Friday 30 August 2024

நமது கடமை- முனைவர் வா.நேரு

 சில வெளிநாட்டு அறிஞர்களின் பெயரைக் கேட்டாலே சங்கிகள் பதறுவதுண்டு. அவர்களுக்கு அந்தப் பெயர்களின் பேரில் பெரும் ஒவ்வாமை உண்டு. அவர்களில் ஒருவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். அவருடைய நினைவு நாள் ஆகஸ்ட் 28. அவர் 1891இல் மறைந்தார். அவர் 1814ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தார். தனது இளம் வயதில், (24 வயதில்) ‘லண்டன் மிஷனரி சொசைட்டி’ என்னும் கிறித்துவ மதக் குழுவுடன் இணைந்து 1838 ஜனவரியில் தமிழ் நாட்டின் சென்னைக்கு வந்தார்.

இன்றைய இளைஞர்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவருடைய உழைப்பை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு அவர் வந்த நோக்கம் என்னவோ கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதுதான். தன் வாழ்நாளில் அதைச் செய்யவும் செய்தார். ஆனால், எளிய மனிதர்களைப் புரிந்து கொள்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாகவும் ஊக்க சக்தியாகவும் இருக்கும். சென்னையை வந்து அடைந்தவர் மூன்று ஆண்டுகள் சென்னையில் தங்குகிறார்.தமிழ்நாட்டு மக்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். திருநெல்வேலி செல்ல விரும்பிய அவர் அன்று இருந்த பயண வாகனங்களைப் பயன்படுத்தவில்லை. சென்னையிலிருந்து திருநெல்வேலிவரை நடந்தே செல்வது என்று முடிவு செய்கிறார்.



ஏறத்தாழ 400 மைல்களை அதாவது அறுநூறு கிலோ மீட்டர் தூரத்தை அவர் நடந்தே செல்கின்றார். நடந்து செல்வது என்றால் நேர் பாதையிலே சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை என்று அவர் செல்லவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியாகச் செல்கிறார், அந்த இடத்திலேயே தங்குகின்றார் ,அங்கு கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுகிறார் .அந்த மக்களோடு பேசு
கின்றார். அவர்கள் பேசும் மொழியை, பேசுவதில் இருக்கும் மொழி வேறு பாடுகளைக் கூர்ந்து கவனிக் கின்றார். பல்வேறு திராவிட
மொழிகளைப் பேசக்கூடியவர்களை சந்திக்கும் அவர் திராவிட மொழிகள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறது என்பதை உணர்கிறார்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டிய அவர் இடையில் நீலகிரிக்குச் செல்கிறார். மலையின் அழகைப் பார்க்கிறார். அந்த மலையில் வாழும் பழங்குடி மக்களைச் சந்திக்கிறார்; அவர்கள் பேசும் மொழியை உற்று நோக்குகிறார்.

அப்படியே நீலகிரி மலையில் இருந்து இறங்கி இந்தப் பக்கம் தஞ்சாவூருக்குச் செல்கிறார். தஞ்சாவூர் கோயிலையும் சுற்றிப் பார்க்கிறார். இப்படி ஒரு அறுநூறு கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடப்பதற்காக எடுத்துக் கொண்ட காலம் ஆறு மாதங்கள்.

இன்றைய விரைவு உலகத்தில், ஒவ்வொரு இடத்தையும் விரைந்து கடக்கும் இளைஞர்களுக்கு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்த இந்த மனிதர் எப்படி பொறுமையாக ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்துக் கடந்து சென்றிருக்கிறார் என்பது படிப்பினையாக மாறலாம். இப்படியே நடந்து நடந்து செல்லும் அவர் கடைசியில் இடையன்குடி என்னும் ஊரில் போய் நிரந்தரமாகத் தங்குகிறார்.

அயர்லாந்தில் அவர் பிறந்த ஊரின் பெயர் ,ஆங்கிலத்தில் ஆடு மேய்ப்பவர்களின் நகரம். எனவே அதே பெயரில் இருந்த இடையன்குடி என்னும் பெயர் பிடித்துப் போகவே, அங்கேயே தங்கி விட்டார் என்று தமிழ் அறிஞர் தொ.பரமசிவம் அவர்கள் ஒரு நூலில் குறிப்பிடுவார்.

இடையன்குடி என்னும் ஊரிலே போய்த் தங்குகிறார். அந்த ஊர் முழுக்கக் குப்பையாகக் கிடக்கிறது. முதலிலே இவர் தனக்காகப் பார்த்து அமைத்துக்கொண்ட வீடும் கூட அப்படித்தான் குப்பையாகக் கிடக்கிறது. முதலில் தனது இல்லத்தைச் சரி செய்கிறார். பிறகு மற்றவர்களுக்குச் சொல்லி, ஈடுபட்டு தனது தெருவைச் சுத்தம் செய்கிறார். பின்பு அந்த மக்களோடு இணைந்து அந்த ஊரையே சுத்தம் செய்கிறார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, அவருக்கு 18 மொழிகள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்பே தெரியும் எனக் குறிப்பிடுகிறது. மொழிகளைக் கற்றுக் கொள்வதில், மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமை,வேற்றுமைகளை அறிந்து கொள்வதில் அவருக்கு மிகப்பெரிய ஈடுபாடு இருந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்த அவர் தமிழ்
மொழியைக் கற்கின்றார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளையும் கற்கின்றார்.இந்த மொழிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை அவரை ஈர்க்கிறது.சமஸ்கிருதத்தையும் கற்கின்றார். சமஸ்கிருதத்திற்கும் திராவிட மொழிகளுக்கும் குறிப்பாக தமிழ் மொழிக்கும் உள்ள வேற்றுமை அவருக்குப் புலப்படுகிறது.

அதுவரை பார்ப்பனர்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியவை என்று கதை அளந்து கொண்டிருந்தனர். அதனையே தங்களுக்குத் தோன்றிய வண்ணம் ஆராய்ச்சி என்னும் பேரால் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தனர்.இந்தப் பார்ப்பனத்தனத்தை தனது ஆராய்ச்சி மூலம் அடித்து நொறுக்கியவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.அதுமட்டுமல்ல; அவாள்களின் குடுமிகளைப் பற்றியே ஒரு நூல் (குடுமியின் மீதான அவதானிப்புகள் ( Observations on the Kudumi ) என்ற நூல் வரக் காரணமாக இருந்தவர். அதனால்தான் சங்கிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் அவர் பெயரென்றால் அவ்வளவு கசப்பும் காழ்ப்பும்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக மொழிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கால்டுவெல் ஆவார்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘இந்தியா முழுமையும் பரந்து விரிந்து இருந்தவர்கள், நாகர்கள் எனப்படும் திராவிடர்கள்’ என்று குறிப்பிடுவதுபோல மொழியின் அடிப்படையில் பலுசிஸ்தானம், வங்காளம் உள்பட இன்றைய இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளில் திராவிட மொழிக் குடும்பங்களே இருந்தன என்று குறிப்பிட்டவர்.

அதனால் “திராவிட மொழியியல் ஆய்வின் முன்னோடி” என்று அழைக்கப்படுபவர் திரு.ராபர்ட் கால்டுவெல் ஆவார்.திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் எல்லாம் ராபர்ட் கால்டுவெல் அவர்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அவரது உழைப்பிற்குப் பெரும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர். 1968இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் அவருக்கு சிலை அமைத்துப் பெருமை சேர்த்தார். திராவிட இயக்க அரசுகள் எல்லாம் அவரது வரலாற்றை தமிழ்ப் பள்ளிக்கூட நூல்களில் சேர்த்து பெருமை சேர்த்தனர். அவரைப் பற்றிய பல செய்திகள் இணையத்தில் கிடைக்கின்றன.அவற்றை வாசிப்பதும்,அவரது பெருமையை, உழைப்பை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் அனைத்துத் தமிழர்களின் கடமையாகும்.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஆகஸ்ட் 16-31,2024

Sunday 25 August 2024

அமைதியாய் இருப்பது நலம்….

 


 

வெட்டுவதா?தொடர்வதா?

என்பது சூழலைப் பொறுத்தது..

அவரவர் மனதைப் பொறுத்தது..

 

வெட்டிக்கொண்ட சிலர்

சில ஆண்டுகள் கழித்து…

தொடர்ந்து இருக்கலாம்…

தவறு இழைத்துவிட்டேன்

என்று புலம்பியவர்கள் சிலரை

நான் சந்தித்திருக்கிறேன்…

 

வெட்டிக்கொள்ளாமல்

இப்படித் தொடர்ந்து

என் வாழ்வை நானே

சீரழித்துக்கொண்டேனே..

என்று தவிக்கும் சிலரையும்

நான் சந்தித்திருக்கிறேன்..

 

எதிலிருந்தும் எவரும்

வெட்டிக் கொள்வதும்

விட்டுக் கொடுத்துத் தொடர்வதும்

அவரவர் சூழல் பொறுத்தது..

அவரவர் மனம் பொறுத்தது..

அவரவர் பொருளாதாரம்

பொறுத்ததும் கூட…

 

எவர் செய்வதையும்

எங்கேயோ இருந்துகொண்டு

இது சரி..இது தவறு

எனச்சொல்லும் நாட்டாமைத்தனம்

இல்லாமல் அவரவர்

தேர்வுக்கு விட்டுவிட்டு

அமைதியாய் இருப்பது

நமக்கு  நலம்…

 

                    வா.நேரு,

                    25.08.2024

 

Saturday 24 August 2024

திராவிட இயக்கமும் தொழிற்சங்கமும்...

 மிகச்சிறப்பான ஒரு நூல்,தொலைத் தொடர்பு ஊழியர் முன்னேற்றச்சங்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் அண்ணன் ஆ.செல்லப்பாண்டியன் அவர்கள் எழுதிய  நூல்,சென்னையில் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. வாய்ப்பு இருக்கும் தோழர்கள் நிகழ்வுக்கு வாருங்கள்.



இந்த நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை...





















Tuesday 20 August 2024

நினைவுகளில் நிறைந்து நிற்கிறான் என் நண்பன்

 எனது அருமை நண்பன் திருப்பூரில் வசித்து வந்த கா.சுப்பிரமணியன் நிரந்தரமாக விடை பெற்றுக் கொண்டான் ,கடந்த பதினெட்டாம் தேதி அன்று (18.08.2024).எனக்கும் அவனுக்கும் இப்போது 60 வயதாகிறது ஒன்றாம் வகுப்பு முதல் அவனது இறுதிக்காலம்வரை தொடர்ந்த  நட்பு. இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வந்த நண்பன் அவன் .


இருவரும் சாப்டூரில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்து பின்பு  பிளஸ் ஒன் பிளஸ் டூ தே.கல்லுப்பட்டியில ,காந்தி நிகேதன் ஆசிரமத்தில் படித்தோம். பீறகு  நான் திருச்செந்தூர் ஆதித்தனார்      கல்லூரியில்  பி.எஸ்.எஸி வேதியியல் படிக்க, அவன் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்தான். ஆதித்தனார் கல்லூரியில்  படித்த பல சமயங்களில் திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் இருக்கும விருதுநகர் கல்லூரியில் இறங்கி ,அங்குப் படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊரைச் சார்ந்த சுப்பிரமணி ,சுந்தரசேகர்                      பேரையூரைச் சார்ந்த கண்ணன் போன்றவர்களைப் பார்த்து பேசி விட்டு மறுபடியும் பேருந்து ஏறி ஊருக்கு வருவது வழக்கம்.மிக வறுமை மிகுந்த குடும்பச் சூழலில் பி.எஸ்.எஸ்ஸி. விலங்கியலைக் கஷ்டப்பட்டு படித்து முதல் வகுப்பில் வெற்றி பெற்றான்.படித்து முடித்து விட்டு ஊரில் விவசாய வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.




 கொஞ்ச நாட்கள் ஊரில் அவன் சும்மா இருந்த காலத்தில், நான் தொலைபேசித்துறையில்  உசிலம்பட்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் நானும் நண்பர்கள் சுப்பிரமணி ,சுந்தரசேகர்,கணேசபூபதி மூவரும் இணைந்து எங்கள் வீட்டில்  ஒரு டியூஷன் சென்டர் வைத்தோம் நிறையக் குழந்தைகள் அப்போது படித்தார்கள். பின்பு அவன் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றான். கடினமான வேலையை மிகப் பொறுமையாக,லோகு  பேப்பர் ஸ்டோர் ன்னும் கடையில் வேலை பார்த்தான்.திருப்பூரில் முதல் ரெயில்வே கேட் ரோட்டில் இருந்த ஒரு விடுதியில் தங்கி இருந்தான். மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் திருப்பூரில்(1986-87) இருந்த காலம். ஓரிரு நாள் அந்தச் சூழலில் தாக்குப் பிடிப்பதே கடினம். ஆனால் அங்குத் தாக்குப் பிடித்து வாழ்ந்தான்.

 அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குப் பிறந்தது. கடை கடையாக  பேக்கிங் மெட்டீரியல்ஸ் பொருட்களைச் சிலவற்றை வாங்கிக் கம்பெனிகளுக்குக் கொடுக்க  ஆரம்பித்தான்  அந்தச் சமயத்தில்தான் கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்றான். அப்போது நான் திண்டுக்கல் தொலைபேசி  நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.  திண்டுக்கல்லில் என்னிடம் இருந்த சைக்கிளை லாரியில் போட்டு அனுப்பி வைத்தேன் நீ பயன்படுத்திக்கொள், எனக்கு இங்கே சைக்கிள் தேவை இல்லாமல் தான் இருக்கிறது என்று சொன்னேன். சரி என்றான். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து  தனியாக ஒரு கடையை எஸ்.எம்.பேக்கிங் மெட்டிரியல்ஸ் என்னும் பெயரில்  ஆரம்பித்தான்.முறையாக அனுமதி வாங்கி ஆரம்பிக்கப்பட்ட கடை. கடினமான முதலாளியாக இருந்த லோகு பேப்பர் ஸ்டோர் முதலாளி திரு.லோகு அவர்கள் ,புதிய கடைக்கு வந்து இவனை வாழ்த்தி கையில் 10000 ரூபாய் கொடுத்து விட்டுப்போனார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.தன் கடையில் வேலை பார்த்த பையன் ,தன் கடையைப் போன்ற இன்னொரு கடையை வைத்த பொழுது,வந்து மனதார வாழ்த்தி,பணமும் கொடுத்துவிட்டுச்சென்றது. இவனது அணுகுமுறை அப்படி இருந்திருக்கிறது வேலை பார்த்த இடத்தில்,

கோயம்புத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய இன்னொரு நண்பன் எங்கள் ஊர் ஜோ.ராஜேந்திரன் வனோடு பார்ட்னர் ஆக 
சேர்ந்தான். அதற்குப் பிறகு  வாழ்க்கையில் இருவருக்கும் வெற்றிதான். அவர்கள் இருவரும் இணைந்து ஏறத்தாழ ஒரு 40 ஆண்டுகள் அந்த கடையை வெற்றிகரமாக நடத்தி, நல்ல லாபம் பெற்று  மேலும் கடைகள், இடங்கள், வீடுகள் என்று ஒரு நல்ல பொருளாதார வசதியைப் பெற்றனர். எனது திருமணத்திற்குப் பின்பு ஒரு 20 நாட்களில் அவனுக்கும் பிரபாவிற்கும் திருமணம் நடைபெற்றது,1993-இல் அவனுடன்  இணைந்து பெண் பார்க்கப் போனது முதல் அந்தத் திருமணத்தில் முக்கியப் பங்கு என்னுடையது. அதனால என்னவோ அவனது மாமனார் அவனது மாமியார் இருவரும்                  அவர்களின் இறுதி மூச்சு வரை என்மேல் மிக பாசமாக இருந்தார்கள் .

பின்பு அவனுக்கு  இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.விக்னேஷ்,சுகந்தன்.. இருவரும் நன்றாகப் படித்து பொறியியல் பட்டதாரிகளாகி வேலைக்குச் சென்றனர் முதல் மகனுக்குத் திருமணத்தை முடித்து வைத்தான்.  இனிமேல் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் மதுரையில் செட்டில் ஆவதா அல்லது பேரையூரில் செட்டில் ஆவதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான் ஒரு இரண்டு வருடங்களுக்கு 
முன்பு.அவன் முன்னேறியது மட்டுமல்லாது தன்னுடைய அண்ணன்கள் குடும்பம,அக்கா,தங்கை குடும்பம் என அனைவருக்கும் உதவியாக இருந்தான். 

18 மாதங்களுக்கு முன்பு  பெருங்கொடுமையாய் அவனுக்குப் புற்று நோய் இருப்பது தெரிந்தது.  அதற்கான அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டான்.  நன்றாக இருந்தான். இரண்டாவது மகனுக்குத் திருமணத்தை முடித்தான். முதல் மகனின் மனைவிக்கு வளைகாப்பு 2 மாதங்களுக்கு முன்னால் திருப்பூரில் நடந்தது.அன்று கொஞ்சம் சோர்வாக இருந்தான்.எப்போதும் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது , எனது மகன்களும், மனைவியும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள் ,அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றான்.அன்றுதான் அவனைக் கடைசியாகப் பார்த்துப்,பேசியது.
 
நன்றாக இருக்கிறேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தான், 15 நாட்களுக்கு முன்னால் பேசிய பொழுது கூட அப்பப்ப கோயம்புத்தூருக்கு செக்கப்  போக வேண்டியிருக்கிறது, மற்றபடி நன்றாகச் சாப்பிட முடிகிறது நன்றாக இருக்கிறேன் என்றான். 18ம் தேதி அவன் இறந்து விட்டான் என்ற செய்திதான் வந்தது. ஆடிப்போய் விட்டேன்.  இடையில் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவனது எண்ணில் பதில் இல்லை..

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இதய  ஆபரேஷன் சென்னையில் நடைபெற்றது ஆபரேஷன் நடப்பதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் கட்டாயமாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு சரி செய்து கொள்வோம் என்று முடிவு செய்தோம். கையில் உடனடியாகப் பணம் இல்லை.  பணத்தைத் திரட்டி நாலு லட்ச ரூபாய் சேர்த்த பிறகு சென்னையில் சென்று ஆப்ரேஷன் செய்து விடுவோம் என்று இருந்தேன். தற்செயலாகக் கூப்பிட்ட சுப்பிரமணி, சென்னைக்குப் போனாயே என்ன சொன்னார்கள் டாக்டர் என்று கேட்டான். இப்படிக்குக் கட்டாயம் ஆப்ரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள், 4 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் அதற்காக நான் பணம் திரட்டிக்  கொண்டிருக்கிறேன்,எங்கள் சொசைட்டியில் கடன் கேட்டிருக்கிறேன் என்று சொன்னேன் 

அப்படியா என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.  மறுநாள் காலை நாலு லட்ச ரூபாய் பணத்தோடு வீட்டில் வந்து நின்றான். இதை வைத்து முதலில் ஆபரேஷன் செய், உடனே சென்னைக்குக் கிளம்பு, மற்றவற்றையெல்லாம்   பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தான். மிகப்பெரிய ஆபரேஷன் இதய ஆபரேஷன். சில நேரம்  உயிருக்குக்கூட ஆபத்தாக முடியும் ஆப்ரேசன். அப்படிப்பட்ட நிலையில் 4 லட்ச ரூபாயை  மிதத்துச்சமாக மதித்து நண்பனின் உயிர் பெரிது என்று வீட்டிற்கு வந்த பணத்தைக் கொடுத்த நண்பன். 2 வருடங்கள் கழித்து பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோது பெற்றுக்கொண்டான்..வங்கி வட்டியாவது தருகிறேன் என்றபோது ,'அடி வாங்காத,சும்மா  இருடா' என்று சொல்லி விட்டான்.

உரிமையாகத் திட்டுவான்.அறிவுரை சொல்வான்.அதுபோல நான் திட்டுவதை,சொல்வதைக் கேட்டுக்கொள்வான்.திருத்திக் கொள்வான்.இறப்பு வீட்டில் அவனது மைத்துனர் சுந்தரபாரதி ." மாமா.ஒவ்வொருவருக்கும் பல நண்பர்கள் உண்டு. ஆனால் ஆத்மார்த்தமான நண்பன் என்று ஒருவர்தான் இருப்பார்கள்.அந்த நண்பனிடம் எல்லாவற்றையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். எனது மாமா சுப்பிரமணி அப்படித்தான் உங்களை வைத்திருந்தார். உங்களைப் பற்றிப் பேசாத நாளே இருக்காது " என்றார்.அழுகைதான் வந்தது.அவனது மூத்த அண்ணன் இறப்பு வீட்டில் " ஆலமரம் சாய்ஞ்சிருச்சுடா நேரு,எல்லோருக்கும் உதவி பண்ணியவன் சாஞ்சிட்டாண்டா " என்று அழுது புலம்பினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எனது வீட்டில் , 'எனது இறப்பிற்குப் பின்னால் சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது,எனது உடலை மருத்துவமனைக்குக் கொடுக்கவேண்டும் ' என்று நான் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, 'டேய், நம்ம ஊர்க்காரர்கள் ,சொந்தக்காரர்கள் இதைச்செய்வதில் பிரச்சனை செய்தால் ,நீதான் முன்னின்று எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்' என்றேன். அவன் பக்தன்தான் என்றாலும் என்னை நன்றாகப் புரிந்தவன். 'அதெல்லாம் அப்ப பார்ப்போம். சும்மா இருடா' என்றான். அவனுக்கு முன்னால் நாம் இறந்து விடுவோம்  என்பது எனது எண்ணமாக  இருந்தது.அதனால் அவனிடம் சொல்லி வைத்தேன். ஆனால் கொடுமை.  நினைவுகளில் நிறைந்து நிற்கிறான்  என் நண்பன். 

வா.நேரு
20.08.2024

Saturday 17 August 2024

'விறகு வண்டி முதல் விமானம் ‘வரை....

 முனைவர் வா.நேரு,

 மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,


                        வாழ்த்துரை

விறகு வண்டி முதல் விமானம் ‘வரை என்னும் இந்த நூல் அய்யா சே.முனியசாமி  அவர்களின் தன் வரலாறு நூல்.25 வயதில் தான் கைவண்டி இழுத்த காலம் முதல் இந்றைக்கு விமான்ங்களில் பறக்கும் 75 வயதுவரையிலான அவரின் அனுபவக்குவியல் இந்த நூல். வெறும் அனுபவத்தொகுப்பாக அமையாமல்,வாசிப்பதற்கு எளிமையாய்,விறுவிறுப்பாய் அமைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் கொள்கை வழிகாட்டுதலில் மதுரையில் களப்பணி ஆற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர் . அய்யா சே.முனியசாமி அவர்கள். இவர் மிகச் சிக்கனமாக இருப்பார். வரவு என்றாலும் செலவு என்றாலும் அவரிடம் ஒவ்வொரு ரூபாய்க்கும்  கணக்கிருக்கும் சொற்களில் கனிவருக்கும் ஆனால் வாக்குவாதம் என்று வந்தால் சண்டை என்று வந்தால் எதிர்த்துக் களமாட என்றைக்கும் தயங்க மாட்டார்.எவரிடமும் தானாகவே பேச்சை ஆரம்பிக்கும் பண்பாளர் இவர் . இரயிலில் நாக்பூர் சென்று வரும்போது ஒரு இராணுவ வீர்ரோடு நடந்த உரையாடல் பற்றி இந்த நூலில் இவர் சொல்லும் விதமும் உரையாடலும் நினைத்து மகிழலாம்.அதைப்போல இரயிலில் இவரும் மறைந்த பொறியாளர் அண்ணன் கி.மனோகரன் அவர்களும் நடத்திய பகுத்தறிவு உரையாடலும் இரசிக்கத்தக்கது மட்டுமல்ல,ஒரு புதுவித பிரச்சார யுக்தியை நமக்குச் சொல்லித்தருகிறது.



இந்த நூல் அய்யா முனியசாமி அவர்களின்  பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டுகிறது.’சுட்டி முனியசாமி ‘ எப்படி பண்பட்டார்,பழகும் வித்தை அறிந்தார் என்பதைக் காட்டுகிறது. மனிதர்களோடு பழகும் முறையினால் அவர் பயன் பெற்றதையும் அவரால் மற்றவர்கள் பயன்பெற்றதையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டில் இருக்கும் ஒருவருக்குகாலத்தினால் செய் உதவி எப்படிப்பட்ட ஒரு நன்மையை திருப்பித் தந்தது என்னும் தன் அனுபவம் இந்த நூலில்  நமக்கு படிப்பினையாக இருக்கிறது

முதன் முதலில் இவர் தன்னுடைய அனுபவங்களை என்னிடம் சொன்ன போது எனக்கு மிக வியப்பாக இருந்தது ‘அய்யா, இதனை ஒரு புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் ‘ என்று  நான் சொன்னேன். அதிலே முதலில் தயக்கம் காட்டினார் ஆனால் புத்தமாக ஆக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தொடர்ச்சியாக தன்னுடைய மனதிற்குள்ளே கிடந்த பல்வேறு நினைவுகளை, கடந்த கால அனுபவங்களை கொட்டித் தீர்த்தார். அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதலையின் ‘வாழ்வியல் சிந்தனைகள் ‘ பகுதியில் வரப்போகும் நூல் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதைப் படித்து படித்து ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சி அடைந்தார்.அந்த மகிழ்ச்சியை மனதார வெளியில் காட்டினார்.உவகை அடைந்தார்.

 தன்னுடைய தொண்டர்கள்,தன் வரலாறு எழுதும்போது அதனைப் படித்து,அதனைப் பற்றி எழுதி அளப்பரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தன்னுடைய தொண்டர்களுக்கு தருபவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அவ்வாறே இந்த நூலுக்கும் தந்துள்ளார்கள்.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் கூட்டங்களில், நம் கழகத்தோழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பங்களை எழுத்தாகப் பதிவிட வேண்டும்  என்று வேண்டுகோள் விடுப்பதுண்டு.இந்த நூலைப் படித்தபொழுது மீண்டும் மீண்டும் அந்தக் கருத்தைச்சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.ஆம் ஒவ்வொரு பெரியார் தொண்டரின் வாழ்க்கையும் எதிர் நீச்சல்தான்.போராட்டம்தான். ஆனால் அய்யா தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் செல்பவர்களுக்கு என்றும் வெற்றி தான் ,மகிழ்ச்சிதான் என்பத்ற்கு மிக நல்ல எடுத்துக்காட்டு இந்த நூல்.அய்யா சே.முனியசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.இந்த நூல் ஆக்கத்தை மிகச்சிறப்பாக குறுகிய காலத்தில் செய்து கொடுத்திருக்கும் கீழடி வெளியீட்டகத்திற்கும், அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இந்த நூலை முழுமையாகப் படிப்போம். நாம் பெற்ற மகிழ்ச்சியை மற்றவர்களும் பெற வழிகாட்டும் இந்த நூலைப் பரப்புவோம்.

 

மதுரை

19.06.2024                                        முனைவர் வா.நேரு




Wednesday 14 August 2024

சதுரகிரி மலை சித்தர்கள்....

 

Monday 12 August 2024

அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்..மருத்துவர் சோம.இளங்கோவன்

அச்சில் எழுத்து சரியாகத் தெரியவில்லை என்று சிலர் சொன்ன காரணத்தால்,கீழே எழுத்து வடிவலான கட்டுரையையும் கொடுத்திருக்கிறேன். நன்றி. 

வா.நேரு

14.08.2024








நன்றி : வல்லினச்சிறகுகள் இதழ் - ஜூலை 2024

சங்கப் பலகை

நூல் : அமெரிக்காவில் அய்ம்பது  ஆண்டுகள் (ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்)

நூலாசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன்

வெளியீடு நன்செய் பிரசுரம் திருத்துறைப்பூண்டி

முதல் பதிப்பு செப்டம்பர் 2023

மொத்த பக்கங்கள் 144 விலை ரூபாய் 150

அமெரிக்கா செல்வது என்பது நமக்கு ஒரு கனவு.அமெரிக்காவில் சென்று படிப்பது,வேலை பார்ப்பது என்பது பெரும் கனவு இன்றைக்கும் கூட பல இளைஞர்களுக்கு.ஆனால் ஓர் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் சென்று மேல்படிப்பு படிப்பதற்கு ஓர் இளைஞருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.அவர்தான் இந்த நூலாசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.

இந்த நூலினுடைய என்னுரையில் இந்த நூலின் ஆசிரியர் இப்படி ஆரம்பிக்கின்றார். “ அரை நூற்றாண்டு வாழ்வின் பெரும் பகுதி. நான் ஓர் அய்ந்தாண்டுத் திட்டத்துடன்தான் அமெரிக்கா சென்றேன் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் . ஒரு லட்ச ரூபாயுடன் தாயகம் திரும்ப வேண்டும். அய்ந்தாண்டு திட்டங்கள் சரியாக நிறைவேறுமா? பத்தாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் உள்ளேன். தந்தை பெரியார் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றேன். வாழ்வில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். வெற்றிகள், தோல்விகள், இன்பம், துன்பம் அனைத்துமேதான் வாழ்வு என்று குறிப்பிட்டு இருக்கிறார்.ஆமாம் இந்த நூல் நூலாசிரியரின் வெற்றிகளை,எதிர்கொண்ட சவால்களை,அதை எதிர்த்துப் போராடிய தருணங்களை,அவரின் இணையர் அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களின் ஒத்துழைப்பை,அவர் கண்ட வெற்றிகளை,இருவரும் சேர்ந்து செய்த பொதுத்தொண்டுகளை,அறப்பணிகளை எல்லாவற்றையும் பதிவு செய்து கொடுத்திருக்கும் ஓர் ஆவணமாக அய்ம்பது தலைப்புகளில் அமைந்த நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.

 

இந்த நூலுக்கு வாழ்த்துரையை அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுடைய அண்ணன் அய்யா பேரா.சோம.வேலாயுதம் அவர்களும் அவரின் இணையர் கலைச்செல்வி வேலாயுதம் அவர்களும் இணைந்து  கொடுத்திருக்கிறார்கள். “ அதில் யாரைக் கண்டும் அஞ்சாமல் பேசும் திறமை சிறுவயதிலேயே அவருக்கு அமைந்தது. அது கல்லூரி நாட்களில் பயணித்தது வாழ்நாளில் பலவிதமான போராட்டங்களிலும் வெற்றி அடைய வழி வகுத்தது போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. இது வரும் நாட்களில் வெளிநாடு செல்லும் எந்த மாணவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த நூலின்  அருமையை,தேவையைப்  பற்றிச் சொல்லுகிறார். ஆம் இது ஒரு வகையில் அமெரிக்கா செல்ல நினைக்கும் தமிழர்களுக்கு ஆற்றுப்படுத்தும் நூல். ஆற்றுப்படை நூல்.

மொத்தம் 50 தலைப்புகள் இந்த நூலிலே உள்ளன. 50 ஆண்டுகள், 50 கட்டுரைகள்.   பிரியாவிடை என்பது முதல் அத்தியாயத்தின் தலைப்பு. தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த நிகழ்வை அவருக்கே உரித்தான நகைச்சுவை கலந்து அய்யா சோம இளங்கோவன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு அமெரிக்கா பயணம் செய்வது எளிது. நவீன வசதிகள் இருக்கிறது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய விமானப் பயணம் எப்படி இருந்தது என்பதைப் பெரிய பயணம் என்ற தலைப்பிட்டுக் கொடுத்திருக்கிறார். அறியாமல் பணத்தைச் செலவு செய்து விட்டு அல்லல்பட்ட கதையையும் எழுதி இருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவத்திற்கும் நம் நாட்டில் உள்ள மருத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை மிகச் சிறப்பாக குறிப்பிட்டு அந்த மருத்துவப் பயிற்சி பற்றி எழுதுகின்ற பொழுது அந்த மூன்று ஆண்டுகள் பற்றியே 30 பக்கங்களுக்கு மேல் எழுதலாம ஆனால் நீங்கள் எல்லோரும் மருத்துவராக ஆகிவிடுவீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதைப்போல உண்மையிலேயே அந்த வயதிலே அங்குள்ள பெண்களிடம் தப்பித்து ஊரில் வந்து மணம் முடிக்க வேண்டும் என்பது ஒரு பெரிய சோதனைதான்.” என்று குறிப்பிட்டுத் தான் தமிழ்நாட்டிற்கு வந்து அம்மா மருத்துவர் சரோஜா அவர்களை மணம் முடித்த நிகழ்வை எழுதியிருக்கிறார். தன்னுடைய மாமனார் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதி சிறப்பு.

 

1973-ல் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அமெரிக்காவிற்கு  வந்ததையையும்  அவருக்கு வரவேற்புக் கவிதையை வாசித்ததை மலரும் நினைவுகளாகப் புகைப்படத்தோடு இந்த நூலில்  குறிப்பிட்டு இருக்கிறார். அவர்களுடைய மருத்துவத் தொழில் வேலைக்குத் தந்த விலை என்ற தலைப்பில் குழந்தையாக இருந்த  கனிமொழியின் உடல்நிலை கெட்டதைப் பற்றி,பின்பு சரியானது பற்றி,தங்களுடைய மருத்துவப் பணியைப் பற்றி எல்லாம் அய்யா அவர்கள் சிறப்பாக இந்த நூலில் எழுதியிருக்கிறார்.

 

அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன்  அவர்கள் சிக்காகோ தமிழ் சங்கத்தில் தான் ஈடுபட ஆரம்பித்ததைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அதிலே குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடைய பொறுப்பில் இருக்கும்பொழுது நான் மகளிரை முக்கியமாகக் கொண்டு வந்து அவ்ரகளைப் பங்கேற்கச்செய்து பேச்சு,நடிப்பு,பாட்டுத்திறமைகளை வெளிக்கொணரும் முயற்சிகளில் நான் ஈடுபட்டேன்என்று குறிப்பிட்டு இருக்கிறார். நன்றாகச் சிக்காகோ-வில் தமிழும், தமிழர்களும், தமிழ்ச் சங்கமும் வளர்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் போட்டிகளும் பொறாமைகளும் தொடங்க ஆரம்பித்தன அவைகள் பின்  நாட்களில் வேதனைகளாக மாறின. தமிழன் எங்குச் சென்றாலும் இந்தப் போட்டி, பொறாமை மனப்பான்மை இருக்கத்தானே செய்கின்றது அதையெல்லாம் தாண்டித்தான் அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் வளர்ந்துள்ளன என்று குறிப்பிட்டு இருக்கிறார் அதைப்போல வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை என்னும் அமைப்பைப் பற்றியும்,தமிழ்ப் பணிகளால் கிடைத்த மகிழ்ச்சியைப் பற்றியும் அய்யா எழுதியிருக்கின்றார்..

 

இப்பொழுதுகூட்த் தொடர்ச்சியாகப் பயணம் செய்யக் கூடியவர்கள் அய்யா மருத்துவர் சோம இளங்கோவன் அவர்களும் மருத்துவர் சரோஜா இளங்கோ அவர்களும். ‘நல்ல பலநாடு சுற்றிகள்இவர்கள் இருவரும். தன்னுடைய இளமைக் காலத்திலே அவர்கள் மேற்கொண்ட பயணங்களை இளமைக்காலப் புகைப்படங்களோடு இணைத்து இருக்கிறார்கள் அதைப்போலக் குழந்தைகள் பிறந்ததையும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் குறிப்பிட்டு, இன்றைக்குத்    தங்கள்  குழந்தைகள்  பெரியவர்களாகிப்  பெரும் பொறுப்புகளில் இருப்பதை எழுதி இருக்கிறார்கள்.பேரப்பிள்ளைகளால் கிடைக்கும் பேரின்பத்தை இலக்கியமாக்கி அய்யா கொடுத்திருக்கிறார்.

தமிழ் ஈழத்திலே நிகழ்ந்த துயரங்கள், ஈழத்திற்காக நடந்த மாநாடு, அதிலே தன்னுடைய பங்களிப்பு ,அதற்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய பல்வேறு பணிகளை இந்த நூலிலே அய்யா அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆறாத துயரமாய் அவர்களின் துயரம் தொடர்வதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கல்விக்கு உதவி என்ற வகையில் தன்னுடைய பல்வேறு செயல்பாடுகளை அய்யா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ’காலத்தினால் செய்த சிறு உதவிகள்கூட எப்படி பெரும் உதவிகளாக,உதவி பெற்றவர்களால் பார்க்கப்பட்டன, அவர்கள் அதனால் வாழ்க்கையில் எப்படி உயர்ந்தார்கள்,அதனால் தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியை அய்யா அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். வாசிப்பவர்களுக்குக் கல்விக்காக நாமும் உதவி செய்யவேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கல்விக்கு உதவி பற்றிய கட்டுரைகள் அமைந்துள்ளன.

சுயமரியாதை திருமணத்தை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய மகள் அருள்செல்வி-பாலகுரு  திருமணத்தைத் தான் தலைமை தாங்கி  நடத்தி வைத்ததை அய்யா எழுதியிருக்கிறார்.அமெரிக்காவில் அதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குக்  கொடுத்த மருத்துவச் சிகிச்சை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதேபோலக் குடும்பங்களில் ஏற்பட்ட துயரங்கள் என்று பல்வேறு செய்திகளை அய்யா அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

 

மனிதநேயமே பெரியார் என்னும் தலைப்பில் தன்னுடைய இறுதிக் கட்டுரையைக் கொடுத்துள்ளார்.” பெரியார் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதாவது ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்வாகவும், அதே நேரத்தில் தன்னுடன் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுத்தும் அவர்களுக்கு உதவி செய்தும் அவருடன் இணைந்து சமமாக வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை நெறிஎன்று குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாரியல் என்பது எவருக்கும் எதிரானது அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார். தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் எழுதியபெரியார் பிராமணர்களுக்கு எதிரியா?’ என்னும் நூலில் தந்தை பெரியார் கொள்கையால் பயன்பெற்ற பிராமணப்பெண்கள் பற்றி விரிவாக எழுதியிருப்பார். “ ,மனித நேயம் வாழட்டும். மனிதர்கள் மனிதராக வாழட்டும் என்பதே எனது விருப்பம் அது நிறைவேறும் நாள் கட்டாயம் வந்தே தீரும். வாழ்த்துக்கள் வாழ்க பெரியார் !,வளர்க பகுத்தறிவு என்று இந்த நூலினை அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் முடித்திருக்கிறார்.

 பேராசிரியர் பால் கர்ட்சு பற்றி இதிலே கட்டுரை உள்ளது பெரியார் பன்னாட்டு மாநாடுகள் தொடர்ச்சியாக உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனியில், அமெரிக்காவில், கனடாவில் நடைபெற்ற  பெரியார் பன்னாட்டு அமைப்பு மாநாடுகளைப் பற்றி இந்த நூலில்  குறிப்பிட்டிருக்கிறார். ஒருபுறம் மருத்துவச் சேவை. தன்னால் ஆன அந்த மருத்துவ உதவியைத் தொலைதூரத்தில் இருந்தாலும் ஆலோசனைகள் கேட்டால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அந்தப் பரிசோதனைகளைப் பார்த்து அதற்குரிய மருத்துவத்தை இந்தந்த முறையில் நீங்கள் செய்யுங்கள் என்று அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல பேருக்கு வழிகாட்டக்கூடிய பெருந்தகை அய்யா அவர்கள் .எனக்கு இருதய அறுவை  சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் தற்செயலாகத் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த அவர் என்னை சென்னை ப்பலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தெரிந்த மருத்துவரிடம் சொல்லி அதன் மூலமாக ஒரு நல்ல மருத்துவத்தை நான் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த மனிதநேயர் அவர். மலை உச்சியில் இருந்தாலும் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய மனிதர்களோடு சரிசமமாகப் பழகக் கூடியவர்.அவர்களுக்கு உதவக்கூடியவர்.

இயல்பான மொழியில் அவருடைய உரையாடல் எப்போதும் இருக்கும். அவரோடு இருக்கும் நேரங்களிலே நாம் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு மிக்கவர் அய்யா அவர்கள். மனிதர்கள் தோன்றுகிறார்கள் வாழ்கிறார்கள் எத்தனையோ சாதனைகளைச் செய்கிறார்கள் பின்  மறைகிறார்கள். ஆனால் தன் வாழ்வின் சாதனைகளை,  வேதனைகளை, சோதனைகளைப் பலரும் ஒரு நூலாகப் பதிவதில்லை. ஆனால் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் அருமையாக,எளிமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

 

அய்யா மருத்துவர் இளங்கோவன் அவர்கள்  நமக்கு 50 ஆண்டுகளுக்கு முந்தைய  தமிழ்நாட்டை அன்றைய அமெரிக்காவை,அதைப்போல  இன்றைய தமிழ்நாட்டை, இன்றைய அமெரிக்காவை இதற்கு இடைப்பட்ட இந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அமெரிக்காவிலும் நிகழ்த்த பல்வேறு நிகழ்வுகளை, உலகமெல்லாம் வாழும் தமிழர்களுடைய வாழ்க்கையிலே அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினிலே ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் மிகச் சிறப்பாக இந்த நூலிலே எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்..தமிழ்நாட்டில் இருந்து  எவர் வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்து அவர்களுக்கு உரிய வழியைக் காட்டும்  ஆளுமையாக அய்யா அவர்கள் இருப்பதை இந்த நூலின் வழியாகப்  பார்க்க முடிகிறது.அதற்கு அவருடைய இணைவர் மருத்துவர் சரோஜா அவர்களும் மிகப்பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.இருக்கிறார்.அம்மா சரோஜா அவர்களைப் பல இடங்களில் பாராட்டி மகிழ்ந்து இருக்கின்றார் இந்த நூலில்.அவரின் கடுமையான உழைப்பு,விருந்தினர்களை அருமையாக உபசரிக்கும் தன்மையை,அவர் வைக்கும் மீன்குழம்பின் ருசியை,தலை சிறந்த அவரின் மருத்துவப்பணியை,பொதுத்தொண்டை எல்லாம் விவரித்து எழுதியிருக்கிறார்.’வல்லினச்சிறகுகள் போன்ற அமைப்புகள் அவரை அமெரிக்காவின் பாராட்ட வேண்டிய பெண்மணிகள் என்ற அளவிலேயே பாராட்டி எழுதி இருக்கின்றார்கள்.அவருடைய உழைப்பு கடுமையான உழைப்புஎன்று தன் வாழ்விணையர் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களைப் பாராட்டிவாழ்விணையர் சாதனைகள்என்றே தனியாக ஒரு தலைப்பில் எழுதி இருக்கின்றார்.

வல்லினச்சிறகுகள்இதழின் நிறுவனர் தோழர் அகன் அவர்கள் முதன்முதலில் அமெரிக்காவில் புத்தக வெளியீடு செய்ய வேண்டும் என்று நினைத்தபொழுது அதற்கு உதவியவர் டாக்டர் சோம.இளங்கோவன் என்று   மிகச் சிறப்பாகத் தன்னுடைய நூலில் குறிப்பிட்டு இருப்பார்கள். இப்படி எல்லோருக்கும் உதவுகின்ற ஒரு மனிதரா, அதே நேரத்தில் எதார்த்தமான நிலையோடு தன்னால் முடிந்ததை ,என்ன முடியும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லக்கூடிய ஒரு அருமையான மருத்துவராக அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் இருக்கிறார்கள். எனவே அந்த வகையில் அமெரிக்காவில் 50 ஆண்டுகள் என்ற இந்தப் புத்தகம் பல்வேறு செய்திகளை நமக்குச் சொல்கிறது

திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி வீரமணி அவர்கள் அணிந்துரை அல்ல, எமது நன்றியுரை என்று குறிப்பிட்டு அணிந்துரை இந்த நூலுக்கு கொடுத்துள்ளார்கள். “அருகில் அமர்ந்து சொல்லுவது போன்ற அடக்கமிகு அழகு நடையில் எழுதி உள்ளார் டாக்டர் சோ. இளங்கோவன்என்று குறிப்பிட்டு இருக்கிறார். “ அணிந்துரை எழுதிடப் பதிப்பாளர் கேட்டார். நான் எழுதுவது அணிந்துரை அல்ல ;அவருக்கு நன்றி உரை. என்னை 32 ஆண்டுகளுக்கு முன் வாழ வைத்து இன்றும் எனது தொலைதூர-( மிக அருகில் என்றும் உள்ளத்திற்கு மிக அருகில் உள்ள) மருத்துவ மற்றும் மனிதநேய காவலர். பட்ட கடனை அடைக்கவே இந்த நன்றி உரை .நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனையோ மனிதர்கள் அவரது கருணையால், உதவியால், நட்பால், வற்றாத அன்பால் வாழ்கிறார்கள் என்பது அவர் பெரும் ஊதியம். அவருக்கு உறுதுணையாய் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள் என்று  ஒரு நெகிழ்ச்சியான நன்றி உரையை அணிந்துரையாகக் கொடுத்துள்ளார்கள்.இந்த நூல் மதிப்புரையும் கூட ஒருவகையில் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கு எனது நன்றியுரைதான்.எனது உயிர் காக்க உற்ற மருத்துவ வழி காட்டியவர் அவர்.அவருடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒரு நூலாக நான் வாசித்தபொழுது அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது எனக்கு.இந்த நூலைப் படித்துப் பாருங்கள்  நீங்களும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவீர்கள்.மற்றவர்களுக்கு இன்னும் உதவிட வேண்டும் என்னும் உந்துதலுக்கு ஆட்படுவீர்கள்.