Saturday 5 October 2013

நிகழ்வும் நினைப்பும் (5) : சாப்டூர் கல்வி அறக்கட்டளை

சாப்டூரில் இருக்கும் எனது உறவினர் பெ.நேரு, நேரு பெரியசாமி என்னும் பெயரில் பேஸ் புக்கில் இருக்கின்றார். சாப்டூரில் படித்து வெளியூரில் வேலைபார்க்கும், அல்லது சாப்டூரை சொந்த ஊராகக் கொண்டவர்கள் சிலரை  பேஸ் புக்கில் இணைத்து ஒரு குழுவை உருவாக்கி இருக்கின்றார். அனைத்து சாதியைச்சேர்ந்தவர்களையும் இணைத்து உருவாக்கி உள்ள ஒரு குழு.அந்தக் குழு. பாராட்டப்பட வேண்டிய பணி, இந்த இளைஞரின் பணி.  அண்ணன் ஜோதி மதிவாணன் அவர்கள் சாப்டூரில் படித்து வெளி நாட்டில் வேலை பார்க்கும் பொறியாளர். தன்னுடைய இளமைக் கால நினைவுகளை இக்குழுவில் நிறைவாகப்  பகிர்ந்து கொண்டார்.

                                     சில நாட்களுக்கு முன்னால், எனது பெரியம்மாவின் இறப்பிற்காக சொந்த ஊருக்குப்போயிருந்த பொழுது, என்னை பெரியசாமி நேரு சந்தித்தார். ஊரைப் பற்றி நிறையப்பேசிக்கொண்டிருந்தோம். கோவிலுக்கு நமது ஊரில் நிறையச்செலவழிக்கின்றார்கள். ஆனால் கல்வி பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், கோவிலுக்கு நன்கொடை வாங்குவது போல யாரும் வாங்குவது இல்லை என்றார். தாராளமாக வாங்கலாம். கொடுப்பார்கள் உறுதியாக. ஆனால் சில விதிகளை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றேன்.

1. கணக்கு வழக்கு மிக வெளிப்படையாக இருக்க வேண்டும். யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதும், அதனைப் பெற்ற பயனாளிகள் யார் என்பதும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். நன்கொடை கொடுப்பவர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள். இதற்கு முன் உதாரணமாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பெயரால் , நன்கொடை பெற்று நடக்கும் கல்வி அறக்கொடை டிரஸ்ட். இதன் தலைவராக எனது ஆசிரியர் பேரா.கி.ஆழவார் அவர்கள் இருப்பதையும் அதன் வெளிப்படையான தன்மை பற்றியும் கூறினேன் . அதனைப் போல நாமும் செயல்படலாம். என்றேன்.

2. மாணவ் மாணவிகளுக்கு கொடுக்கும் உதவி படிப்பு கட்டணமாகவோ, விடுதிக் கட்டணமாகவோ இருக்கலாம். பெற்றோர்களிடம் கொடுப்பதைவிட செக்காக அந்த நிறுவனங்களுக்கு மாணவ், மாணவியர்கள் சார்பாக கொடுக்கலாம்.நமது ஊரைச்சார்ந்த அனைத்து ஜாதி, மதத்தினருக்கும்- பொருளாதாரம் இல்லாமல் கல்வியைத் தொடர முடியாத மாணவ், மாணவிகளுக்கு இந்த உதவியைச்செய்ய வேண்டும்.

                    இதனைப் போலவே சில விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு, கொடுக்கும் பணம் கொடுக்கும் காரியத்திற்கு மட்டுமே பயன்படும், தவறுகள் இருக்காது எனத்தெரிந்தால், கொடுப்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள். அதுவும் சாப்டூரில் படித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள். நிறைய உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். நம்மால் வசூல் செய்ய முடியும்,உதவி செய்ய முடியும்  என்றேன்.
                      பெ. நேரு, அதனை செயல்படுத்தும் விதமாக "நமது சாப்டூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பயின்ற செல்வி பி.ரஞ்சிதா என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். சக மாணவ-மாணவிகள் தன்னலம் கருதி தனியார் பள்ளிகளை நோக்கி சென்றபோதும், நமது பள்ளியிலேயே பயின்று முதல் மதிப்பெண்(969) பெற்று பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், பின்வரும் மாணவ-மாணவிகளுக்கு முன் மாதிரியாகவும் திகழ்ந்துள்ளார். தற்போது மதுரை மீனாட்சி கலைக்கல்லூரியில் BA(English) பயின்று வருகிறார். " என்று குறிப்பிட்டு அறக்கட்டளையின் முதல் பயனாளியை அடையாளப்படுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனது பங்களிப்பு இந்த அறக்கட்டளைக்கு பணத்தாலும் கரத்தாலும் உண்டு.எங்கள் ஊர் இளைஞர்களின் உருப்படியான முயற்சி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 10000 மைல் பயணம் முதல் அடியில் இருந்து தான் தொடங்குகின்றது. முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பெ.நேருவுக்கும் அவரது தோழர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

No comments: