Wednesday 3 April 2024

ரசாயன மனிதர்கள்… – முனைவர் வா.நேரு

ரசாயன மனிதர்கள்… – முனைவர் வா.நேரு


 ‘‘மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரில் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான்.

ஒரு தொழிற்சாலையின் நச்சுத்தன்மை மிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை இந்தப் பூனையிடம் இருந்து விலகி இருக்குமாறும், அது எங்கேனும் தென்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹெக்ஸாவலண்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம்,ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது. மிக அதிக அமிலத்தன்மை கொண்டது. புற்று நோயை உண்டாக்கக் கூடியது. இப்படிப்பட்ட ரசாயனத்தில்தான் இந்தப் பூனை விழுந்துள்ளது.

ஒரு பூனையின் காலில் ஒட்டிக்கொண்ட ரசாயனத்தால் அந்த நகரமே பயப்படுகிறது.அதுபோல மதவெறியென்னும் ரசாயனத்தை மூளையில் அப்பிக்கொண்ட மனிதர்களைப் பார்த்து மனித நேயமுள்ள அனைவரும் அஞ்சத்தான் வேண்டியிருக்கிறது.எப்படி பூனையின் கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ரசாயனம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என அஞ்சுவதைப் போலத்தான் மதவெறி ரசாயன மனிதர்களையும் பார்த்து நாம் அஞ்சவேண்டியிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த மதவெறி ரசாயன மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் கொடுமைகளும் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளும் நம்மை அலைக்கழிக்கிறது. பூனையின் கால்களில் கொடிய நஞ்சு படர்ந்து விட்டது என்பதும், அது எங்கே எங்கே எப்படி நகர்கிறது என்பதும் ஜப்பான் நாட்டின் புகுயாமா நகரின் கண்காணிப்புக் கேமிராவில் தெரிகிறது. ஆனால், மூளைக்குள் மதவெறி ரசாயனத்தை ஏற்றுக்கொண்ட மனிதர்களை எளிதாக நம்மால் அடையாளம் காண முடியவில்லை. வெவ்வேறு முகமூடிகளோடு வெவ்வேறு பெயர்களில் வருகிறார்கள். கொலை பாதகச்செயல்களைச் செய்கிறார்கள்.
ஹெக்ஸாவலண்ட் குரோமியம் என்னும் ரசாயனம் கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால்தான், அந்த ரசாயனம் பூனையின் கால்களில் ஒட்டிக் கொண்டதால், புகுயாமா நகரத்து மக்கள் பயப்படுகிறார்கள். தங்கள் கண் பார்வை போய்விடுமோ, சுவாசப்பிரச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆனால் மதம் என்பது எவ்வளவு தீங்கானது, எவ்வளவு பிரச்சனைகளை, பாதிப்புகளைத் தரக்கூடியது என்பதைப் பல மனிதர்கள்
அறியாததால்தான் தங்கள் மூளைகளில் அதனை ஏற்றிக் கொண்டு அலைகின்றார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள்தான் இந்த மதவெறி ரசாயன மனிதர்களை மாற்றும் மாமருந்து, மதம் என்னும் கொடிய ரசாயனத்திலிருந்து மனிதர்களை நீக்கக்கூடிய தொற்று நோய் நீக்கி மருந்து. மதம் எவ்வளவு கொடியது என்பதைத் தனது வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் அவர்கள் விளக்கினார்.

”மதம் என்பது மனிதனை மடையனாக்கவே பயன்படுகிறது.மதத்தை ஏற்படுத்தியதன் நோக்கமும் அதுவே. மதத்தால் மனிதனுக்கு ஏதாவது பயன் உண்டா? ஒருவனையாவது மதமும் கடவுளும் யோக்கியனாக்கி இருக்கிறதா?
மனிதரிடையே மதம் ஒழுக்கத்தைப் புகுத்தியிருக்கிறதா? நாணயத்தைப் புகுத்தியிருக்கிறதா?. மனிதனை மனிதன் அடக்கியாளவும், பேதப் படுத்தவும், ஏமாற்றவும், முட்டாளாக்கவுமே மதம் பயன்பட்டு வருகிறது“ என்றார் தந்தை பெரியார்.

(‘இவர்தான் பெரியார்’
_ மஞ்சை வசந்தன், பக்கம் 156).

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல தன்னுடைய வாழ்க்கைக்குப் பின்னும் மத நஞ்சை மனிதர்கள் மனங்களில் இருந்து அகற்றுவதற்கு அறக்கட்டளையையும் அதை நிறைவேற்றும் தலைவர்களாக அன்னை மணியம்மையார் அவர்களையும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும் விட்டுச் சென்றார்.தொடர்ச்சியான பரப்புரைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
மனிதர்கள் மனதில் கொடிய வெறுப்பு நஞ்சினை மதங்கள் ஏற்றுகின்றன. மனிதத்தைக் கொல்லும் கொடிய மத நஞ்சினை மூளையில்
ஏற்றியிருப்பவர்கள் விலங்குகளை விட மோசமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்கு உறுதியாகத் தெரிகிறது. நாம் மட்டுமல்ல, நம்மைச்சுற்றி இருப்பவர்களிடமும் இந்த நஞ்சு மூளைக் காரர்களைப் பற்றிச்சொல்லி வைப்போம்.
அசாதாரணமாக அதீத பக்தி வேடமிட்டு வரும் நச்சு மூளைக்காரர்களை நம்ப வேண்டாம் என்று பெரியாரிஸ்டுகளான நாம் பொது மக்களிடம் வலியுறுத்தி விழிப்பூட்டுவோம். கவனமாக இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 1-15


No comments: