையும் ,தன்னலம் கருதாது இந்தக் கொள்கைகளை உலகம் எங்கும் எடுத்துச் செல்லும் ஆற்றலும் திறமையும் உள்ளவர் யார் என்பதைத் தேடிக்  கண்டுபிடித்து, கணக்குப் போட்டு பார்த்து அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்தது இன்றைக்கு வரை சரியாக இருக்கிறதா இல்லையா? இந்த 92 வயதிலும் ஆஸ்திரேலியா போகிறார் .அங்கே போய் அய்யாவினுடைய கொள்கைகளை எடுத்துச் சொல்கிறார். பொருளாளர் சொன்னார் ,மாறுபட்ட தட்பவெப்ப நிலை இருந்தாலும் கூட எல்லா இடங்களுக்கும் சென்று அய்யா ஆசிரியர்  நம்முடைய கொள்கையை எடுத்துச் சொல்லி இருக்கிறார் என்று.

 

தந்தை பெரியாரின் கொள்கை இன்றைக்கு உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறதுஅய்யாவுடைய கொள்கைஉலகத்தில் எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதோ அது ஜாதியின் பேரால் இருக்கக் கூடிய ஏற்றத்தாழ்வாக இருக்கலாம், அல்லது நிறத்தின் பெயரால் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளாக இருக்கலாம். எங்கே ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் அங்கே நிச்சயமாக அய்யா தந்தை பெரியாருடைய கொள்கைகள் தேவைப்படும். ஆகவே அய்யாவினுடைய கொள்கைகளை யாராலும் மறைக்க முடியாது அது மனித குலம் இருக்கும் மட்டும் இருக்கும், மனிதர்கள் வேறுபாடு கற்பிக்கும் மட்டும் இருக்கும். என்றைக்கும் சாகாத, அழிவில்லாத அந்த மகத்தான கொள்கைகளை உருவாக்கித் தந்த தந்தை பெரியாருடைய இயக்கத்தின் சார்பாக இன்றைக்கு எனக்குப் பாராட்டு விழா, வாழ்த்தரங்கம்.

 

 எனக்குக் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. நாங்கள் எல்லாம் களப்பணியாளர்கள் .களத்திலே போய் வேலையைச் செய்ய சொன்னால் வேலையைச் செய்வோம். அந்த மாதிரி தான் எங்களுக்குப் பழக்கமே தவிர, இப்படி வாழ்த்தரங்கம் எல்லாம் பழக்கம் இல்லை.துரை எழில்விழியன் இங்குப் பேசினார். அவர் எல்லா இடத்திற்கும் என்னோடு பயணம் செய்தவர். முதல்ல அவர் சைவம்தான் சாப்பிடுவார். அவரை நான்தான் அசைவமாக்கி விட்டேன் .அசைவமான பிறகு ரொம்ப கொடூரமான அசைவமாகிவிட்டார்.என்  கூடவே வந்தவர். அப்பழுக்கில்லாமல் தன்னுடைய பணியைச் செய்வார் இயக்கத்தை உணர்வுபூர்வமாகக் கொள்கை அடிப்படையில் கொண்டு போவார். இந்திரா காந்திக்குக் கருப்பு கொடி காட்டியது பற்றி எல்லாம் சொன்னார். அதற்கு முன்னால் பழ.நெடுமாறன் அவர்கள் அன்னை இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டினால் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்றார். எமர்ஜென்சினாலே ஏகப்பட்ட திமுக கழகத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டு 500 பேருக்கு மேல மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வெளிவந்த சூழல்.

 

கலைஞர் அவர்கள் ஒரே ஒரு அறிக்கைதான் கொடுத்தார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அப்போது கொடியோடு வந்தார்கள்.உங்களுக்கு அந்த நிகழ்வு தெரியும். கலைஞரையும் சேர்த்துக் கேஸ் போட்டிருந்தார்கள். கீழ் கோர்ட்டில் அவர்களை எல்லாம் விடுதலை செய்துவிட்டு எங்களுக்கு எல்லாம் இரண்டு வருஷம் சிறைத்தண்டனை போட்டு விட்டார்கள்.பின்பு மேல்கோர்ட்டுக்குப் போய் விடுதலை பெற்றோம். கலைஞர் அவர்கள் எங்களை, போராட்ட குணத்திலே கொஞ்சம் கூட மழுங்கி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார் மாத்தி மாத்தி போராட்டங்களை அறிவித்துக் கொண்டே இருப்பார்.நாங்கள் போராட்டம் நடத்தி சிறைக்குப் போய்க்கொண்டே இருப்போம். அப்பதெல்லாம் மிக அருகில் அமர்ந்து மிக இயல்பாக அவரோடு பேசுவோம். அப்போ ஒருமுறை சொன்னேன், அண்ணே இந்தப் பொங்கல்,பண்டிகைகளுக்கு எல்லாம் நாங்கள் வெளியில் இருக்க வேண்டாமாஎப்பப் பாத்தாலும் உள்ளேயே இருக்கிறோம் என்று சொன்னேன். அதை மிகவும் ரசித்தார்.

 

 எல்லாரும் விரும்பக்கூடிய  ஆளுமை  டாக்டர் கலைஞர் அவர்கள்.மதுரை ரயில் நிலையத்திற்கு  வருவதுதான் அவருக்கு மிகவும் பிடித்தது. நாங்களெல்லாம் ஒரு செட்டாகப் போய் வரவேற்க நிற்போம்.இறங்கியவுடன் எல்லோரையும் .ஒரு பார்வை பார்ப்பார்.எல்லோரும் வந்திருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்வார். அதற்கு முன்னாடியே ரயில்வே ஸ்டேஷன் அதிரம்படி கலைஞர் வாழ்க என்னும் முழக்கம் கேட்கும். வெளியே நையாண்டி மேளம் ,உருமி மேளம்,பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று  எல்லா வகையான வரவேற்பும் இருக்கும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை. அது மாதிரியான ஏற்பாடுகள் எல்லாம் அப்படிச் செய்ததால்தான் அடித்தட்டு மக்களிடம் இயக்கத்தைக் கொண்டு போக முடிந்தது. எப்போதும் அடித்தட்டு மக்கள்தான் அரண். அடித்தட்டு மக்களுடைய உள்ளத்திலே திமுக இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

 

கலைஞர் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மார்க்ஸ் ஒரு புத்தகம். லெனின் ஒரு நூலகம். ஸ்டாலின் ஒரு செயலகம் என்று எழுதினார். கம்யூனிஸ்ட்காரர்களே நாங்கள் கூட இப்படி எழுத முடியல, இவர் என்ன இப்படி எழுதி வைத்திருக்கிறார். இதைப் படித்துவிட்டு எங்கள் ஆட்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கம்யூனிஸ்ட் ஆட்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அண்ணாவுக்குக் கம்யூனிசத்தில் ஈடுபாடு உண்டு. பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு யூனியன் சேர்மன் ஆக இருந்திருக்கிறார். அப்போது  ஆங்கிலத்தில் ஒரு கட்டுரைப்போட்டி.லெனினிசம் இஸ் ஏ அப்பிளைடு மார்ச்சிசம்என்று ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி முதல் பரிசு வாங்குகிறார்.அந்த இளம் வயதில் எவ்வளவு புரிதல் இருந்தால் அப்படி எழுதி  முதல் பரிசு வாங்கியிருக்க முடியும்.

 

அப்படி இல்லையென்றால்  திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகளில் எப்படி  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கமுடியும்?.  அறியாமையை அகற்றிய  அண்ணா அவர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்தவுடன் அவருடைய சிந்தனை அய்யவிடம்தான் சென்றது. நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் என்றார். பரிவாரங்களுடன் திருச்சிப்போய் அய்யாவிடமிருந்து வாழ்த்து வாங்கிக் கொண்டு போய்த்தான் ஆட்சிக் கட்டிலில் ஏறினார். தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்..இருமொழிக் கொள்கையைச் சட்டம் ஆக்கினார். சுயமரியாதை திருமணத்தைச் செல்லும் என்று அறிவித்துச் சட்டமாக்கினார்.

 

 அது மாதிரி கலைஞர் அவர்கள் சமத்துவபுரம் அதுவும் பெரியார் சமத்துவபுரம் உருவாக்கினார். அது வெறும் குடியிருப்பு இல்லை. எதிர்காலத்தில் இந்தச்சமூகம் எப்படி அமைய வேண்டும் என்று தந்தை பெரியார் நினைத்தாரோ,அந்தச் சித்தாந்தத்திற்கு கொடுத்த ஒரு உருவகம்தான் சமத்துவபுரம். தந்தை பெரியாருடைய கொள்கைகள் பல்வேறு வடிவங்களில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட  காரணத்தினால்தான் இன்றைக்கு மதவாத சக்திகள் இங்குக் காலடி டுத்து வைக்க முடியவில்லை.  வரலாற்றை  நீங்கள் எடுத்துப் பாருங்கள் 100 வருஷம் சண்டை 500 வருஷம் சண்டை .நான் இந்த மாதம், அவன் அந்த மதம் அதனால் சண்டை. மனச்சாட்சி உள்ளவனுக்கு மதம் தேவையில்லை. மதம் எதற்கு நான் ஒரு தப்பு செய்தால் அதை  எனது  மனச்சாட்சி சொல்வது இல்லையா? அதை மீறித்தான் தப்பு செய்கிறோம். எனவே மனச்சாட்சி உள்ளவனுக்கு மதம் தேவையில்லை.மனச்சாட்சி என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து விட்டால் மதமும் தேவையில்லை, கடவுளும் தேவையில்லை .மனிதன் காட்டுமிராண்டிகளாக ஒரு காலத்தில் வாழ்ந்த காலத்தில் வேண்டுமானால் மதம் ஒரு வகையில் அவனுக்குப் பயன்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைக்கு மதம் தேவையே இல்லை. சமூகத்தில் மதம் என்பது இர்ரவலன்ட். எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒன்றுதான் மதம்.

 

இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது தந்தை பெரியாருடைய சிந்தனைகள்தான் பொருளாளர் சொன்னார்.அப்போது  காலேஜ் ஹவுஸ்லே நெடுமாறன்  நிறையக் கூட்டங்கள்  நடத்துவார். வேறு வேறு கருத்தோட்டம் உள்ள ஆட்களைக் கூப்பிட்டு தலைப்புக் கொடுத்து பேசச்சொல்வார்கள்.அப்படித்தான் நான் வால்கா முதல் கங்கை வரை நூலைப் பேசினேன்.அதில் தோழர் கே.டி.கே தங்கமணி வந்து பேசுவார்.கேடிகே தங்கமணி மிக எளிமையாக இருப்பார்.அப்போது டவுன் ஹால் ரோட்டில் போனால்,மாலையில் தொழிலாளர்களோடு அமர்ந்து அவருக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருப்பார்.கே.டி.கே.தங்கமணி வெளி நாட்டில் போய்ப் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.ஆனால் எளிய உழைக்கும் மக்களிடம் அமர்ந்து அவர்களில் ஒருவராக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார்.இந்த மனப்பான்மை எல்லோருக்கும் வர வேண்டும்.

 

பொருளாதார உயர்வு இல்லாததால் ஒருவன் தாழ்ந்தவனாகி விடுவானா? வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவனும் பெரிய நிலைக்கு வந்திருப்பான். அண்ணா அதனால்தான் சொன்னார் நீ பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என்று சொன்னால் பொது வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று சொன்னால் சாதாரண மக்கள் வாழக்கூடிய இடத்துக்குப் போ. அவன் மொழியைக் கற்றுக்கொள். அவன் பேசுற லாங்குவேஜ்ல பேசணும். அவனோடு வாழக் கற்றுக்கொள். அவனுக்கு வழிகாட்டு. இதுதான் அண்ணா சொன்னது. அப்படி இருந்தால்தான் இயக்கங்கள் வளரும். இயக்கத்தில் ஏதோ  நான் வளர்ந்து விட்டோம் என்று சொல்லி நம்மை நாமே அப்புறப்படுத்திக் கொள்ளக்கூடாது. சமுதாயத்தில் இருந்து நாம் நம்மை அப்புறப்படுத்திக்கொண்டோமானால் நாம் தனியாகத்தான் இருப்போம்.

 

இந்த உணர்வை எல்லாம் எங்களுக்கு ஊட்டியது, அன்றைக்கு மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் அமர்ந்து எங்களோடு பேசிக்கொண்டு போன அய்யா பெரியார் அவர்கள்தான். அவருடைய இன்ஸ்பிரேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். அதுதான் எங்களுடைய இன்ஸ்பிரேஷன். இன்றைக்குவரை நாங்கள் மனிதர்களை வேறுபடுத்துவது இல்லை. அண்ணா எப்படிப்பட்ட அண்ணா? ஒரு  நாலுமுழ வேட்டி. அதுவும் கைத்தறிவேட்டி சரியாகப் பட்டன் மாட்டாத ஒரு சட்டை. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பேசினால் அவருக்குத் தமிழே தெரியாது போலத் தோணும். தமிழில் பேசினால் அவருக்கு ஆங்கிலமே தெரியாது போலிருக்கிறது என்று தோன்றுமளவிற்கு மொழிகளில் பாண்டித்தியம். நாடாளுமன்றத்தில் அண்ணாவின் உரையைக் கேட்டு அத்தனை பேரும் அப்படியே அமர்ந்து கேட்டார்கள்.அவ்வளவு புலமை.அவ்வளவு கருத்துவளம்.

 

இயக்கம் என்பது தந்தை பெரியாரின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் கொள்கை, டாக்டர் கலைஞரின் கொள்கை. இவை எல்லாவற்றையும் இணைத்து ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய இன்றைய திராவிட மாடல் ஆட்சி. இன்றைக்கு அரசியல் சட்டத்தையே நிலைநிறுத்தக் கூடிய அளவிற்கு ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்து இன்றைக்குத் தீர்ப்பினை நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாங்கியிருக்கிறார்.அந்தத் தீர்ப்பு என்பது தமிழ்நாட்டிற்கு  மட்டும் அல்ல, இந்தியாவுக்கே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தீர்ப்பு. 142 ஆவது அரசியல் சட்டப் பிரிவு என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கக்கூடிய சிறப்பு அதிகாரம்இந்தச் சிறப்பு அதிகாரம் இல்லாமல் இருந்தால் எண்ணிக்கை பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு எண்ணிக்கை பலம், சட்டமன்றத்தில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கு எண்ணிக்கை பலம், எண்ணிக்கை பலத்தின் மூலமாக ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரத்தைக் கொண்டுவர முடியும். இதைத் தடுப்பதற்கான ஒரு பிரிவுதான் அரசியல் சட்டப் பிரிவு 142.

 

சிறப்பு அதிகாரம் என்னவென்று சொன்னால் செக்சன் பேலன்ஸ் என்று சொல்வார்கள் .சட்டமன்றம், நாடாளுமன்றம் எது எல்லை தாண்டினாலும் அதைத் தடுத்து முறைப்படுத்தக்கூடிய  அதிகாரம்தான் உச்சநீதிமன்றத்திற்குக் கொடுக்கப்பட்ட 142 வது சிறப்பு அதிகாரம். இதை விளங்காதவர் குடியரசுத் துணைத் தலைவராக இருக்கிறார். இன்றைக்குக் கூட முரசொலியில் அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுயிருக்கிறேன். ஆகவே எல்லாத் துறைகளிலும் நமது திராவிட இயக்கம் என்பது முழு அதிகாரத்தோடு,முழுத்தகுதியோடு இருக்கிறது. எல்லாம் தெரிந்தவர்களைக் கொண்டதாக நமது இயக்கம் இருக்கிறது அதற்கு அண்ணா பயிற்சி கொடுத்தார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’. இதெல்லாம் ஏன் என்று கேட்டால் ஜனநாயகத்தில் முரட்டுத்தனமாக எதையும் செய்ய முடியாது.

 

 ஜனநாயகம் என்பது ஒரு பண்பட்ட அரசியல் கோட்பாடு. பண்பட்ட அரசியல் கோட்பாட்டை அமுல்படுத்துவதற்குப் பண்பட்ட இளைஞர்கள் வேண்டும். பண்பட்ட இளைஞர்கள் இருந்தால் தான் ஜனநாயகத்தினை நேர்மையான வழியில் கொண்டு போக முடியும் இல்லையென்றால் எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம் என்றால் ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரம் வந்துவிடும் இதை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சட்டத்தில் 142 வது பிரிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தெரிந்தவர்களாகத் திராவிட இயக்கத்தினர் இருப்பதால்தான் பாஜகவால் இதுவரை தமிழ்நாட்டில் அடி எடுத்து வைக்க முடியவில்லை.

 

 எல்லா விசயத்திலும் அய்யா ஆசிரியர் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார் என்று நான் பார்ப்பேன்.விடுதலையை விடாது படிப்பேன்.அய்யா ஆசிரியர் அவர்கள் சொல்லி,தாய்க்கழகத்தின் சார்பாக ,நடைபெற்ற இந்தப் பிறந்த நாள் விழா எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.இன்னும் பணியாற்ற உற்சாகம் தருகிறது.இதற்கு ஏற்பாடு செய்த அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும்,உரையாற்றிய,கலந்து கொண்ட அனைவர்க்கும் நன்றியைச்சொல்லி நான் விடைபெற்றுக்கொள்கிறேன் என்று ஏற்புரை நிகழ்த்தினார்.