Monday 14 August 2023

பிரெஞ்சுப் புரட்சி இந்தியாவில் வெடிக்கட்டும்..

 

  

அழ மட்டும் தோன்றும்

நேரங்களில் ஏனோ ஏதும்

எழுதத் தோன்றுவதில்லை…

 

ஓரிரு நாட்களாய்

இரண்டு நிகழ்வுகள் மனதைப்

பாறையப் போல

அழுத்திக்கொண்டுள்ளன..

வெட்டப்பட்ட சின்னதுரை

நீட் தேர்வினால் கொல்லப்பட்ட

ஜெகதீஸ்வரன் அவனது

தந்தை செல்வசேகர்…..

 

கதறி அழவேண்டும் எனத் தோன்றுகிறது

ஆனாலும்  அறிவு காரணத்தை

மக்கள் மத்தியில் சொல் என்கிறது…

 

இரண்டுக்கும் காரணம் சனாதனம்…

உனக்கெதுக்கு இந்தப் படிப்பு

எனும் கேள்வியே அடிப்படை

மனுநீதியின் கட்டளைப்படி உழைத்து

அடிமையாக இருக்க விதிக்கப்பட்ட

சூத்திரனுக்கும் பஞ்சமனுக்கும்

படிப்பு எதற்கு என்பதே அடிப்படை..

 

பஞ்சமன் படிப்பைத் தடுக்க

சூத்திரன் அரிவாளைத்

தூக்குவதும் தாக்குவதும்…

நீட் என்னும் தேர்வினால் வடிகட்டி

விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகள்

மருத்துவக் கல்லூரிக்குள்

நுழையாமல் பார்த்துக்கொள்வதும்

பார்ப்பனியத்தின் வேலை என்பது

அவ்வளவு எளிதில் புரியாது…

 

அண்ணல் அம்பேத்கரும்

தந்தை பெரியாரும் தந்திட்ட

தத்துவ வெளிச்சத்தில்

படித்துப்பார்த்தால் எளிதில் புரியும்…

 

நியமிக்கப்பட்ட ஒரு

ஆட்டின் தாடி உருட்டையே

தமிழ்நாடு தாங்க இயலவில்லை

 

நெவர் எவர் எனும் ஆணவக் குரல்

கேட்கும்போது …

‘எம் குலத்துப் பெண்களுக்கு

மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா?

மானங்கெட்டவனே!’

எனும் வீரபாண்டிய கட்டபொம்மன்

திரைப்படம் வசனம்தான்

நினைவுக்கு வருகிறது…

 

தன் தந்தையின் பெயரைக்

கெடுக்கவே பிறந்த

இன்னொரு ஆடு…

பலமாகக் கத்தியிருக்கிறது..

நீட் தேர்வு தேவை என்று..

 

என்னை விட நன்றாகப்

படிப்பவன் என் நண்பன் ஜெகதீஸ்..

என் அப்பாவிடம் பணம் இருந்தது..

குறைந்த மதிப்பெண் எடுத்த

நான் மருத்துவராகப் படிக்கிறேன்

அவனிடம் பணம் இல்லை..

இன்று பிணமாகப் பார்க்கிறேன் என்று

கதறி அழும் அந்த நண்பனைப்

பார்த்தபிறகுமா உங்களுக்கு

உண்மைகள் புரியவில்லை!

 

மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்

மக்கள் எல்லாம் ஒன்றாக இணையட்டும்…

இன்னொரு பிரெஞ்சுப் புரட்சி

இந்தியாவில் வெடிக்கட்டும்!

கொதித்தெழும் மக்கள்

கில்லெட்டின்களைத் தேடட்டும்!

 

                              வா.நேரு

                             14.08.2023

 

No comments: