Thursday 13 October 2016

'புறாக்காரர் வீடு” சிறுகதைத் தொகுப்பு குறித்து

'புறாக்காரர் வீடு” சிறுகதைத் தொகுப்பு குறித்து முனைவர். வா.நேரு








அனைவருக்கும் வணக்கம். சிறுகதை என்பது தமிழைப் பொறுத்தவரை ஒரு இரு நூறுஆண்டுகளுக்குள் மட்டுமே இருக்கக்கூடிய ஓர் இலக்கியம். கவிதையைப் பொறுத்தவரைநமது இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சொந்தமானது. ஆனால் சிறுகதை என்பதுமேற்கத்திய வடிவம். அண்மை நூற்றாண்டுகளில் மட்டுமே தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற வடிவம். ஆனால் மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்கு பேசப்படுகின்ற இலக்கியம்சிறுகதைகள்தான் .உலகளவில் எடுத்துக்கொண்டால் மாப்பசான், மாக்சிம் கார்க்கி,டால்ஸ்டாய் சிறுகதைகள் - அவர்கள் எழுதி இன்றைக்கு 150 ஆண்டுகள், 160 ஆண்டுகள்இருக்கலாம் ஆனால் படித்தால் இன்றைக்கும் நம்மைப் பாதிக்கும் கதைகளாகஇருக்கின்றன. தமிழில் சிறுகதைகளால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர்புதுமைப்பித்தன். தமிழில் சிறுகதை எழுத்தாளர்கள் என்று நினைக்கும்பொழுதுபுதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அறிஞர் அண்ணா, அழகர்சாமி, கி.ராஜ் நாராயணன்எனப்பலரும் நினைவுக்கு வருகின்றார்கள். நிறைய எழுத்தாளர்கள் சிறுகதைஎழுத்தாளர்களாக இன்றைக்கு தமிழ் மொழியில் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். 

நமதுதொலைத் தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல் நிறுவனம் என்று எடுத்துக்கொண்டால் நிறையசிறுகதை எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். பாவண்ணன் என்னும் அருமையானஎழுத்தாளர், சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்புகள், நாவல்கள் எனத் தொடர்ந்துஎழுதிக்கொண்டிருக்கின்றார். மொழி பெயர்ப்பு நூல்கள் குறிப்பாக கன்னட மொழியிலிருந்துநிறைய மொழிபெயர்த்து புத்தகங்களாகக் கொடுத்திருக்கின்றார். அவர் அளவிற்கு வேறுயாரும் கன்னட மொழியிலிருந்து தமிழுக்கு கொடுக்கவில்லை, அவ்வளவுகொடுத்திருக்கின்றார். அதேபோல திருப்பூரில் நமது நிறுவனத்தில் வேலை பார்த்தசுப்ரபாரதி மணியன், சின்னச்சின்ன நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதக்கூடியவர்.ஆதவன் தீட்சண்யா போன்ற இடதுசாரி இயக்கத்தில் மிகவும் பிடிப்பாகவும், சாதி ஒழிப்பைஅடிப்படையாகவும் வைத்து எழுதக்கூடியவர், நமது துறையச்சார்ந்தவர். வலதுசாரிசிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதக்கூடிய ஜெயமோகன் நமது நிறுவனத்தில்வேலை பார்த்தவர். இப்படி நிறைய எழுத்தாளர்கள் உலவிய இடமாகவும் ,உலவும்இடமாகவும் நம்து பி.எஸ்.என்,எல். நிறுவனம் இருக்கிறது. 

அப்படிப்பட்ட மரபின்அடிப்படையில்  பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும், தனது முதல் சிறுகதைத்தொகுப்பினை அளித்திருக்கும் இந்த நூலின் ஆசிரியர் வி.பாலகுமாரைப் பார்க்கின்றேன்.பார்ப்பது பொறியியல் சார்ந்த வேலை என்றாலும், தமிழ் இலக்கியம் சார்ந்துபடைப்பாளியாய் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் பாலகுமாரை முதலில் பாராட்டுகிறேன். அதுவும் மதுரை பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் இயங்கும் வாசிப்போர் களத்தின்உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன். 

                  சிறுகதை வடிவம் என்பது முதலில் மனதில் தோன்றவேண்டும். பின்பு அதனைஎழுதவேண்டும். பின்பு அதனைத் தொகுப்பாக, புத்தகமாகக் கொண்டுவரவேண்டும்.அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தோழர் பாலகுமாருக்குவாய்த்திருக்கிறது.இந்த 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தில் 14 சிறுகதைகள்இருக்கின்றன. 14 சிறுகதையுமே தனித்துவமாய் இருக்கின்றன. எந்தச்சிறுகதையும்இன்னொரு சிறுகதையைப்போல இல்லை.பல எழுத்தாளர்களில் தொகுப்புகள் தனித்தனிக்கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கதைகளாக இருப்பதில்லை.ஆனால் இந்தத் தொகுப்பு அப்படிப்பட்ட தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது,அதனால் இந்தத்தொகுப்பினை மிகச்சிறப்பாக நான் பார்க்கின்றேன். நூல்வனம் என்னும் பதிப்பகந்தான் இந்தநூலை வெளியிட்டிருக்கின்றார்கள். அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு எல்லாம்அருமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நூலில் எழுத்துப்பிழைகளே இல்லை.இன்றுவெளிவரும் பல புத்தகங்களில் எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ஆனால்எழுத்துப்பிழைகளே இல்லாமல் வந்திருப்பது சிறப்பு. 

            புறாக்காரர் வீடு என்னும் இந்தப் புத்தகத்திற்கு பாவண்ணன் முன்னுரைஎழுதியிருக்கின்றார்.நமது துறையைப் பொறுத்தவரை ஒரு முன்னோடிப் படைப்பாளி என்றமுறையில் பாவண்ணன் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கின்றார். மிகவெளிப்படையான ஒரு முன்னுரை . தனது முன்னுரையில்  பாராட்ட வேண்டியதைப்பாராட்டியும் அதே நேரத்தில் சிலவற்றை சுட்டிக்காட்ட வேண்டியதைச் சுட்டிக்காட்டியும் பாவண்ணன் எழுதியிருக்கின்றார்.பெரும்பாலானோர் முன்னுரையில் வெறும் பாராட்டுக்கள்மட்டும் இருக்கும் .விமர்சனம் இருக்காது. பாவண்ணன் இரண்டையும்கொடுத்திருக்கின்றார். நானுமே பாராட்டையும் , விமர்சனத்தையும் இணைத்தேதான்கொடுக்கப்போகின்றேன். அதுதான் வளரும் எழுத்தாளரான பாலகுமாருக்கு செய்யும்நன்மையாக இருக்கும் எனக்கருதுகின்றேன். 

             இந்தப்புறாக்காரர் வீடு என்னும் கதையைப் பற்றிச்சொல்லும் பாவண்ணன், நல்லசிறுகதை என்பது சொல்லப்பட்ட கதையை விட படித்துமுடித்தபின் சொல்லப்படாதகதையைப் பற்றியும் நம்மைச்சிந்திக்க வைப்பதாக இருக்கவேண்டும். பாவண்ணன்அசோகமித்திரனின் கதையை எடுத்துக்காட்டாக கூறுகின்றார். நான் அப்படிப்பட்ட நிலையில்புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன். அப்படியே படித்து முடித்துவிட்டோம்என்று புதுமைப்பித்தன் கதைகளை முடித்துவிட்டுச்செல்ல முடியாது. அந்தக் கதையைவாசித்ததன் பாதிப்பாக நம்மை யோசிக்க வைக்கும், நமது அல்லது நம்மைச்சுற்றிஇருப்பவர் வாழ்க்கையோடு ஒப்பிட வைக்கும் கதைகள் புதுமைப்பித்தனின் கதைகள்.அப்படிப்பட்ட ஒரு கதையாக 'புறாக்காரர் வீடு ' என்னும் கதையை பாவண்ணன்குறிப்பிடுகின்றார்.

 ஒரு அப்பா, அவர் தனது பிள்ளைகளை வளர்க்கும்போதே ,வீட்டில்புறாக்களையும் வளர்க்கின்றார். புறாக்கள் மாடியில் வளர்க்கின்றன, புறாக்களுக்குபாதுகாப்பான கூடுகளையும், உணவையும் அப்பா கொடுக்கின்றார் பிள்ளைகளுக்குகொடுப்பதுபோலவே.வீட்டில் அண்ணன், தங்கை ,தம்பி எப்படி வளர்கின்றார்கள் என்பதனைஎல்லாம் கதையாசிரியர் விவரித்துக்கொண்டு போகின்றார். ஒரு கட்டத்தில் மூத்த மகனுக்குதிருமணம் நடக்கின்றது. திருமணம் முடிந்தவுடன் மகன் தனக்கு தனி அறை வேண்டுமெனமாடியில் கேட்க அப்பா ஒதுக்கிக் கொடுக்கின்றார். புறாக்கள் வளரும் கூண்டுநாற்றமடிக்கிறது என மகன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக  புறாக்களின் எண்ணிக்கைகுறைக்கப்படுகின்றது.முடிவில் புறாக்களே இல்லாமல் வெறும் கூடு மட்டுமே மிஞ்சுகிறது.பாவண்ணன் என்ன சொல்கின்றார் என்றால் இந்தக் கதை மிக நுணுக்கமாக தனிமைப்பட்டுப்போகும் அப்பாவைப் பேசுகிறது. 

இன்றைக்கு இருக்கும் முதியவர்களின் மிகப்பெரியபிரச்சனை என்னவென்றால் தனிமை. தனிமைதான் இன்றைய முதியவர்களுக்குமிகப்பெரிய சவால். இயக்க தொடர்பு உள்ளவர்கள், நண்பர்கள் வட்டம் உள்ளவர்கள்,வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கும் முதியவர்கள்தப்பித்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதிகாரமாக இருந்துவிட்டு, முதுமையில்தனிமைப்பட்டுப்போகும் முதியவர்களின் தனிமை கொடுமை. முதியவர்களை நன்றாககவனித்துக்கொள்ளும் நாடுகள் என ஒரு பட்டியல் உலக அளவில் போட்டிருக்கின்றார்கள்.அதில் கடைசியில் இருந்து 3 வது அல்லது 4-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மிகநுணுக்கமாக முதியவர்களின் தனிமையை இந்தக் கதை கூறுவதாக நான் நினைக்கின்றேன்.

வெறும் சட்டத்தினால் மட்டும் முதியவர்களின் தனிமையை சரிபடுத்திவிடமுடியாது.இன்றைக்கு சட்டம் இருக்கிறது. கவனிக்காத மகனை, மகளைப் பற்றிக் காவல் நிலையத்தில்புகார் கொடுக்கலாம் என்று. ஆனால் எத்தனை பெற்றோர்கள் நம் நாட்டில் அப்படிப் புகார்கொடுப்பார்கள்? ஆயிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். தனியாய்க் கிடந்து மருந்தைக்குடித்து செத்தாலும் சாவார்களே தவிர புகார் அளிக்கமாட்டார்கள். வாட்ஸ் அப்பில் வந்தஒரு செய்தி என்னைப் பாதித்தது. 'அப்பாக்கள் சம்பாதிக்கும் சம்பாத்யத்தில் பிள்ளைகளுக்குசெலவழிக்க முழு உரிமை உண்டு , ஆனால் பிள்ளைகள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் ...'என்று போட்டு விட்டு ஒரு கேள்விக்குறி போட்டிருந்தார்கள். நான் இதனைப்படித்தபிறகுதான் யோசித்தேன். நான் சம்பளம் வாங்கியவுடன் இந்தச்சம்பளம் அம்மாவுக்குஉரியது என்று நினைத்தோமா என்று நினைத்தேன். இல்லை. அம்மாவுக்கு கொடுத்தோம்.செய்தோம். அதுவேறு . ஆனால் அப்படி நினைத்தோமா என்றால் இல்லை. ஆனால் எனதுபிள்ளைகள் எனது சம்பளத்தை தங்கள் சம்பளமாக இன்று நினைக்கின்றார்கள், நாளைஅவர்கள் சம்பளம் வாங்கும்போது அது அப்பா,அம்மாவிற்கும் உரியது என்றுநினைப்பார்களா என்றால் உறுதியாக நினைக்கமாட்டார்கள். இப்படி மிக நுட்பமாகமூத்தவர்களின் பிரச்சனையை சொல்லியிருக்கும் கதையாக இந்தத் தொகுப்பில் உள்ள;புறாக்காரர் வீடு ' என்னும் கதையைப் பார்க்கின்றேன்.இந்தக் கதையைச்சொல்லியிருக்கும்பாங்கு, மொழி அருமையாக உள்ளது. 

               அதேபோல 'மழை வரும் பருவம் ' என்னும் கதை. கேட்டுக்கொண்டிருக்கும்உங்களில் எத்தனை தோழர்கள் , இறந்து போன உறவினரின் உடலோடு வண்டியில்போயிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அது ஒரு கொடுமையான அனுபவம்.கல்லூரியில் படிக்கும் நண்பன். அந்த நண்பனின் அம்மா இறந்துபோனதாக செய்திவருகிறது. அம்மாவின் இறப்பிற்குச்செல்லும் நண்பனோடு உடன் செல்லும் நண்பனின்அனுபவமாக இந்தக் கதை அமைகின்றது. வண்டியில் செல்லும் போது எதுவுமே பேசாமல்இறுக்கமாக வரும் நண்பன், எதைக் கேட்டாலும் விட்டேத்தியாக பதில் சொல்லும் நண்பன்,நண்பனின் அம்மா எப்படி நண்பனை வளர்த்தார்கள் என்பதெல்லாம் மிக விளக்கமாக இந்தக்கதையில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நண்பனின் அப்பா, நண்பன் அம்மாவின் வயிற்றில்கருவாக இருக்கும்போதே இறந்து விட, கண்வனின் இறப்பிற்காக கூடும் கூட்டத்தில் 'நான்சொல்ல ஒரு செய்தி இருக்கிறது ' என்று சொல்லி நெல்லுமணியின் மூலம் தான் கர்ப்பமாகஇருப்பதைச்சொல்வதாக கதை நகர்கிறது. எழுத்தாளர் தொ.பரமசிவம் , தனது 'அறியப்படாததமிழகம்' என்னும் நூலில் , கர்ப்பமாக இருக்கும் நிகழ்வை, கணவன் இறந்துவிட்டநிலையில் நெல் மணிகள் மூலமாக  ஊர்மக்களுக்கு மனைவி தெரிவிக்கும் நிகழ்வைக்குறிப்பிடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இக்கதையில் வருகின்றது. ஆழமான கதை.

                              இப்படி ஒவ்வொரு கதையுமே வேறுபட்ட களம், வேறுபட்ட நோக்கில் இருக்கின்றன.அதேபோல 'திருவாளர் பொதுஜனம் ' என்னும் கதை, மிகவும் நகைச்சுவையாக மக்களின்மனப்பான்மையை எடுத்துக்காட்டும் கதை. மிக நன்றாக இருக்கும் கதை. தகவல் அறியும்உரிமைச்சட்டத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், ஆனால் அலுவலகத்தில்வேலை பார்ப்பவர்களுக்கு  எதற்காக கேட்கிறீர்கள் என்று சொல்லவேண்டியதில்லைஎன்னும் அடிப்படையை வைத்து நையாண்டியாக எழுதப்பட்ட கதை.

இதில் ' நாக தேவதை ' என்னும் ஒரு கதை இருக்கிறது.அமானுசம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட கதையாக இந்த 'நாகதேவதை 'என்னும் கதை. கனவில் ஒரு சிறுமி, அப்புறம் ஒரு கோடாங்கி , அவனிடம் போய் குறி கேட்கும் நிலை,கோடாங்கி சொல்லும் பரிகாரம், அந்தப் பரிகாரத்தை ஒட்டிய நிகழ்வோடு நிகழும் சில நிகழ்வுகள் என அக்கதை நகர்கின்றது. இந்தக் கதையின் உள்ளடக்கம், இந்தக் கதை தரும் எதிர்மறையான தாக்கம் தேவையில்லாதது என்பது எனது கருத்து. இன்றைக்கு எதற்காக கதை எழுதுகிறோம் என்னும் நோக்கம் இல்லாமல் எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேய்,பிசாசு என்று சொல்லி கற்பனையாக எழுதி பணம் சம்பாதிக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கதைகளை சமூகத்தின் நலன் கருதி தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. 
               

அதுபோல ' கருப்பு ' எனும் கதை நன்றாகச்சொல்லப்பட்டுள்ளது. நிறைய எழுதக்கூடியஆற்றல் இருக்கிறது இந்த எழுத்தாளருக்கு. இளைஞர். மொழி வளம் அருமையாகஇருக்கிறது. நிறைய இவர் எழுதவேண்டும். இன்னும் பல சிறுகதைகள் தொகுப்புவரவேண்டும். 

(30.09.2016, மதுரை பி.எஸ்.என். எல். வாசிப்போர் களம் நிகழ்ச்சியில், புத்தக அறிமுகமாகவி.பாலகுமார் அவர்கள் எழுதிய 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தைப் பற்றி  முனைவர் வா.நேரு பேசியதின் எழுத்து வடிவம் )

Nantri :http://vasipporkalam.blogspot.in/2016/10/blog-post.html

2 comments:

Balakumar Vijayaraman said...

விரிவான விமர்சனத்திற்கு நன்றி !

முனைவர். வா.நேரு said...

தொடர்ந்து எழுதுங்கள் சார். சிகரம் நிச்சயமாக கிட்டும்....., நன்றி.