Friday 27 February 2015

அண்மையில் படித்த புத்தகம் : மாப்பசான் சிறுகதைகள்-புலவர் சொ.ஞானசம்பந்தன்

அண்மையில் படித்த புத்தகம் : மாப்பசான் சிறுகதைகள்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்        : புலவர் சொ.ஞானசம்பந்தன்
வெளியீடு                                  : கமலகுகன் பதிப்பகம்,மேடவாக்கம், சென்னை -302. பேசி : 22530954
முதல் பதிப்பு                             : 2007 , 248 பக்கங்கள் , விலை ரூ 110
மதுரை மைய நூலக எண்       : 180152

                                                          உலகப்புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் மாப்பசான் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அவருடைய சிறுகதைகள் நிறையப்படித்ததில்லை. 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கும் மாப்பசானின் சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்திருக்கின்றார்கள்.

                                             அச்சம் என்ற சிறுகதை முதல்கதை. ஒரு கொலையைச்செய்துவிட்டு பயந்து போயிருக்கும் ஒருவனின் குடும்பமே அச்சத்தில் உறையும் கதை. கடைசியில் நாயை ஆவி என நினைத்து சுட்டுக்கொல்லும் கதை. திகில் கதை போல உள்ளகதை. பிள்ளை(யின்) பாசம் என்னும் கதை , இரண்டு பிள்ளைகள் இரண்டு ஏழைக் குடும்பங்களில், ஒரு பணக்காரக்குடும்பம் முதல் குடும்பத்தில் வந்து தத்து கேட்க, முடியாது என்று திட்டி விரட்டிவிடுகின்றார்கள் பெற்றோர்கள். இரண்டாவது குடும்பத்தில் மாதம் மாதம் பணம் பெற்றுக்கொள்ள இசைவு தெரித்து பிள்ளையைத் தத்து கொடுத்து விடுகின்றார்கள். 25 வருடம் கழித்து, தத்து கொடுக்காமல் வளர்த்த மகன், தத்து கொடுத்த பக்கத்து வீட்டுப்பையனின் செல்வச்செழிப்பைப் பார்த்து, 'முட்டாள்களே ' என்று பெற்றோரைப் பார்த்து திட்டுவதாக வரும் கதை, பார்வை மாறுபடும் விதம் அருமை.

                        இரவல் வாங்கும் நகையால் ஏற்படும் துன்பம் பற்றிய கதையான ' நெக்லஸ் ' ஏகப்பட்ட பட்டிமன்றங்களில் கேட்ட கதை. ஆனால் இதன் ஒரிஜனல் உரிமையாளர் மாப்பசான் என்பது இப்போதுதான் தெரிகிறது. இரவல் நகையை வாங்கித் தொலைத்துவிட்டு, ஒரிஜினல் நகையை கடன்பட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு, 10 ஆண்டுகளாக உழைத்து கடனை அடைக்கும் நேரத்தில் இரவல் வாங்கிய நகை கவரிங் நகை என்று தெரிவதாக வருகின்றது . நல்ல வருணனை உள்ள கதையாக உள்ளது. அப்பா பெயர் தெரியாமல் , பலரிடம் இழிவுப்பேச்சு வாங்கும் சிமோனுக்கு, அப்பாவாக பிலிப்ரெமி என்பவர் கிடைப்பதைப் பற்றிக்கூறும் 'சிமோனின் அப்பா' கதை என்னவென்றே தெரியாமல் சிறுவயதில் இழிவு படும் சிமோனை விவரிக்கின்றது. உளரீதியாக சிமோன் படும் வேதனைகளை மிக நன்றாக விவரித்துள்ளார்.

                     பழைய பகையால் , அநியாயமாக திருடன் எனப் பழிசுமத்தப்படும் ஓஷ்கோர்னே என்னும் கதாபாத்திரம் , கடைசிவரை அந்தத் திருடன் என்னும் பழியைத் துடைக்கமுடியாமல் புலம்பியே சாகும் ' கயிறு ' என்னும் கதை , அப்படி நோய் வந்து விடுமோ இப்படி நோய் வந்து விடுமோ என்று பயந்து பயந்து சாகும் பனார் என்னும் கதாபாத்திரம் பற்றிச்சொல்லும் ' ஆரோக்க்கியப் பயணம் ' என்னும் கதை நல்ல கிண்டலும் கேலியும் கலந்த கதை. இன்றைக்கும் இக்கதை பொருந்தும். எச்சரிக்கை என்ற பெயரில் படாதபாடு படுத்தும் மனிதர்களைப் பற்றிய கதை.

                       குடும்பத்தை விட்டு வெகுதூரம் போன சித்தப்பா ழுய்ல் , பெரிய பணக்காரனாக ஊருக்கு வருவான் என்று நம்பிக்கொண்டிருந்த வேலையில் , பக்கத்து தீவுக்குப்போன இடத்தில் பிச்சைக்காரக் கோலத்தில் பார்த்துவிட்டு தன் தந்தையும் ,தாயும் சித்தப்பாவைத் தெரியாதவர்கள் போல வந்து விட பொருளை வாங்கிக்கொண்டு இனாமாகப் பணமும் சித்தப்பாவுக்கு கொடுத்துவிட்டு வரும் சிறுவனின் கதை. மனிதர்கள் பொருள் இல்லையென்றால் எவ்வளவு மதிப்பிழந்து போவார்கள் என்பதைச்சொல்லும் கதை.' சிற்றப்பா ழுய்ல் '. கஞ்சத்தனம் பிடித்த மனைவியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஒரேயின் கதை சொல்லும் 'குடை ' கதை போன்றவை நல்ல நையாண்டி கதை.

                                      பாதிரியார்களின் பொய்மைகளைத் தோலுரிக்கும் ' நார்மாண்டிப் பாதிரியார்' , போர் வீரனின் அச்சத்தைச்சொல்லும் ' வால்ட்டரின் கனவு ', சாகக்கிடக்கும் தாய்க்கு துணையாக ஆளை அமர்த்தும் மகன், வேலைக்காரியாக வந்த பெண்ணும் மகனும் போடும் பொருளாதாரக்கணக்கு, பொருளாதாரக்கணக்குப்போட்டு 'பேய்' வேசம் போட்டு கிழவியைச்சாகவைக்கும் கதை சொல்லும் 'பேய் ' போன்ற கதைகள் இன்றைக்கும் கூடப்பொருந்தும்.

                            'சிறுமி ரோக்கு ' என்னும் கதை, ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று விட்ட ஊர்ப்பெரியவர், மேயர் தன்னுடைய பேச்சுத்திறனால் , நடிப்பால் அந்தக் கொலையை யார் செய்தார் என்பதே தெரியாமல் மறைத்துவிடுகின்றான். ஆனால் எல்லாம் முடிந்த பிறகு கொல்லும் அவனது மனச்சாட்சியால் பீதியடைந்து நித்தம் நித்தம் செத்துப்பிழைத்து, கடைசியில் தற்கொலை செய்து கொளவதாக வரும் கதை.

                               மன ரீதியாக ஏற்படும் அச்சம், உள்ளத்தில் ஏற்படும் குழப்பம், நடுக்கம் , இயலாமை, சாப்பாடு இல்லாமல் படும் பாடு, பசியை ஆற்ற திருடிக்கூட சாப்பிடும் கதாபாத்திரங்கள், பணக்காரர்கள் மற்றும் பாதிரியார்களின் வேடங்களை வெளிக்காட்டும் கதாபாத்திரங்கள் என இருக்கின்றன. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதைகள். அன்றைய சூழல், நம்பிக்கைகள்  போன்ற பலவற்றையும் தாண்டி இன்றைக்கும் படிக்கக்கூடிய கதைகளாக இருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்பும் நன்றாக உள்ளது. கதை ஓட்டம் எந்தவிதத்தடங்கலும் இல்லாமல், தமிழ் எழுத்தாளர் கதைபோலவே ஓடுவது  மொழிபெயர்ப்பாளர் புலவர் சொ.ஞானசம்பந்தன் அவர்களின் வெற்றி எனலாம். இந்தக் கதைகளைப் படித்தபிறகு, மாப்பசானை முழுவதுமாகப்படிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது. பிரெஞ்சு மொழி தெரிந்தால், மூல மொழியிலேயே மாப்பசானை படிக்கலாமே என்ற எண்ணமும் பிறக்கின்றது.

Wednesday 25 February 2015

படித்த செய்தியில் பிடித்த செய்தி (1) : கற்றதனால் ஆய பயனென் கொல்

படித்த செய்தியில் பிடித்த செய்தி (1) : கற்றதனால் ஆய பயனென் கொல்

கல்வியின் அவசியத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் 10 அதிகாரத்தில் தெளிவு படுத்தியுள்ளார்.  உலக நாகரிக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் கல்வி அறிவு வளர வளர நாகரிகமும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அய்ரோப்பிய கண்டங்களில் கல்விமுறை, அந்த மக்களை மேலும் மேலும் அறிவுடை யோராக மாற்றியது இது சுபாஷ் சந்திர போஸ் ஆஸ்திரியாவில் மருத்துவ சிகிச் சைக்காக தங்கி இருந்தபோது கூறியது.   அப்படி என்னதான் இருக்கிறது அய்ரோப்பிய கல்விமுறையில்? உலக அளவில் கல்வியின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுவது  பின்லாந்து தான். அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலை யில் இருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Oced-Organisation for economic co-operation and Development) என்பது வளர்ச்சி யடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப் போது நடைபெறும். இதற்கு - - PISA-Programme for International Students Assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள் ளலாம். இந்த ஆய்வில் பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது.

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கு கிறது. சுமார் 6 வயது வரையில் ஆன அனைத்து காலமும் கற்றலுக்கான துடிப் புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ் சிறு மூளை, தனது சுற்றுப்புறத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது.

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தைக்கு கல்வியுடன் இசை, ஓவியம், விளையாட்டு, என அவரவர்களுக்கு பிடித்தமான பாடங்களைத் தேர்ந் தெடுத்து படிக்க முழு சுதந்திரம் உண்டு. பெற்றோர்கள்  தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும் பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப் பித்து தெரிந்து கொள்ளலாம்.

1. கற்றலில் போட்டி கிடையாது என்ப தால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர் களுக்கு இல்லை.

2. சக மாணவர்களைப் போட்டியாளர் களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.


3. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப் படுவது இல்லை.

5. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத் துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.


6. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.


7. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்.  அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக  பின்லாந்தில் 99 சத விகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வி யைப் பெற்றுவிடுகின்றனர்.


8. அதில் 94 சதவிகிதம் பேர் உயர் கல்விக்குச் செல்கின்றனர். பயிற்சி வகுப்பு கள், சிறப்பு வகுப்புகள் போன்றவை பின் லாந்து கல்வி முறையில் கிடையாது.


9. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உல களாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக் கின்றனர். இது எப்படி என்பது கல்வி யாளர்களுக்கே பெருங்கேள்வியாக எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடை தேட அய்.நா சபை ஆய்வு ஒன்றை நடத்தியது.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, அய்க்கிய நாடுகள் சபை ஒவ் வோராண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.

உல கின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதி நிதிகள் ஒவ்வோராண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிச மான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின் லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, சமூகத்தில் மிகுந்த மதிப்பு உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவு களில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்குண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம்.  பள்ளிக்காலங்களில் இருந்தே தனக்கான தகுதிகளை வளர்த் துக்கொள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழு உரிமை உண்டு.  பின்லாந்தின் கல்வி முறையின் தாக்கம். டென்மார்க், ஆஸ் திரியா, சுவிசர்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மன், நார்வே,ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படு கிறது.   இப்பொழுது புரிகிறதா அவர்கள் கற்றதனால் எழுந்த பயன் என்னவென்று
: சரவணா ராஜேந்திரன்
நன்றி : விடுதலை 22.02.2015



Read more: http://www.viduthalai.in/page1/96684-2015-02-22-10-29-45.html#ixzz3SfdV45Bf

Monday 23 February 2015

நிகழ்வும் நினைப்பும் (35) : வாசிப்போர் களத்தின் சிறப்புக் கூட்டம்

மு.சங்கையா 
நிகழ்வும் நினைப்பும் (35) : வாசிப்போர் களத்தின் சிறப்புக் கூட்டம்

சுப.முருகானந்தம்
வி.பாலகுமார்
 கவிஞர் க.சமயவேல் 

 க.தெய்வேந்திரன்
சு.கருப்பையா 





                              மதுரை பி.எஸ்.என்.எல். வாசிப்போர் களத்தின் சிறப்புக்கூட்டம் 21.02.2015 மாலை 6 மணியளவில் மதுரை அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஸ்டார் ரெசிடன்சியில் ரிஷ்வாந்த் ஹாலில் நடைபெற்றது. தோழர்கள் மு.சங்கையா. சு.கருப்பையா, வி.பாலகுமார் என்று பலரின் முயற்சியால் நடைபெற்ற சிறப்புக்கூட்டம் என்றாலும் , முழு முயற்சியாக இதற்கு பல வேலைகளைச்செய்து  நடத்தியே தீருவது என்று செயல்பட்டவர் திரு க.தெய்வேந்திரன்(SDE )  அவர்கள். SNEA தொழிற்சங்கத்தின் மாவட்டச்செயலாளர் அவர், திரு. க.தெய்வேந்திரன் மிகச்சிறந்த பேச்சாளர் என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அதனைவிட மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர் (Organiser) அவர். மனிதர்களுக்கிடையே உள்ள வேற்றுமையை ஒதுக்கித்தள்ளிவிட்டு, மிகவும் நேர்மறையாக அணுகக்கூடியவராக அவரை நான் உணர்கின்றேன்.எப்போதும் சிரித்த முகமும், உதவ நீளும் கரங்களும்  , மனிதர்களை இணைக்கும் மனமும் உடையவராக இருக்கும் க.தெய்வேந்திரன் வாசிப்போர் களத்தின் மூலமாக கிடைத்த மிகப்பெரிய நட்பு  எனக்கு.அதனைப்போலவே திரு.வி.பாலகுமார் அவர்களும். அண்ணன் சு.கருப்பையா அவர்களை 30 ஆண்டுகளாக அறிவேன், அதனைப்போலவே தோழர் மு.சங்கையா அவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானவர்.   எனக்கு(வா. நேரு ) 'சூரியக்கீற்றுகள்' கவிதை தொகுப்பிற்காக பாராட்டையும், கவிஞர் க.சமயவேல் அவர்களுக்கு அவருடைய ' பறவைகள் நிரம்பிய முன்னிரவு ' என்னும் கவிதைத்தொகுப்பிற்காகவும் நடந்த பாராட்டு விழா என்றாலும் பலரும் தங்கள் இணையரோடு வந்து கலந்து கொள்ள ,  சிறப்புக்கூட்டம் ஒரு குடும்பவிழாவாகவும் அமைந்தது மகிழ்ச்சி.

Sunday 22 February 2015

நிகழ்வும் நினைப்பும் (34) : நீயா நானா ? 22.02.2015 நிகழ்ச்சி -விஜய் டி.விக்கும் , திரு. கோபிநாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள் :

நிகழ்வும் நினைப்பும் (34) :   நீயா நானா ? 22.02.2015 நிகழ்ச்சி -விஜய் டி.விக்கும் , திரு. கோபிநாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள் :

                     நீயா நானா நிகழ்ச்சியை 'திருக்குறள் பற்றித்தெரியுமா உங்களுக்கு ? ' என்னும் தலைப்பில் நடத்திய விதம் அருமை. திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய்ச்  சேர்த்தது திராவிட இயக்கங்கள்தான் என்பதனை மிக அழுத்தம் திருத்தமாக முன்னுரையில் திரு கோபிநாத் கூறினார்.நன்றி கோபிநாத் அவர்களே நன்றி, உண்மையை உரக்கச்சொன்னதற்கு . அன்று முதல் இன்று வரை தந்தை பெரியார் முதல் இன்று வாழும் டாக்டர் கலைஞர், ஆசிரியர் அய்யா  கி.வீரமணி அவர்கள்  வரை அவர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த இலக்கியமாக திருக்குறள்தான் இருக்கிறது.திருக்குறளை விரும்பாத திராவிடர் இயக்கத்தவர் எவரும் கிடையாது.அழகியல், கருத்தியல், இன்றைய தேவை எனப் பல வினாக்களோடு மாணவர்கள், ஆசிரியர்கள் , பல துறை சார்ந்தவர்கள் எனத் திருக்குறளை விரும்புகிறவர்களை எல்லாம் ஓரிடத்தில் அமரவைத்து , அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்த தன்மை மிக நன்றாக இருந்தது.

  உங்களுக்குப் பிடித்த திருக்குறள் உவமை என்ன என்னும் வினாவிற்கு  பங்கு பெற்ற ஒவ்வொருவரும் மிகவும்  நுட்பமாக  பதிவு செய்தனர்.  "நீட்டலும் மழித்தலும் வேண்டா" என்னும் உவமையை ஒருவர் அழகாகச்சொன்னார். பசியின் கொடுமை பற்றிச்சொல்லும் குறளை ஒரு தோழியர் கூறினார். திருவள்ளுவர் காலம்  முதல் இன்றுவரை பசிதான் பிரச்சனை என்பதனை "நெருப்பில் தூங்கினால் கூடத்தூங்க முடியும், பசியினால் தூங்க முடியாது." என்பதையும் "நேற்று வந்த பசி ,இன்று வந்து விடுமோ " என்று பயப்படுதலையும் குறிப்பிட்டார். ஒரு உவமைப் படுத்தப்படுகிற உவமை. எனச் சுட்டியது  அருமை ."இளைதாக முள்மரம் கொல்க..",அம்பு நேராக செம்மையாக இருக்கிறது. யாழ் பார்க்க அழகானது .அம்பு கொல்லும், யாழ் இனிமை கொடுக்கும் , அழகாக இருக்கிறது கெடுதல் செய்யலாம், தாறுமாறாக இருப்பது நல்லது செய்யலாம் " என்பது போன்ற கருத்துக்கள் வந்தன.

                 காமத்துப்பாலைப் பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை கூறினர். அதுவும் இளம்பெண் ஒருவர்(கயல்)  ஊடல் பற்றியும் கூடல் பற்றியும் சொல்லும் கடைசித்திருக்குறளை மிக நன்றாக கூறினார். நான் சைட் அடிக்கும்போது உணர்ந்தது என்று ஒருவர் " யான் நோக்குங்கால் " என்னும் குறளைக் கூறினார். காமத்துப்பாலில் உள்ள "ஒரு கண் நோய், மற்றொன்று நோய் தீர்க்கும் மருந்து." என்பதை ஒருவர் நாணத்தோடு குறிப்பிட்டார். திருக்குறளில் திருவள்ளுவர் காமத்துப்பால் எழுதும்போது பெண்ணாகிவிடுகின்றார்.மிகவும் உளவியல் சார்ந்து எழுதியுள்ளார் என்றார் ஒருவர்.
         உங்கள் வாழ்க்கையில் மிகவும் கவர்ந்த குறள் அல்லது நீங்கள் கடைப்பிடிக்கும் ஒரு குறள் என்ற வினாவும் அதற்கான விடையும் மிகவும் ஈர்ப்பாக இருந்தது. "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்" என்னும் குறளை குறிப்பிட்டு இன்றைய ஆளுமைத்திறன் வகுப்புகளில் எடுக்கப்படும் - மன வலிமை பற்றிக் குறிப்பிட்டார். ' இடிப்பாரை இல்லா ..." " சொலல் வல்லன் சோர்விலான்" , 'உவப்பத்தலைக் கூடி உளப்பிரிதல்' ' பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ' போன்ற குறள்களின் விளக்கங்களைச்சொன்னார்கள்.

               அறம் பற்றிய விளக்கம் ஒவ்வொருவரும் சொன்னார்கள் . கன்பூசியஸ் கருத்தோடு ஒப்பிட்டு ஒருவர் சொன்ன " ஈன்றா: பசி காண்பாள் ஆயினும் " விளக்கம் அருமை. நட்பு பற்றிய விளக்கம் , 50 குறள்கள் நட்பிற்கு என்னும் விளக்கம் போன்றவையும் உரையாடல்களில் வந்தது. ஒரு இளைஞர் " அழுக்காறு  அவா வெகுளி இன்னாச்சொல் நான் கும்
இழுக்கா இயன்றது அறம் : என்பதற்கு விளக்கம் தந்தார்.  டால்ஸ்டாய் கடிதம் மூலம் காந்தியடிகள் திருக்குறளின் பெருமையை அறிந்ததை,-தமிழைப்படிக்க விரும்புகிறேன் என்று காந்தியடிகள் சொன்னது ஏனென்றால் திருக்குறளை மூலமொழியில் படிக்க விரும்புகின்றேன். திருக்குறளின் அறம் என்பது ரிலேட்டிவ் சிந்தனை , திருக்குறளின் ஒட்டுமொத்த சிந்தனையே  ரிலேட்டிவ் என்று
சொன்னவிதம் அருமையாக இருந்தது.  

                     திருக்குறள் கூறும் அரசியல் பற்றிச்செய்திகள், தந்தை பெரியாருக்குப் பிடித்த குறளான "குடி செய்வார்க்கு இல்லை பருவம்" என்னும் குறளின் விளக்கம் .  பெண் என்று வரும்போது -பாலியல் சமம் என்று வரும்போது  சில குறளின் கருத்தினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்னும் பெண்ணிய எழுத்தாளரின் கருத்து வந்தது.

                 இன்றைய சூழலில் திருக்குறளின் தேவை, பொருட்பாலில் பிடித்த குறள் பற்றிய பகிர்தல். திருக்குறள் என்பது ஒரு நிராயுத பாணியின் ஆயுதம் என்றார்  மோகன் . ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தில் இருக்கிறது என்று எல்லோரும் சொல்ல, " வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்பதனைச்சொல்லி உள்ளத்தனையது உயர்வு,கேட்டலின் சிறப்பு

                " 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒளி. பெருமித உணர்ச்சி. " என்றார் ஒருவர்.மனதிலும் ,மூளையிலும் குண்டு வெடிப்பதைப்போல வெடிக்கக்கூடியது திருக்குறள். தன்னைச்சுற்றி இருக்கும் பல சங்கிலிகளில் இருந்து வெளியே வருவான் என்றார் ஒருவர். எந்த மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியில் படிப்பவரை திருக்குறள் மாற்றும் என்றார். திருக்குறள் ஆய்வு இருக்கைகள் பற்றிய செய்தி. குறளுக்கு அபிநயம் பிடித்தார் ஒருவர். புதுமையாக இருந்தது. .  திருக்குறள் எண்ணைச்சொன்னவுடன் , திருக்குறளை அழகாகச்சொன்னார் எல்லப்பன். வாழ்த்துக்கள்
                     மிக நல்ல நிகழ்ச்சி. ஊடகங்கள் இப்படியெல்லாம் பயணிக்குமா ? இப்படியெல்லாம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நெகிழ வைத்த நிகழ்ச்சி. உளமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் திரு.கோபிநாத் அவர்களுக்கும் , விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் ,மிக ஈடுபாட்டோடு கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும். 

Thursday 19 February 2015

நிகழ்வும் நினைப்பும் (33): உழைக்கத்தானே வேண்டும் ......

நிகழ்வும் நினைப்பும் (33): உழைக்கத்தானே வேண்டும் ......
மதுரை அகில இந்திய வானொலி நிலையம் - 28.02.2015 சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு புத்தக விமர்சனம் பகுதியில் " :கனவு ஆசிரியர்".   என்னும் புத்தகம் விமர்சனத்திற்கு என்னால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாசிரியர் திரு. க. துளசிதாசன். வெளியிட்டவர்கள் : புக்ஸ் பார் சில்ரன் -பாரதி புத்தகலாயத்தின் ஓர் அங்கம் ,சென்னை-18  முதல் பதிப்பு: மே 2012  விலை ரூ 90 - மொத்த பக்கங்கள் : 144. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களுள் ஒன்றான இந்தப்புத்தகத்தின் விமர்சனத்தை வாய்ப்பிருந்தால் கேட்டுப்பாருங்கள். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பிரபஞ்சன், பொன்னீலன், பேரா.ச.மாடசாமி, ச.தமிழ்ச்செல்வன், பாமா, ஞாநி, ஆயிஷா இரா.நடராசன், த.வி.வெங்கடேஸ்வரன்,ஜாகீர் ராசா, பவா.செல்லத்துரை ஓவியர் டிராட்ஸ்கி , வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.,ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ,பேரா.இரத்தின நடராசன், நாடகக் கலைஞர் பிரளயன் போன்றோரின் கட்டுரைகளை எனது பார்வையில் சுருக்கமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கின்றேன். கேட்டுப்பாருங்கள், கேட்டுவிட்டு முடிந்தால் கருத்தைச்சொல்லுங்கள் எனக்கு.

                             புத்தக மதிப்புரை , 4 புத்தகங்களை ஒன்றாக , ஒரே நேரத்தில் பதிவு செய்ய பேச வேண்டியிருக்கிறது என்று என் மகளிடம் சொன்னேன். நல்லதுதானே அப்பா , என்றார் என் மகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்றேன் நான் . என் மகள் சிரித்துவிட்டு, அப்பா, தொலைக்காட்சி பேச்சைப் பதிவு செய்வதைப் பற்றி சொல்லியிருக்கின்றீர்களே, மறந்து விட்டீர்களே என்றார். என்ன ? என்றேன். அய்யா சுப.வீ அவர்கள் கலைஞர் டி.வி.யில் பேசுவது, இறையன்பு சார் புதுயுகம் டி.வி.யில் பேசுவது, அய்யா கு.ஞானசம்பந்தன் ஜெயா டி.வி.யில் பேசுவது எல்லாம், ஒரே நாளில் உட்கார்ந்து பேசிப்பதிவு செய்து  பத்து நாட்கள், பதினைந்து நாட்களுக்கு பேசி விடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றீர்கள். அவர்கள் 10 நாட்கள், பதினைந்து நாட்களுக்கு பேசுவதை ஒரே நாளில் பேசி விடுகின்றார்கள், நீங்கள் ரேடியோவில் நாலு நாட்களுக்கு பேசுவதை ஒரே நாளில் பேசமாட்டீர்களா ? , ஊடகத்தில்  பேச வேண்டும் என்றால் உழைக்கத்தானே வேண்டும் என்றார். ஆமாம் என்று சொல்லிவிட்டு நான் அமைதியாகி விட்டேன். பிள்ளைகளிடம் ரொம்ப விரிவாகப் பேசக்கூடாது போல....

Sunday 15 February 2015

அண்மையில் படித்த புத்தகம் :' மஞ்சத்தண்ணி ' சிறுகதைத் தொகுப்பு-உரப்புளி நா.ஜெயராமன்.

அண்மையில் படித்த புத்தகம் :'  மஞ்சத்தண்ணி ' சிறுகதைத் தொகுப்பு .
ஆசிரியர் உரப்புளி நா.ஜெயராமன்,....9486101986
பதிப்பகம் : அட்சயா பதிப்பகம், பரமக்குடி.
வெளியிடப்பட்ட ஆண்டு மார்ச். 2014.
மொத்த பக்கங்கள்                           :   128 விலை  ரூபாய் 70
                                                  இத்தொகுப்பின் ஆசிரியர் திரு உரப்புளி நா.ஜெயராமன் தொலைபேசித்துறையில் 1971-சேர்ந்து, 2012-ல் பரமக்குடியில் சப்-டிவிசனல் என்ஜீனியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். 1971-முதல் 2011 வரை ஒரு நாற்பதாண்டு காலத்தில் அவர் எழுதிய கதைகளுள் பதினொன்றைத் தேர்ந்தெடுத்து இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
"கதை சொல்வதும் , கதை கேட்பதும் மனித குலத்தின் இயல்பு. தத்தம் காலத்திற்கேற்பக் கதை சொல்வதும், கேட்பதும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். நண்பர் திரு. நா.ஜெயராமன் சமுதாயத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதுவதிலும் , சமுதாயம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் காட்டி விழிப்பூட்டுவதிலும் , தீர்வுகளைக் காட்ட முயற்சிப்பதிலும் முற்பட்டிருப்பதை இச்சிறுகதைத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது" என அணிந்துரையில் முனைவர் மு.அருணகிரி குறிப்பிட்டுள்ளார்.

" வாழ்வு எப்போதும் புதிரும் , புன்னகையும் நிரம்பியதாகவே இருக்கிறது. புதிர்களின் வழி விழுகிற முடிச்சுக்களின் அதிர்வுகளும், புன்னகையின் ஊடே மிளிர்கிற சந்தோஷங்களுமாய் நம்மைக் கைப்பிடித்திருக்கிற வாழ்வை, படைப்புக்களின் வழியாக தரிசிக்கக் கிடைக்கிற தருணங்கள் எல்லாம் மகத்துவமிக்கதாக மாறி விடுகின்றன. உரப்புளி நா. ஜெயராமன் அவர்களின் இத்தொகுப்புக் கதைகளைப் படிக்க நேர்ந்த தருணமும் , எனக்கு அவ்வாறகத்தான் அமைந்தது " , " தினமும் மக்களைச்சந்திக்கும் தொலைபேசித்துறையில் பணியாற்றியவர் என்பதால் , எழுதுவதற்கான விஷயங்களை யதார்த்த வாழ்விலிருந்தே எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே மனித இயல்புகள் பலவற்றைக் கூர்மையாக வெளிப்படுத்தும் நுட்பம் செறிந்த அழுத்தமான சிறுகதைகள் , அவரிலிருந்தே வெளிப்பட்டிருக்கின்றன. சமூக மாற்றத்திற்கான கனவுகளுக்கும், யதார்த்தத்திற்குமான பெரும் இடைவெளியை இட்டு நிரப்ப முய்ற்சித்தபடியே இருக்கிறது சமூக மேன்மைக்கு விழையும் அவரது மனம் "  என எழுத்தாளர் பா.உஷாராணி தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

                 சிறுகதை என்பது ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு , அந்த நிகழ்வை விரிவாகவும்,வாசகர் மனதில் பதியும்படியாகவும் சொல்லும் எழுத்துக்கலையாகும் .   . இந்தச்சிறுகதைத்தொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள ' மஞ்சத்தண்ணி ' , இத்தொகுப்பின் முதல்கதையாக அமைந்துள்ளது. ஆசை, ஆசையாய் ஆட்டுக்குட்டியை வளர்க்கும் சரசு, ஆட்டுக்குட்டிக்கு ராசுக்குட்டி எனப்பெயர் சூட்டி , அழைத்து அழைத்து விளையாடி மகிழும் சரசு எனச் சிறுமி சரசுவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உள்ள பாசப்பிணைப்பை சித்திரம் போல வாசகர்கள் மனதில் தீட்டுகின்றார் இக்கதையாசிரியர். குலசாமி கோயிலில் ஆட்டை வெட்டப்போகிறார்கள் என்று அறிந்து கொண்ட சரசு, ஆடு தண்ணீர் தெளித்தவுடன் சிலிர்க்கவில்லையென்றால், வெட்ட மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, ஆட்டின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் தண்ணீர் தெளித்து , பழக்கப்படுத்தி, ஆட்டை வெட்டக்கொண்டுபோகும் நாளில் ஆடு வெட்டப்படாமல் தப்பிக்க வழி செய்கின்றாள். ஆடு வெட்டமிடுத்திற்கு கொண்டுசெல்லப்பட்டவுடன் மயக்கமடையும் சரசு, ஆடு உயிரோடு வந்து தன்னை வந்து தொட்டவுடன் கண் திறக்கிறாள், உயிர் பிழைக்கிறாள். கிராமத்துப்பழக்க வழக்கங்கள், ஆடு வெட்டப்படும் முறை, கெடாய் வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்வு போன்றவற்றை கண் முன்னே நிறுத்தும் அருமையான கதையாக இக்கதை உள்ளது எனலாம்.

                  உழைக்கும் தொழிலாளி சிலம்பனுக்கு தண்ணீர் கொடுத்தால் தீட்டாகிவிடும் என்று சொல்லும் தெய்வானை அம்மாள் பற்றியும் , காக்கைக்கு உணவிடும் அவர் மனிதனுக்கு உணவு தேவை,தண்ணீர் தேவை என்பதைப் பற்றி உணராததைக் கூறும் ' மகனுக்குத் தெரிந்தது ...' என்னும் கதை மனதில் நிற்கிறது.  கிராமத்தில் டெலிபோன் இல்லாததால் அந்த ஊர் மக்கள் படும் வேதனை, கிராமத்தில் டெலிபோன் வைப்பதற்க்காக தெருத்தெருவாக வாடகை வீடு கேட்டு அலையும் தங்கச்சாமி, டெலிபோன் எக்சேஞ் தனது கிராமத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தனது பூர்விக வீட்டையே வாடகைக்கு கொடுக்கும்  தங்கச்சாமி, பூர்வீக வீட்டைக் கொடுத்ததால் வருடம் ஒருமுறை சாமி கும்பிட வரும் தனது தம்பிகள், தம்பி மனைவிகளிடம் வசவு வாங்கும் தங்கச்சாமி, அதனால் ஏற்படும் மோதலில் தலையில் காயப்பட்டு மயக்கமாகும் தங்கச்சாமி என தங்கச்சாமி எனும் கதாபாத்திரத்தின் மேன்மைக்குணங்களால் பின்னப்பட்டிருக்கும் ' சாமி வீடு ' என்னும் கதை , பொது நன்மைக்காகத் தன் நலத்தை விட்டுக்கொடும் மனிதர்கள் , உறவுகளிடம் ஏற்கும் ஏச்சுக்களை கோடிட்டுக்காட்டுகிறது. " நீங்க குலதெய்வம் கும்பிடுறதன்னு ஒரு முறை அவர் வீட்டுக்கு வர்றீங்க. நாங்க எல்லாரும் அவரைத்தான் குலதெய்வம்னு வருஷம்பூரா கொண்டாடுறோம். இந்த ஆண்டியூரு, ஒளியூரு, இருமுடிச்சாத்தான், குயவசேரி, கீரைக்கொல்லை, அய்யனேந்தல் இந்தக் கிராமமெல்லாம் இப்ப நல்லா இருக்குன்னா இவருதான் காரணம். இவரு டெலிபோன் எக்சேஞ் வைக்க இடம் கொடுத்ததாலே ஐம்பதே நாளில் நம்மளுடைய அத்தனை ஊருக்கும் டெலிபோன் கிடைச்சிடுச்சு. ஆண்டியூரிலே கள்ளச்சாராயம் வித்தவனுக தொழிலை விட்டுவிட்டு ,எஸ் டி டி , பி.சி.ஓ வச்சு நல்லாப் புழைச்சுக்கிட்டானுங்க. எங்க ஒளியூரிலே வருஷத்துக்கு ஒரு உசிராவது பிரவசத்திலே போயிரும். இப்ப ஒரு போன்ல ஊருக்கு டாக்ஸி வந்துருது. ஒளியூரிலே இண்டர்நெட் மூலமா புருஷனுங்க, பெண்டாட்டிகளோடு தினமும் பேசிக்கிறானுங்க. தவிப்பு இல்லை. அழுகை இல்லை ... " என்று எழுத்தாளர் அடுக்கும் காரணங்கள் கதையோடு ஒட்டி அதே நேரத்தில் தொலைத்தொடர்பு வசதிகளால் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்துவது அருமை.

                   " ஆயி ...பொட்டி வாங்கலியோ ..ஆயி ! " என்று ஆரம்பிக்கும் பசிக்கொடுமை சிறுகதை , படித்து முடித்தபின்னும் மனதை விட்டு அகலாத கதையாக இருக்கிறது. ' அந்த ஒரு சேலையில் தன் பெண்மையைப் பூரா மறைக்க வேண்டும். தன் பிள்ளைக்கும் அதே சேலைக்குள் ஒரு தொட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். ரவிக்கை செய்யும் பணியையும் அந்த்ச்சேலை செய்ய வேண்டும். குழ்ந்தையை முதுகில் ஒரு விதத் தூளிவைத்துச் சுமந்துவரும் ஜப்பானியப்பெண்களின் பழக்கத்தை , அவள் நினைவுபடுத்துகிறாள். " என்று பக்கம் 73-ல் அந்த நார்ப்பெட்டி விற்கும் பெண்ணின் தோற்றத்தையும் , ஏழ்மையையும் , பசிக்கொடுமையையும் விவரிக்கும் நிகழ்வுகள் ஒரு கைதேர்ந்த புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் எழுத்துக்களை நினைவுபடுத்துகின்றன. வசதியான வீடுகளுக்கு மத்தியில் கூவிக் கூவி நிற்கும் அவளது கோலத்தை, 4 ரூபா பெறுமானமுள்ள பெட்டியை எட்டணாவிற்கு கேட்கும் பெண்ணின் பணக்காரத்தனத் தோரணையை " பத்துப்படிப் பொட்டியை வச்சுக்கிட்டு இந்தத் தெருப்பூரா அலைஞ்சாலும் எவளும் பத்துப்பிடி போட்டுக்கூட வாங்க மாட்டா. என்னமோ...ஒன்னைக்கூப்பிட்டதும் ஒன் நிலையைப்பார்த்து பரிதாபம். முடிவாச்சொல்றேன். நீ வச்சிருக்கிற அலுமனியச்சட்டி நிறையப் பழசு போடுறேன். ஆணம் ஊத்துறேன். காசு எட்டணா கையிலே வச்சுக்க " என்று விவரிக்கின்றார். பேரம் பேசும் பெண்ணிடம் , அழும் குழ்ந்தையின் பசி பொருட்டு ஒத்துக்கொள்ளும் அவளிடம் உழைப்பாளி " உழைக்கிறவனகளுக்குத்தானே உழைக்கிற பொருள் அருமை தெரியும் . என் கிட்டே கொடுத்திருந்தா நாலு ரூபாயும் கம்மங்கஞ்சியும் கொடுத்திருப்பேன் " என்று சொல்ல, சேரித்தெருவுக்கு போக ஆசைப்பட்டாலும் பெண்ணிடம் ஒத்துக்கொண்டதற்காக காத்து நிற்க, தட்டுத் தடுமாறி கீழே விழுந்த அந்த வய்தான பெண், சகுனம் என்று திட்ட , நாலு ரூபாய்க்கு பெட்டியை வாங்கிக்கிறேன் என்று சொன்ன பெரியவரின் வீடு நோக்கி போவதாக இந்த பசிக்கொடுமை கதை முடிகிறது. பசிக் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத்தான் பசியின் கொடுமை புரியுமென்பது மிக அழுத்தம் திருத்துமாக இந்தச்சிறுகதையின் மூலமாக  ஆசிரியரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

                 மணல் அள்ளும் குவாரிகள் , அதற்கு துணை போகும் அரசியல்வாதிகளைப்பற்றிப் பேசுகிற , ஒரு நல்ல காரியத்திற்காகப் போராடுகிற மருதமுத்து வாத்தியாரைப் பற்றிப் பேசுகிற ' விடியுமா ' என்னும் கதை எதார்த்தமாகவும், வரப்போகிற ஆபத்துக்களை மக்களுக்கு எடுத்துச்சுட்டுவதாகவும் இருக்கிறது. சுற்றுச்சூழல் கருத்துக்கள் நிறைந்த,'நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள் நிறைந்த பெருங்காடாக்க ' என்று புரட்சிக்கவிஞர் சொன்னதைபோல இயற்கை எழில்கள் எல்லாம் ,சில சுய நலம் பிடித்த மனிதர்களால் அழிக்கப்படும் அவலம் பற்றிச்சொல்லும் கதையாக  இந்த 'விடியுமா ? ' என்னும் கதை இருக்கிறது. " எங்க கிராமத்தருகே குவாரி வந்து என்னென்ன ஆச்சு தெரியுமா ? ஆத்துக் கரைக்கு கொஞ்சம் தள்ளி , கெட்டியாய்க் கட்டிய களம் பாளம் பாளமா தகர்ந்துருச்சு. காசுக்கு ஆசைப்பட்ட பயலுக, தங்களோட கடலை விளையுற வண்டல் காட்டு மணலை அள்ளச்சொல்லி காசாக்க, ஆறு அகண்டு போச்சு. பேச்சுக்கு ஒரு மீட்டர் ஆழந்தான் மணல் அள்ளுறம்ன்னு சொல்லிட்டு, கடைசியா களிமண் தெரியிற அளவுக்குத் தோண்ட கழுங்கு தாழ்ந்து போச்சு. செருப்புக்குக் காலை வெட்டினமாதிரி நல்லா இருந்த கழுங்கை வெட்டிக் குறைச்சாங்க. ஆத்துலே தண்ணி வந்து கால்வாயிலே பாஞ்சு , கம்மாய் நெறையணும். இவுங்க பண்ணுன கூத்துக்கு , கம்மாய் நெறைஞ்சாத்தான் , தண்ணி ஆத்துலே பாயும் போலிருக்கு " என்று கிராமத்து மொழியாடும், கிராமத்து மண் சார்ந்த வர்ணனைகளோடும் தொடரும் சிறுகதை நல்ல ஒரு விழிப்புணர்வுக் கதை எனலாம்

                        முழுக்க தொலைபேசி நிலையங்கள், அதில் உள்ள பல்வேறு டவர்கள், டவர்களின் வகைகள், ஆண்டெனாக்கள் என ஆங்கிலச்சொற்கள் பல கலந்த் கதையாக 'கால் முளைக்கும் மனசு ' என்னும் கதை உள்ளது. ஜீனியர் டெலிகாம் ஆபிசர், அருமை நாயகம், சப் டிவிசனல் இன்ஜீனியர் செண்பகராமன், டிவிசனல் இன்ஜீனியர் ராஜதுரை அவர்களின் செயல்பாடுகள், கிராமப்புறங்களில் இருக்கும் சாதிப்பிரச்சனைகள்,சாதி சார்ந்த இளைஞர்களின் முரண்பாடுகள், செயல்பாடுகள், யாரும் முன்வராத நேரத்தில் முன் வந்து பொதுத் தொலைபேசிக்கு பொறுப்பேற்கும் மாற்றுத்திறனாளி தங்கராசு என விரிகிறது இக்கதை. வில் போன் தொழில் நுட்பம் பற்றியெல்லாம் விவரிக்கும் இக்கதை ' இந்தப்பொதுத் தொலைபேசியை பொறுப்பா வச்சு நடத்துறவங்களுக்கு வசூலாகிற பில் தொகையிலிருந்து கமிசன் தர்றோம். இந்தப்போனிலிருந்து உங்க பயிருக்கு என்ன மருந்தடிக்கணுங்கிறதைப் பத்தி கேக்கலாம். ...பத்து வைக்கோல் படப்பு எறிஞ்சு சாம்பாலாகிக் கிடக்கிறதையும் வழியிலே பார்த்தேன். தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்தோம்னா இவ்வளவு சேதம் ஆகியிருக்காது " என்று பொதுத்தோலைபேசியைக் கிராமத்தில் எப்படி எப்படி எல்லாம் நன்மையாக பயன்படுத்தலாம் என்று பட்டியலே சிறுகதையின் வாயிலாக இந்த நூலாசிரியர் ந.ஜெயராமன் கொடுத்திருக்கின்றார்

                      தன்னுள் மிக அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்திய கதை என பா.உஷாராணியால் சுட்டப்படும் 'காறிச்சாமியும் வேயன்னாவும் ' என்னும் கதை இன்றைய எதார்த்தம். காலி இடத்தை பிளாட்டுகளாகப்போட்டு விட்டு, பிளாட்டின் அனுமதிக்காக காட்டப்பட்ட கோவில் மற்றும் பூங்கா நிலத்தையும் விலைக்கு விற்றுவிடும் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் வேல்முருகன் என்னும் வேயண்ணாவின் பக்தி வேடம் கபடமானது என்பதனை மிகக் கவனமாகவும், கனமாகவும் படைத்திருக்கின்றார் இந்த சிறுகதையின் ஆசிரியர். பைத்தியம் போல இருக்கும் காறிச்சாமி , வேயண்ணாவின் வேடங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த்வந்து முடிவில் வெடிப்பதாகவும் முடியும் கதை. ரோட்டின் மேல் எழுப்பப்படும் கோயில் எப்படியெல்லாம் தான் விற்ற கோயில் இடத்தை மக்கள் மனதில் இருந்து மாற்றும் என்பதனை அறிந்து காய் நகர்த்தும் வேயண்ணாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிக விவரமாக விவரிக்கின்றார். " அவனவன் மனசிலே கட்டணும்டா, மனசுதான் கோயில் கட்டுற இடம். அதுலே மட்டும் கட்டு .அப்புறம் பாரு. எந்த புல்டோசராவது இடிச்சுடுமா ? எந்தக் கடப்பாறையாவது இறங்கிடுமா ? போங்க, இனியாவது கட்டப்பாருங்க; அதோட இங்கு வாழும் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்ய வேண்டியிருக்கு; அதுக்கு உங்க உழைப்பையும் , பணத்தையும் நேரத்தையும் பயன்படுத்துங்க " என்று சாமியார் காறிச்சாமி கூறுவதாகக் கதையை முடித்திருப்பது நல்ல உத்தி.  .

                             இத்தொகுப்பின் கடைசிக்கதையாக் 'மாலதிகள் பள்ளிக்குப்போவார்கள் ' என்னும் கதை உள்ளது. மூன்று பெண்களைப் பெற்ற அப்பா செல்லத்துரை,தொலைபேசித்துறையில் வேலைபார்ப்பதாகவும்,அவரது மூன்றாவது மகள் சாந்தி மாலதி என்னும் பெணணோடு படிப்பதாகவும், வயதுக்கு வந்துவிட்டால் என்று வீட்டில் தள்ளி வைத்து தலைக்கு ஊற்றிய மாலதியின் பெற்றோர் , வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாலதியை பள்ளிக்குப்போகவேண்டாம் என்று தடுப்பதாகவும்., செல்லத்துரை மாலதியின் அப்பா மாணிக்கத்தைச்சந்தித்து பேசி, தன்னுடைய மூத்த பெண்கள் எல்லாம் வேலைக்கு செல்வதையும் , பெண்ணை படிக்கவைத்து வேலைக்குப் போகச்சொல்ல வேண்டும், அப்படி பெண்கள் வேலைக்குச்சென்றால் அவர்களும் துன்பப்படமாட்டார்கள், பெற்றோர்களும் துன்பப்படமாட்டார்கள் என்று எடுத்துச்சொல்லி  மாலதியை பள்ளிக்கு அவரது அப்பாமூலம் அனுப்பி வைப்பதாகவும் அமைந்த கதை .இந்தக்கதையையும் நா.ஜெயராமன் மிக நன்றாகச்சொல்லியுள்ளார். " டெலிபோன் எக்சேஞ்சிலே வேலைக்குச்சேரும் பெண்களைப்பார்த்திருக்கிறேன். முதலில் வரும்போது உடையில் நடையில் சாதாரணமாகத் தெரிவார்கள். முதல் மாதச்சம்பளத்தில் உடை மாறும். இரண்டாவது மாதச்சம்பளத்தில் நடை மாறும். போகப்போக அவர்களின் உடை,நடை,பாவனை அனைத்திலும் உயர்ந்த நாகரிகம் மின்னி மின்னிப் பிரகாசிக்கும்.கற்ற கல்வியால் வந்த செருக்கு, கையில் கிடைக்கும் சம்பளத்தின் மாட்சி, தன் காலிலே நிற்கிறோம் என்ற துணிவு இவையனைத்தும் வர அவர்கள் முகத்திலே ஒரு பிரகாசம். ஒரு பெண்ணுக்கு இவை கிடைத்தாலே போதும். அதற்கடுத்துத்தான் வாழ்க்கை. அதுவும் அவர்களுக்கு எளிதில் கைகூடுவதைப்பார்க்கிறேன் " என்றார் செல்லத்துரை என்று பக்கம் 126-ல் வரும் கருத்துக்கள், தன்னுடைய அனுபவத்தில் இருந்து பெண்கல்வியின் தேவையை, பெண்கல்வியால் ஏற்படும் மாற்றத்தை இந்த்ச்சிறுகதையின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 

                  இத்தொகுப்பில் உள்ள எல்லாச்சிறுகதைகளுமே எதார்த்தமாகவும், வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளுமாக இருப்பது சிறப்பு.பத்து நாட்களுக்குள் நான் நாற்பது கதைகள் ,சிறுகதைகள் எழுதிவிட்டேன் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் ,நாற்பதாண்டுகளில் நான் எழுதிய 11 கதைகள் என்று கதையாசிரியர் குறிப்பிடுகிறார். அதனாலோ என்னவோ ஒவ்வொரு கதையும் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது, ஆக்கிரமித்துக்கொள்கிறது. "யாரோடும் குரோதமில்லாமல், யாருடைய வெளியையும் சேதப்படுத்தாமல், யாருடைய செல்வத்தையும் பிறர் அபகரித்து விடாமல், வாழும் வாழ்க்கையொன்றே, எல்லா சமூகப் பிரச்சனைகளுக்குமான தீர்வாக இருக்கும் என்ற சிந்தனை, இத்தொகுப்புக் கதைகளை வாசித்து முடித்த்வுடன் எழுகிறது. உரப்புளி நா.ஜெயராமன் என்கிற படைப்பாளியின் விருப்பமும் அதுதானே "என்ற அணிந்துரை உண்மைதான் என்பதனை இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உணரமுடிகிறது. நீங்களும் வாசித்துப்பார்க்கலாம்.
( மதுரை ,அகில இந்திய வானொலி, புத்தக விமர்சனத்திற்காக தயாரிக்கப்பட்டது)

Sunday 1 February 2015

நிகழ்வும் நினைப்பும்(32) : தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா திரு.து.பால்ராஜ் அவர்கள் :


தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா  திரு.து.பால்ராஜ்  அவர்கள் மறைந்திருக்கின்றார். 80 வயதைக் கடந்தவர் , உடல் நலம் இல்லாமல் சிலகாலம் இருந்து மறைந்திருக்கின்றார்,. நானும் , நண்பர்கள் இரா.சீனிவாசன், பதஞ்சலி சில்க்ஸ் செல்வம்,தே.கல்லுப்பட்டி கென்னடி ஆகியோர் அய்யாவின் சொந்த ஊரான சுப்புலாபுரத்திற்கு சென்று (31.01.2015)  மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி விட்டு வந்தோம்.

            1979-81 இரண்டு ஆண்டுகள் தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் மேல் நிலைப்பள்ளியில் +1, +2 படித்தேன். அப்போது அய்யா பால்ராஜ் அவர்கள்தான் தலைமை ஆசிரியர். அவர் தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன்மை அவ்வளவு கம்பீரமாக இருக்கும். தூய வெள்ளை வேட்டி, சட்டை என அவ்வளவு வெண்மையான உடை இருக்கும். நான் சென்று சில நாட்களுக்குப்பிறகுதான் அவரால் இயல்பாக நடக்க முடியாத நிலையில் அவரின் கால் இருந்ததைப்பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. என்னைப் பார்த்தால், என்னடா, சாப்டூரான், எப்படி இருக்க என்பார். நான் நன்றாக இருக்கிறேன் அய்யா என்பேன். எனது நண்பன் சாப்டூர் நவ நீதகிருஷ்ணன் , எஸ்.பி.இராமநாதன்(தற்போதைய மதுரை ஆவின் பால் துணை மேலாளர் ) , நான் மூவரும் சாப்டூரிலிருந்து வந்திருந்த மாணவர்கள். அரசு பள்ளியில் சார், சார் என்று கூப்பிட்டுவிட்டு, கல்லுப்பட்டி பள்ளியில் அய்யா என்று ஆசிரியர்களைக் கூப்பிட பழகுவதற்கு கொஞ்ச நாட்களாக ஆனது. அய்யா, என்று சொல்லாமல் சார் என்று சொன்னால் அடி விழுகும். நண்பன் நவ நீதகிருஷ்ணன் அய்யா  .பால்ராஜ்  அவர்களை , சார் என்று சொல்ல , அய்யா என்று சொல் என்று அடிவிழுந்தது.அடியை வாங்கிக்கொண்டு , இனிமேல் அய்யா என்று சொல்லுறேன் சார் என்று சொன்னது  இன்றும் நினைவில் நிற்கிறது. கல்லுப்பட்டி ஆசிரமம் என்றால் அய்யா குருசாமி,அய்யாமுனியாண்டி, அய்யா  .பால்ராஜ்  மூன்று ஆளுமைகள்தான் அன்று.

                      +2-வில் இன்று அளவு கெடுபிடிகள் இல்லாத காலம் அது. +1 ஆங்கிலப்பாடம் அய்யா பால்ராஜ்தான் எடுப்பார். முதன்முதலாக வகுப்பு நடத்த வந்த அன்று , வாட் ஆர் தி பார்ட்ஸ் ஆப் ஸ்பீச்   ஆப் இங்கிலீஸ் என்றார் .தெரியாது என்றேன். 10-ம் வகுப்புத்தேர்வில் எத்தனை மார்க் என்றார் . 82 என்றேன். எவன் உனக்கு இவ்வளவு மார்க் போட்டான் என்றார். தெரியாது என்றேன். பார்த்து எழுதி வந்தாயா ? என்றார். இல்லை என்றேன். "இஸ் வந்தா என்ன போடணும், வாஸ் வந்தா என்ன போடணும் , நவ் வந்தா என்ன போடணும்ன்னு கேளுங்க , சொல்றேன்" என்றேன். கேட்டார் , சொன்னேன். சிரித்து விட்டார். டேய், உனக்கு என்னதுன்னு தெரியாமலேயே விசயம் தெரிஞ்சிருக்கு பரவாயில்லை , உட்கார் என்றார்.தமிழ் மீடியம் 10-ம்வகுப்பு வரை படித்து விட்டு , +2-வில் ஆங்கில மீடியத்தில் (அப்போது ஆங்கிலத்தில் மட்டுமே முதல் குரூப் இருந்த்து ) படித்தது, பாடம் புரியாமல் மதிப்பெண் குறைவாக எடுக்க வழி வகுத்தது.

                     சாப்டூரில் 10-ம் வகுப்புவரை டவுசர் சட்டையோடு திரிந்து கொண்டிருந்த எங்களுக்கு, +1,+2-வில் வெள்ளை வேட்டி கட்டவேண்டும் என்பது பெரிய சுமையாகத் தெரிந்தது. நான் படாத பாடுபட்டுப்போனேன். வாரா வாரம் வெள்ளிக்கிழமை , காந்தி நிகேதன் ஆசிரமத்துப்பள்ளியில் கூட்டுப்பிரார்த்தனை நடக்கும். " ரகுபதி ராகவ ராஜராம் " பாட்டும், " அகிம்சா சத்தியஸ்தேய ..." என்னும் பாட்டும் இன்றைக்கும் கூட மனப்பாடமாகத்தெரியும் . அன்று 2 வருடங்கள் கூட்டுப்பிரார்த்தனைக்கூட்டங்களில் உட்கார்ந்த பலன் அது. ஒரு நாள் கூட்டுப்பிரார்தனை முடிந்தபிறகு , மாணவர்கள் தங்கள் மனதில் இருக்கும் என்ன பிரச்சனை பற்றியும் கேள்வி கேட்கலாம் . பதில் கூறுகின்றோம். கேள்வி கேட்டதற்காக உங்களைத் தண்டிக்க மாட்டோம் என்றார். நான் எழுந்து " அய்யா காந்தி, நேரு, விவேகானந்தர் பற்றியெல்லாம் பேச்சாளர்களைக்கூப்பிட்டு வந்து பேசச்சொல்கின்றீர்கள், விழா எடுக்கின்றீர்கள். பெரியார், பகத்சிங் போன்றோருக்கு ஏன் விழா எடுப்பதில்லை ? " என்று கேட்டேன் . அய்யா  .பால்ராஜ்  அவர்கள், "பெரியாருக்கு விழா காந்தி நிகேதன் ஆசிரமத்தில் எடுக்கணுமா? எடுப்போம், எடுப்போம். உன்னையே சிறப்பு பேச்சாளராகப் பேசச்சொல்லிவிடுவோம் " என்றார். மறு நாள் அய்யா முனியாண்டி, அய்யா  பால்ராஜ்  அவர்களைக் கதர் கடையில் பார்த்து எனது தாயார் திருமதி முத்துக்கிருஷ்ணம்மாள் வணக்கம் சொல்லியிருக்கின்றார். அய்யா, முனியாண்டி அவர்கள் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, "இவர்கள் யார் ? "என்று அடையாளம் தெரியவில்லையே என்று பக்கத்திலிருக்கும் அய்யா  .பால்ராஜ்  அவர்களிடம் கேட்க, நேற்று வில்லங்கமா ஒரு பையன் கேள்வி கேட்டானே, அவனது அம்மா " என்று சொல்லியிருக்கின்றார். எனது அம்மா, வீட்டில் வந்து ,டேய் பள்ளிக்கூடத்துக்கூட்டத்தில் அவ்வளவு பெரியவங்ககிட்ட என்னடா கேள்வி கேட்ட , என்று என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்.
                     மாணவர்களைத் திட்டினாலும் , அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று நினைத்தவர்   அய்யா  பால்ராஜ் அவர்கள். ஆசிரியர்களிடமும் அவ்வளவு கண்டிப்புடன் இருப்பார். எங்கள் பள்ளிக்கூடம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம். சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமத்துப்பையன், பெண்கள் ஒழுங்காகப் படிப்பதற்கான இடமாக இருந்தால் போதும் என்பார். ஆசிரமத்திற்கான தொடர்பு அவருடைய கடைசிக்காலங்களில் துண்டிக்கப்பட்டது அவருக்கு மிகப்பெரிய வேதனையாக இருந்திருக்கின்றது. இறுதி வணக்கம் செலுத்தி அவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தபோது , 35 வருடத்திற்கு முந்தைய அனுபவங்கள் வரிசையாக மனதிற்குள் வந்து வந்து போனது.