Monday 10 April 2017

நமது ஊர்கள் இல்லை.....

                   

இழந்து போன
காலங்களை
நினைவில்
நிறுத்துவதாகவே
சந்திப்புகள் பலவும்....

ஆண்டுகள் பல
ஆனபின்பு
பாடித்திரிந்த
பறவைகளை
ஒன்று சேர்த்த
வழக்கறிஞர் அண்ணன்
சொன்னார்.....

பழகிக் கழித்த
நண்பர்களை
முப்பது ஆண்டுகளுக்குப்
பின்பு சந்தித்ததை.....
சந்தித்த வேளையில்
நிரம்பி வழிந்த
நினைவுகளை
சுமந்தபடி
சில நாட்கள்
அலைந்த கதை சொன்னார்....

காட்டில் அலைந்ததை
கையொடிந்து விழுந்ததை
வெடிச்சிரிப்பு சிரித்ததை
சண்டையிட்டதை
சமரசமானதை
சொல்லிச்சொல்லிச்
சிரித்த அவர்
கடைசியில் உறவுகளால்
நிகழ்ந்த
சோகக்கதைகளையும்
சொல்லி சோகமானார்

ஊரை முழுவதும்
உள்ளத்தில் தேட்கிவைத்து
ஊர்ப்பக்கமே வராமல்
இருக்கும் அவரின்
சந்திப்பைச்சொன்னேன்.....

உண்மைதாண்டா தம்பி..
நாம் வளர்ந்த சூழல் இல்லை
அதனை வளர்க்கும்
நிலைமையில்
நமது ஊர்கள் இல்லை

ஆற்றாமைகளை
அள்ளிக்கொட்டியபிறகு
ஆற அமரச்சொன்னார்...
அவர்களோடு
ஒத்துப்போக இயலவில்லை
ஒதுங்கிப்போனால்
அப்படியே ஓடிவிடும்
வாழ்க்கை......
விலகி நிற்கவில்லை நான்
வேறுபாடு தெரிகிறது
இருந்தபோதினும்
அவர்களோடு தொடர்ந்துதான்
போய்க்கொண்டிருக்கிறேன்

நிரம்பி வழியும்
பழைய நினைவுகளோடு
மது அருந்தியவன்
தனை மறப்பதுபோல
சுற்றி இருப்போர்
இன்று செய்யும்
அல்லல்களை நினையாமல்
அற்றைத் திங்கள்
நினைவுகளோடு
கூட்டத்தோடு கூட்டமாய்
நான் போய்க்கொண்டிருக்கிறேன்
என்றார்....

                              வா.நேரு ......10.04.2017

10 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதம்
வேறென்ன சொல்ல ?
மீண்டும் ஒருமுறை வாசிக்கத் துவங்குகிறேன்
பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

முனைவர். வா.நேரு said...

நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

முனைவர். வா.நேரு said...

வாசிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி அய்யா

கருப்பையா.சு said...

ஆழப்பதிந்த சோகம்.

இராய செல்லப்பா said...

அருமையாகச் சொன்னீர்கள். கடந்த காலத்தோடு மீண்டும் ஒட்டிக்கொள்வது எந்தவகையிலும் சாத்தியமில்லை. நினைவுகளை அசைபோடுவதுமட்டுமே நம்மால் செய்ய இயலும்...

- இராய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்

முனைவர். வா.நேரு said...

உண்மைதான் அண்ணே..அடுத்தடுத்த வேலைகளை நாமே ஏற்படுத்திக்கொண்டுதான் மறக்க இயலுகிறது....

முனைவர். வா.நேரு said...

அய்யா(இராய செல்லப்பா அவர்கள்) நன்றி , தங்கள் வருகைக்கும், பாராட்டுடன் கூடிய கருத்திற்கும்

Manimaran G V NGS RLJP said...

It almost reflects my emotions Mappillai.
Congratulations.

முனைவர். வா.நேரு said...

Thanks Mama.