Friday 5 April 2024

ஆசிரிய வாழ்வினிது...கலகல வகுப்பறை சிவா

 

சங்கப் பலகை

நூல் அறிமுகம்

நூலின் தலைப்பு ஆசிரிய வாழ்வினிது !

நூல் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா

வெளியீடு புக்ஸ் பார் சில்ரன்,சென்னை-18

முதல் பதிப்பு அக்டோபர் 2021 ,63 பக்கங்கள் விலை ரூ. 60.

கலகல வகுப்பறை சிவா அவர்கள் எழுதியிருக்க கூடிய ஆசிரிய வாழ்வினிது!  என்னும் இந்த நூல்  ஒரு ஆசிரியருடைய  பணிக்காலத்தில் ஆசிரியர் மாணவர் உறவுகளில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டக் கூடிய ஒரு  நூல்.. பள்ளிக்கூடத்திற்குள்ளும்  வெளியிலும் ,மாணவர், ஆசிரியர், பெற்றோர் உடனான சில உரையாடலின் தொகுப்பே இந்த நூல் .இன்றைய சூழலுக்கு மிகத்தேவையான ஒரு  நூலாக எனக்குப் படுகிறது..

இச்சிறு நூலில் உள்ள கட்டுரைகளை வாசிப்பவர்கள், தங்கள் மாணவர்கள் அல்லது  ஆசிரியர்கள் பற்றிய மலரும் நினைவுகளில் மூழ்கினால் அதுவே எனக்கு மகிழ்ச்சி என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வகுப்பறைகளுக்கும் பேரன்பின் நன்றிகள் என்று புத்தகத்தின் தொடக்கத்தில் இந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

என்னுடைய  அம்மாவுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று குதூகலிக்கிறான்  ஒரு மாணவன்., அவனிடம்  என்ன வேலை என்று கேட்கிறார் இவர் . கூட்டும் வேலைஎன்று சொல்கின்றான் , அதற்கு என்ன சம்பளம் என்று கேட்டால், மாதம் 2000 ரூபாய்  என்று சொல்கின்றான் அந்த மாணவன். .” “ஏறத்தாழ எனது ஒரு நாள் சம்பளம் ,ஒரு குடும்பத்தின் மாத வருமானம் அதைக் கொண்டு எங்கள் கஷ்டமெல்லாம் தீரப் போகிறது என்று ஒரு குழந்தை குதூகலிக்கிறது தொடர்ந்த எண்ணங்கள் மனதுள்  பாரமாயின என்று குறிப்பிடுகின்றார்.ஒரு நல்ல புத்தகம் என்பது வாசிக்கும்போது நமக்கும் பல நினைவுகளைக் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்.மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்குமான வேறுபாடு,மரியாதை,ஊதியம் என்று பல்வேறு புள்ளிகளை இணைக்கும் கட்டுரையாக இந்தக் கட்டுரை இருக்கிறது.

ஓர் ஆசிரியர் மேல் ஒரு மாணவன் வைத்திருக்கும் உச்சபட்ச மதிப்பு என்பது தனது துன்பங்களை இவரிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கும்  நினைப்பு..ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மெல்ல,மெல்ல இவரின்  அருகில் வருவதும் தயங்கி தயங்கி ஏதோ சொல்ல வரும் பொழுது, பக்கத்தில் இருக்கும் ஆசிரியர்கள் ஏன் இவ்வளவு  நெருக்கமாக வருகிறாய் என்று திட்டுவதும்,அதையும் தாண்டி பக்கத்தில் நெருங்கிய அந்த மாணவன் சார் ,எங்கள் அப்பா இறந்துவிட்டார்  என்று உடைந்த குரலோடு சொன்னபோது தடுத்த ஆசிரியர்களும் கலங்கி நிற்க, “ அவன் கண்களில்  வழிந்த நீர் என் கண்களில் நிறைந்து நின்றது. எத்தனை சூழல்கள், எத்தனை மனநிலைகள், பாடம் சொல்லித் தர மட்டுமா பள்ளி ?குழந்தைகளின் குரல்களை கேட்கும் காதுகளை பள்ளிகள் எங்கும் நிறைக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். வாசிக்கும்போது நமக்கும்கூட மனம் கனக்கிறது. குழந்தைகளில் குரல்களை கேட்கும் காதுகளை பள்ளிகளுக்குள் எப்படி உருவாக்குவது?அதனை எப்படி வளர்த்தெடுப்பது? ..பதில்களை நாம்தான் தேடவேண்டும்.

தெருவில் பார்த்துவிட்டு ஒதுங்கி ஒதுங்கி போகும் ஒரு மாணவன் பக்கத்தில் நெருங்கும் பொழுது விர்ரென்று பார்க்காமல்  சென்று விடுகிறான் சரி என்று சொல்லி அவனை விட்டு விலகி நடக்கும் பொழுது அருகில் வந்து பேசுகிறான் . இந்தக் கடைக்கு அம்மா சாப்பிட்ட இலை எடுக்க வருவாங்க இன்னைக்கு நான் வந்தேன் கடைக்காரர் ஒரு பொருள் வாங்கிட்டு வரச் சொன்னாரு உதவி கேட்டா செய்யணும் இல்ல ,அதான் நான் வாங்கிட்டு வந்தேன் திடீர்னு உங்கள பார்த்ததும் ஏதோ ஒரு மாதிரி ஆயிடுச்சு அதான்  நிற்காமல் போய்விட்டேன் தப்பா நினைச்சுக்காதீங்க  என்று அந்த மாணவன் சொல்கின்றான்.அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் எத்தகைய சூழலில் பள்ளிக்கு வருகிறார்கள் என்பதை உணர்த்துவதாக இந்தக் கட்டுரை இருக்கிறது.

இவரிடம்  படித்த மாணவன், ராஜா, திருநங்கையாக மாறி அவனுக்கு உரிய வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்.அவனி(ளி)டம் தொடர்ந்து பேச முயற்சிக்கின்றார். பிளஸ் டூ படித்துக்கொண்டிருக்கிறவன் ராஜா. பிளஸ் டூ முடித்துவிட்டு போ ,அதற்குப் பின் உனது விருப்பப்படி இரு என்று போனில் சொல்கின்றார். நான் வரவில்லை  என்று சொல்லி ராஜா தொடர்பைத் துண்டித்துவிடுகின்றான். புரிந்து கொள்ளாத குடும்பம், கேலி பேசியே கொள்ளும் சமூகம், இதற்கு இடையில் பள்ளிக்கு வந்து செல்லும் ராஜா திடீரென நின்று கொள்வதும், அதற்குப்பின் அவனை அழைத்து வர செய்த முயற்சிகள் பயன் அளிக்காமல் போனது பற்றியுமான   வாழ்க்கைத் தேர்வுஎன்னும் இந்தக் கட்டுரை நிரம்பவே யோசிக்க வைக்கின்றது..

  சமூக ஆசிரியர்என்று ஒரு கட்டுரை இருக்கிறது ஓடி ஓடி உதவும் தூத்துக்குடியைச் சார்ந்த டேவிட் என்பவரைப் பற்றிய கட்டுரை.அவர் இவரது பள்ளியில் ,தான் செல்லும் வகுப்புகளான 9,10 வகுப்பு மாணவர்களிடம் டேவிட்டைப் பேச வைக்கின்றார்.டேவிட் பேசுகின்றார்.தனது படிப்பைப்  பதினொன்றாம் வகுப்பிற்குப் பின் தொடர இயலாத காரணம், படிப்பின் மீதான ஆசையே மற்றவர்களை படிக்க வைப்பதாக மாறியது என்று பல செய்திகளை மாணவருக்கு சொன்னார்  என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மாணவர்களின் கல்விக்கு உதவும் எவரும் மனதில் நிற்கிறார்கள்.மீனவரான அவரிடம் மாணவர்கள் விதம் விதமாகக் கேள்வி கேட்கிறார்கள்.கடலில் எப்படி எல்லை தெரியும்?,புயலில் சிக்கிய அனுபவம் உண்டா?கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதில் பெண்கள் ஈடுபடுகிறார்களா?உங்களுக்குப் பிடித்த பாடம் கணக்கு என்று சொன்னீங்க.அது எப்படி பிடிச்ச பாடமாக ஆனது?புத்தக வாசிப்பில் எப்படி ஆர்வம் வந்தத்? மத்தவங்களைப் படிக்கவைக்க காரணம் என்ன?”போன்ற கேள்விகளுக்குப் பதிலோடு இறையன்பு எழுதிய புத்தகம்,சங்கு என்று பரிசுகளும் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார்.

தக்காளி செந்தில் என்னும் ஒரு கட்டுரை செந்தில் என்பவரைப் பேசுகிறது. அவனது செல்லப்பெயர் தக்காளி’,உணமைப் பெயர்  செந்தில் என்று விவரிக்கும் இந்தக் கட்டுரை முதலில் அவன் என்று சொல்லி ஆரம்பிக்கிறது  பாதிக்குப்பின்  அவர்  என்று மாறுகிறது தக்காளி என்று புனை பெயரால் அழைக்கப்பட்ட அந்த மாணவனுடைய  உடல் கோளாறு, அந்த உடல் கோளாறை மீறி இவரது அணுகுமுறையால் அவன் வெற்றிபெறுவது,  இப்படி வெற்றி பெற்ற பின்பு  தனது பகுதியில் படிக்கும் பல மாணவ,மாணவியர்களுக்கு அவன் உதவி செய்வது  என்று விவரிக்கின்றது

ஒரு பெண் திடீரென்று  இவரது காலில் விழுகிறார் .அவள் யார் என்று இவருக்குத் தெரியவில்லை.  நீ  யார் என்று இவர் கேட்க  சார் ,நான் இன்ஜினியரிங் படிக்கிறேன் செந்தில் அண்ணனால்தான்  நான் படிச்சேன் நீங்க அவரோட சார் உங்களால்தான் அவர் படித்தேன் என்று எங்களிடம் சொல்வார்.அதனால் உங்கள் காலில் விழுந்தேன் என்று சொல்லும்  நிகழ்வு வாசிக்கும்  நம்மையும் கூட சிலிர்க்க வைக்கிறது

 செல்பேசி ஒலித்ததில் திடுக்கிட்டு எழுந்தேன்.அழைப்பு நின்றிருந்தது.யாரென்று பார்த்தேன்.மாணவனின் எண்.நேரம் இரவு மூன்று மணி என்று ஆரம்பிக்கும் அப்பா பிள்ளை என்னும் கட்டுரை அப்பா,அம்மா சண்டைக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் மாணவனைப் பற்றிப் பேசுகிறது.அப்பாவோடு இருக்கிறான் என்றாலும் அவனுக்கு அதில் மனம் ஒப்பவில்லை.அப்பாவும் வேணாம்,அம்மாவும் வேணாம், நான் தனியாக இருந்துகொள்கிறேன் என்று சொல்லும் மாணவனை இவர் அணுகும் விதமும் ஆற்றுப்படுத்தும் விதமும் சிறப்பாக இருக்கிறது.பகல் பொழுதில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாகவும், ஆறுதலான இடமாகவும் பள்ளி இருக்கிறது அதை முழுமையாக்குவதில் நமது பங்கு முக்கியமானது .குழந்தைகளின் சேட்டை, கற்றலில் ஆர்வமின்மை ஆகியவற்றிற்குப்  பின்னால் என்ன காரணம் இருக்கிறது? என்பதை அறிவதும் எனது கடமை என்று மனதில் தோன்றியது  என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். தன்னை ஒத்த அத்தனை ஆசிரியப்பெருமக்களுக்கும் கூறுகின்ற அறிவுரையாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

 

கடளானியான அப்பா ஊரை விட்டு ஓடிப்போய்விட துன்பப்படும் மாணவன்,அவனது அம்மா பற்றிய விவரிக்கின்ற கட்டுரை காலம் காலமாக என்னும் கட்டுரை.பொருளியல் சார்ந்து நிகழும் துன்பங்களை,அதனால் சுமைதாங்கிகளாக மாறிப்போகும் அம்மாக்களைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. அப்பா எங்கே?” என்றேன்.அழத்தொடங்கினான்.கண்ணீரின் கதைகளை உணரும் சக்தியற்றுக் கலங்கி நின்றேன்.எனக்குப் பேச்சு வரும்வரை அவன் முதுகில் தட்டிக்கொண்டிருந்தேன் என்று குறிப்பிடுகின்றார். முடிவில் வார்த்தைகளைத் தவிர வேறு என்ன தந்து விட முடியும் ?சங்க காலத்தில் இருந்தே அதே நிலை தான் என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு ,மாணவ,மாணவிகளை அறிவியல் பாடத்தைப் படிக்காமலே தவிர்க்கச்செய்யும் எதார்த்தத்தை அறிவியல் படிச்சா கஷ்டம் என்னும்  கட்டுரையில் பேசுகின்றார். எங்கள் பள்ளியிலேயே காமர்ஸ் பிரிவில் 100 பேர் அறிவியல் பிரிவில் 20 பேர் நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களையும் பயப்பட வைக்கிறது நீட் அறிவியல் பாடங்கள் புறக்கணிக்கப்படுவது எதிர்காலத்தில் பேராபத்துகளை உண்டாக்கும் என்று கள நிலவரத்தை கட்டுரையாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு ஆசிரியராக , இந்த புத்தகத்தில் நாட்குறிப்பு மாணவர்கள் எழுதச் செய்யும் வழிமுறைகள் பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றார் மாணவ,மாணவிகள் நாட்குறிப்பு எழுதுவதன் பலனை,அதனால் ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் விரிவாக எழுதியிருக்கின்றார். நான் இதுவரை படித்த கல்வி சம்பந்தப்பட்ட நூல்களில் இல்லாத ஒரு வழிமுறை ,இந்த நாட்குறிப்பு எழுதுவது.இவரது எழுத்துக்களின் மூலம் மிக நேர்மறையான அணுகுமுறை , நாட்குறிப்பு எழுதுவது என்று தோன்றுகிறது.

கூட்டாஞ்சோறு, மகள்களைப் பெற்ற அப்பா, நீ சரி ,பஞ்சாயத்து, படிக்கச் சாப்பிடு, என் ஆசான் ஒரு  தேவதை போன்ற கட்டுரைகளும் மனதில்  நிற்கின்றன.

ஒரு மாணவனின் நிலையில் தன்னை பொருத்தி,அதற்கேற்றார்ப்போல் பல்வேறு செயல்பாடுகளைப் பேசும் இந்தச்சிறிய நூல் ஒரு ஆசிரியரின் வாழ்க்கை எவ்வளவு இனிதானது,மகிழ்ச்சியானது,உற்சாகமானது, உதவுக்கூடியது என்பதை வெறும் பாடமாக மட்டும் சொல்லாமல், வாழ்க்கையில் ,வகுப்பறையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டுச்சொல்வதால் இந்த நூலும் கூட வாசிக்க,வாசிக்க இனிக்கிறது














                                                                






நன்றி: வல்லினச்சிறகுகள்- மார்ச் 2024 அச்சு இதழ்.








 

No comments: