Tuesday 10 March 2015

முகநூலில் விண்ணப்பங்கள்.......

விரிந்து கிடக்கிறது முக நூல்
விரிந்து கிடக்கும் வானம் போலவே !
வித விதமாய்க் கண்சிமிட்டும்
நட்சத்திரங்கள் போலவே
எவரெவரோ தரும்
விவரங்களும் கேள்விகளும்
வித விதமாய் சிந்தனைத்
துளிகளைத் தூவுகின்றன !

காற்றும் மழையும்
வெயிலும் குளிரும்
நண்பர் விண்ணப்பம்
கொடுத்து வருவதில்லை !
வந்தபின்புதான்
உடையாலோ குடையாலோ
மறைத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது !

முகநூலில்
விண்ணப்பங்கள்
வந்து கொண்டேயிருக்கின்றன
அறிந்தவர்கள்
அறியாதவர்கள்
தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள்
என நட்பு விண்ணப்பங்கள்
வந்து கொண்டேயிருக்கின்றன !

செயற்கரிய யாவுள நட்பின்
வினைக்கரிய யாவுள காப்பு
வினாவும் கேட்டு
விடையும் சொன்ன
திருவள்ளுவரின்
அதிகாரங்களில்
'ஒன்று ஈத்தும் ஒருவுக நட்பை'
என அறிவுறுத்தும்
'கூடா நட்பும் ' 'தீ நட்பும் '
கூடவே இருக்கிறது !

விலக்க வேண்டிய நட்பு பற்றி
தூரத்தில் வரும்போதே
வேண்டாம் என ஓடவேண்டிய
நட்பு பற்றியெல்லாம்
நயமாக இயம்புகின்றன
திருக்குறளின் வரிகள் !


போலிகள் நிறைந்துகிடக்கும்
முக நூலில்
எவரின் நட்பை ஏற்பது ?
எவரின் நட்பை வெறுப்பது ?
புதுக்குறள் எவரேனும்
எழுதுங்களேன் !
திணறும் முக நூல்
நட்புகளுக்கு உதவுங்களேன் !

                                         ....வா.நேரு......

                                       நன்றி : எழுத்து.காம்

No comments: