Sunday 31 May 2015

நிகழ்வும் நினைப்பும்(39 ) : பிறந்த நாளும் பரிசுப்பொருளும்

நிகழ்வும் நினைப்பும்(39 ) : பிறந்த நாளும் பரிசுப்பொருளும்

                                        இன்று எனது 52-வது பிறந்த நாள். சில நண்பர்கள் பேஸ்புக்கிலும் , தொலைபேசியிலும் வாழ்த்துக்களைக் கூறினர். மிக்க நன்றி. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. எனது வாழ்க்கை இணையர் கொடுத்த பரிசு  புதிய உடைகள். ஏற்கனவே நிறைய இருக்கிறது, சட்டை எல்லாம் வேணாம்பா என்று சொன்னாலும் கேட்கவில்லை, நல்ல ஒரு சட்டையை தேர்ந்தெடுத்து கொண்டு வந்து கொடுத்தார்கள். உடுத்திக்கொண்டேன்.தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு , தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலில் , பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக வாழ்வது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு  நம்மால் முடிந்த அளவு உதவுவதும்தானே வாழ்க்கை.அதற்கு பெரியாரியல் மிகப்பெரிய வழிகாட்டல்தான்.


                                      ஒரு வியக்கத்தக்க ஒரு பரிசினை எனது பிள்ளைகள் சொ. நே.அன்புமணியும் , சொ.நே.அறிவுமதியும் கொடுத்தார்கள், தினந்தோறும் காலையில் முகச்சவரம் செய்யப் பயன்படுத்தும் முகம் பார்க்கும் கண்ணாடி ரசமெல்லாம் போய்விட்டது. அதனைத்தான் வைத்து தினந்தோறும் முகச்சவரம் செய்துகொண்டிருந்தேன். புதிய கண்ணாடி வாங்கவேண்டும் என்று சில நாட்களுக்கு முன் நினைத்தேன் , ஆனால் வாங்கவில்லை. எனது மகனும் மகளும் , காலையில் " அப்பா , பிறந்த நாள் வாழ்த்துக்கள் " என்று சொல்லி விட்டு பரிசுப்பொருளைக் கொடுத்தார்கள். பிரித்து பார்த்தபொழுது , ஒரு பேனா, ஒரு பர்ஸ், ஒரு முகம் பார்க்கும் நல்ல பெரிய கண்ணாடி இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கு எது தேவை என்பதனையும் அதனை பரிசுப்பொருளாக வாங்கிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொடுத்தது. விலை உயர்ந்த பரிசுப்பொருட்களைக் கொடுப்பதை விட , எது தேவையோ அதனைக் கொடுக்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. மனதார நன்றி பிள்ளைகளே எனச்சொன்னேன்.

                                    நான் படித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர்- பண்பாளர், கல்வியாளர் திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பெயரால் ஒரு அறக்கட்டளை திருச்செந்தூரில் உள்ளது. நான் பெரியார் கொள்கைக்கு தீவிரமாக வருவதற்கு காரணமாக அமைந்த எனது ஆங்கிலப்பேராசிரியர் திருமிகு. கி.ஆழ்வார் அவர்கள் அந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார். எங்கள் முதல்வர் திரு.டாக்டர் இரா.கனகசபாபதியின் முன்னாள் மாணவர்கள் , அவரோடு பணியாற்றிய பேராசிரியர்கள் ஆகியோர்களின் பங்களிப்பால் நடைபெறும் அந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் ஓர் அற்புதமான வேலையைச்செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அறக்கட்டளை மூலமாக நன்றாக படிக்கக்கூடிய ஆனால் ஏழ்மை நிலையிலுள்ள மாணவ, மாணவிகளுக்கு  படிப்பதற்கான உதவியைச்செய்து கொண்டிருக்கின்றார்கள். செய்வது மட்டுமல்ல யார் யார் பணம் கொடுத்தார்கள் என்பதையும் , யார் யார் , எந்தெந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் உதவி பெற்றார்கள் என்பதையும் தெரிவிக்கின்றார்கள். மிக வெளிப்படையாக நடைபெறும் உதவி - திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பெயரால். நான் திருமிகு டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களால் பலன் பெற்றவன் என்ற வகையில் , எனது பிறந்த நாள்  நன்கொடையாக ரூ 2000த்தை அந்த அறக்கட்டளைக்கு எனது கணித பேராசிரியர் திரு.சேகர் மூலமாக அளித்தேன்.

                            இப்போதுதான் கல்லூரிக்கு சென்றதுபோலவும், வேலைக்கு வந்தது போலவும் இருக்கிறது. காலம் ஓடிவிட்டது. 51-வயது முடிந்து 52-வது வயது ஆரம்பித்திருக்கிறது. நிறைய வேலைகள் எழுத்து வடிவில், பொது வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. செய்ய இயலும் என நினைக்கின்றேன். நன்றி உறவுகளே, நண்பர்களே, தோழர்களே வாழ்த்துக்களுக்கு... நன்றி எதிரிகளே வசவுகளுக்கு.... 

2 comments:

கருப்பையா.சு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி. நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் . நலமுடன் வாழ்க. அதன் மூலம் சமுதாயமும் பயன் பெறட்டும்.

முனைவர். வா.நேரு said...

நீண்ட வருடங்களாய் வரும் தங்கள் வாழ்த்து, எப்போதும் உள்ளத்திற்கு மகிழ்வு தரும் உண்மையான வாழ்த்து. நன்றி அண்ணே...