Tuesday 31 May 2016

எழில் மிகு ஊர்தான்.....

                                            கடந்து போன காலங்கள்(2) .......

"வானரங்கள் கனிகொடுத்து
மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு
வான் கவிகள் கெஞ்சும்"
என இயற்கை அழகைப்பாடும்
குற்றாலக் குறவஞ்சி போல
இயற்கை அழகு பொங்கும்
எழில் மிகு ஊர்தான்
நான் பிறந்த சாப்டூர்

மேற்கே திரும்பி
அண்ணாந்து பார்த்தால்
மேற்கு மலைத்தொடரும்
கிழக்கே முழுமையாய்
ததும்பி நிற்கும்
பெரியகுளம் கண்மாயும்
தென்மேற்கில்
அடர் மரக்காடுகளாய்
நிற்கும் பெரியதோப்பும்
பாளையந்தோப்பும்
வடக்கே விளைந்து நிற்கும்
வயல்காடுகளுமாய்
இளவயதில் நான்
பார்த்த ஊர் எங்கள் ஊர்

பெரியகுளம் கண்மாயை
ஒட்டி இருக்கும்
மாரிமுத்து(மணியார்) கிணற்றில்
தண்ணீர் நிறைந்து
தானாக ஓடும்
சிறுவயதில் நண்பன்
சுந்தரசேகர் சட்டை
உள்ளே விழுந்து விட
காதுக்குள் சிவ் சிவ்வென்று
தண்ணீர் அடைத்த நிலையிலும்
மூச்சடக்கி உள்ளே சென்று
கிணற்றின் அடியில்
கிடந்த சட்டையை
எடுத்து வந்த ஞாபகம் வருகிறது !
சில நாட்களுக்கு முன்னால்
அக்கிணற்றை எட்டிப்பார்த்தால்
ஏதோ புதைகுழிக்குள்
கிடப்பது போல தண்ணீர் தெரிந்தது
ஒரு நாற்பது ஆண்டுகளில்
கிணற்றடி நீர் இவ்வளவு
கீழாக இறங்கியது ஏன் ?
கேள்விகள் மட்டுமே
இருக்கிறது ......
விடைகள் தெரியவில்லை...

                                                      வா.நேரு....01.06.2016




Monday 30 May 2016

கடந்து போன காலங்கள்(1) .......



 கடந்து போன காலங்கள்(1) .......

அய்ம்பத்து இரண்டு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கின்றன
நாளைக்(31.05.2016) காலை
அய்ம்பத்து மூன்று
பிறக்கின்றது .....

முதல்பத்து ஆண்டுகள்
பெரும்பாலான நினைவுகள்
நினைவுகளில் இல்லை !
ஓரீரண்டைத் தவிர ....

எனது அப்பா
இறந்த வீட்டில்
அவரது பிணம்
பொது வீட்டில்
சுவற்றில் சாத்திக்கிடக்க
பசிக்கிறதே என்று
அழுதேனாம்.....
சாப்பிட்டு பலமணி நேரம்
ஆனதால் நான்
பசி ! பசி என்றழுக
செத்த வீட்டிற்கு
வந்த பலரும்
எனைப் பார்த்து
பார்த்து அழுதார்களாம்....

நீர்மாலை எடுத்துவர
எங்கள் சாப்டூரின்
சந்தணக்கிணற்றில்
குளித்தபோது
பின்னர்  தற்காலிகமாக
போடப்பட்ட பூணூலோடு
சிரித்துக்கொண்டே
நடந்தேனாம்
பார்த்தவர்களில் சிலபேர்
இன்னும் கூடச்சொல்வார்கள் ....
அறியா வயதில்
அப்பனை பறிகொடுத்துவிட்டோம்
என்பது கூட
அறியாது சிரித்த வயது அது .....

ஆனால் ஒன்று
மட்டும் எனது
நினைவில் அப்படியே
இருக்கிறது ....
ஆறடிக் குழி தோண்டி
ஆறடி உயரமுள்ள
அப்பாவை பிணமென்று
உள்ளே போட்டு
மண்ணை அள்ளிப்
போடச்சொன்னதும்
பின்பு
பெரிய பெரிய
கல்லைப் போட்டு
அப்பாவின் சவக்குழியை
மூடியதும்
இன்னும்கூட
மனதிற்குள் இருக்கிறது .....

பெத்த அப்பாவின் மேல்
ஏழு வயதில்
கல்லையும் மண்ணையும்
போட்டு மூடும் கொடுமை
எனது எதிரிகளின்
பிள்ளைகளுக்குக் கூட
வாய்க்கலாகாது
என மனதில் ஓடுகிறது.....

மொட்டமச்சு
மெத்தில் ஏறி
காய்ந்த விறகை
எடுத்துப்போடச்சொல்ல
ஏணிப்படிஏறிப்போய்
விறகை எடுத்து
எடுத்துப்போட்ட நான்

முடிவில் விறகு மட்டும்
பறந்து செல்கிறது
நாம் மட்டும் ஏன்
படியில் செல்லல் வேண்டும்
என விறகோடு
கீழே விழுந்தேனாம்....

பிறவியிலேயே
ஆராய்ச்சியாளன்
உங்க அப்பா
என்று என் பிள்ளைகளிடம்
இன்றும்கூட
கேலி செய்வார்
எனது  மூத்த அண்ணன் .....

                                                ----வா. நேரு---- 30.05.16



Wednesday 25 May 2016

விழிக்கொடை தரும் பன்றிகள்.... ..

பார்வை தரும் பன்றிகள்: மருத்துவ உலகின் அடுத்த புரட்சி

49 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த சில பத்தாண்டுகளில் உலகின் விஞ்ஞான கேந்திரமாக சீனா வளர்ந்திருக்கிறது. இதில் அதன் மருத்துவ ஆய்வுகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
கண்பார்வைக் குறைபாடு சீனாவில் மிகப்பெரும் பொதுசுகாதார பிரச்சனையாக இருக்கிறது.
அங்கே எண்பது லட்சம் பேருக்கு கண்பார்வையில்லை. ஆனால் ஆண்டுக்கு ஐயாயிரம் கார்னியா மாற்று சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன.
தற்போது சீன விஞ்ஞானிகள் இதற்கு வித்தியாசமான புதியதொரு சிகிச்சையை உருவாக்கியிருக்கிறார்கள்.
சீனாவின் உடலுறுப்பு பற்றாக்குறைக்கு வித்தியாசமானதொரு தீர்வாக பன்றிக் கண்களின் ஒரு பகுதி மனிதர்களுக்கு பொருத்தப்படுகிறது.
வுய் பிங் வே என்கிற நோயாளிக்கு பரீட்சார்த்த முறையில் பன்றியின் கார்னியா பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
வுய் பிங் வேயின் ஒரு கண்ணில் கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தில் தொற்று ஏற்பட்டதால் பார்வை பறிபோனது.
இன்னமும் தொடர் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருக்கும் வுய் பிங் வேயின் அறுவை சிகிச்சைக்குப் பின்னான பரிசோதனை முடிவுகள் நல்லபடியாக வந்திருக்கின்றன.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவர் தெளிவாக பார்க்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாற்று சிகிச்சையை உருவாக்க தமது நிறுவனத்துக்கு பத்து ஆண்டுகள் பிடித்ததாக கூறுகிறார் சீன மீளுருவாக்க மருத்துவ நிறுவனத்தலைவரும் மருத்துவருமான ஷாவ் செங்கங்.
“மனித கார்னியாவுக்கு மாற்றாக பல விலங்குகளை பரிசீலித்தோம். ஆடு, நாய், பன்றி பசுவெல்லாம் முயன்றோம். இதில் பன்றியின் கார்னியாவே மனிதனுக்கு பொருந்துவதை கண்டோம்", என்கிறார் அவர்.
முதலில் பன்றியின் நோய் மனிதருக்கு பரவாமல் தடுக்க பன்றியின் கார்னியாவிலிருந்து வைரஸ் பாக்டீரியாக்கள் நீக்கப்படும்.
பன்றியின் செல்களும், மரபணுக்களும் கூட சுத்தமாக அகற்றப்படும். எஞ்சியுள்ள கார்னியா கட்டமைப்பு மட்டும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.
இந்த சிகிச்சை முறையின் நீண்டகால ஆபத்து குறித்து பரிசீலிக்காமல் சீனா வேகமாக அவசரகதியில் செல்வதாக சிலர் கவலைப்படுகிறார்கள்.
ஆனால் விலங்குகளின் உடலுறுப்புக்களை மனிதருக்கு பொருத்துவதில் அதிகரிக்கும் உலக அளவிலான ஆர்வத்தைப் பார்த்தால் இது வெறும் ஆரம்பம் என்றே தோன்றுகிறது.

நன்றி : பி.பி.சி. தமிழ்,25.05.2016

Sunday 22 May 2016

அழியா நினைவுகள்.......



அம்மா,உனது
நினைவு நாளை
எப்படி எப்படியெல்லாம்
நினைவுகொள்வது ....

வாழ் நாளெல்லாம்
ஒரு கலகக்காரியாய்
உறவுகளுக்கு
தோற்றம் தந்த
நினைவுகளாலா !

டேய், இளவயதில் என்
கணவர் இறந்தார் !
வளர்த்துக்காட்டுகிறேன்
என் பிள்ளைகளை
உங்கள் கண்முன்னால்
என  உறவுகளுக்கு
முன்னால் வளர்த்துக் காண்பித்த
வைராக்கியத்தாலா !

காலை நாலுமுதல்
இரவு பத்துவரை
உழைப்பைத் தவிர
ஒன்றும் அறியா
உழைப்பாளி என்னும்
குறியீட்டீலா ....

கிடைக்கும் சில
நிமிட நேரங்களில்
நூலக புத்தகங்களில்
மூழ்கி எழும்
உனது புத்தக வாசிப்பிலா ?

சாமி வந்து ஆடும்
சொந்தக்காரிகளை
நேருக்கு நேராய்
அப்படியே சாமி
ஆடிக்கிட்டே
கரண்ட கம்பியை
பிடிங்கலா... பார்ப்போம்
எனும் நேரடிக் கேள்விகளாலா ?
..

தேவையில்லாமல்
பேசிய தன்
மேலதிகாரியை
பள்ளிக்கூடத்து வளாகத்திலேயே
செருப்பைக் கழட்டி
அடித்த சுயமரியாதையாலா ....

அஞ்சி அஞ்சிச் சாகும்
சில  பெண்களைப்
போல அல்லாது
வரும் பாம்பையும்
அடித்து தூக்கி எறியும்
நெஞ்சுரத்திலா ......

அழியா நினைவுகள்
அலை அலையாய் மனதில்....
அம்மா, உனது நினைவு நாளை
எப்படி ? எப்படியெல்லாம்
நினைவு கொள்வது ......

                                          -- வா.நேரு----



                                 
நன்றி : விடுதலை - 23.5.2016(வெளியூர்)










..

Monday 16 May 2016

வயிறு இருக்குல...வயிறு (சிறுகதை)--வா. நேரு

                                           


வண்டியை நிறுத்துவது அந்த இடத்தில் கடினமாக இருந்தது. அப்படி ஒன்றும் மதுரையின் மையத்தில் உள்ள பகுதி இல்லை. ஒரு இருபது வருடத்துக்கு முன்னால் வயலாக இருந்த மதுரை கிருஷ்ணாபுரம், மகாத்மா காந்தி நகர் பகுதிதான். வரிசையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் , கொஞ்சமாக இருந்த இடத்தில் வண்டியை நுழைத்து, வண்டியை இழுத்து நிறுத்திவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு அந்த டிபன் செண்டருக்குள்  நுழைந்தான் மணி. ஏதோ மியூசிக் பார்ட்டியில் டிரம் அடிப்பதுபோல டம, டம, டம, டம, டம்,டம் டம், டங்க் என கொத்து புரோட்டாவை கொத்திக்கொண்டிருந்த மாஸ்டர் வெற்றி, மணியைப் பார்த்தவுடன் ஒரு கணம் தனது கொத்து புரோட்டா இசையை நிறுத்திவிட்டு ' வாங்க சார் வாங்க,வணக்கம் ' என்றார். மணியும் பதிலுக்கு வணக்கம் வைத்தான். தொடர்ந்து தனது கொத்து புரோட்டா இசையை ஆரம்பித்த புரோட்டா மாஸ்டர், சப்ளையரிடம் ' சாருக்கு 25 புரோட்டா, பத்து தோசை பார்சல் ' என்றார் .

                    'ஏங்க , வீட்டுக்கு நேற்று விருந்தாளிகள் எல்லாம் வந்திருந்தாங்க, அதனாலே நிறைய வாங்கிட்டுப்போனேன், இன்னைக்குமா ,  வாங்குற சம்பளத்துக்கு முழுவதும் புரோட்டாவா ? இன்னைக்கு 5 புரோட்டா, இரண்டு தோசை மட்டும் ' என்று ஆர்டர் பண்ணி விட்டு நின்றுகொண்டான் மணி.

அந்த டிபன் கடைப்பெயர் என்னவோ'ராயல் டிபன் சென்டர் ' என  பெத்த பேரா இருந்தாலும், க்டை இருந்தது என்னவோ ஒரு எட்டுக்கு எட்டு அறை. அந்த அறையில் வலது பக்கம் போடப்பட்டிருக்கும் இரண்டு மேசைகள். ஒரு மேசைக்கு அந்தப்பக்கம் இரண்டு நாற்காலிகள், இந்தப்பக்கம் இரண்டு நாற்காலிகள் என 4 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். இரண்டு மேசைக்கும் சேர்த்து மொத்தமாக 8 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். மேசைகளுக்கு கிழக்கே ஒரு சின்ன மேசை , அதன் மேலே இலைக்கட்டுகள், பரிமாறப்பயன்படும் பாத்திரங்கள் அப்புறம் கடைசியில் மொத்தமாக புரோட்டாக்களை போட்டுவைக்க ஒரு வட்டகை . அறையின் இந்த  மூலையில் ஒரு சின்ன மேசை, மேசைக்கு முன்னால் கடையின் ஏக போக முதலாளி, அந்த மேசைதான் கல்லாப்பெட்டி. அந்தக் கல்லாப்பட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்த முதலாளியிடம் சப்ளையர் ,' அண்ணனுக்கு இன்னைக்கு பார்சல் 5 புரோட்டா, இரண்டு தோசை மட்டும்." என்று சொல்ல , புரோட்டா மாஸ்டர் ' நாளைக்கு பார்சல் 10 புரோட்டா, 10 ஸ்பெசல் தோசை ' என்று சொல்ல மணி , சப்ளையர் , முதலாளி என்று அனைவரும் சிரிக்க வேலை மிகவும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

                       டிபன் கடைக்கு முன்னால் புரோட்டா மாஸ்டர் வெற்றி  நின்று வேலை செய்துகொண்டிருந்தார். மேற்கே பார்த்து அவர் நின்றுகொண்டிருக்க , அவருக்கு முன்னால் புரோட்டா மாவைப் பிசையும் பித்தளைத் தகரம் இருந்தது. அதில் ஒரு பக்கம் புரோட்டா மாவும் , இன்னொரு பக்கம் அவர் உருட்டிப் போட்ட புரோட்டா மாவு உருண்டைகளும் கிடந்தது. அவர் இடது கைப் பக்கத்தில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. நல்ல விறகு அடுப்பு. நமது வீட்டு தோசைச்சட்டி 4, 5 சட்டியை ஒன்றாய் சேர்த்து போட்டதுபோல பெரிய அடுப்பு தக தகவென எரிந்து கொண்டிருந்தது. அதில் புரோட்டாவை ஏற்கனவே தட்டிப்போட்டிருந்தார். இந்தப் பக்கம் பேசிக்கொண்டே ஒரு பக்கம் வெந்த புரோட்டாக்களை அடுத்த பக்கத்துக்கு திருப்பி போட்டுக்கொண்டிருந்தார். அந்தப் புரோட்டாக்கள் வேகும் நேரத்திற்குள் ஏற்கனவே உருட்டிப்போட்டிருந்த புரோட்டா மாவு உருண்டைகளை சுழற்ற ஆரம்பித்தார். அப்படியே ஏதோ ராட்டினம் சுற்றுவதுபோல புரோட்டா மாவை வீசி, வீசி இலேசாக்கி  மறுபடியும் அதனை ஒன்று சேர்த்து புரோட்டா வடிவத்தில் ஆக்கினார். அப்படியே ஒவ்வொரு புரோட்டா மாவு உருணடைகளும் புரோட்டா வடிவங்களாகிக் கொண்டிருந்தன. அதற்குள் அடுப்பில் இரண்டு பக்கமும் வெந்திருந்த புரோட்டாக்களை திருப்பித் திருப்பி போட்டு விட்டு மொத்தமாக எடுத்து  பித்தளைத் தட்டில் போட்டு , சூட்டோடு இருக்கும் புரோட்டாக்களை இரண்டு கைகளாலும் சேர்த்து தட்டினார் . தட்டிப்போட்டு பக்கத்தில் இருக்கும் சட்டியில் தூக்கிப்போட்டார். அதற்குள் சப்ளையர் ' மாஸ்டர், லைனுக்கு இரண்டு ஆம்லேட் ,ஒண்ணு நிறைய வெங்காயம் போட்டு, ஒண்ணு வெங்காயம் போடாமல் ' என்றார். அப்படியே வலது கைப்பக்கம் திரும்பி , வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இரண்டை எடுத்தார். ஒன்றை அப்படியே சூடாக இருக்கும் அடுப்பில் ஊத்திவிட்டு, இன்னொரு முட்டையை ஒரு செம்பு மாதிரி இருந்த பாத்திரத்தில் ஊற்றி , வெங்காயம் நிறைய அள்ளிப்போட்டார். கொஞ்சம் உப்பைப் போட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டு அப்படியே அடுப்பில் ஊற்றினார். அடுப்பில் இருந்த இன்னொரு ஆம்லேட்டிற்கு கொஞ்சம் உப்பைத் தூவினார்.

                                  ஆம்லேட்டை தூக்கிக் கொடுப்பதற்குள், உள்ளிருந்து மூன்று தோசை ஆர்டர் வந்தது. கையில் கீழே இருந்த எண்ணெய்சட்டியை எடுத்தார். சள், சள் என்று கல்லில் எண்ணெயை விட்டு விட்டு, முட்டைக் கூடைக்கு அருகில் இருந்த தோசை மாவு வாளியில் இருந்து ஒரு கரண்டியில் மாவை அள்ளி தோசைக்கல்லில் ஊற்றினார். அப்படியே பரப்பி வேக வைத்துவிட்டு, அடுத்த தோசைக்கு மாவை ஊற்றினார் ,இப்படியே ஒரு நேரத்தில் மூன்று தோசைகளை வேகவைத்துக் கொண்டிருந்தார்  கல்லில் . வெந்து கொண்டிருக்கும் தோசைகளுக்கு மேலே எண்ணெயைத்தூவினார். அப்படியே முறுகலாக வெந்த தோசைகளை திருப்பியெல்லாம் போடாமல் மடக்கி வட்டகைக்குள் போட்டார். ரெண்டு தட்டு, வட்டகையை தோசைக்கரண்டியால் தட்ட சப்ளையர் ' வாரமெல , அதுக்குள்ளே தட்டா, ஒன்னோட துய்ரமய்யா ' என்று சொல்லிக்கொண்டே தோசையை எடுத்துக்கொண்டு போனார்.

                                மணி வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறான். இந்த புரோட்டா மாஸ்டருக்கும் , சப்ளையருக்கும் இருக்கும் புரிதலை, நகைச்சுவையை.ஏதோ இசைக்கருவிகள் இரண்டு இணைந்து எழுப்பும் இசை நாதம் போல , இருவரும் இணைந்து செய்யும் வேலை வாடிக்கையாளர்களை ஈர்த்துக்கொண்டிருந்தது. அப்போது எப்போதும் கடைக்கு வந்தால் ' நாலு இட்லி ' மட்டுமே சாப்பிடும் அய்யாவு உள்ளே வந்து சாப்பிடக் கை கழுவிக் கொண்டிருந்தார். அவரைக் கவனித்த மாஸ்டர்  ' அய்யாவுக்கு என்ன ஸ்பெஷல் நெய் தோசையான்னு கேளுங்க, சட்டென்று போட்டு விடலாம் ' என்றார். அவர் அய்யாவுகிட்ட ' என்னங்க வெறும் ஸ்பெஷல் தோசையா, நெய் ஸ்பெஷல் தோசையா ' என்று கேட்க ' ஏய் , கேலி பண்ணாதிங்கப்பா, 4 இட்லி மட்டும் கொடுங்க ' என்றார். இட்லியை வைத்து நிறைய சாம்பார் , சட்னி ஊத்தி வகையாக அவர் சாப்பிட சப்ளையர் வழி செய்து கொண்டிருந்தார். வருகிறவர்களிடம் கொஞ்சம் உரிமை, கொஞ்சம் கேலி, கிண்டல் அதிகமான உபசரிப்பு என இருவரும் இணைந்து செயலாற்றுவதால் , முதலாளிக்கு அதிகம் வேலை இல்லாமல் வருமானம் வந்து கொண்டிருந்தது.

                             கூட வேலை பார்க்கும், மாதம் அதிகச்சம்பளம் வாங்கும் தனது அதிகாரியை இந்தக் கடைக்கு அழைத்து வரவேண்டும் என்று நினைத்தான் மணி. வருமானம் கூடவோ, கொஞ்சவோ எவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறார்கள் இந்த இருவரும். அதுவும் மாஸ்டர் வெற்றி அடுப்பிற்கு முன்னால் எவ்வளவு நேரம் நிற்கிறார்.காற்றாடி எல்லாம் தலைக்கு மேலே சுற்றவில்லை. ஒரே வெப்பம்தான் அடுப்பினால். சட்டை இல்லாமல் வெறும் பனியனோடு நின்று கொண்டுதான் மாஸ்டர் வேலை பார்க்கின்றார். இவனுக்கு தெரிந்து மாலை 6 மணிக்கு நிற்க ஆரம்பித்தால் இரவு 10, 11 மணி ஆகிவிடும் எல்லாம் விற்றுத்தீர்வதற்கு. இடையில் , இயற்கை அழைப்புகளுக்குத் தவிர வேறு எங்கும் போவதாகத் தெரியவில்லை. ஒரு நாள் மணி கேட்டான். "6 மணிக்குத் தான் கடைக்கு வருவீர்களா" என்று. "அண்ணே, நீங்க வேற , நான் 3 மணிக்கே வந்துடுவேன். வந்து புரோட்டா மாவை பிசைந்து வைக்கணும், புரோட்டா குரூமா தயாரிக்கணும் ... "என்று சொன்னார். அப்ப மாலை 3 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரைக்கும் வேலை, எவ்வளவு சம்பளம் என்றான். ஒரு நாளைக்கு 500 ரூபா என்றார் புரோட்டா மாஸ்டர்.

                                           உடனிருந்த சப்ளையர் "அண்ணே, மாஸ்டர் இங்கு மட்டும் வேலை பாக்கிறார்ன்னு நினைக்காதிங்க, காலையில் ஒரு புரோட்டாக் கடையில் வேலை பார்க்கிறார்" என்றவுடன் , மணிக்கு தூக்கி வாரிப்போட்டது." காலையில் ஒரு கடையா ? "என்றான். "ஆமாம் , கீழ மாசி வீதியில் அந்த எண்ணெய்க்கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் வேலை பார்க்கிறார் "என்றவுடன் , ஆமான்னே, பூராம் சுமை தூக்குற, எறக்கிற ஆளுக இருக்கிற ஏரியா, அங்க காலையிலேயே வந்து புரோட்டா சாப்பிடுவாங்க, இதே மாதிரிதான் அங்க காலையில் 6 மணிக்கு போயிட்டு மத்தியானம் இரண்டு மணிக்கு வருவேன் "என்றார். அடப்பாவிகளா, ஒரே நாளில் இரண்டு இடத்தில்,15-16 ணி நேரம் இந்த அனலில் வேகுற வேலையா ? என்று மனதிற்குள் ஓடியது. "எப்படி இப்படி முடிகிறது" என்றான் மணி

                                              அப்படியே தோசைக்கரண்டியாலேயே வயிற்றைக் காட்டியவர், வயிறு இருக்குல, என்னை நம்பி வீட்டில 5 வயிறு இருக்கல என்றவர், வயதான எங்க அப்பா, அம்மா எங்கூட இருக்காங்க, பிள்ளைகள் இரண்டு பேரும் படிக்கிறாங்க, வீட்டிக்கார அம்மாவும் ஏதாவது கூலி வேலைக்குப்போகும், இல்லைன்னா வீட்டில இருக்கும், நான் அங்க ,இங்கேன்னு வேலை பாக்குற இடத்திலே சாப்பிட்டுக்கிறேன்.என்னையைத் தவிர 5 வயிறு மூணு நேரம் சாப்பிடனும்ல, நம்ம என்ன டாட்டா, பிர்லா பரம்பரையா -உட்கார்ந்து சாப்பிடறதுக்கு, உழைக்கணும்னே , உழைக்கணும் -இந்த ஒருச்சாண் வயித்துக்கு உழைக்கணும்ல என்று சொல்லிக்கொண்டே புரோட்டாவை வீசிக்கொண்டிருந்தார். பார்சலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்ட மணி ஒரு நாலைந்து நாட்கள் டிபன் கடைக்குப் பக்கம் போகவில்லை.

                                அடுத்த வாரம் போன போது மாஸ்டரைக் காணவில்லை. வேறு ஒரு மாஸ்டர் புரோட்டா வீசிக்கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் சப்ளையர் சோர்வாக இருந்தார்.பார்சலுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, சப்ளையரிடம் எங்கே புரோட்டா மாஸ்டர் வெற்றியைக் காணோம், ஊருக்குப் போயிட்டாரா ? என்றதும் "  ஊருக்கு டிக்கெட் வாங்கத் தெரிஞ்சாரு " என்று சொல்லி நிப்பாட்டிய சப்ளையர் அருகில் வந்து 'திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் , ஆஸ்பத்திரியில் இருந்து , இன்னைக்குத்தான் வீட்டிற்கு வந்திருக்கிறாரு " என்று சொன்னவுடன் ஒரு மாதிரியாக இருந்தது , அவரிடம் முகவரியை வாங்கிக் கொண்ட மணி காலையில் அவரைத் தேடி வீட்டிற்கு போனான்.

                           மதுரை, பந்தல் குடியைத் தாண்டி செல்லூருக்குள் அவர் வீடு இருந்தது. மொத்தமாய் சாக்கடைகள்  வந்து இணையும் அந்த சாக்கடையைத் தாண்டித்தான் மணி போனான். சாக்கடை ஓடைக்கு மேலேயே வீடுகளும் , குடிசைகளும் இருந்தன. துர் நாற்றம் அடித்தது. கொஞ்ச நேரம் கடந்து போவதற்கே நாம் சலித்துக்கொள்கிறோமே, இங்கேயே வாழ்பவர்கள், இந்தக் குடிசைக்குள் இருந்து படிப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டே மாஸ்டர் வெற்றியின் வீட்டை அடைந்தான் மணி.

                      சின்ன சந்துக்குள் வரிசையாக இருக்கும் காம்பவுண்டு வீட்டிற்குள் அவரது வீடும் இருந்தது. அவரின் மனைவிக்கு மணியைத்  தெரியவில்லை. அறிமுகம் இல்லைதானே , அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் அழைத்துச்சென்றார். வீடு ஒரு இரண்டு பத்துக்கு பத்து அறைகளாக இருந்தது. ஒன்றில் இவர் படுத்துக்கிடந்தார். மணியைப் பார்த்தவுடன் புன்னகைக்க முயற்சித்தார். முடியவில்லை. உடம்பில் இருந்த வலியெல்லாம் திரண்டு முகத்தில் வழிந்தது. அவரது மனைவி அவரின் மெடிக்கல் ரிப்போர்டை எடுத்துக்கொண்டு வந்து காண்பித்தார். ஆஞ்சியோ எடுத்து , அடைப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருந்தார்கள். அடைப்பு எடுக்க இன்னும் இரண்டொரு நாளில் வரச்சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள். கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தபோது அவரது மனைவி வாங்க மறுத்தார். புரோட்டா மாஸ்டர் சைகை காட்டியவுடன் வாங்கிக் கொண்டார். அவரின் பெற்றோர்கள் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்தவர்கள்' எம்பிள்ளை நல்லாகணும்  ' என்று கைகூப்பினார்கள். மருத்துவ செலவுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது முன்னாள் முதலமைச்சரின் பெயரைச்சொல்லி, அவர் பெயரில் இருக்கும் காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாகவே செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள், ஆஞ்சியோ எடுத்ததற்கான செலவை அப்படித்தான் கொடுத்தார்கள். அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஒரு மூன்று மாதம் ஓய்வு எடுத்தால் இயல்பாகி விடும் என்று சொல்லியிருக்கிறார்கள், நான் இப்போது தொடர்ச்சியாக கூலி வேலைக்கு செல்கிறேன் என்று அந்த சகோதரி  சொல்லிக்கொண்டிருந்தார். கேட்டுவிட்டு அமைதியாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் மணி. ரோட்டில் நின்றிருந்த காரில் உட்கார்ந்திருந்த ஒருவர் சத்தமாக 'இலவசமா எதையுமே இந்த நாட்டிலே செய்யக்கூடாது ,அதனால்தான் இந்த நாடு கெட்டுப்போயிரிச்சு' என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்.

                                             

Sunday 15 May 2016

அண்மையில் படித்த புத்தகம் : சுனை நீர்.... ராகவன் ஸாம்யேல்



அண்மையில் படித்த புத்தகம் : சுனை நீர் (சிறுகதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர்                           : ராகவன் ஸாம்யேல்
பதிப்பகம்                                   : அக நாழிகை பதிப்பகம், மதுராந்தகம்,
                                                          செல்பேசி : 999 454 1010
முதல் பதிப்பு                             : செப்டம்பர் 2013, 146 பக்கங்கள், விலை ரூ 120 /-

                                                 'சுனை நீர் ' சிறுகதைத்தொகுப்பில் உள்ள 21 சிறுகதைகளையும் படித்து முடித்தவுடன் எனக்கு வியப்பைக் கொடுத்தது உள்ளடக்கம் மட்டுமல்ல, கதையைச்சொல்லும் விதமும்தான். ஒரு பெண்ணையோ அல்லது இடத்தையோ பார்த்து ஓர் ஓவியன் அப்படியே சித்திரமாக வரைவதைப்போல , தன்னுடைய எழுத்தால் இடத்தை , ஒருவனின் அல்லது ஒருத்தியின் மனதை அப்படியே அச்செடுக்க வல்லவராக இந்தச்சிறுகதை எழுத்தாளர் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.ராகவன் ஸாம்யேல் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்று இந்தத் தொகுப்பை அறிகிறபோது , மனதார பாராட்டவும், இன்னும் நிறைய இவரிடமிருந்து கதைகளாக எதிர்பார்க்கவும் தோன்றுகிறது.

                                           சுனையில் ஆண்மான் குடிக்கட்டும் என்று பெண்மானும், பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண்மானும் நினனைத்து தண்ணீரைக் குடிக்காமல் இருப்பதை சங்க இலக்கியம் காட்டும் , அதுபோல திருப்பதி ஆசாரியின் குடை தனது துணைக்கான இரையை எடுத்துச்செல்லும் பாத்திரம் என்பதனை சொல்லும் விதம் அருமை. மன நோய் வாய்ப்பட்ட மதுரவல்லி , தனது தாயாலேயே திருச்சி பேருந்து நிலையத்தில்  விட்டுச்செல்லப்படத் தூண்டும் எதார்த்தமும் , வறுமையும் படித்த பின்பும் நெடு நேரம் மனதை அரித்த கதை. கதை என்று கடந்து செல்ல இயலவில்லை என்னால், புனித தேசமென்று கோசமிடும் மனிதர்கள் மதுரவல்லிகளுக்கெல்லாம் என்ன வழி வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.இந்தியாவின் முதல் பணக்காரனும் அவன் தான், வங்கியில் கடன் வாங்கிவிட்டு , கட்டாமல் ஒரு லட்சத்து இருபதினாயிரம் கடன் வைத்திருப்பவனும் அவன்தான் என்று அனுமதிக்கும் இந்த நாட்டில் துயரம் தோய்ந்த மாந்தர்களின் வாழ்க்கையை ஓவியமாய்க் கதையாக வடித்தெடுப்பதும் மாற்றத்திற்கான  வழிமுறைதான்.

                                  கறிக்கடையைப் பற்றியும் , வெள்ளாட்டுக்கறிக்காக ஆடு தேடி வாங்கி வரும் அழகர், கறவை மாடுகளில் பால் கறக்கும் அழகர் என கடைசியில் கமிசன் கிடைக்கும் என ஏமாந்து போகும் அழகரைப் பற்றிச் சொல்லும் ' கடிவாளம் ',அப்படியே கண் முன்னே விரிகிறது , பலசரக்கு கடை சேர்மக்கனியைப் பற்றிச்சொல்லும் 'நுழை புலம் ' அப்படியே பலசரக்குக் கடையும் அது  சார்ந்த இடமுமாய் விவரிப்பதோடு சேர்மக்கனி தனது மனைவி புஷ்பத்தைப் பற்றிப் பயப்படுவதுமாய் முடிவடைகிறபோது , நமது தெருவில் கடை வைத்திருப்பவரின் உழைப்பும் , பயமும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

மெல்லிய இழையாய் தனது அம்மாவின் மனதில் இருக்கும் தீண்டாமையைச்சுட்டும் 'அம்மா அறிந்த பாத்திரம் ', கோமதியின் மாமியார் படுத்தும் பாட்டைச்சொல்லும் 'கழுத்துப்புண் ' கதைகள் எனப் பல கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் மனதைத் தொடுகின்றது.  

                                     பெண்களின் கணவருக்கு அப்பாற்பட்டவர்களின் தொடர்புகளைப் பற்றிச்சொல்லும் 'சுனை நீர்' -புஷ்பம், 'கண்ணாடித்தேர்' -சரோஜா, 'ஊஞ்சல் விழுது' ரூபினாவைப் பற்றிச்சொல்லும் கதைகள் இப்படி இப்படியெல்லாம் இருக்கிறது என்று எடுத்துச்சொல்லிச்செல்லும் கதைகளாகவே இருக்கின்றன, இது சரியா ? தவறா எனப்பட்டிமன்றம் எல்லாம் போடாமல், இருப்பதை இருப்பதாகச்சொல்லிச்செல்லும் கதைகளாக இருக்கின்றன, நம்மைச்சுற்றி நடப்பதுதானே....

'உண்டார்கண் நோக்கு' -வனஜாவைப் பற்றியும் அவளின் மாதவிலக்கு துணி பற்றி கத்தும் அவளின் பாட்டி பற்றியும் சொல்லும் கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது கீதா இளங்கோ அவர்களின் 'மாத விடாய் ' குறும்படம்  நினைவு வந்தது.மாத விடாய் பற்றி எத்தனை கற்பிதங்கள் இன்னும் இந்தச்சமூகத்தில் ....கள்ளத் தொடர்பில் இருப்பவள், தனது தங்கயை கட்டிக்கொள் என்று சொல்ல , அதனைக் கண்டு கொள்ளாமல் கழன்று கொள்பவனைச்சொல்லும் 'இந்திர தனுசு ' எனப்பல கதைகளின் தலைப்புகள் கவித்துவுமாய் அதே நேரத்தில் கதையின் உள்ளடக்கத்தில் தொடர்பு உள்ளதாக இருப்பது இத்தொகுப்பின் சிறப்பு எனலாம்.

                                தெற்குவாசல், கீழ வாசல், கிரைம் பிராஞ்ச்பேருந்து நிறுத்தம், தமிழக எண்ணெய்ப்பலகாரக் கடை, பதினொரு வீட்டுக் குடியிருப்பு காம்பவுண்டு, பணிரெண்டு வீட்டுக் காம்பவுண்டு என்று மதுரையைச்சார்ந்த பல இடங்களை நுண்ணிய விவரிப்புகளாய் இத்தொகுப்பு விவரிப்பதும், உயிரோடு நம்மைச்சுற்றி உலவும் பல மனிதர்களை தனது கதாபாத்திரங்களாக ஆக்கி அவர்களை புரிந்து கொள்ள வைத்திருப்பதும் சிறப்பாகத் தோன்றுகிறது எனக்கு. .

                    'சில கதைகளை நீ கடக்க வேண்டும் நல்ல எழுத்தாளன் ஆவதற்கு ' என்று தன்னைப் பற்றி , இத்தொகுப்பு பற்றி முன்னுரையாக இக்கதைத் தொகுப்பின் ஆசிரியர் ராகவன் ஸாம்யேல் கொடுத்திருக்கின்றார். நல்ல எழுத்தாளரை அடையாளம்  கண்டு , இத்தொகுப்பினை பதிப்பித்திருக்கின்றார்கள் இந்த பதிப்பகத்தார், உதவியிருக்கின்றார்கள் அவரின் நண்பர்கள் என்பேன் நான். எழுத்தாளர் வண்ணதாசனின் முன்னுரை கவித்துவமாய் , நேசமாய் 'என்னைத் தாண்டிச்செல்லும் ராகவனின் எழுத்துக்களை எனக்குப் பிடித்திருக்கிறது '  என்று சிறப்பாக அமைந்திருக்கின்றது. நூலுக்குள் புக எண்ணுவோரை  தூண்டி படிக்கச்சொல்கிறது.

             எழுத்தாளர் ராகவன் ஸாம்யேல் தற்போது கென்யாவில் இருப்பதாக எழுதியிருக்கின்றார். கடல் கடந்தாலும் , கண் முன்னே நிகழ்வதைப் போல எழுதும் ஆற்றல் இருக்கிறது. இன்னும் நிறைய எழுதவேண்டும், விளிம்பு நிலையில் இருக்கும் இவரது பாத்திரப்படைப்புகளாக வாழும் பால் கறக்கும் 'அழகர்'களும்,வாத்துமானமும், அடியும் முதலாளிகளிடம் வாங்கும் 'ராமர்'களும், வால் நட்சத்திரம் 'கெளசல்யா'க்களும்,சேர்மக்கனிகளும்  மனிதர்களாக வாழ்வதற்கான சூழல் உலகமயமாக்கலில் மறைந்து விடுமோ எனும் கவலையைப் போக்கும் வண்ணம் இவரின் எழுத்துக்கள் தொடரட்டும். நிறையக் கொட்ட வேண்டியதில்லை, ஆற அமர நாள் எடுத்துக்கொண்டு அடுத்த தொகுப்பு வரட்டும், இவரின் எழுத்துக்கள் அவசர பிரசவிப்புக்களாகத் தோன்றவில்லை, அசை போட்டு ,அசை போட்டு  வரையப்படும் ஓவியங்களாகத் தோன்றுகின்றன. எதிர்பார்ப்போம் அடுத்த கதைத் தொகுப்பு ஓவியத்தை, நம்மைச்சுற்றி வாழும் மனிதர்களின் காகித வரைபடங்களை.

Sunday 8 May 2016

அண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்



அண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
தமிழில்                                      :  பாலு சத்யா
பதிப்பகம்                                   : கிழக்கு (Prodigy)
முதல் பதிப்பு                             : ஜனவரி 2008, 80 பக்கம் , விலை ரூ 25
மதுரை மைய நூலக எண்       :  183274

                                                            பெஞ்சமின் ஃபிராங்களின் வாழ்க்கை வரலாறு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை வரலாறு எப்போதுமே படிப்பவர்களுக்கு உத்வேகம் அளிப்பது. அந்த வகையில் 'அற்புதமான மனிதரின் அசத்தல் வாழ்க்கை வரலாறு ' என புத்தகத்தின் பின் பகுதியில் போட்டிருக்கின்றார்கள்.உண்மைதான்.

                                                           சாதாரண வியாபாரியின் மகனாகப்பிறந்து , இளம் வயதில் பல கொடுமைகளையும் வறுமையையும் அனுபவித்து பின் தன் முயற்சியால் புகழ்பெற்ற பெஞ்சமின் ஃபிராங்களின் வாழ்க்கை வரலாறு ஒரு செய்தியை மிக அழுத்தமாகச்சொல்கிறது. அது அவருக்கு புத்தகத்தின் மீது இருந்த தீராத பற்றும், வாசிப்பு பழக்கமுமே அவரின் உயர்வுக்கு அடிகோலியிருக்கிறது என்பதாகும்.' அவர் பட்ட அனுபவங்கள்தான் அவருக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது என்றால் அது மிகையில்லை, அந்தப்பாடங்கள் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றன. அரசியலிலும் ,அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஒரு தனித்தன்மை வருவதற்கு காரணமாக இருந்தது ' எனச்சொல்கின்றார் இந்த நூலின் மொழி பெயர்ப்பு ஆசிரியர் பாலு சத்யா.

                                1706- ஜனவரி 17-ல் பிறந்து 1790 -ஆண்டு ஏப்ரல் 17 வரை வாழ்ந்து மறைந்த பெஞ்சமின் ஃபிராங்களின் ஒரு அரசியல் தலைவராக உருவான வரலாறும், ஒரு  அறிவியல் அறிஞராக வாழ்ந்த வரலாறும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது, தனது அண்ணனே தனது எழுத்தின் மீது நம்பிக்கை வைக்காதபோது , கட்டுரைகளை பெயரை மறைத்து எழுதியதையும், வேலைக்காகவும் உணவுக்காகவும் நாடு நாடாக , ஊர் ஊராக அலைந்த கதையும் ஈர்ப்பாகவே உள்ளது.


                           பெஞ்சமின் ஃபிராங்களின் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதம் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடிகோலியது என்பதும் அரசியலில் அவர் பங்கு பெற்ற நிகழ்வுகளும் , பின்னர் இடிதாங்கி, பை போலார் மூக்குக்கண்ணாடி போன்றவற்றை அவர் கண்டு பிடித்ததும் சொல்லப்பட்டிருக்கிறது.

                                                     " அறிவியல் அறிஞர், அரசியல் மேதை, அரசுத்தூதுவர்,ஒரு மாகாணத்தின் அதிபர் என அமெரிக்காவில் பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர் "
பெஞ்சமின் ஃபிராங்களின் வரலாறு இளைஞர்கள் படிக்கவேண்டிய வரலாறு.
                                                         ஒருவரைப் பற்றிய சிறு புத்தகம் அவரின் பல்வேறு சிறப்புகளைக் கூறி , அவரைப் பற்றி மேலும் அறிவதற்கும் தேடுவதற்கும் தூண்டுதல் செய்தாலே போதுமானது . அந்த செயலை இந்தப்புத்தகம் சிறப்பாகவே செய்திருக்கிறது.

                                                         


Friday 6 May 2016

தொடரட்டும் பணி.....

                              

முகம் நூறு: சிகரம் தொடும் அரசுப் பள்ளி!

பிருந்தா சீனிவாசன்
COMMENT (5)   ·   PRINT   ·   T+  
7

பேருந்துகூட எட்டிப் பார்க்காத ஒரு குக்கிராமத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ஒருவரது எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? கிராமத்து வாழ்க்கை பழகாதவராக இருந்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வேறொரு பள்ளிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு செல்லலாம். வேறு வழியில்லாமல் பணிக்காலம் நிறைவடையும்வரை அந்தப் பள்ளியிலேயே பணிபுரியலாம். கடமை உணர்வு இருப்பவராக இருந்தால் மாணவர்களுக்கு நல்லபடியாகப் பாடம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை உயர்த்தலாம். ஆனால், இப்படி எந்தவொரு வட்டத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் அந்த அரசுப் பள்ளியோடு சேர்த்து மாணவர்களின் தரத்தையும் உயர்த்துவதையே தன் லட்சியமாகக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஆசிரியர் இந்திரா.
வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் இருக்கிறது ராஜாவூர் கிராமம். அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் இந்திரா. 2008-ம் ஆண்டு அவர் இந்தப் பள்ளியில் பொறுப்பேற்றபோது பதினேழு மாணவர்கள்தான் படித்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 39-ஆக அதிகரித்திருக்கிறது. ராஜாவூர் கிராமத்தின் மக்கள்தொகை முந்நூறுக்கும் குறைவு. அந்த விகிதப்படி பார்த்தால் இருபது மாணவர்களுக்கும் குறைவாகத்தான் அந்தப் பள்ளியில் படிக்க முடியும். அதனால் அருகில் இருக்கிற பள்ளியின் மாணவர்களை இங்கே பகிர்ந்தளித்து, எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறார்கள். இந்தப் பள்ளியின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் உதவித் தலைமை ஆசிரியர் மகேந்திரனும் துணை நிற்பதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் இந்திரா.
ஏழ்மையிலும் கல்வி
தன் வாழ்வும் வளர்ப்பும்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஈடுபாடும் அக்கறையும் ஏற்படக் காரணம் என்று சொல்லும் இந்திரா, ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். சொந்த ஊர் திருப்பத்தூர். அப்பா மெக்கானிக், அம்மா இல்லத்தரசி. ஏழு குழந்தைகளுக்கும் ஒரு வேளை சாப்பாடு போடுவதற்கே படாதபாடு பட்டிருக்கிறார் இந்திராவின் அப்பா.
“சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எங்களை எப்படியாவது படிக்கவைக்கணும்னு அப்பா உறுதியா இருந்தார். எங்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கித் தந்து உதவச் சொல்லி ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்க கிட்டே எங்கப்பா கையேந்தி நின்னது இன்னும் அப்படியே என் கண் முன்னால நிக்குது. அந்தக் காலத்துல பன்னிரெண்டாம் வகுப்புக்கு நாற்பது பைசாதான் ஃபீஸ். அதைக் கட்ட முடியாம, யூனிஃபார்ம் வாங்க முடியாம ஒரு மாசம் கழிச்சிதான் ஸ்கூலுக்குப் போனேன்” - வார்த்தைகளில் உறுதி இருந்தாலும் கண்களுக்குள் கண்ணீர் தளும்பி நிற்கிறது. அடுத்த நொடியே சமாளித்துக்கொண்டு தொடர்கிறார்.
“நான் பன்னிரெண்டாவது முடிச்சதுமே நல்ல வரன் வந்தது. உடனே கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க” என்று சொல்லும் இந்திரா, திருமணத்துக்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்தார். தன் கணவருக்குக் கடற்படையில் வேலை கிடைக்க, அதற்குப் போக வேண்டாம் என்று தடுத்திருக்கிறார். பிறகு தனக்குப் பிடித்த காவல்துறையில் சேரச் சொல்லி, தேர்வெழுத ஊக்கப்படுத்தினார். இந்திரா விரும்பியபடியே அவரது கணவருக்குக் காவல்துறையில் வேலை கிடைத்தது.
“எனக்கும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கணும்னு ஆசை. அதை இவர்கிட்டே சொன்னப்போ, பெண்களுக்கு டீச்சர் வேலைதான் பொருத்தமா இருக்கும், அதனால டீச்சர் டிரெயினிங்ல சேருன்னு சொன்னார். ஆரம்பத்துல வேண்டா வெறுப்பாதான் சேர்ந்தேன். ஆனா பயிற்சி காலத்துலதான் ஆசிரியர் பணி உண்மையிலேயே எவ்வளவு மகத்தானதுன்னு புரிஞ்சது. எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷமாதான் இந்த வேலையை நான் நினைக்கிறேன்” என்று நெகிழ்ந்துபோய் சொல்லும் இந்திரா, பதினோரு மாத மகனை அம்மா வீட்டில் விட்டுவிட்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.
உத்வேகம் தந்த அங்கீகாரம்
பயிற்சி முடித்ததும் 1991-ம் ஆண்டு கே.வி. குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களைப் பார்த்தபோது இந்திராவுக்குத் தன் இளமைக் காலம் நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே வறுமையை வெல்லும் கனவுடன் படிக்கும் மாணவர்களின் தரத்தை ஓரளவுக்காவது உயர்த்த வேண்டும் என்று நினைத்தார். பாடம் சொல்லித்தருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஒவ்வொரு மாணவரிடமும் புதைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் செய்தார். ஒவ்வொரு மாணவரையும் அவர்களது குடும்பச் சூழலோடு சேர்த்தே புரிந்துகொண்டார். இந்திராவின் இந்த அணுகுமுறை அந்த ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்கித் தந்தது. இவரது தாக்கத்தால் அந்த ஊரில் இரண்டு குழந்தைகளுக்கு இவரது பெயரை வைத்திருக்கிறார்கள்!
“ரெண்டு குழந்தைகளுக்கு என் பெயரை வச்சதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப நிறைவா இருந்தது. நம் கடமையை செய்ததுக்கே இவ்ளோ கொண்டாடுறாங்களேன்னு தோணுச்சு. அதுதான் இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்யணும்ங்கற உத்வேகத்தையும் கொடுத்தது” என்று சொல்லும் போதே பழைய நினைவுகளின் தாக்கம் அவர் முகத்தில் பிரதிபலித்தது.
அரசுப் பள்ளியும் பள்ளிதான்
எட்டு ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணிபுரிந்த பிறகு திருப்பத்தூருக்குப் பக்கத்தில் இருக்கும் கும்மிடிக்கான்பட்டி என்ற கிராமத்துக்கு மாற்றலாகி சென்றார். இந்த முறை உதவித் தலைமை ஆசிரியர் பணி. அந்தப் பள்ளியில் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதுடன் ஆங்கிலப் பயிற்சியும் அளித்தார். பெயரளவுக்கு ஆண்டு விழா நடத்தாமல் கலை நிகழ்ச்சிகளுடன் அதை ஒரு கொண்டாட்டமாகவே மாற்றினார். அறிவியல் கண்காட்சியில் தன் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு கருத்துக்களை மையமாக வைத்து மாதிரிகளை வடிவமைக்க உதவினார். பானையின் உட்புறம் முழுவதும் தார் பூசிவிட்டு, அதில் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒட்டி இவர் செய்த, ‘அண்டத்தை அருகில் பார்க்கலாம்’ என்ற கருத்தாக்கத்துக்கு முதல் பரிசு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
மாற்றத்துக்கான களம்
அதன் பிறகு ராஜாவூர் தொடக்கப் பள்ளிக்கு மாற்றலுடன் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வும் கிடைத்தது. தான் காண விரும்பும் மாற்றம் அனைத்தையும் இந்தப் பள்ளியில் செயல்படுத்திவருகிறார். அரசுப் பள்ளி என்றாலே பழுதடைந்த கட்டிடங்களும் அழுக்குச் சீருடை மாணவர்களும்தான் என்ற நினைப்பை உடைத்துக்காட்ட வேண்டும் என்று நினைத்தார். சீரூடையும் செருப்பும் அரசாங்கம் தருகிறது. தன் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தன்னுடைய செலவில் பெல்ட், டை, அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கித் தந்திருக்கிறார்.
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதுமைகளைக் கொண்டுவந்திருக்கிறார். மாணவர்களுக்குப் புத்தக அறிவுடன் பொது அறிவும் அவசியம் என்பதையும் இந்திரா உணர்ந்திருக்கிறார். அதனால்தான் தன் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தைத் தாண்டி, வெளியே பரந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளும் வித்தையையும் கற்றுத்தருகிறார். ராஜாவூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் எல்லாம் தலைகீழ் பாடம். உயிர்மெய் எழுத்துக்கள், எண்கள், வாய்ப்பாடு என அனைத்தையும் தலைகீழாகக் கேட்டாலும் சொல்கிறார்கள்.
சாதனை புரியும் மாணவர்கள்
இந்தப் பள்ளி மாணவர்கள், பல்வேறு சாதனைகளைச் செய்திருப்பது, இந்திராவின் உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் சான்று. பேச்சு, பாட்டு ஆகியவற்றில் மட்டுமல்ல நினைவாற்றலிலும் இந்த மாணவர்கள் மேம்பட்டு நிற்கிறார்கள். எந்த வகுப்பில் எத்தனை பாடம் என்று கேட்டால் பட்டென்று சொல்லும் இவர்கள், ஒவ்வொரு பாடத்தையும் அடி மாறாமல் சொல்கிறார்கள். சொல்வது என்றால் ஒப்பிப்பது அல்ல. பொருள் உணர்ந்து, நிறுத்தி, நிதானமாக ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போலவே சொல்கிறார்கள்!
முதல் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99 பூக்களின் பெயர்களை 32 விநாடிக்குள் சொல்கிறாள் என்றால், இரண்டாம் வகுப்பு படிக்கும் தரணி, 220 நாடுகளின் பெயர்களை அவற்றின் கொடிகளோடு அடையாளப்படுத்துகிறாள். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்களின் பெயர்களை அவர்களுடைய நாட்டுடன் சேர்த்துச் சொல்வது, தமிழ் இலக்கிய ஏடுகளின் பெயர்களைச் சொல்வது, கம்பன் பாட்டைச் சொல்வது என்று இந்த மாணவர்களின் சாதனைப் பட்டியல் நீள்கிறது.
செயல்வழி கற்றல்
பள்ளியின் முகப்பில் இருக்கும் மரங்களைச் சுற்றி மாணவர்களோடு நின்றிருக்கிறார் இந்திரா. மாணவர்கள் அனைவரும் காலி தண்ணீர் பாட்டிலுக்குள் மண்ணை நிரப்பி, ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று ஒவ்வொரு வடிவில் அடுக்குகிறார்கள். இப்படித்தான் அவர்கள் கணித வடிவங்களைப் படிக்கிறார்கள்!
“பாடங்களை இப்படிச் செயல்வடிவத்துடன் கற்றுத்தரும்போது மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்” என்று சொல்லும் இந்திரா, ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் தன் ஒரு மாதச் சம்பளத்தை வைத்து அந்தக் கிராம மக்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்து கொடுக்கிறார். மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோரும் அமர்ந்து சாப்பிடுவது, தனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தருவதாகச் சொல்கிறார் இந்திரா.
பாடம் நடத்திவிட்டு, பாடத்திட்டத்தை ஒழுங்காக எழுதினாலே போதும் என்று தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் மாணவர்களின் நலன் சார்ந்து இந்திரா செய்துவரும் பணிகள் அவருக்குப் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆசிரியப் பணி அறப்பணி என்பதை இந்திரா போன்றவர்கள் நம்மிடையே நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


நன்றி : தமிழ் தி இந்து -01.05.2016

தொடரட்டும் பணி.....

சிகரம் தொடும் அரசுப் பள்ளி செய்தி மனதை நெகிழவைத்தது. “சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எங்களை எப்படியாவது படிக்கவைக்கணும்னு அப்பா உறுதியா இருந்தார். எங்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்க உதவச் சொல்லி, ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்ககிட்டே எங்கப்பா கையேந்தி நின்னது இன்னும் அப்படியே என் கண் முன்னால நிக்குது” என்று, தன் இளவயது வறுமையைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் இந்திரா, அன்று தன்னையொத்த நிலையில் இன்று இருக்கும் மாணவ - மாணவிகளுக்கு உதவுவது பெருமைக்குரியது.
ஆசிரியர் இந்திராவின் செயல்பாடு ஜப்பான் மொழி நாவலான ‘டோட்டாசா’னில் வரும் தலைமை ஆசிரியர் ‘சோசாகு கோபயாஷி’யை நினைவுபடுத்தியது. அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவ - மாணவிகள் சேர்ந்த நிலை மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும்.
- வா.நேரு, மதுரை.    

நன்றி : தமிழ் -தி இந்து 




Thursday 5 May 2016

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.எஸ்.பகவான் .....

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்கு கடைப்பிடிக்கப்பட வேண்டியவை தந்தைபெரியார்தம் பகுத்தறிவுக் கொள்கைகளே! கர்நாடக மாநில பகுத்தறிவாளர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் அறிவுரை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பிதார், மே 5_ கர்நாடக மாநிலம் பிதார் மாவட்ட தலைநகரில் நடைபெற்ற பாபாசாகேப் அம்பேத்கரின் 126ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிந்தனையாளரும் பகுத்தறிவாளருமான பேராசிரியர் கே.எஸ்.பகவான், சமூகத்தில் கொடுமை யாக நடத்தப்படும் ஆணவக் கொலை களைப் பற்றி கடுமையாகச் சாடி உரையாற்றினார். சமூகக் கொடுமைகள், அடக்குமுறைகள் நீங்கிட, ஒடுக்கப் பட்ட மக்களின் உயர்விற்கு தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள் கைகளைக் கடைபிடிப்பதே சரியான வழிமுறையாகும் என தமது உரையின்பொழுது குறிப்பிட்டார்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் கே.எஸ்.பகவான் தமது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம் பிள்ளைகளை பெற்றோரே கொன்று விடும் ஆணவக் கொலைகள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருந்த அன்பைவிட, ஜாதி உணர்வே பெரிது என நினைக்கும் போக்கு பெற்றோர்களிடம் உள்ளது. இது எவ்வளவு கொடுமையானது.

இந்திய நாடு விடுதலை பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகளை எட்டும் நிலையிலும், ஆணவக் கொலைகள் நடைபெறும், நிலை ஜாதி அடிப்படையில் மனிதரைப் பேதப்படுத்திப் பார்க்கும் போக்கு நீடிப்பதன் அடையாள வெளிப் பாடாகும். மராட்டிய மாநிலத்தில் பெண்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமைக்குப் போராடிக் கொண்டிருப்பது, மனிதரில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் சமத்துவம் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பதாக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்குமான சமத்துவநிலை இன்னும் எட்டப்படவில்லை என் பதைக் காட்டுவதாகவே, கோயிலில் நுழைந்து வழிபடுவதற்கு மகளிருக்கு உரிமை மறுக்கப்படுகின்ற நிகழ்வுகள் இருக்கின்றன.

அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களை பேராசிரியர் கே.எஸ்.பகவான் விளக்கிப் பேசினார். அம்பேத்கர் மனுஸ்மிருதி¬யும், சாஸ்திரங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் உழைக்கும் மக்களை ‘சூத்திரர்’ பட்டம் சூட்டி, பார்ப்பனர்களுக்கு ஊழியம் செய்திடும் அடிமைகளாக மனுஸ்மிருதி வலியுறுத்துகிறது; சட்டவடிவமாகவும் வழிமுறைப்படுத்திவிட்டது. மனுஸ் மிருதி  வலியுறுத்தும் இந்த சட்டவடிவங்கள், இந்துமதத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை என்பதைப் பறை சாற்றுவதாக உள்ளன.

இந்துமதத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை என்ற காரணத்திற்காகவே அண்ணல் அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறினார்.

ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஓர் அன்பான அறைகூவல்; உள்ளார்ந்த வகையில் அம்பேத்கரின் கொள்கைகளை கடைப்பிடிக்கின்றீர்களா என்பதை உறுதி செய்யுங்கள்! அம்பேத்கரை போற்றி வணங்குவது மட்டும் போதாது. உண்மையிலேயே நாம் அம்பேத்கரின் உண்மைத் தொண்டர்களாக விளங்கிட அவரது கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த நடைமுறைகளை அவசியம் படித்து அதன்படி நடந்திட வேண்டும். இதைச் செய்திட தவறுவோமேயானால், முகுர்த்தா, ராகுகலா மற்றும் ஜாதகா ஆகியோரைப் போன்று பார்ப்பனீய சக்திகளுக்கு பலியாகிவிடுவோம். ஒடுக்கப்பட்ட மக்கள், சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் கொள்கை வழியையும் சமூக உயர்விற்கு ஜோதிபா பூலே போதித்த கொள்கைவழியினையும் பின்பற்றிட வேண்டும்.

ஏற்கெனவே நாம் வலியுறுத்தியபடி, அரசினரோ, நிறுவனங்களோ பௌ ரகர்மிகர் பணிகளை, தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே செய்திட வேண் டும் என கருதக்கூடாது. அத்தகைய பணிகளுக்கு உரிய சம்பள அள வினை அதிகப்படுத்தினால், எந்த சமுதாயத்தினரும் அத்தகைய பணிகளைச் செய்திட முன்வருவார்கள்.
மகாத்மா காந்தியார், சதுர்வர்ண கோட்பாட்டை ஆதரித்ததின் மூலம் மாபெரும் தவறினைச் செய்துவிட்டார். காந்தியார் நம்மையெல்லாம் ஆங்கி லேயர்களிடமிருந்து மீட்பதற்கு அரசியல் விடுதலை மட்டுமே பெற்றுத் தந்தார்கள். ஆனால் சமூக அடிமைத்தனத்திலிருந்த மீட்டெடுக்க முன்வரவில்லை. தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தான் பார்ப்பனீய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து நாம் மீண்டு எழவதற்குப் பாடுபட்டனர். இவ்வாறு நாத்திக அறிஞர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

நன்றி : விடுதலை 05.05.2016



Sunday 1 May 2016

01.05.2016 மே தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி.'நீயா ? நானா ? '


01.05.2016 மே தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி.யில் கோபிநாத் ஒருங்கிணைத்த போராட்டங்களை பற்றிய 'நீயா ? நானா ? ' விவாதத்தை பார்த்தோம். போராட்டங்களை ஆதரிக்கின்றவர்கள் ஒருபக்கமும், போராட்டங்கள் தேவையில்லை என எண்ணுகிறவர்கள் ஒரு பக்கமும் நடைபெற்ற விவாதம் எதார்த்தமாகவும், விறு விறுப்பாகவும் இருந்தது மகிழ்ச்சியளித்தது.

'அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போடாது , அநீதி களைய முடியாது ' என்பது போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கம். ஆனால் அநீதியைக் கண்டாலும் அமைதியாக போவதற்கான வழிகளை எப்படியெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதனை  பங்கு பெற்றவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
               தான் படித்த பொறியியல் பட்டம் கொடுத்த நம்பிக்கையும், நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது பறி போய்விட , பள்ளியில் தனக்கு கிடைத்த தன்னம்பிக்கைதான் பெட்டிக்கடையை வைத்து பிழைப்பதற்கோ, விவசாயம் செய்து பிழைப்பதற்கோ நம்பிக்கை தருகிறது என்று சொன்ன ஒருவரின் உடல் மொழியோடு கூடிய விவாதம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்படவேண்டியது.

மூன்று தொழிற்சங்கங்கள் தங்களது பிரச்சனைகளைத் தீர்க்காத நிலையில் , கேரளா தேயிலைத்தோட்ட தமிழ்ப்பெண்களின் போராட்டமும் ,அதில் பங்குபெற்ற கோமதி அவர்களின் பங்களிப்பும் மற்றும் அந்தப்போராட்டத்தை ஒட்டி விஜய் டி.வி. தனியாக காண்பித்த கிளிப்பிங்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. பாராட்டுக்கள் விஜய் டி.வி.க்கு. படிக்காத பெண்களின் ஒருங்கிணைப்பும் தன்னிச்சையான அவர்களின் எழுச்சியும் போராட்டமும்,. நான் இன்று செத்தால்கூட கவலையில்லை, எனக்கு பின்னால் வருகின்றவர்கள் நன்றாக இருப்பார்கள் என்ற அந்தப் போராட்ட பெண்மணி கோமதி அவர்களின் கூற்றும் மே தினத்திற்கு மிகச்சரியான அடையாளம் காட்டுவதாக அமைந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

பேஸ்புக், டுவிட்டரில் லைக் போடுவதால் மாற்றம் வராது, களத்திற்கு வந்து நிற்கும்போதுதான் மாற்றம் வரும் என்ற செய்தி சொல்லப்பட்டது. ஆனால் களத்திற்கு அழைத்து வருவதற்கே சமூக ஊடகங்களின் பங்களிப்பை பல்வேறு நாட்டு நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன.பேஸ் புக்கும், டுவிட்டரும் இன்னும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கைகளுக்குப் போகவில்லை.

அண்ணல் அம்பேத்கர் இந்தியாவில் சாதிகள் இருக்கும்வரை புரட்சி சாத்தியமில்லை என்றார். இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆளும் வர்க்கமும் ஊடகங்களின் துணையோடு ஊதிப்பெருக்கும் ஜாதி,மத வேறுபாடுகளால் மிக எளிதாக தொழிலாளர்களைப் பிரித்து வைத்திருக்கின்றார்கள். அதிலும் உழைத்து மட்டுமே வாழும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதிலே வலது சாரி எண்ணம் கொண்டவர்களும உயர் ஜாதிக்காரர்களும்  மிகத்தெளிவாக இருக்கின்றார்கள் . சாதியை, சாதி உணர்வைச்சாகடிப்பதற்கான வேலைகளை தொழிற்சங்கங்கள் கையிலெடுக்கவேண்டும்.

நிகழ்வில் பேசிய கருத்தாளர் ராஜி அவர்கள், தான் 5 கண்டங்களில் வாழ்ந்திருப்பதாகவும் , புரட்சி நிகழ்வதற்கான அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் , வேற்றுமைகளும் இந்தியாவில் இருப்பதாகவும், ஆனால் 'விதி' க் கோட்பாடு அதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். உண்மைதான். விதியில் நம்பிக்கை கொண்டவர்கள்தான் ஆட்சியாளர்களாய், ஆட்சிக்கு துணை புரிபவர்களாய் இருக்கும் இந்த இந்திய துணைக்கண்டத்தில் புரட்சி என்பது அவ்வளவு எளிதாக நடக்க இயலும் காரியமல்ல.

 எழுத்தாளர் ஓவியா பேசும்போது தொழிற்சங்கங்கள் வெறும் கூலி உயர்வு மட்டுமே பேசி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாதது , இன்றைக்கு எதிர்வினை ஆற்றுகிறது எனக்குறிப்பிட்டார். அமைப்பு சார்ந்தவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு பெற்றதோடு திருப்தி அடைந்து கொள்வது தொடர்கிறது ஆனால் 85 % தொழிலாளர்கள் அமைப்பு சாராதவர்கள், அவர்களை திரட்டுவதுதான் அடிப்படையை மாற்றும் என்ற நோக்கில் அவரது உரை அமைந்திருந்தது.

முதலாளிகள் வேலையில்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்போதுதான் போராட்டங்கள் பலவீனமாகும் என்ற கருத்தை சொன்ன இன்னொரு சிறப்பு விருந்தினர் மார்க்கசிய அடிப்படை கோட்பாட்டிலிருந்து பேசினார்.  காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பற்றியும் அவர்களின் நிலைமையைப் பற்றியும் மிக விரிவாக இந்த விவாதம் பேசியது.

தந்தை பெரியார் மே தினச்சிந்தனையில் ' உண்மையிலேயே இன்று யாரெல்லாம் தொழிலாளியாக இருக்கிறார்கள் என்றால் யார் சாதி,மதம், கடவுள், சாத்திரம் என்பதன் பேரால் சூத்திர மக்களாய்க் கீழ்ச்சாதிப் பிறவிகளாய் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள்தானே தொழிலாளர்களாக இருக்கிறார்கள் ' என்றார். உண்மைதான். இன்றைக்கும் 85 சதமாக இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் 99 சத வீதம் பேர் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச்சார்ந்தவர்கள். பெரும்பாலும் கல்வி அறிவு அளிக்கப்படாதவர்கள் . ஆனால் மே தினத்தன்று நடந்த இந்த விவாதம்,  அமைப்பு சாரா தொழிலாளர்களான கேரளா தேயிலைத் தோட்ட பெண்களின் போராட்டம் ஒரு புதிய எழுச்சியைக் கொடுத்திருக்கின்றது.களத்தில் நின்ற கோமதி போன்ற பெண்களின் மன உறுதி ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கின்றது. அதனை ஊடகத்தின் வாயிலாக பரப்பிய 'நீயா ? நானா ? ' நிகழ்ச்சிக்கும் ஒருங்கிணைப்பாளர் கோபி நாத்திற்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ஒரு ஆள் கடைசிவரை போராட்டங்கள் தேவையில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவர் தோற்றமே 'விதி'யின் மேல் மிகு நம்பிக்கை கொண்டவர் போலத் தெரிந்தது. இப்படிப்பட்ட மனப்போக்குகளையும் அம்பலப்படுத்தியதும் நன்று. பாராட்டுக்கள்.   

அண்மையில் படித்த புத்தகம் : அஞ்சல் நிலையம் (மொழி பெயர்ப்பு புதினம்)-பாலகுமார் விஜயராமன்




அண்மையில் படித்த புத்தகம் : அஞ்சல் நிலையம் (மொழி பெயர்ப்பு புதினம்)
மூல ஆசிரியர்              : சார்லஸ் புக்கோவ்ஸ்கி
தமிழில்                    : பாலகுமார் விஜயராமன்
வெளியீடு                  : எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி -2
முதல் பதிப்பு               : ஜனவரி 2016, மொத்த பக்கங்கள் 244, விலை ரூ 200/-

                                              ஒரு எழுத்தாளரின் முதல் மொழி பெயர்ப்பு புதினம் தமிழில். 244 பக்கங்கள் உள்ள இந்த புதினத்தைப் படித்து முடிக்கும்வரை , எந்த இடத்திலும் தொய்வில்லாமல் தொடர்ச்சியாக விறுவிறுப்பான ஒரு புதிய தமிழ் புதினம் போலவே செல்கிறது. அதற்காக மொழி பெயர்ப்பாளருக்கு  முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

                                    ஓர் அஞ்சல் அலுவலக ஊழியர் எப்படி இருக்கவேண்டும் என்னும் அரசின் குறிப்பாணையோடு புதினம்  ஆரம்பிக்கிறது. அடுத்த பக்கத்தில் இருந்து  புதினம் ,அந்த அஞ்சல் விதிமுறைகளுக்கு எதிராக எப்படியெல்லாம் இந்த புதினத்தின் நாயகன் சின்னஸ்கி செயல்படுகின்றார் என்பதனை விவரிக்க ஆரம்பிக்கின்றது. 'ஜோன்ஸ்டன் ' என்னும் கண்காணிப்பாளர்  அஞ்சல் அலுவலக ஊழியர்களிடம் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்கின்றான் என்பதும் எப்படியெல்லாம் அவன் ஊழியர்களைக் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறான் ,இரக்கமில்லாமல் வேலை வாங்குகிறான் என்பதும்,சின்னஸ்கி அவனுக்கு அடங்கமுடியாமல் திமிறி செய்யும் செயல்பாடுகள்  விவரிக்கப்பட்டிருக்கின்றது.கடைசியில் எழுத்தர் பதவி உயர்வு இன்னும் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் என்றாலும் இது வேண்டாம் என்று சின்னஸ்கி அஞ்சல் அலுவலக வேலையை ராஜினமா செய்து விட்டு வெளியே வருகிறார் - நாவலின் முதல் பகுதி இதனை விவரிக்கின்றது.

                                இரண்டாம் பகுதி , வேலையை விட்டுவிட்டு குதிரைப்பந்தயத்தில் பணம் கட்டி சூதாடிக்கொண்டிருக்கும் சின்னஸ்கி, ஜோய்ஸ் என்னும் பெண்ணை சந்திப்பதும், அவளைத் திருமணம் செய்து கொள்வதும் அவளோடு சேர்ந்து வாழ்வதும் , அவளது அப்பா ,பாட்டி,தாத்தா பற்றியும் அவளது பணம் பற்றியும் அவளது உடம்பினைப் பற்றியும் அவளது இச்சைகள் பற்றியும் விவரிக்கின்றது. கடைசியில் அவள் இன்னொருவனோடு சேர்ந்து வாழப்போகிறேன் என்று சொன்னதும் அவளை விட்டுப் பிரிவதும் , பிரியும்போது இவனின் உடைகள் மற்றும் பெட்டிகளை எல்லாம் ஜோய்ஸ் என்னும் அந்தப் பெண்ணே எடுத்துக் கொடுப்பதும் விவரிக்கப்படுகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் இணைவதும் அது வேண்டாம் என்று தோன்றும்போது கரச்சல் இல்லாமல் பிரிவதும் அந்த நாட்டிற்கு சாதாரணம் என்றாலும் நமது நாட்டில் அப்படி வருவது எல்லாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.

                              தனது பழைய பெண் தோழி பேபியை சந்திப்பதும் அவளோடு பாலியல் தொடர்பில் இருப்பதும், மீண்டும் சின்னஸ்கி அஞ்சல் அலுவலகத்தில் வேலைக்குச்சேர்வதும், கொடுக்கப்படும் மெமோக்கள் பற்றியும் அதன் விசாரணைகள் பற்றியும் ,  நாவலின் மூன்றாம் பகுதி விவரிக்கிறது.

                           குதிரைப் பந்தயங்கள் பற்றியும் அதில் சின்னஸ்கி கலந்து கொள்வது பற்றியும் யாரும் கட்டாத குதிரைகளில் இவர் பணம் கட்டி வெல்வது பற்றியும் நாவலின் 4-ஆம் பகுதி பேசுகின்றது. மதுக்கூடத்தில் சந்திக்கும் ஒரு பெண் பற்றியும் அவளோடு கொள்ளும் பாலியல் உறவு பற்றியும் அதன் அடிப்படையில் அவளால் ஒரு இடத்திற்கு செல்லும் இடத்தில் அவளும் அவள் நண்பனும் சின்னஸ்கியிடம் கொள்ளையடிக்க முயல்கையில் அவர்களைத் தாக்கிவிட்டு இவர் த்ப்பிப்பதும் விவரிக்கப்படுகிறது. இவரது காதலி பே கர்ப்பமாவதும் அதன் மூலம் பொறுப்பற்ற சின்னஸ்கி ஒரு குழந்தைக்கு தகப்பனாவது பற்றியும் விவரிக்கப்படுகின்றது.

                                    குடிபோதையில் இருந்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்வதும் , அதனை முன்னிட்டு அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையும் நாவலின் 5-ஆம் பகுதியில் விவரிக்கப்படுகின்றன. நாவலின் 6-ஆம் பகுதியான கடைசிப்பகுதியில் சின்னஸ்கி அஞ்சல் அலுவலக விசாரணைக்கு உள்ளாவதும் ,' வேறு வேலை செய்ய' விரும்பி அஞ்சல் அலுவலக வேலையை ராஜினமா செய்வதும், இறுதியாக வாழ்வில் அஞ்சல் அலுவலகத்தில் இருந்த காலத்தை எல்லாம் எழுத்தில் வடிக்க விரும்பி," காலையில் விடிந்தது. நான் இன்னும் உயிரோடு இருந்து கொண்டிருந்தேன். எனவே, இது பற்றி ஒரு புதினம் எழுதலாமென நினைத்தேன்.அதன்படி எழுதி முடித்து விட்டேன் " என்னும் வார்த்தைகளோடு இந்த நாவல் முடிகின்றது.

சின்னஸ்கியின் பெண் பித்து பிடித்த மனம் எப்படியெல்லாம் எண்ணுகிறது , பெண்களைப் பற்றிய மிக இழிவான கருத்துக்களைக் கொண்டிருக்கும்  சின்னஸ்கி எப்படி பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதும் அவரைப் பெண்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் நாவல் முழுக்க விவரிக்கப்படுகின்றது.பாலியலில் கட்டுக்கடங்கா இச்சை உள்ள அவர் எப்படி எல்லாம் பெண்களை பாலியல் நோக்கில் எண்ணுகிறார் என்பது மிக விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றது.

 அஞ்சல் நிலையம் சின்னஸ்கியை படித்து முடித்தவுடன் எனக்கும் ஒரு நண்பர் நினைவில் வந்தார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண் தொடர்பு, குடி ,சூதாட்டம் என்று தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மனிதர். அவரால் அவரது குடும்பத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எந்தவிதமான பயனும் இல்லாத நண்பர். ஆனால் அவரைக் கேட்டால் அவருக்கு பாலியல் அடிப்படையில் அறிமுகமான அத்தனை பெண்களைப் பற்றியும் இந்த நாவல் நாயகன் சொல்வதை விட அதிகமாக விவரிக்கக்கூடும் , ஆனால் அதனால் சமூகத்திற்கு என்ன பலன் விளையப்போகிறது ?..ஆனால் அந்த நண்பர் தனது தறிகெட்ட வாழ்க்கையை எழுத்தாகப் பதிந்தால் , யாரும் வாழாத, முரண்பட்ட அவரின் வாழ்க்கையின் தொகுப்பாக அது அமையக் கூடும். அப்படித்தான் இந்த புதினம் அமைந்துள்ளதாகக் கருதுகிறேன்.

'குறத்தி முடுக்கு' நாவலில் ஜி.நாகராஜன் ' என் வருத்தம் ' என முன்னுரை  எழுதியிருப்பார். " நாட்டில் நடப்பதைச்சொல்லியிருக்கிறேன்.இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் ' இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது ? '' என்று வேண்டுமானால் கேளுங்கள்; " இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் ? ' என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்.உண்மையைச்சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச்சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம் " என்று சொல்வார். ஜி. நாகராஜனின் குறத்தி முடுக்கு ' தங்கம் ' சூழலினால் எப்படி பாலியல் தொழிலாளியாகிப் போனாள் என்பதனை விவரிக்கும். இந்த நாவல் தனது மனப்பான்மையால் சின்னஸ்கி  ஆண் பாலியல் தொழிலாளி போல வாழ்ந்தான் என்பதை விவரிப்பதாகக் கொள்ளலாம்.
           
                                அமெரிக்கா என்பது அங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம் சொர்க்கபுரியாகத் திகழ்கிறது, வாழ்வதற்கான வசதிகள் அங்கு கொட்டிக்கிடக்கிறது என்பது போன்ற பிரமை பலருக்கு நமது நாட்டில் இருக்கிறது. இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது அந்த எண்ணம் எளிதில் மறைந்து விடுவதோடு வாழ்வதற்காக போராடும், ஓய்வு இல்லாமல் அல்லல்படும்  அநேகரைப் பற்றியும் அவர்களின் மன நிலை பற்றியும்  அறிந்து கொள்ள இயலும்.

வா.மு.கோமு என்னும் வலைத்தளத்திலும் இந்தப் புதினத்தைப் பற்றிய விமர்சனம் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதனையும் படிக்கலாம்.
http://vaamukomu.blogspot.in/2016/02/blog-post_4.html