Thursday 10 October 2013

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர்                          திரு. க. துளசிதாசன்.
 வெளியீடு                                     : புக்ஸ் பார் சில்ரன் -பாரதி புத்தகலாயத்தின் ஓர் அங்கம் ,சென்னை-18
முதல் பதிப்பு                               : மே 2012  விலை ரூ 90 - மொத்த பக்கங்கள் : 144

                                                மதுரையில் நடைபெற்ற . புத்தகச்சந்தையில் கிடைத்த புத்தகம் . படித்து முடித்த பின் , படித்த நாள்  முழுவதும் புத்தகத்தில் இருக்கும் கருத்தைப் பற்றி யோசிக்க வைத்த புத்தகம். புகழ்பெற்ற  ஆளுமைகளிடம், அவர்களின் கனவு ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் எனக் கேட்டு, அந்த புகழ் பெற்ற  ஆளுமைகளின் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொருவரின் கட்டுரையும்  தனித் தன்மையாக உள்ளது. எந்தக் கட்டுரையும் மற்றொரு கட்டுரையைப் போல இல்லை. சிலர் தங்கள் கனவு ஆசிரியரை வர்ணிக்க, பலர் தங்கள் அனுபவங்களைத்  தங்களை  ஆற்றுப்படுத்திய, வழி காட்டிய  ஆசிரியரை அடையாளம் காட்டக் கிடைத்த வாய்ப்பாக இக்கட்டுரைகளை ஆக்கியுள்ளார்கள். 
 
                                   முதல் கட்டுரையாளர் எழுத்தாளர் அசோகமித்திரன். அவர்  'பிஸினஸ் லைன் ' பத்திரிக்கையைச்சுட்டிக் காட்டி, அதில் 8க்கு 6 பேர், தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டியாக பள்ளி ஆசிரியரைத்தான் சுட்டுகின்றார்கள் என்பதனைச்சுட்டிக் காட்டுகின்றார்.

                                  எழுத்தாளர் பிரபஞ்சன் தனது கட்டுரையில் ' ஐயா , நான் தங்களுக்குக் கடன் பட்டவன் ' என்று தனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசைக் குறிப்பிடுகின்றார்.தமிழகத்துப் பள்ளிகளுக்கும், பிரெஞ்சுப் பள்ளிகளுக்குமான வேறுபாட்டைச்சுட்டிக் காட்டுகின்றார். ஏன் பிள்ளை படிக்கவில்லை என்று பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கேட்கலாம், அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள் பொறுப்பாய் என்று குறிப்பிடுகின்றார்.'என் தமிழ் ஆசிரியர் வணக்கத்திற்குரிய வித்வான் திருநாவுக்கரசு அவர்கள் ஒரு நாள் என் கட்டுரை நோட்டைப் பார்த்து, என்னை என்னிடம் இருந்த எழுதுகிறவனைக் கண்டு பிடித்தார். நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன்....ஆசிரியர்கள் என்பவர்கள்,  மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். வெளிகளின் காற்றை உங்களுக்கு நமக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஒளி தந்தவர்கள். அவர்கள் கைகளில் விளக்குகள்  இல்லை. அவர்களே தீபங்களாக இருக்கிறர்ர்கள், எரிகிறார்கள் ... " பக்கம் 16 . " கற்கத் தொடங்குகிறவன் மாணவன், கற்றுக்கொண்டே இருக்கிறவன் ஆசிரியன் " எனக் குறிப்பிடும் பிரபஞ்சனின் கட்டுரை ஆழமான விமர்சனங்களைக் கொண்ட கட்டுரை இத்தொகுப்பில்.

                               எழுத்தாளர்  பொன்னீலன் கல்வித்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிவர். தான் வியந்த ஆசிரியரையும் அந்தச்சூழலையும் அவர் விவரிக்கும் பாணி அலாதியானது,வியப்பூட்டக் கூடியது அந்த ஆசிரியரின் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு ஈர்ப்பாய்,ல்யித்து செயல்முறை மூலமாக கற்றுக்கொண்டார்கள் என்பதனை நன்றாக விவரிக்கின்றார். அவர் வியந்ததைச்சொன்னவுடன் நமக்கும் கூட அந்த வியப்பு தொற்றிக்கொள்கின்றது.. " இதுவரை சேமிக்கப்பட்ட அறிவைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள், அவற்றைத் தன் வயப்படுத்திக்கொண்டு , நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்து செயல்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள் " எனப் பொன்னீலன் குறிப்பிடுகின்றார் (பக்கம் 25) .

                                                               'கிள்ளுவது ,கொட்டுவது, பிரம்பால் அடிப்பது போன்ற கொடுமைகள் நான் பள்ளியில் படித்தபோது சர்வசாதாரணம். இன்று அது மிகவும் குறைந்து விட்டது'  எனச்சொல்லும் தியடோர் பாஸ்கரன், முன்னாள் அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்.  வன்முறை என்பது உடலளவில் வருத்துவது மட்டுமல்ல, வாய்ப்பேச்சு வன்முறையும் பயங்கரமானதுதான் என்பதனைச்சுட்டிக்காட்டி டில்லியில் தனது மகள் வகுப்பில் நடந்த நிகழ்வைச்சுட்டிக் காட்டுகின்றார். மேலும் " மக்களிடையே மத ரீதியில் ,மொழி ரீதியில் ,ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ,அவைகளை மதிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கலாம் அந்தப்புனித வாய்ப்பு அவர்க்ளுக்கு இருக்கின்றது " என்றும் குறிப்பிடுகின்றார்(பக்கம் 29).

                                                          தமிழ் இலக்கியத்தில் இளங்க்லை,முதுகலை பயின்று,இந்திய ஆட்சிப்பணியில் இருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் 'கடவுள் பதவிகள் காலியாய்க் கிடப்பது எதனால் ? ' எனும் கேள்வியைத் தலைப்பாக்கி தனது கட்டுரையைத் தந்துள்ளார். : "கற்பித்தல் என்பது ஒரு வகையில் கண்டுபிடிக்கும் கலை, கண்டுபிடிப்பில் உதவும் கலை, பலருக்கு தங்களின் பலம் எதுவென்று கூடத் தெரிவதில்லை. நல்ல ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களின் தனித்திறனை, பலத்தைக் கண்டுபிடிக்க உதவுகின்றார்கள். எனது சொந்த அனுபத்திலிருந்தே சொல்கிறேன். 'என்னை','எனக்கு','அடையாளம்' காட்டி 'அறிமுகம்' செய்து வைத்ததே எனது ஆசிரியர்தான். எனக்கு மேடையில் பேசும் திறமை உள்ளது என்று கண்டுபிடித்து ,என்னைப் பேசவைத்து, கைதட்டல், பரிசுகள் பாராட்டுக்கள் வாங்கிக் கொடுத்த அவரே என்னைக் கண்டு பிடித்த 'விஞ்ஞானி ' " எனக்குறிப்பிடுகின்றார்.ஆனால் அந்த ஆசிரியரின் பெயரை திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால் இவரை உருவாக்கிய ஆசிரியரின் பெயரையும் உலகம் தெரிந்திருக்கும்.

 " ஆசிரியப் பணி என்பது மற்ற எல்லா வேலைகளைப் போன்ற இன்னொரு 'வேலை' அல்ல. ஊதியத்தை மட்டும் கருதும் உழைப்பும் அல்ல. விரும்பிச்செய்வது, இன்னும் சொல்லப்போனால் விரும்புவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது(பக்கம் 32) எனச்சொல்லும் ஆர்.பாலகிருஷ்ணன் ஆசிரியப் பணியின் அடிப்படைகள், நல்ல ஆசிரியர் நல்ல மாணவர், நல்லாசிரியர் தாயுமானவர் , நல்லாசிரியரின் சமூகப்பொறுப்பு, நம்பிக்கையை விதைப்பவர், யார் கனவு ஆசிரியர் எனத் தலைப்புகள் கொடுத்து, ஒவ்வொரு தலைப்பிற்கு கீழும் தனது கருத்துக்களை கொடுத்துள்ளார். முடிவில் " எந்தப் பஞ்சத்தையும் இந்தப்பாரத  தேசம் தாங்கும். நல்ல ஆசிரியர்களுக்கான பஞ்சத்தைத் தவிர" என முடிக்கின்றார்.

                                                               'நல்ல ஆசிரியருக்கு அடிப்படை நல்ல மனிதராக இருப்பதுதான்' எனத் தன கட்டுரையில் குறிப்பிடும் பேரா. ச.மாடசாமி 'கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்ப்து முக்கியமானது ' எனத் தலைப்பிட்டு தனது கட்டுரையைத் தந்துள்ளார். அதற்கான எடுத்துக்காட்டுக்களாக  தான் பேராசிரியராக இருந்தபொழுது நடந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளார்.'எனக்குரிய இடம் எங்கே? ' என்று புத்தகத்தின் ஆசிரியர் பேரா.ச,மாடசாமியிடம் இன்னும் அதிகமாக நான் எதிர்பார்த்தேன். ஏமாற்றம்தான் எனக்கு.ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதனை பேரா,இரத்தின நடராசன் , இப்படி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தான் எண்ணும் 10 எண்ணங்களைப் பட்டியலிட்டு உள்ளார். பக்கம் (50-51) .

                                                              எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ' ஒவ்வொரு ஆசிரியரின் முகத்திலும் கனவு ஆசிரியரின் முகத்தைத் தேடுகிறேன் ' என்னும் தலைப்பிட்டு தனது கட்டுரையைக் கொடுத்துள்ளார். 'டோட்டோ ஜான் -ஜன்னலில் ஒரு சிறுமி என்கிற புத்தகத்தை வாசிக்காத ஆசிரியர் கனவு ஆசிரியராவது அப்புறம், ஓரளவுக்கு நல்ல ஆசிரியராகக்கூட இருக்க முடியாது " என்று கூறுகின்றார். பக்கம் 55. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நாம் கனவு ஆசிரியராகக் கூட நினைக்கமுடியாத ஒரு உண்மையான ஆசிரியரைப் பற்றிய ஜப்பான் மொழிப் புத்தகம் அது. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம். அதனை வாசித்திருப்பது ஒரு ஆசிரியருக்கான இலக்கணம் என்று அழுத்தம் திருத்தமாக இந்தப் புத்தகத்தில் கூறுகின்றார். 

என் கனவு ஆசிரியர் சாதி உணர்வு இல்லாதவராக ,எல்லாச்சாதி குழ்ந்தைகளையும் சமமாகப் பாவிக்கிறவராக அதே சமயம் சமூக நீதிப்போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவராக இருப்பார் என்று கூறும் ச.தமிழ்ச்செல்வன் அறிவியல் பாடம் எடுப்பவர் வெறும் அறிவியல் பாடம் எடுப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அறிவியல் மனப்பான்மை உள்ளவராக இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். மற்றவர்கள் யாரும் தொடாத கருத்துக்களை துணிந்து கூறும் கட்டுரையாக ச,தமிழ்ச்செல்வனின் கனவு ஆசிரியர் கட்டுரை உள்ளது கவனிக்கத்தக்கது.

                                                நாடகக் கலைஞர் பிரளயனின் கட்டுரை கல கல என அவரின் கடந்த் கால நிகழ்வுகளால் சிரிப்பும் சிந்தனையும் வரவைக்கும் கட்டுரை. அவருக்கு நான்காம்  வகுப்பு நடத்திய வடிவேலு வாத்தியார் சந்திர கிரகணம் பற்றி நடத்தியதையும், தமிழ்ப்பாடத்தின் பாடல் பகுதிகளை சொல்லித்தரும்போது 'தத்தகாரத்தோடு சொல்லித்தந்ததையும் நன்றாக ,சுவை பட விளக்கியுள்ளார். 'ட்ர்ர டும்ம டர்ரடும்/ டர்ர டும்ம டர்ரடும் எனப் பாடிக்கொண்டே வீட்டிற்கு போவோம் என்பதனைச்சொல்லும்போது , நாமே ஏதோ நாலாம் வகுப்பில் படித்துக்கொண்டு இந்தப் பாடலைப் பாடுவதுபோல ஓர் உணர்வு வருகின்றது. முடிவில் அன்று அவர் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர்கள்,சமூகம் இன்றைய காலத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ,சமூகம் பற்றிய ஒப்பீடும், மதிப்பீடும் மிக எதார்த்தமாக, நடைமுறைச்சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன.  

                                        எழுத்தாளர் பாமா, ஓர் ஆசிரியையாக இருப்பவர். தனது ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதுபோலத் தனது கட்டுரையை 'இந்த் டீச்சருகிட்ட அடிக்க மாட்டாங்க ' என்னும் தலைப்பில் கொடுத்திருக்கின்றார். தனது சிறுவயதுக் கனவு ஓர் ஆசிரியை ஆக வேண்டும் என்பதும் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று தனது ஆசிரியை பற்றிக் குறிப்பிடுகின்றார். தனது ஆசிரியை சொல்லிக் கொடுத்த சில பாடல்கள் இன்றும் நினைவில் இருப்பதாகக் குறிப்பிட்டு , அந்தப் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். சாதி அடிப்படையில் தன்னை இழிவுபடுத்திய தலைமை ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகின்றார். " என்னைப் பதப்படுத்திய உருவாக்கிய ஊக்கமூட்டிய பல ஆசிரியைகளின் கைவண்ணந்தான் இப்போது இருக்கும் இந்த 'நான்' .இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் ...." பக்கம் 81 என்று குறிப்பிடும் பாமா இத்தனைக்கும் ஆதிமூலமான உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்று தனது பல ஆசிரியர்களை நினைவுபடுத்தி அவர்களைப் பாமா வணங்குகின்றார்.
                    
                                         பத்திரிக்கையாளர் ஞாநி , 'நான் பள்ளி ஆசிரியனாக இருந்தால்' என்று தனது கனவு ஆசிரியரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். ' என்னைச்சுற்றியுள்ள இன்றைய உலகம் புத்திசாலி மனிதர்களின் அயோக்கியத்தனங்களாலும் , நல்ல மனிதர்களின் முட்டாள்தனங்களாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது " என்று குறிப்பிடும் ஞாநி, இந்த நிலையை மாற்றக்கூடியவர்கள் தன் வகுப்பறையில் இருப்பதாக தான் ஆசிரியராக இருந்தால் நம்புவேன்  என விவரிக்கின்றார்.  

                             இந்த கனவு ஆசிரியர் நூலில் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டுரை ஆயிஷா இரா, நடராஜனின் 'எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரை. நிறைய அறிவியல் நூல்களை இன்று எழுதும் நடராஜன் , தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக்காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்பதனை மிக்க நன்றி உணர்ச்சியோடும், உணர்வோடும் எழுதுகின்றார். ஆறாம் வகுப்பில் " என் வாழ்வின் மொத்த அர்த்தத்தையும் மாற்றித் திசை திருப்பும் பெரிய சக்தியாக அங்கே போன மூன்றாம் நாள் பெரியசாமி சார் அறிவியல் ஆசிரியராய் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தார் ' என்று விவரிக்கும் இரா.நடராஜனின் கட்டுரை இன்றைய அறிவியல் ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

                    ஓவியரான டிராட்ஸ்கி மருது 'அப்பாதான் எனது கனவு ஆசிரியர்' என்று தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். 'உலகம் மிகப்பெரிய வகுப்பறை ' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தனது எண்ண ஓட்டங்களை வாசகர்களிடம் தெரிவிக்கின்றார். 'பொறுமைதான் ஆசிரியருக்கான அடிப்படைப் ப்ண்பு ' எனச்சொல்லும் எஸ்.இராமகிருஷ்ணன், 'கற்றுக்கொள், கற்றுக் கொடு,கற்றதை செய்ல்படுத்து ' என்று குறிப்பிடுகின்றார்.

                                   ஆயிஷா இரா.நட்ராசன் தன் அறிவியல் வாத்தியாரைச்சொல்லி  கலக்குகிறார் என்றால் எழுத்தாளர் த.வி.வெங்கடேஸ்வரன் தனது கணக்கு வாத்தியாரைச்சொல்லி கலக்குகிறார். த.வி.வெங்கடேஸ்வரன் தனது உயர் நிலைப்பள்ளி கணித ஆசிரியர் சங்கரன் சார் பற்றி ' காதலைத் தூண்டி விட்ட எனது கணித ஆசிரியர் '  என்னும் கட்டுரையை எல்லோரும் படிக்க வேண்டும். புதுமையான, எளிமையான சங்கரன் சார் அவர்கள் கணிதப்பாடத்தை நடத்திய விதம் அறியவாவது நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.

                                         " அந்நிய சூழல், அன்பற்ற ஆசிரியர்கள்,கழுத்தை அறுக்கும் போட்டி, தலைசுற்றும் வீட்டுப்பாடம், நாளொரு தேர்வு என்று அவர்கள் (மாணவர்கள்) வெளியே வரத் தெரியாத மாயப்பாதையில் மாட்டிக்கொண்டு அவதியுறுகிறார்கள்.குழ்ந்தைகளின் படைப்பாக்கத்திறன் மிக நேர்த்தியாக நசுக்கப்பட்டு அவர்கள் நெஞ்சங்களில் தங்கப்பதக்கங்கள் தவழ்கின்றன.அவர்களின் கருத்துக்கள் குருத்துக்களிலேயே வெட்டப்பட்டுவிடுகின்றன" பக்கம் 118 என்று கூறும் வெ.இறையன்பு இலட்சிய ஆசிரியர்களுக்கான 10 படிகளை வரிசைப்படுத்திக்கூறுகின்றார்.

                                            எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராசா 'நீங்களும் மருதமுத்து அய்யாவாக விரும்புகிறேன் ' என்று தனது கட்டுரை தலைப்பையே தனது ஆசிரியர் பெயரால் கொடுத்திருக்கின்றார். தனது தந்தை, தாய். ..பள்ளி இறுதித்தேர்வில் தோல்வி ...,அதற்காக கலங்கிய தன் தந்தையின் கண்களும், அதன் தொடர்ச்சியாக தூக்கம் தொலைத்த இரவுகளும் என விவரித்துச்செல்கின்றார். மருதமுத்து அய்யா போதித்த தமிழுணர்வு, பகுத்தறிவு,பொதுவுடமை மட்டுமல்ல , நீ பின்னாளில் எழுத்தாளனாகவோ,பேச்சாளனாகவோ வருவாய் எனும் கணிப்பு போன்றவற்றை எழுதிச்செல்லும் கீரனூர் ஜாகீர்ராசா தன் வாழ்வின் நிகழ்வுகளை முன்னிறுத்தி எழுதியுள்ள கட்டுரை எதார்த்தமாக உள்ளது. எழுத்தாளர் பவா.செல்லத்துரையின் கட்டுரை பல கசப்பான அனுபங்களையும் , பல ஆசிரியர்களின் இழிவுகளை  தன் எளிய கம்பீரத்தால் துடைத்த தனது ஆசிரியர் எ.அ.ஜெயக்குமார் பற்றிக் குறிப்பிடுகின்றார். முடிவில் இந்தப் புத்தகத்தின் தொகுப்பு ஆசிரியர் க.துளசிதாசன் அவர்களின் கட்டுரையும் முடிவில் ஆப்ரஹாம் லிங்கன் தனது மகன் படித்த தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

                                                        சில கட்டுரைகளை மிக விரிவாகப் பேசலாம். குறிப்பாக ச.தமிழ்ச்செல்வன், ஆயிஷா இரா.நடராசன், த,வி,வெங்கடேஸ்வரன், கீரனூர் ஜாகீர்ராசா ஆகியோரின் கட்டுரைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் பல பக்கங்கள் எழுதலாம் .விவாதிக்கலாம். இந்தப் புத்தகத்தை வாங்கி வீட்டில் கட்டாயம் வைத்திருங்கள். படியுங்கள். கண்ணில் படுகின்ற ஆசிரியர், ஆசிரியைகளிடம் கொடுத்து படிக்கச்சொல்லலாம். இந்தப் புத்தகத்தின் சில கட்டுரைகளை ஆசிரியர்களுக்குப்பாடம் எடுப்பவர்களிடம் கொடுத்து விவாதிக்கச்சொல்லலாம். பல ஆண்டுகள் கழிந்த பின்னும் மாணவர்களின் மனதில் மாமனிதர்களாய் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் குண நலன்கள் என்ன என்பதனை உணரச்செய்யலாம். ( அகில இந்திய வானொலி- புத்தக அறிமுகத்திற்காக எழுதியது  )
.

                                                             




                               

                                       

6 comments:

இராய செல்லப்பா said...

முழு புத்தகத்தையும் படிப்பதைவிட உங்கள் அறிமுகத்திலிருந்தே எங்களுக்கு விருந்து கிடைத்துவிடும் போலிருக்கிறதே! சிறப்பான அறிமுகம்.- இமயத்தலைவன்

முனைவர். வா.நேரு said...

அய்யா, மிக்க நன்றி !தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா அருமை. முழு புத்தகத்தையே படித்தது போன்ற ஓர் உணர்வு

முனைவர். வா.நேரு said...

நன்றி , நன்றி தங்களின் உளமார்ந்த பாராட்டுக்கு. கரந்தை என்ற்வுடன் பெரியார் பேருரையாளர் ,எங்கள் அய்யா புலவர் ந.இராமநாதன் ,அவர்களின் ஞாபகம்தான் வருகின்றது. புரட்சிக் கவிஞர் பாடல்களுக்கும், தந்தை பெரியார் உரைகளுக்கும் சொல் , சொல்லாய் பொருள் சொல்லும் பேராசிரியர் அவர். நன்றி.

Chitradevivelusamy said...

புத்தகம் பூராவும் எழுதீட்டீங்க போல. ஒவ்வொருவருக்குள்ளும் ஆசிரியர் எனப்படுபவருக்கான விடைகள்..
அருமை.அருமை

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் தங்கையே...படித்து கருத்து பகிர்ந்தமைக்கு...