Saturday, 11 April 2026

‘காலச்சுவடு’ சிறப்பிதழ் 1991...

 

‘காலச்சுவடு’

சிறப்பிதழ் 1991

என் கைகளில் இருக்கிறது..

இதனை எனக்கு

அளித்தவர் இப்போது

இவ்வுலகில் இல்லை!

இயற்கையோடு

இயற்கையாய் கலந்துவிட்டார்!

 

அவர் கொடுத்துச்சென்ற

புத்தகம் எனது

கைகளில் தவழ்கிறது…

அந்தச் சிறப்பிதழில்

படிக்கும் ஒவ்வொரு

கவிதையும் ஒவ்வொருமாதிரி!

அதில் இருக்கும்

கதைகளும் கூட அப்படியே!

 

ஒவ்வொரு கவிதையையும்

படிக்கும்போதும்

மறைந்துபோன நண்பர்

மனதிற்குள் வருகிறார் !

இணக்கமாக எனது

அருகில் நின்று அந்தக்

கவிதையின் நயம்

பற்றிப் பேசுகின்றார் !

 

‘புளித்த மாவு’ அப்போதே

புராணத்தின் அடிப்படையில்

பல பக்கங்களுக்கு புலம்பித்

தள்ளி இருக்கிறது!

சிறுகதை என்று

சொல்லப்படும் அதனை

இருமுறை படித்தபின்பும்

எதுவும் புரியாத நிலையில்

அருகில் நிற்கும் நண்பர்

சிரிக்கிறார்! ‘இவாள்

அவாளின் பிரதிநிதி’ என்று

அப்போதே சொன்னேன்!

உணர்ந்தாயா? என்கிறார்..

 

 

உன்னைப்போலும்

என்னைப் போலும்

தொலைபேசி நிலையத்தில்

வேலைபார்த்தவர் இன்று

‘ஒரு கோடி பரிசு தருகிறேன்’

என்கிறார்…புரிந்துகொள்..

அவரின் பின்புலத்தை என்கிறார்

 

சிறப்பிதழுக்குள் இருக்கும்

இன்னும் சில சிறுகதைகளை

வாசிக்கும்போது

கதைக்குள்ளிருந்து அவர்

உயிர்த்தெழுகிறார் !

‘காக்கா’ கதை என்ன

சொல்ல வருகிறது

என்பதை உணர்ந்தாயா

என்று என்னிடம் விவாதிக்கிறார்!

 

வாசிக்க, வாசிக்க

மறைந்து போன எனது

அருமை நண்பர் ந.முருகனை

நினைவுபடுத்திய

சிறப்பிதழுக்கு என்

இதயம் நிறை நன்றி !

 

                              வா.நேரு,

                               12.04.2026

  

No comments: