Sunday 25 November 2012

நிரம்பி வழிகின்றன

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்

வித விதமான
ஆடைகளோடும்
அணிகலன்களோடும்
ஆண்களும் பெண்களும்
யுவதிகளும் கிழவிகளுமாய்
உணவினை
சுவைத்துக்கொண்டும்
ஆர்டர் இட்டுக்கொண்டுமாய்
நிரம்பி வழிகின்றன மேஜைகள்

உணவுக்கு ஆர்டர் கொடுத்து
உண்ணும் போதும்
உண்டு முடித்த பின்பும்
எக்மோர் ரெயில்
நிலையத்தில் கேட்ட குரல்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
காதுகளில் விடாது

நான் பெத்த பிள்ளைகளா
நான் சாப்பிட
ஒத்த ரூபா போடுங்க ராசா
என்னும் அந்தக்குரலுக்கு
செவிமடுக்காது
தாண்டி வந்த பின்பும்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
விடாது அந்தக்குரல்

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்
ஏற்றத் தாழ்வைப்
பார்த்துக்கொண்டே
கடந்து செல்லும்
அரசியல்வாதி போலவே

இல்லாக் கொடுமையும்
இருப்பவனின் ஊதாரித்தனமும்
ஏன் இந்நாட்டில் எனும்
கேள்விகளின்றி
சர்வருக்கு சில
நாணயங்களை வைத்துவிட்டு
நடந்து செல்கிறேன் நானும்....





எழுதியவர் :வா. நேரு

நாள் :2012-10-15
nantri : eluthu.com

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இதயத்தைக்
கசியவைத்துவிட்டீர்கள் தோழரே!
இந்த ஈரத்தைத்தான்
எவ்வளவோ விசிறிபோட்டுக்
காய வைக்கின்றன
அவர்களின் ஊடகங்கள்.
காய மாட்டீர்களே!

காய மாட்டோம் தோழா!
நம் இதயங்களில் இருக்கும்
ஈரம்,
அந்தப் பசி நெருப்பை மட்டுமல்ல-
அதைப் பற்ற வைப்பவரையும்
சுட்டுப் பொசுக்கும்வரை
-நா.முத்து நிலவன்.

முனைவர். வா.நேரு said...

நன்றி ! கவிஞர் நா.முத்து நிலவன் அவர்களே , நன்றி ! தமிழகத்தின் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றத்தில்
வலம் வரும் தங்களின் வருகைக்கும், கருத்து இடுகைக்கும் நன்றி தோழரே !சேர்ந்து
பயணிப்போம் இலக்கிய வாசிப்பில்,படைப்பில், நல்ல இலக்கியங்களை அடையாளம் காட்டுவதில்.

அன்புடன் வா. நேரு
.