Saturday, 22 March 2025

இன்குலாப் ஜிந்தாபாத்....

தோழர் பகத்சிங்

முழங்கிய

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

இந்தி மொழிச்சொல்லாக

எனக்குத் தெரியவில்லை…


சில நேரங்களில்

புரட்சி ஓங்குக என்னும்

மொழிபெயர்ப்பை விட

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

நாடி நரம்புகளில்

ஊடுருவதை முழக்கம்

இடுகையில் பார்த்திருக்கிறேன்..


ஆண்டுகள் பல போனபின்பும்

போபால் மாநாட்டின்

ஊர்வலத்தில் நடனமாடிக்கொண்டே

முழக்கமிட்ட சீக்கிய சகோதரனின்

முழக்கம் காதுக்குள்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

'இந்து முஸ்லீம் சீக்....குஹே..

பை..பை,...பைபை'  


சில சொற்கள் மொழிகடந்து

நம் மனதிற்குள்

ஊடுருவி விடுகின்றன!

‘தோழர் பகத்சிங் ஜிந்தாபாத்’...

இன்னுயிர் போகுமென்ற

நிலையிலும் அவரும்

அவரது தோழர்கள்

இராஜகுருவும் சுகதேவும்

இதே நாளில் அன்று

இணைந்து முழங்கிய

'ஜிந்தாபாத் ஜிந்தாபாத்'

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

‘நாஸ்திகம் ஜிந்தாபாத்’

                               வா.நேரு,23.03.2025




யோசித்துக்கொண்டிருக்கிறேன்...

 தோழர்,இந்தக் கவிதை

என்னைப் பற்றி

எழுதியதுதானே என்றார் அவர்..

மறைக்க இயலவில்லை..

ஆமாம் என்றேன் மெல்லிய குரலில்

எளிதில் கண்டுபிடிக்கும்

நிலையில்தான் எனது

கவிதைக்கருவும் கதைக்கருவும்…

என்னைச் சுற்றி நிகழும்

நிகழ்வுகளே என் கவிதைக்குள்ளும்

என் கதைக்குள்ளும்…

எங்கோ நிகழ்வுவதுபோல்

எழுதுதல் வேண்டும் எனும்

அறிவுரைப்படி எல்லாம்

எழுதிப்பார்க்கிறேன் ஆனாலும்

எளிதில் அடையாளம்

கண்டு கொள்கிறார்கள்..

எவரையும் இழித்துப் பழித்து

எழுதுவதில்லை எனினும்

என் செய்வது ? எழுதலாமா?

எழுதுவதை நிறுத்தலாமா?

என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

                                      வா.நேரு,22.03.2025

Sunday, 16 March 2025

சுயமரியாதை சுடரொளிகள் நாள்




 சுயமரியாதை சுடரொளிகள் நாள்

                         (முனைவர் வா.நேரு)


 

திராவிடர் கழகத்தால் ,அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது .இந்த நாளில் அன்னை மணியம்மையார் அவர்களை நினைவில் கொள்வதோடு, அவர்களுக்கு முன்னும் பின்னும் சுயமரியாதை இயக்கத்திற்காக, சுயமரியாதைக் கருத்திற்காக உழைத்தவர்களை நினைவில் கொள்ளும் நாள் இந்த நாள். தன்னுடைய உறவுகளை, தன்னுடைய ஊரை, தான் பிறந்த ஜாதியை ,தான் பிறந்த மதத்தை எதிர்த்து தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்றுக் களமாடிய சுயமரியாதை இயக்க வீரர்களை,வீராங்கனைகளை நினைவில் கொள்ளும்  நாளே சுயமரியாதைச் சுடரொளிகள் நாளாகும்.

 

 


 

சுயமரியாதைச் சுடரொளிகள் என்னும் அந்தப் பெயர் கொடுக்கும் பெருமிதம் அளப்பரியது.சுயமரியாதைச் சுடரொளிகளில் சிலர் பணக்காரர்கள்பெரும்பான்மையினர் ஏழைகள்,அனைத்து ஜாதிகளைச்சார்ந்தவர்களும் சுயமரியாதைச்சுடரொளிகளாக இருக்கிறார்கள்பார்ப்பனைர்களைத் தவிரசுயமரியாதைச் சுடரொளிகள் என்பவர்கள் மிக அரிதான தொண்டர்களைக் கொண்ட ஒரு படையில் அணிவகுத்தவர்கள், போராடியவர்கள், களத்திலே டிந்தவர்கள் என்று பலவிதமான தோழர்களை நாம் நினைவில் கொள்ள முடியும்.

 

என்னுடைய கடந்த 40 ஆண்டுகாலத் திராவிடர் கழக இயக்க வரலாற்றில் நினைத்துப்பார்க்கிறேன்.எப்படிப்பட்ட தோழர்கள் எல்லாம் இன்றைக்குச் சுயமரியாதைச் சுடரொளிகளாக இருக்கிறார்கள்?. திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழகப்  பொறுப்பாளர்கள் என்று பார்த்தால் அய்யா கு.வெ.கி.ஆசான்,அய்யா சு.அறிவுக்கரசு,அய்யா துரை.சக்ரவர்த்தி,அய்யா இறையனார்,அம்மா திருமகள் இறையன்,அம்மா மனோரஞ்சிதம்,அம்மா பார்வதி,அம்மா பிறை நுதல் செல்வி,பேரா.ராஜதுரை,புதுவை மு.நடராசன்,கல்லக்குறிச்சி ஆ.கூத்தன்,வடசேரி வ.இளங்கோவன்,கோ.அண்ணாவி,தஞ்சாவூர்      கண்ணையன்,திண்டுக்கல் கிறிஸ்டியான்,தி..பாலு எனப் பல சுயமரியாதைச் சுடரொளிகள் கண்ணுக்கு முன்னால் வருகின்றனர்.

 

மதுரை மாவட்டம் என்று பார்த்தால் அய்யானார்குளம் ம.பவுன்ராசா,கருப்பட்டி நல்.லோகநாதன், அய்யா பே.தேவசகாயம்,அம்மா அன்னத்தாயம்மாள் தேவசகாயம்,வழக்கறிஞர் கி.மகேந்திரன்,பொறியாளர் சி.மனோகரன்,திருப்பரங்குன்றம் அழகர்சாமி,ஹார்விபட்டி ஆசிரியர் இராமசாமி,முனிச்சாலை துரைராசு,செல்லூர் எல்.ஆர்.ராசன், கைவண்டிக்கருப்புவண்டியூர் சேது,மாகளிபட்டி பாலகிருஷ்ணன்,ஆசிரியர் சுப்பிரமணி,சொக்கலிங்க நகர் இராமமூர்த்தி,சக்கர நாற்காலியில் வரும் சின்னக்கண்மாய் முருகேசன், மீனாம்பாள்புரம் சீனி அய்யா,பீபிகுளம் நவநீதகிருட்டிணன்,எல்..சிமு.கனி,விராட்டிபத்து அய்யாச்சாமி எனப் பல சுயமரியாதைச்சுடரொளிகள் கண்ணுக்கு முன்னால் வருகின்றனர்.

 

சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் பற்றி நினைத்து  இவர்களைப் பற்றி எல்லாம் யோசிக்கிறபோது கண்களில்   கண்ணீர்     வருகிறது.உணர்ச்சி மேலிடுகிறது.குடும்பத்தோடு இணைந்து இயக்கத்திற்காக உழைத்தவர் பலர்,குடும்பத்தை எதிர்த்து இயக்கத்திற்காக உழைத்தவர் சிலர் என அவர்களைப் பற்றிய சிந்தனைகள் மனதிற்குள் ஓடுகிறது.

 

சின்னாளபட்டி விடுதலை மணி என்று ஒரு தோழர் இருந்தார். பெரியகுளத்தில் நான் இருக்கும் பொழுது அவர் தன்னுடைய உழைப்பால் வெகு சொற்பமான வருமானத்தை ஈட்டிக்கொண்டு அதில் வாழ்ந்து வந்தார். ஆனால் விடுதலைப் பத்திரிகையைக் காண்கின்ற அனைவரிடத்திலும் விற்பார். அதில் எந்தவிதமான மனச் சஞ்சலமும்,தயக்கமும் இல்லாமல் தொடர்ச்சியான ஒரு முயற்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். இன்னும் கேட்டால் கொஞ்சம் படித்ததால் என்னைப் போன்றவர்கள் ஒதுங்கி இருக்கக்கூடிய வேலைகளில் சின்னாளப்பட்டி விடுதலை மணி போன்ற தோழர்கள் மிகப்பெரும் செயல்களை ஆற்றுவதைப் பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கும்.

 

 மதுரை முனிச்சாலை பகுதியில் இருந் அய்யா துரைராஜ் அவர்கள் நன்றாகப் பாடுவார். புதிய புதிய தோழர்களை இயக்கத்தில் சேர்ப்பதற்கு அப்படி ஒரு ஆர்வம் காட்டுவார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன்னுடைய முழு வாழ்க்கையையும் திராவிடர் கழகத்திற்காக அர்ப்பணித்த தோழர் அவர் முதலில் ஒரு கடை வைத்திருந்தார் அப்புறம் சின்னச் சின்ன வேலைகளை செய்து கொண்டு மிகப்பெரும் தொண்டினை செய்து கொண்டிருந்தார்.அதைப்போல மதுரை செல்லூர் பகுதியில் இருந்த அய்யா எல்.ஆர்.ராசன் அவர்கள்,தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,அன்னை மணியம்மையார் போன்றவர்களின் படங்களை ஸ்டிக்கராகப் போட்டு விற்பார்நம் இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை விற்பார்.மதுரையில் எங்குத் திராவிடர் கழகக்கூட்டம் போட்டாலும் அய்யா எல்.ஆர்.இராசன் அவர்கள் இருப்பார்.வறுமையில் வாழ்ந்த தோழர் அவர்,ஆனால் கொள்கை வளமிக்கவர்.அவர் இருக்கும் காலத்தில்தான் மதுரை செல்லூர் பகுதியில் பல புதிய தோழர்களை உருவாக்கினார்.

 

மதுரை ஹார்விபட்டியில் வாழ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் இராமசாமி அவர்கள் ,அப்படி ஒரு சிக்கனக்காரர்.இணையர் இல்லாத நிலையில் தானே சமைத்து,தானே துவைத்து வாழ்ந்து வந்தவர்.ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார்.பல ஆண்டுகளாக விடுதலையின் வாசகர்.நெருக்கடி நிலை காலத்தில் தான் ஆசிரியராகப் பணியாற்றியபோது தான் விடுதலையை எப்படிப் பெற்று வாசித்தேன் என்பதை எல்லாம் ஒரு கதை போல ஒரு முறை நேரில் சந்தித்தபோது கூறினார்.அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் திருச்சி,தஞ்சை வல்லம் பகுதியில் நடைபெறும் கல்விப்பணிகளை,நம் இயக்க கல்வி நிறுவனங்களை எல்லாம் பல நாட்கள் சுற்றிப்பார்த்தார்.அய்யா ஆசிரியர் அவர்களின் கல்வி அறப்பணியைப் புரிந்துகொண்டு தனது பங்களிப்பாக ரூபாய் 32 இலட்சத்தை நன்கொடையாக அளித்தார்.அய்யா ஆசிரியர் அவர்கள் அவரின் பெயரால் ஒரு கல்விக் கட்டடத்தையே நிறுவியுள்ளார்கள்.வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் அவரைப் பற்றி எழுதி மகிழ்ந்தார்கள்.

 

இன்றைய நாளில் பொது வாழ்க்கைக்கு வர நினைக்கின்ற ஒரு நபர் அரசியலில் ஈடுபட வேண்டும், தான் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று பலவித கனவுகளோடு தான் பொது வாழ்க்கைக்கு வருகின்றார்கள். ஆனால் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களைப் பொறுத்த வரை தனக்கு என்ன கிடைக்க வேண்டும்?, கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள் அல்ல மாறாக ஆண்டாண்டு காலமாக நம்மீது  சுமத்தப்பட்ட சூத்திரப் பட்டம், பஞ்சமர் பட்டம் போக வேண்டும் என்பதற்காகத் தங்களைக் கருப்பு மெழுகுவர்த்திகளாக உருக்கி கொண்டவர்கள்.தங்களுக்கு ஏதும் கிடைக்காது என்றாலும் இந்தக் கொள்கை பரவவேண்டும்,சம நீதி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்,பெண்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக வாழ்க்கைத் தீயில் தங்களை உருக்கிக்கொண்டவர்கள்,அதனால் எல்லோருக்கும் வெளிச்சம் கிடைப்பதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள்.

 

தோழர்களே,சுயமரியாதைச் சுடரொளிகள் நாளில் நாம் நம் கண்களை மூடி ,இயக்கத்திற்காக வாழ்ந்து மறைந்த நம்மைச் சுற்றி இருந்த தோழர்களை நினைவில் கொள்வோம்.அவர்களின் எதிர் நீச்சல் வாழ்க்கையை மீண்டும் நம் மனதிற்குள் கொண்டு வருவோம்.எத்தனை இடர்பாடுகள் வந்தபோதும்,எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் அஞ்சாமல் கொள்கைப் போர் புரிந்த அந்தச் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு உளமார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.அந்த வீரவணக்கத்தின் வழியாக இன்னும் வேகமாக,தீரமாகச் சுயமரியாதை இயக்கப்பணிகளை ஆற்றுவதற்கு உறுதி ஏற்றுக்கொள்வோம்.


வாழ்க அன்னை மணியம்மையார் !

வாழ்க சுயமரியாதைச்சுடரொளிகள்..!


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் 16-31,2025



 

Friday, 14 March 2025

அம்மா செண்பகம் இராமசுவாமி புகழ் நிலைக்கட்டும்....

 பெரியாரின் தத்துவத்தை

இளையோர் மனங்களில்

ஏர்போல் உழுது ஆழ

விதைக்கும் அன்பர் இவர்…


‘பெரியாரைப் புரிந்துகொள்வது

எப்படி?’ –ஓர் அற்புதமான

நூலினை ஆய்ந்தறிந்து

கொடுத்த பெருந்தகை இவர்..


‘கலகக்காரர் தோழர் பெரியார்’

எனத் தொடங்கி கடந்த

கால் நூற்றாண்டுக்காலத்தில்

தந்தை பெரியார் பற்றி

ஐந்து நிஜ நாடகங்களைக்

கொடுத்தவர் இவர்…


இந்த நாட்டில் சிவப்புச்சட்டை

ஆட்சி மலர இந்தக்

கருப்புச்சட்டைக்காரர்தான்

தேவையென்பதை ஆய்ந்து

ஏற்றுக்கொண்டவர் இவர்…


விதம்விதமாய்ப் பெரியாரை

உற்று நோக்குகிறார்..

வேறுபட்ட வடிவங்களில்

நாடகமாய் அரங்கேற்றுகிறார்…


இளையோர் பங்கேற்பால்

அரங்கங்களை அதிர வைக்கிறார்..

பெண்களின் வெடிச்சிரிப்பால்

பழமைவாதிகளைப்

பயந்தோட வைக்கிறார்…


கருப்பும் நீலமும் சிவப்பும்

இணைந்து போராடும்

ஓர் எதிர்காலத்தைக் கட்டமைக்கிறார்

தன் நாடகங்களின் வழி…

 

27 ஆண்டுகளுக்கு முன் மறைந்த

தன் இன்னுயிர் இணையர்

அம்மா செண்பகம் இராமசுவாமி

அவர்களின் நினைவாய்

அவர் நினைவு நாளில்

தான் எழுதிய நூல்களின் வழியே

தமிழ் சமூகம் அம்மாவை

நினைவு கூரக் களம் அமைக்கிறார்…


மார்க்ஸ் மேல் அளவற்ற காதல்

கொண்ட ஜென்னிபோல்

மார்க்ஸ் நினைவு நாளில் மறைந்திட்ட

அம்மா செண்பகம்மேல் அளவற்ற

காதல் கொண்ட தோழர்

மு.இராமசுவாமியை நேரில் கண்டோம்

மனதில் உவகை கொண்டோம்..


எப்போதும் தோழர் மு.இராமசுவாமியை

இயக்கிக் கொண்டே இருக்கும்

அம்மா செண்பகம் இராமசுவாமி

புகழ் நிலைக்கட்டும்!வாழ்க!

வாழ்க !அவரின் நினைவுகள்! 

வா.நேரு,14.03.2025


Tuesday, 11 March 2025

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க மலரில் எனது கட்டுரை....









 

வாசிக்கும் மனம்...

 

                                        

 

ஒரு நல்ல

புத்தகத்தின் வாசிப்பு

நம்மை எங்கெங்கோ

அழைத்துச்செல்கிறது


அத்துவானக் காட்டில்

துயரத்தில் அல்லல்படும்

அவர்களின் துயரத்தில்

நம்மையும் கூட

பங்குபெற வைக்கிறது..


ஏதுமற்ற பழங்குடிப்பெண்ணாக

இருந்தாலும் அவளின்

கள்ளங்கபடமற்ற நகைப்பும்

வாழ்ந்து காட்டவேண்டும்

எனும் உள்ளத் துடிப்பும்


தன் துயரை மட்டுமே

எண்ணி அழுதுகொண்டிருக்காமல்

தன்னைப்போல் பாதிக்கப்பட்டு

அழுதுகொண்டிருப்பவர்களுக்காக

நீளும் அவளின்

உதவிக் கரங்களும்


உன்னதமாக வாழ்வது எப்படி

என்னும் உண்மையைப்

போதிக்கிறது எழுத்தின் வழியே

அரிவாள் ஜீவிதம்நாவலின்

ஜெகந்திஏனோ படித்து

முடித்தபின்பும் மனதிற்குள்

வாழ்ந்து கொண்டிருக்கிறாள்

கதை என்னமோ அவள்

சாகும் இடத்தில்

இருந்துதான் தொடங்குகிறது !

 

                   வா.நேரு,11.03.2025




 

Thursday, 6 March 2025

நெருப்புச்சிலிர்ப்புகள்...கவிஞர் ம.வீ.கனிமொழி

 அழகிய வடிவமைப்புடன் ,அமெரிக்காவில் இருக்கும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் 'நெருப்புச்சிலிர்ப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் தாயார் ,திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் ,வழக்கறிஞர் அம்மா வீரமர்த்தினி அவர்கள் இந்த நூலினை எனக்குத் தபாலில் அனுப்பிவைத்தார்.  நன்றிகள் அவருக்கு.இனி 'நெருப்புச் சிலிர்ப்புகள் ' நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை தங்களின் வாசிப்பிற்கு...










                                  அணிந்துரை

 

தோழர் ம.வீ. கனிமொழி அவர்களின் 60 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நூல் இந்த ‘நெருப்புச் சிலிர்ப்புகள் ‘. அவ்வப்போது தோழர் ம.வீ. கனிமொழியின் கவிதைகளை இணையத்தின் வழியாக வாசிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது அப்போதே நான் இவரை வியந்து பார்த்திருக்கிறேன் உவமையை,படிமத்தை வெகு இயல்பாகத் தன் கவிதையில் நடமாட விடுவது மட்டுமல்ல, எவரும் சிந்திக்காத கோணத்தில் கருத்துக்களைக் கவிதைகளாக தரும் இவரின் ஆற்றல் எனக்கு வியப்பைத் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட கவிஞரின் 60 கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கின்ற வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.முதலில் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

 தனக்குப் பிடித்ததை,தன் வாழ்வைத் தான் விரும்பியவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பெருவிருப்பம் உடையவர் இவர்..எதையும் நேரிடையாக எதிர்கொள்ளக் கூடியவர். பேசக்கூடியவர். அந்தத் தன்மை,தனித்தன்மை அவரின் கவிதைகளிலும் வெளிப்படுகிறது.

 
“காடோடிப்/பாடும் என்/ குரல் இறவா/புகழ் பெற்றது “ என்னும் இக்கவிஞர் நாடோடி வாழும் நிலையில் கவிதை பாடுகின்றார்.” எத்தனையோ /கவிதைகளில் /உலா வருகிறேன்” என்று காலம் கடந்தும் வாழப்போகும் தன் கவிதைகளின் வழியாக இறவாத் தன்மையை அடைவேன் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.படைப்புத்தானே ஒருவரின் பெயரை நிரந்தரமாக இந்த உலகில் நிறுவும் வழி.

 
தேடல் என்னும் கவிதை அத்தனை கவித்துவமாய் இருக்கிறது. ‘என் கவிதைக்கான/

ஒற்றைச் சொல்லை’ என்று முடியும் அந்தக் கவிதை ஒரு சிறுகதையின் முடிவைப் போல இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால் “ அந்தி மாலை /வானத்தில் /தேடுகிறேன் / காலை நேரத்துக்/கதிர்களைத்/துழாவுகிறேன்…” என்று தொடரும் கவிதை ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்து நிறைவடைகிறது.

 
தனது கவிதை எப்போது கனமாகிறது என்பதைத் தனது கவிதையின் வழியாகவே தோழர் சொல்கின்றார்.” கட்டுக்கடங்காதச் /சினத்தின் போதும் “ என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை “ ஒரு காகிதமும் /ஓர்  எழுதுகோலும் /போதுமாய் இருக்கிறது” என்று நின்று பின்பு தொடர்ந்து முடிவில் “லேசாகிறது /மனம்!/கனமாகிறது/கவிதை !” என்று முடிக்கின்றார்.நல்ல கவிதை.நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த அற்புதமான படிமங்களை இந்தக் கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கிறார்.

 
புத்தாண்டு வாழ்த்துகளைக் கவிதை வழியாகத் தெரிவிக்கும் இவரின் கேள்விகள் நியாயமானவை.ஆராய்ச்சிக்கும் தீர்வுக்கும் உரியவை. “ஒரு பக்கம் / வாணவேடிக்கைகள் / மறுபுறம் அதிர்வேட்டுகள் /சத்தங்கள் /பால் சுரக்கும்/ காம்புகளை/ அறுத்துப் போடுகிறது” என இருவேறு உலகங்களாக இருக்கும் இந்தப் பூமியில் புத்தாண்டு வாழ்த்துகள் என்னும் குரல் யாருக்கானது என்னும் கேள்வியை இந்தக் கவிதையின் வாயிலாக எழுப்புகிறார்.

 
“மரணத் தேதியை அறிந்தும்/எதிர்கொள்ளும்/அம்மனத்தின் போராட்டத்தை/நாளை எச்சொற்கள்/அடுத்த தலைமுறைக்குக்/கடத்தும்?”  எனக் ‘கல்லறைக் கனவுகள் ‘  என்னும் கவிதையில் கேள்வியை எழுப்புகிறார். அருகில் இருந்து பார்த்தவர்கள் அறிவார்கள்,அந்த உறவுகளின் மனப்போராட்டத்தை.மரணத் தேதியை அறிந்த பின்பும் அமைதியாக அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்க இந்த மாதிரியான கவிதைகள் பயன்படட்டும்.

 சங்க இலக்கியங்கள் பற்றிய கவிஞர் ம.வீ.கனிமொழியின் உரைகள் ,கேட்பவர்க்கு எப்போதும் வியப்பைத் தரும்.பொறியாளர் எப்படி சங்க இலக்கியங்களுக்குள்  இவ்வளவு ஆழ்ந்து ,தோய்ந்து உரை தருகிறார் என்று.’முத்தக் கொத்தல் ‘ என்னும் கவிதையில் காதலும் இருக்கிறது,ஊடலும் இருக்கிறது,சங்க இலக்கியமும் இருக்கிறது.இரசித்துப் படிக்கலாம்.ஆழமான அன்பை அளப்பதற்கான ஒரு வழியையும் தனது கவிதையின் வாயிலாகத் தோழர் ம.வீ.கனிமொழி கூறுகின்றார். இளையவர்கள் அதனைக் கற்றுக்கொள்ளலாம் ‘ஆழம் ‘ என்னும் கவிதையினை வாசிப்பதன் மூலமாக.

இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பாக இருக்கும் ‘நெருப்பின் சிலிர்ப்புகள் ‘ என்னும் கவிதையில் “அத்தி மர நிழலைத்/தேடி அலைந்த காலம்/உண்டு/செர்ரி மரத்தின் நிழலில் /இன்று இளைப்பாறுகிறேன் “ என்று தனது இரண்டு வாழ்நிலை இடங்களைச் சுட்டிக் காட்டி “மரங்கள் /சமத்துவ விரும்பிகள் /அவை எப்படி/அஃறிணையாகும்?” என்னும் கேள்வியை எழுப்புகிறார்.சமத்துவம் விரும்பா மனிதர்கள்தானே அஃறிணைகள் என்பதைச்சுட்டும் இக்கவிதை மரங்கள் ஏன் நெருப்புச் சிலிர்ப்புகளை வீசுகின்றன என்பதனை கவித்துமாய்க் காட்டுகிறது.

 
ஏன் “ஒருபோதும் தனிமையை /என் உணர்வின்/படிமங்கள் கூட/உணர்வதில்லை” என்பதை ‘உணர்வின் படிமங்கள் ‘ என்னும் கவிதையில் முடிப்பதற்கு முன் குறிப்பிடுகின்றார்., “ஒற்றைக் குயில் /கூவிக் கொண்டிருக்கும்/வரை/மெல்லியத் தென்றல் /தீண்டும் வரை.. “ என்று வரிசையாக படிமங்களை நம் கண் முன்னே அக்கவிதையில் வரிசைப்படுத்துகிறார். வகைப்படுத்துகிறார்.அவர் சுட்டும் ஒவ்வொரு உவமையும் நம் கண் முன்னே காட்சியாக விரிந்து தன்னைப் படிமம் என்று சுட்டிக் காட்டுகிறது.அழகியலும் கருத்தும் ஒன்றை ஒன்று விஞ்ச போட்டியிடும் கவிதை இது.

 
கவிஞர் ம.வீ.கனிமொழி “ஓணான்-காகம்-தவளை- காதல்” கவிதை வழியாக்க் காதலை நன்றாகவே பகடி செய்கிறார்..’விந்தை மாதவள் ‘ என்னும் கவிதையில் தாய்மை –புனிதம் என்பதைக் கவிதையின் வழியே கட்டுடைப்பு செய்கின்றார்.” கடந்து பாருங்கள்/தெரியும்/கண்டங்கள் தாண்டும்/இன்பம்” என்று ‘’நிம்மதியின் சாயல் ‘கவிதையில்  நம் நாட்டில் பெண்களுக்கு நிகழும் துன்பங்களை கவிதையின் வழியே பட்டியலிடுகின்றார்.’பல்லி’ என்னும் தலைப்பில் கவிதையைப் படித்தபொழுது உவமைக் கவிஞர் ‘சுரதா’ எழுதிய ‘போலி உடும்பு ‘ என்னும் கவிதை நினைவுக்கு வந்தது.இரண்டு கவிதைகளுமே குறி சொல்லும் பல்லியைக் கேலி செய்யும் கவிதைகள்.இரண்டுக்கும் ஒற்றுமையும் உண்டு,நிறைய வேற்றுமைகளும் உண்டு.

 
இப்படி இக்கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையையும் சிறப்பித்துச்சொல்ல ஏராளமான செய்திகள் உள்ளன.தமிழ்க் கவிதை உலகில் தனக்கான பாணி,தனித்துவமான பாணி என்பதை நிருபிக்கும் வண்ணம் கவிஞர் ம.வீ.கனிமொழியின் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. கட்டாயம் ஆங்கிலத்தில் இதனைத் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் மொழிபெயர்க்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரின் வங்க மொழியில் தன் கவிதைகளை, நாவலை எழுதிப் பின் ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்ப்பதுபோல தோழர் ம.வீ.கனிமொழி அவர்களும் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டும் என்பது  நம் விருப்பம்.ஆங்கிலத்திலும் அற்புதமாக பேசக்கூடிய,எழுதக்கூடிய தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள்.இரண்டு மொழிகளிலும் ஒன்று போல இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டால் இன்னும் சிறப்பாகும்.

இத்தொகுப்பை நம் தோழர்கள் வாங்கிப் படிக்கவேண்டும். முழுமையாகப் படித்து தங்கள் கருத்துகளை இந்த நூல் ஆசிரியர் கவிஞர் ம.வீ.கனிமொழி அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.தன் மனதில் உள்ள கருத்துகளை கவித்துவத்தோடும் துணிச்சலோடும் வெளிப்படுத்தும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் இன்னும் பல படைப்புகளைத் தரவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தோடு ,அவருக்கு இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக என் மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மென்மேலும் வளர்க! படைப்புகளால் இந்த உலகில் ம.வீ.கனிமொழியாக தாங்கள் என்றும் வாழ்க!

                       

 

மதுரை                                         தோழமையுடன்

 

05.10.2024                                             முனைவர் வா.நேரு,

                                                     தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு,

                                                       பெரியார் திடல்,சென்னை-600 007.