Tuesday 24 March 2015

பரவும் கருத்துக்களின் நறுமணம்

பரவும் கருத்துக்களின் நறுமணம்

‘மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்!' என்னும் கட்டுரையை பகத் சிங்கின் வீர வணக்க நாளில் வெளியிட்டமைக்கு நன்றி. இந்திய மக்கள் அனைவருக்கும் பொது உரிமையும், பொது உடமையும் வேண்டும் என்பதற்காக இன்னுயிர் ஈந்தவர்.
‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' எனப் புத்தகம் எழுதியவர். தமிழில் அதனை மொழிபெயர்த்து பெரியார் இயக்கம் மக்களிடம் கொண்டுசென்றது. மனித நேயத்தை மையமாகக் கொண்ட பொதுவுடமைவாதிகளின் அடிப்படைக் கோட்பாடு, கடவுள் என்னும் கருத்தியல் மறுப்புதான், மத அடிப்படையிலான சடங்குகள் மறுப்புதான். அதனை தோழர் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் கொண்டிருந்தனர் என்பது வரலாறு.
மதமற்ற, மனித நேய, பொதுவுடமைச் சுதந்திரமே பகத் சிங்கின் கோட்பாடு. பகத் சிங்கை நினைவுகொள்வது என்பது அந்தத் திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே ஆகும். “உயிருள்ள பகத் சிங்கை விட உயிரற்ற பகத் சிங் பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளுக்கு ஆபத்தானவன். நான் தூக்கிலிடப்பட்ட பின்னர், என்னுடைய புரட்சிகரக் கருத்துக்களின் நறுமணம் நம்முடைய இந்த அழகான தேசத்தின் சூழலெங்கும் பரவும்.
இளைஞர்களுக்கு வெறியூட்டி சுதந்திரம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் மீது அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்யும். அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் அழிவை விரைவில் கொண்டுவரும். இது என்னுடைய உறுதியான நம்பிக்கை” என பகத் சிங் கூறினார்.
ஆம், பகத் சிங் பற்றிய முழுமையான அறிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைத்துவிட்டால், அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இளைஞர்களை அண்ட இயலாது. எனவேதான் மேலோட்டமாக பகத் சிங் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதோடு முடிக்கப் பார்க்கிறார்கள். அவர் அதற்கும் மேலே!
- முனைவர். வா. நேரு, தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம், மதுரை

நன்றி : தமிழ் இந்து நாளிதழ் - 24.03.2015.

No comments: