Monday 9 March 2015

எவரின் தாக்கம் ?......

இந்துப்பண்பாடாம் !
'இந்திய மகள்'
படத்தால் இந்திய
மாண்பைக் கெடுக்கிறார்களாம் !
என்னனமோ எழுதுகிறார்கள்
தி...மணிகளின்
நடுப்பக்கங்களில் !

சீதனமாகப் பொருள்
கொடுத்தார்களாம் ...
மேற்கத்தியத்தாக்கத்தால்
சொத்துரிமை கேட்டதால்
பெண்களுக்கு கேடாம் ...

மகன் என்றால் மற்றவர்க்கு
இனிப்பும்
மகள் என்றால் பச்சைக்குழந்தைக்கு
கள்ளிப்பாலும் கொடுக்கச்சொன்னது
எவரின் தாக்கம் !

மேற்கத்தியத் தாக்கத்து
முன்னமே
மகாபாரதக்கதையில்
ஒருத்தியை கட்டிவந்து
ஐந்து பேர் பங்குபோட்டது
எந்தத் தாக்கம் !

பொம்பளை மோகம் பிடித்தவனை
கூடையில் சுமந்து போய்
அடுத்த பொம்பளையிடம்
விட்டவளுக்கு
பத்தினிப் பட்டம் கொடுத்தது
எவரின் தாக்கம் !

தீக்குள் குளித்துவா !
பத்தினி என உன்னை
நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்று கடவுள் சொன்னதாய்
எழுதி வைத்தது
எந்தத் தாக்கம் ?
எவரின் தாக்கம் ?

மாயக்கண்ணாடியாம் !
கண்ணாடிக்கு முன்னால்
நின்றால் மனதில் இருப்பவர்
எவர் எனத்தெரியுமாம் !
கடவுளின் மனதில் இருப்பவர்
நீயா ? நானா ? எனச்
சக்களத்திகள் இருவரும்
சண்டையிட்டு
இருவரும் இல்லையென்றால்
இருப்பவள் வேறு எவள்
என அறியக்
கடவுளைக் கண்ணாடிமுன்
நிப்பாட்டினார்களாம் ....
உங்க கடவுள்களின்
யோக்கியதை இப்படி
ஆனதற்கு காரணம்
எந்தத் தாக்கம் !

பத்தினியைக் களங்கப்படுத்த
மாறுவேடத்தில்
பிச்சைகேட்டு
கடவுள்கள் போனதாக
கதை எழுதியது
எந்த மேற்கத்தியத் தாக்கம் ?

உங்களது
புராணக் கடவுள்கள்முதல்
நடமாடும் கடவுள்கள்வரை
பெண்களிடத்தில் யோக்கியமாய்
நடந்த கடவுள் ஒன்றைக்
காட்டுங்கள் ! பின்பு
மேற்கத்தியத் தாக்கம்
பற்றிப்பேசலாம் .....

வக்கிரமாய்
இந்திய ஆண்கள்
மனது ஆனதன்
காரணம்
உங்களது கடவுள்கள்
அவர்களின் லீலைகள்
எனச்சொல்லும் கதைகள்

கடவுள் கதைகளைத்
திருத்துங்கள் ...
அல்லது திருந்தாத
கடவுள்களைக்
கொளுத்துங்கள் ....
பெண்களின் நிலைமாறும்
இந்த நாட்டில் ....

                           ..... வா.நேரு....

4 comments:

சிவக்குமார் said...

ஒவ்வொரு நாளும் தினமணிக்கு எதிர்வினை தேவைப்படுகிறது

முனைவர். வா.நேரு said...

உண்மைதான், குழுவாக கருத்தியல் எதிர்வினை ஆற்றவேண்டும்.... நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

///கடவுள் கதைகளைத்
திருத்துங்கள் ...
அல்லது திருந்தாத
கடவுள்களைக்
கொளுத்துங்கள் ....
பெண்களின் நிலைமாறும்
இந்த நாட்டில் ....///
உண்மைதான ஐயா

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, வருகைக்கும் கருத்திற்கும், உண்மைகளை உரக்கச்சொல்வோம்.