Saturday 30 January 2016

அண்மையில் படித்த புத்தகம் : சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள்...எம்.என்.ராய்

அண்மையில் படித்த புத்தகம் : சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள்
ஆசிரியர்                                    :  அறிவுலக மேதை எம்.என்.ராய்
தமிழில் மொழிபெயர்த்தவர்    :   வை.சாம்பசிவம்
வெளியீடு                                  :   கங்கா-காவேரி, 18, காரியாங்குடி செட்டித்தெரு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611 001
முதல் பதிப்பு                             :   2001   , மொத்த பக்கங்கள் 144 , விலை ரூ 35/=
மதுரை மைய நூலக எண்       :   140058

                                                                  பகுதி -1.

                                                      எம்.என்.ராய் அவர்கள் சிறையில் இருந்தபொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 1940-களில் அவர் எழுதிய கட்டுரைகள் 'எம்.என்.ராய் எழுதுகிறார்' என்ற தலைப்பில் முதல்தொகுதியாக 1963-ல் இமயப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய இளைஞர்களுக்காக மீண்டும் வெளியிடப்படுகிறது(2001-ல்)  என்று பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் 'Fragments of Prisoner's diary ' என்ற நூல்தான் தமிழில் சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

                                          சிறையிலிருக்கும்போது ஒரு பூனைக்கு பால் ஊற்ற, அந்தப்பூனை எம்.என்,ராயுடன் சிறைக்குள்ளேயே இருந்துவிடுகின்றது. அதன் மூலம் பூனையோடு நெருங்கிப்பழகிய எம்.என்.ராய் , பூனையின் மூலம் மிருக உளவியலை ஆராய்கின்றார். அந்த ஆராய்ச்சியின் மூலம் பூனைகள் மனிதர்களிடம் பேசினால் என்ன பேசும் , எதைப் பேசும் என்ற கற்பனைதான் இந்தப் புத்தகம். புத்தகம் ஆராய்ச்சி அடிப்படையிலானது என்றாலும் அவர் கொடுக்கும் நகைச்சுவையும் கேள்விகளும் சம்மட்டி அடிகளாக இருக்கின்றன.

                                   "ஏய் , மனிதா, எங்களை  காலம் காலமாக திருட்டுப்பூனை என்று சொல்கிறீர்கள், அபசகுனப்பூனை என்று சொல்கிறீர்கள். மாடு தனது  கன்றுக்கு கொடுக்கவேண்டிய பாலை, கன்றுக்குட்டிக்கு உரிய பாலை , திருட்டுத்தனமாக கறக்கும் மனிதர்களே, நான் அந்தப்பாலைக் கொட்டி விட்டுக்குடித்தால் என்னை திருட்டுப்பூனை என்று சொல்கிறீர்கள். எனக்கு எதுவும் உணவு இல்லாத போது பாலைக் கொட்டிவிட்டிக் குடிப்பதில் என்ன தவறு ?" என்று பூனை கேட்கிறது.

                                  அபசகுனம் என்று என்னைச்சொல்கிறீர்கள் எனச்சொல்லும் பூனை, சோதிடத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு, செவ்வாய்க்கும் பூமிக்கும் உள்ள தொலைவு என்று பலவற்றை அறிவியல் அடிப்படையில் விளக்கும் பூனை, டேய் அந்த நட்சத்திரத்திலிருந்து ஒளி வருவதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகின்றது, நீ ஒரு அற்பம், பூனையைப் போல , எலியைப் போல , புலியைப்போல எப்படி ஒரு மிருகம் தாய் தந்தை சேர்க்கையால் உண்டாகிறதோ அப்படி உண்டாகக் கூடிய ஒரு நடக்கக்கூடிய இருகால் மிருகம். உனது பிறப்பை, வளர்ப்பை, நடப்பை, சிரிப்பை, படிப்பை,இறப்பை எல்லாவற்றையும்  அந்தக் கோள்களின் இயக்கம் தீர்மானிக்கிறதாம், எவ்வளவு பெரிய ஆணவம் மனிதா உனக்கு, எவ்வளவு பெரிய பேராசை உனக்கு என்று  மனிதனின் சோதிட நம்பிக்கையை பூனை இளக்காரம் செய்கிறது. 'டேய், நாங்க சோதிடம் எல்லாம் பார்ப்பதில்லை, வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கும்வரை இருக்கின்றோம், இறக்கும்போது இறக்கிறோம். தொட்டதிற்கெல்லாம் ஜாதகத்தை தூக்கிக்கொண்டு அலையும் மனிதர்களே, நீங்கள் எந்த வகையில் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் என்று கேட்கிறது.பழங்கால மூட நம்பிக்கையான சோதிடத்தை ஏன் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்று பூனை கேட்கிறது . இதோ புத்தகத்தில் உள்ள பகுதி :
               
சோதிடம் ஒரு கேலிப்பொருள் :

"சோதிடத்தைப் பற்றி இங்கு சில வார்த்தைகள் கூறுவது பொருந்தும் என நினைக்கிறேன்.இந்த பழங்கால மூட நம்பிக்கைக்கு,இந்நாட்டில் கற்றவறர்களாலும் அறிவியலுக்குரியதான மதிப்பு தரப்படுவதைக் காணும் போது அதைப் பற்றிய சில உண்மைகளைக் கூறுவது அவசியமாகிறது.மூடநம்பிக்கை எனக்கு முதற்பகை-பிறவிப் பகையுங்கூட.அதைக் கண்ணுறும் இடமெல்லாம் விரட்டியடிக்க வேண்டும் என்னும் தணிக்க முடியாத வேட்கை எனக்குப் பிறக்கிறது.இந்திய நாட்டின் அறிவு உலக வானில் கவிழ்ந்து நிற்கும் இந்த கருமேகம் அகற்றப் பட்டாலொழிய அறிவுச் சூரியனில் ஒளிக்கதிரைக் காண வழியில்லை.குறை கண்டு கண்டிப்பதென்னும் மூச்சு,பெரும் புயலாகவே மாறி மூட நம்பிக்கை என்னும் மேகத்தை அடித்துக்கொண்டு போகவேண்டும்.

         சோதிடம்,மனிதனின் 'தான்' எனும் அகங்காரத்தில் பிறந்தது;அது மனிதனை கோளியக்க அமைப்பில் சிறப்பான நிலையில் இருத்துகிறது.இந்த மனித அகங்காரம்,கோப்பர் நிக்கஸ் கண்டுபிடித்த வானியல் உண்மையின் முன்பு நிற்க முடியாமல் நிலை குலைந்து போயிற்று.பேரண்டத்தின் கோள்களுக்குள்ளே இவ்வுலகிற்கு இருந்த சிறப்பான இடம் பறி போன காரணத்தால் மனிதனின் தற்பெருமை கூனிக் குறுகிப் போயிற்று.வானுலவும் கோள்களெல்லாம் மனித இனத்திற்குப் பாதுகாவலர்களாக ஆண்டவனால் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையும் அறிவியல் அடிப்படையில் நிறுவ வழியில்லை.அண்டத்தின் அமைப்பிற்குள்ளே உலகு அச்சாணி போன்றது அல்ல என்பதால்,அதன்மீது வாழும் இரு காலுள்ள மிருக இனமும் அண்டத்தின் ஒழுங்கான இயக்கத்தில் சிறப்பிடம் பெற்றதாகவும் கூற முடியாது.

      இன்னமும் நம்பப்படுகிற இந்திய சோதிடம் மிக மிகப் பழமையானது;அது எவ்வகையிலும் அறிவியல் ஆதாரத்தைத் துணைகொள்ள முடியாது.சோதிடம் என்பதே அப்பழுக்கற்ற மூட நம்பிக்கை.அது காட்டுமிராண்டி காலத்து மதத்தில் அழிந்து படாமல் எஞ்சி நிற்கும் சின்னம்.மேலை நாட்டில் விஞ்ஞான அடிப்படை கொண்டதாகக் கூறி வளர்க்கப்படும் சோதிடம் கடவுள் நம்பிக்கைக்கு உட்பட்டதல்ல என்று கூறப்படுகிறது.அது,வானுலவும் விண்கோள்கள்
ஒருவகை பௌதிக இரசாயன ஆற்றலுக்கு இந்நிலவுலக மக்களை ஆட்படுத்துகின்றன என்று கூறுகிறது.அந்தக் கருத்து பொருளற்றது;ஆனால் இந்திய சோதிடமோ கேலிக்குரியது!

தப்புக்கணக்கு
இந்து மத சோதிடப்படி 'நவக்கிரகங்கள்' எனப்படுபவை ஒன்பது விண்கோள்கள் அல்ல-அவை ஒன்பது கடவுள்கள் அல்லது துணைக்கடவுள்கள்! அவற்றுள் இரண்டு-அதாவது இராகு,கேது என்பவை கடவுளும் பேயும் கலந்த பண்புடையவை.இந்துமத சோதிடத்தைப் பகுத்தறிவுக்கு உட்படுத்துவது என்பது இயலாத ஒன்று.அதனை இன்றைய வானியல் அறிவை அடிப்படையாக்கி விளக்கவும் முடியாது.'நவக்கிரகங்'களுக்கு ஏற்பட்டிருக்கும் கடவுட் தன்மை உருவகமே என்றும் அவை உண்மையில் பௌதிக -இரசாயன ஆற்றலே வெளியிடும் விண்கோள்களே என்று வாதிடவும் வழியில்லை.வானியல் பற்றிய மிக அடிப்படையான உண்மைகள்,'நவக்கிரகங்கள்' என்ற கொள்கையையே மறுத்து ஒதுக்குகின்ற காரணத்தால்,இந்திய சோதிடத்தைப் பகுத்தறிவுக்கு உட்பட்டது எனக் காண்பிப்பதற்குச் செய்த முயற்சிகள் பயன்படவில்லை.ஆண்டாண்டு காலமாகக் கூறப்படும் 'நவக்கிரகங்களும்' அவற்றின் அமைப்பும் பொய்யாகும்போது அவற்றின் அடிப்படையில் தான் கணிக்கப்படும் சோதிடமும் பொய்த்தொழியத்தான் வேண்டும்.

    சோதிடக் கணிப்பு ஒன்பது விண்கோள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பொறுத்ததாம்.அந்த நவக்கிரகங்களோ
ஒன்பது விண்மீன்கள் எனக் கூறப்படுகின்றன.ஆனால் அவற்றுள் சூரியன் ஒன்று மட்டுமே விண்மீன்;மற்றவற்றுள் ஆறுகோள்கள்;எஞ்சிய இரண்டும் (இராகுவும்,கேதுவும்) மூடநம்பிக்கையில் பிறந்தவை.இந்த ஆறு விண்கோள்களும்கூட
வான மண்டலத்தோடு தொடர்புபடுத்த முடியாதவை.சந்திரன் ஒரு விண்கோள் என்று கருதப்படுகிறது.ஆனால் அது உலகம் எனப்படும் இக்கோளினுடைய இழுப்பாற்றலுக்கு உட்பட்டு இதனைச் சுற்றிவரும் கோளமே! மற்ற ஐந்தும்கூட
உண்மையான கோள்களா அல்லவா என்பது உறுதிப்படுத்தபடவில்லை.அப்படியே அவை ஐந்தினையும் உண்மையான கோள்கள் எனக் கொண்டாலும்,ஒன்பதில் ஐந்து மட்டுமே இந்துமதச் சோதிடக் கணிப்பில் இடம் பெற முடியும். ...மாய சக்தியால் மனதைப் பறிகொடுத்து விடாமல் நின்று சிறிது ஆழ்ந்தெண்ணுபவர் எவர்க்கும் சோதிட நம்பிக்கையில் உள்ள மூடத்தனம் தெளிவாகத் தெரியும் " பக்கம் 102-105. ......
                  

No comments: