Thursday 19 January 2017

மாணவர்களே , நீங்கள் கரத்தை உயர்த்தினால்....




மதுரை,(19.1.2017)தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாணவ, மாணவியர்களின் அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. 4, 5 வரிசைகளாக மாணவியர்களும், அவர்களுக்கு எதிர்த்தால்போல் கொஞ்சம் இடைவெளிவிட்டு 6,7 வரிசைகளில்  மாணவர்களும், இளைஞர்களும் அமர்ந்து போராட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.உணர்ச்சியோடும், எழுச்சியோடும் அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் மிகுந்த நம்பிக்கை அளித்த முழக்கங்கள். " தடை செய், தடை செய், பீட்டாவைத் தடை செய்' , 'வேண்டும், வேண்டும், ஜல்லிக்கட்டு வேண்டும்' , 'தமிழன் என்று சொல்லடா- தலை நிமிர்ந்து நில்லடா' போன்ற முழக்கங்களை , மாணவியர்கள் முழங்கினார்கள். வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை 'உட்காரு, உட்காரு - தமிழன் என்றால் உட்காரு ' என்று முழக்கம் போட அனைவரும் அமைதியாக உட்கார்ந்தார்கள்.வீறு கொண்டு எழுந்த மாணவிகள் தெருவில் அமர்ந்து எழுப்பிய முழக்கங்களும் ,உணர்ச்சியும் எப்போதும் நான் பார்த்திராத ஒன்று. வரிசை, வரிசையாக ஒரே வயதுடைய இளம் ஆண்கள், பெண்கள்- ஆனால் போராட்ட கோரிக்கையை மட்டுமே வைத்து அவ்ரகளின் ஒற்றுமையையும் புரிதலையும் பார்த்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. போராட்டங்களின் வாயிலாக ,கோரிக்கைக்காக ஒன்று சேருகின்றவர்கள் எளிதாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள், மரியாதையைக் கொடுக்கின்றார்கள், ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.  தொழிற்சங்கப்போராட்டங்கள், முழக்கங்கள் பலவற்றில் நான் பங்கேற்றிருக்கிறேன்.ஆனால் அவற்றில் எல்லாம் இல்லாத ஒரு தன்னெழுச்சியை, உள்ளத்து உணர்ச்சியை போராடும் மாணவ, மாணவிகளிடம் காண முடிந்தது.









மாலையில் .பி.எஸ்.என்.எல். நண்பர்கள் என்ற பதாகையில் மதுரை பி,எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்ற ஆதரவு ஆர்ப்பாட்டம் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகத்து முன் நடந்தது. அப்படியே ஊர்வலமாகச்சென்று போராடும் மாணவ, மாணவியர்கள் மத்தியில் ஆதரவு முழக்கங்கள் எழுப்பி, பின் அவர்களின் போராட்ட வரிசையில் அமர்ந்து முழுக்கங்களை எழுப்பி, எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவமாக , உத்வேகமாக அமைந்தது.அனைத்து சங்கங்களைச்சார்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், பெண் அதிகாரிகள் பலர் இந்த ஆதரவுப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். பெண்களின் பங்களிப்பு இல்லாத எந்தப்போராட்டமும் முழுமை அடையாது என்பது வரலாறு. இந்தப்போராட்டத்தில் பெண்கள், அவர்கள் மதத்தால் இந்துக்களாய், கிறித்துவர்களாய், இஸ்லாமியர்களாய், நாத்திகர்களாய் இருந்தாலும் இனத்தால் தமிழன் என்ற முறையில் இணைந்து எழுப்பிய முழக்கங்கள் மகிழ்ச்சிக்குரியன.பல்வேறு சங்கத்தை சார்ந்த பொறுப்ப்பாளர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து மாறுபாடுகளை எல்லாம் மறந்து விட்டு, போராடும் இளைய தலைமுறைக்கு இணைந்த கரங்களாய் நின்று ஆதரவு முழக்கங்களை எழுப்பினார்கள். பெருந்திரளாக போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஆர்வத்தோடு ஓடி,ஓடி வந்து கலந்துகொண்ட  அதிகாரிகளைப் பார்த்தபொழுது, உள்ளத்துக்குள் இருக்கும் உணர்ச்சியை மறைத்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்துகின்றார்கள் எனத்தோன்றியது. நியாயமான போராட்டம் என்று வருகின்றபொழுது தங்கள் பதவி,பணி என்பதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒன்றினைகின்றார்கள் எனத்தோன்றியது.








 ஒரு கருத்தை, நியாயமான கருத்தை புரிந்துகொண்டால் போராட வருவார்கள் என்பதற்கு நம் முன் செயல்முறை வடிவமாக மாணவ, மாணவிகள் போராட்டம் திகழ்கிறது. வெல்லட்டும், வெல்லட்டும், ஜல்லிக்கட்டு போராட்டம் வெல்லட்டும். புரட்சிகர வாழ்த்துக்கள், புரட்சிகர வாழ்த்துக்கள்- போராடும் நம் இளைய தலைமுறைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போராட்டம் வெல்லட்டும்

முனைவர். வா.நேரு said...

வெல்லட்டும்...நன்றி....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழகம் மலரட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

முனைவர். வா.நேரு said...

நன்றி..

PUTHIYAMAADHAVI said...

Do you mean this is revolution?

முனைவர். வா.நேரு said...

நான் மிக விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவராகிய தாங்கள்(புதிய மாதவி), எனது தளத்தில் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. இது புரட்சி என்று நான் நினைக்கவில்லை, ஆனால் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக நினைக்கின்றேன். " தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா', என்று நாம்(திராவிட இயக்கங்கள்) பல ஆண்டுகளாக சொல்வதை ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் மதுரையில் உணர்ச்சிகரமான முழக்கங்களாக எழுப்பும்போது அருகில் இருக்கும் நான் மாற்றத்திற்கான புள்ளியாகத்தான் உணர்கின்றேன். சாதி ஏணிப்படிக்கட்டில் தனக்கும்கீழ் உள்ளவர்களை ஒடுக்குவது என்பதை மறந்து , சாதியால் பிரிவுபட்டுக்கிடக்கும் தமிழர்கள் தமிழர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்ததை நான் உணர்கின்றேன். தோழியர் ஓவியா சொன்னதுபோல, ஜல்லிக்கட்டு என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது , ஆனால் இலட்சக்கணக்கான தமிழர்களை, தமிழச்சிகளை ஒன்றிணைத்த புள்ளி என்பதாக இந்த நிகழ்வை உணர்கின்றேன்.நமது கொள்கை எதிரிகள் மிகப்பெரிய அளவிற்கு இதனைக் கண்டு பதறுகின்றார்கள்.... இன்றைக்கு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கருத்தையும் என் தளத்தில் வெளியிட்டு இருக்கின்றேன். அது விளக்கமானதாக இருப்பதாக உணர்கின்றேன் தோழியர். விவாதிக்கலாம், நன்றி....