Saturday 21 October 2023

அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்((சிறுகதைத் தொகுப்பு)

 அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்(சிறுகதைத் தொகுப்பு)

 நூல் ஆசிரியர் : ரெஜினா சந்திரா

பதிப்பகம்           : எழிலினி பதிப்பகம்,எழும்பூர்,சென்னை-8

முதல்பதிப்பு     : அக்டோபர் 2023

விலை                  : ரூ  250          மொத்த பக்கங்கள் 122

தோழர் ரெஜினா சந்திரா அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு' இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்'. சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களுக்கு இந்தத் தலைப்பு சட்டெனப்புரியும். 13 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்த நூல்.

ஒரு சிறுகதைக்கான கதைக்கருவினை எங்கிருந்து எடுப்பது ?... இதற்கான தெளிவான விளக்கத்தைத் தனது கதைகள் மூலம் கொடுத்திருக்கிறார் தோழர் ரெஜினா சந்திரா. அவருடைய எல்லாச் சிறுகதைகளும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பேசுகின்றன .சின்னச் சின்ன மகிழ்ச்சியை ,சின்னச் சின்ன துக்கங்களை ,சின்ன சின்ன  மனப்பிணக்குகளை,சின்னச்சின்ன அறியாமையை உணரும் தருணங்களை  விவரிக்கும் இச்சிறுகதைகள் நம் தோள் மீது தோள் போட்டுக் கொண்டு உரையாடும் ஒரு தோழனைப் போல ,அறிவுரையாக அல்லாமல் நட்பாக பல விஷயங்களைப் பேசுகிறது. இந்தச் சிறுகதைகளின் குரலும் புதிது, அணுகும் முறையும் புதிது ,எழுத்து நடையும் புதிது.இயல்பாகப் பேசும் நடையாக இந்தப் புத்தகம் அமைந்திருப்பது சிறப்பு.

அண்ணன் கோ.ஒளிவண்ணன்,பேரா.உமா மஹேஸ்வரி அவர்களின் முன்னேற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 'வாருங்கள் படிப்போம்','வாருங்கள் படைப்போம் ' குழுக்களின் துடிப்பான உறுப்பினர்களில் ஒருவர்.அதில் நடைபெற்ற சிறுகதைத் திறனாய்வு போட்டிகளில் கலந்துகொண்டு திறனாய்வுகள் செய்தவர்.சிறுகதை எழுதுவது எப்படி என்பதனை ஒரு 6 மாதத்திற்கு முன்னால் சென்னை பெரியார் திடலில்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்டு கற்றுக்கொண்டவர்..பயிற்சி முடிந்த மறுநாளே.ஒரு சிறுகதை முயற்சியைக் கைக்கொண்டு,அந்தக் கதையை தோழர்களுக்கு அனுப்பிக் கருத்தினைக் கேட்டவர்.இன்று மிகச்சிறப்பாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார் பாராட்டுகள்.



இத்தொகுப்பில் விண்மீன்கள்,ரோலர் கோஸ்டர்,மேட்டிமை,நெஞ்சே! நெஞ்சே!,இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்,தீ நுண்மி,நாங்க ஒரு தினுசுதான்,எண்10-புதுத்தெரு,சில்லுனு ஒரு மெட்ரோ காதல்,செல்வி இஆப,வைத்தியம்,மே மாதக் கல்யாணம்,ஜெனிபர் என 13 கதைகள்.இந்தக் கதைகளுக்கு முக நூலில் வந்த பின்னோட்டங்கள் பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள 'தீ நுண்மி 'என்னும் சிறுகதை மிகவும் பிடித்தது. கீழ்க்கண்ட இணைப்பில் அந்தக் கதை பற்றி விரிவாகப் பேசியுள்ளேன். இதில் உள்ள பல கதைகள்,ஒவ்வொன்றையும் அரைமணி நேரம் பேசலாம்.

புதுச்சேரி ஒரு துளிக்கவிதை அமைப்பும்,தமிழ் அமெரிக்கா மற்றும் வல்லினச்சிறகுகள் மின் இதழ் அமைப்பாளர்கள் இணைந்து நடத்தும் இணைய வழிக்கூட்டத்தில் இந்தப் புத்தகத்தினைப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பேசியிருக்கிறேன். இணைப்பும் அளித்துள்ளேன். வாய்ப்பு உள்ளோர் கேட்டுப்பாருங்கள். உங்கள் கருத்துகளையும் வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.




https://youtube.com/live/0uNKnq8JsFc?feature=shared


No comments: