Tuesday 13 May 2014

நிகழ்வும் நினைப்பும்(23) : வீர வணக்கம் ! வீரவணக்கம்! தோழர் பெரியார் சாக்ரடீஸுக்கு வீரவணக்கம் !

நிகழ்வும் நினைப்பும்(23) : வீர வணக்கம் ! வீரவணக்கம்! தோழர் பெரியார் சாக்ரடீஸுக்கு வீரவணக்கம் !

தோழர் விருதுநகர் க. நல்லதம்பி அவர்கள் , 12.05.2014 மாலை 7 ம்ணியளவில் அழைத்து, ' அய்யா, செய்தி உண்மையா? ' என்றார். என்ன? என்று கேட்க, இடியென விழுந்த அந்த செய்தியைச்சொன்னார், தோழர் பெரியார் சாக்ரடீஸ் இறந்து விட்டாரமே,உண்மையா ?  என்றார்.அண்ணன் வீ.குமரேசன்  அவர்கள் ஆமாம் என்று உறுதி செய்தபோது , அந்த முகமும் , பெரியார் திடலுக்குள் துறு, துறுவென்ற அவரின் செயல்பாடும், உண்மை இதழும் ஞாபகத்திற்கு வர , மிகப்பெரிய துயரம் மனதை அடைத்தது.

                              திராவிடர் கழகம் அதைச்செய்ய வேண்டும் , இதைச்செய்ய வேண்டும் என்று ஆலோசனை  சொல்லுவோர் நிறைய உண்டு. செயல்பாடுகளில்   என்ன குற்றம் சொல்லலாம் என்று யோசித்து யோசித்து குறை சொல்வோர் உண்டு. ஆனால் தந்தை பெரியாருக்குப் பின்னால் இன்று சூழ்ந்துள்ள ஆபத்தையும் அந்த ஆபததை நீக்க  அரும்பணியாற்றும் அய்யா ஆசிரியரின் நம்பிக்கைக்கு உரியவர்களாய், அவர் சொல்லும் செய்ல்களை,இராணுவக் கட்டுப்பாட்டோடு செய்து முடிக்கும் தோழர்களில் மிக முக்கியமானவர் பெரியார் சாக்ரடீஸ். உண்மை இதழின் பக்கங்களுக்கு மெருகேற்றி, மெருகேற்றி , அவ்விதழ் மிகச்சிறப்பாக வரக் காரணமானவர் தோழர் பெரியார் சாக்ரடீஸ். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராக இருந்த்  செயல்பட்ட அருமைத்தோழர் பெரியார் சாகரடீஸின் இழப்பு இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு. வீரவணக்கம், வீர வணக்கம். தோழர் பெரியார் சாக்ரடீஸ் அவர்களுக்கு வீர வணக்கம்.

                  திராவிடர் கழகத்து தோழர்களின் குடும்பங்களின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் அறிக்கை படிக்கும்போதே கண்களில் கண்ணீரை  வரவழைத்தது, இதோ அவரின் அறிக்கை:
பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிஸை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும்,  அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!

பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

உன் இழப்பை எப்படி  நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!

எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே -  எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!

உன்னை பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிஸை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!

நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே!  எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர்கள், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?

எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீஸ்களை உருவாக்குவோம்!

உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,

உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

12.5.2014
 

http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2014/may/13/35.jpg

5 comments:

Unknown said...

பண்பு நலத்தால் எல்லொரையும் வாழவைத்த
பெரியார் சாக்ரடீசே விளைவின் கனியை
சுவைக்க வரமாட்டீரோ...!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

ஆறாத் துயர்தரும் ஆற்றொணாத் துன்பச் செய்திதான். கேட்டவுடனே நெஞ்சம் துணுக்குற்றது. செயல்வீரர் பெரியார் சாக்ரடீசைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அகாலமரணம் அநியாயம்தான். தலைக்கவசம் அணியாததால் இந்தப் பேரிழப்பு என்பதை அறிந்து பெரிதும் வருந்தினேன். அன்னாரின் சகோதரர் பிரின்சு என்னாரெசுப் பெரியாரை இணையத் தமிழ்ப்பட்டறைக்கு அழைத்திருந்த சூழலில் இந்தப் பேரிடிச் செய்தி! அவரது கொள்கைகள் வெற்றிபெறக் குறிக்கோள்கொண்டு நடைபோடுவதே அவருக்கான சரியான அஞ்சலியாகும். செய்திப் பகிர்வுக்கு நன்றி தோழரே.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

தோழர் பெரியார் சாக்ரடீசின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தந்திருக்கும் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் - பார்க்க http://muelangovan.blogspot.in/2014/05/blog-post_12.html

முனைவர். வா.நேரு said...

பண்பு நலம் மிக்க தோழரைத்தான் இயற்கை பறித்துக்கொண்டது.

முனைவர். வா.நேரு said...

"அவரது கொள்கைகள் வெற்றிபெறக் குறிக்கோள்கொண்டு நடைபோடுவதே அவருக்கான சரியான அஞ்சலியாகும்" கொள்கை உரமிக்க குடும்பம் தோழரின் குடும்பம். துயரத்திலிருந்து மீளூவதற்கு இன்னும் வேகமாக இயக்க வேலை பார்ப்பதே தீர்வு என்பார் ஆசிரியர்.