Sunday 1 February 2015

நிகழ்வும் நினைப்பும்(32) : தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா திரு.து.பால்ராஜ் அவர்கள் :


தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா  திரு.து.பால்ராஜ்  அவர்கள் மறைந்திருக்கின்றார். 80 வயதைக் கடந்தவர் , உடல் நலம் இல்லாமல் சிலகாலம் இருந்து மறைந்திருக்கின்றார்,. நானும் , நண்பர்கள் இரா.சீனிவாசன், பதஞ்சலி சில்க்ஸ் செல்வம்,தே.கல்லுப்பட்டி கென்னடி ஆகியோர் அய்யாவின் சொந்த ஊரான சுப்புலாபுரத்திற்கு சென்று (31.01.2015)  மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி விட்டு வந்தோம்.

            1979-81 இரண்டு ஆண்டுகள் தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் மேல் நிலைப்பள்ளியில் +1, +2 படித்தேன். அப்போது அய்யா பால்ராஜ் அவர்கள்தான் தலைமை ஆசிரியர். அவர் தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன்மை அவ்வளவு கம்பீரமாக இருக்கும். தூய வெள்ளை வேட்டி, சட்டை என அவ்வளவு வெண்மையான உடை இருக்கும். நான் சென்று சில நாட்களுக்குப்பிறகுதான் அவரால் இயல்பாக நடக்க முடியாத நிலையில் அவரின் கால் இருந்ததைப்பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. என்னைப் பார்த்தால், என்னடா, சாப்டூரான், எப்படி இருக்க என்பார். நான் நன்றாக இருக்கிறேன் அய்யா என்பேன். எனது நண்பன் சாப்டூர் நவ நீதகிருஷ்ணன் , எஸ்.பி.இராமநாதன்(தற்போதைய மதுரை ஆவின் பால் துணை மேலாளர் ) , நான் மூவரும் சாப்டூரிலிருந்து வந்திருந்த மாணவர்கள். அரசு பள்ளியில் சார், சார் என்று கூப்பிட்டுவிட்டு, கல்லுப்பட்டி பள்ளியில் அய்யா என்று ஆசிரியர்களைக் கூப்பிட பழகுவதற்கு கொஞ்ச நாட்களாக ஆனது. அய்யா, என்று சொல்லாமல் சார் என்று சொன்னால் அடி விழுகும். நண்பன் நவ நீதகிருஷ்ணன் அய்யா  .பால்ராஜ்  அவர்களை , சார் என்று சொல்ல , அய்யா என்று சொல் என்று அடிவிழுந்தது.அடியை வாங்கிக்கொண்டு , இனிமேல் அய்யா என்று சொல்லுறேன் சார் என்று சொன்னது  இன்றும் நினைவில் நிற்கிறது. கல்லுப்பட்டி ஆசிரமம் என்றால் அய்யா குருசாமி,அய்யாமுனியாண்டி, அய்யா  .பால்ராஜ்  மூன்று ஆளுமைகள்தான் அன்று.

                      +2-வில் இன்று அளவு கெடுபிடிகள் இல்லாத காலம் அது. +1 ஆங்கிலப்பாடம் அய்யா பால்ராஜ்தான் எடுப்பார். முதன்முதலாக வகுப்பு நடத்த வந்த அன்று , வாட் ஆர் தி பார்ட்ஸ் ஆப் ஸ்பீச்   ஆப் இங்கிலீஸ் என்றார் .தெரியாது என்றேன். 10-ம் வகுப்புத்தேர்வில் எத்தனை மார்க் என்றார் . 82 என்றேன். எவன் உனக்கு இவ்வளவு மார்க் போட்டான் என்றார். தெரியாது என்றேன். பார்த்து எழுதி வந்தாயா ? என்றார். இல்லை என்றேன். "இஸ் வந்தா என்ன போடணும், வாஸ் வந்தா என்ன போடணும் , நவ் வந்தா என்ன போடணும்ன்னு கேளுங்க , சொல்றேன்" என்றேன். கேட்டார் , சொன்னேன். சிரித்து விட்டார். டேய், உனக்கு என்னதுன்னு தெரியாமலேயே விசயம் தெரிஞ்சிருக்கு பரவாயில்லை , உட்கார் என்றார்.தமிழ் மீடியம் 10-ம்வகுப்பு வரை படித்து விட்டு , +2-வில் ஆங்கில மீடியத்தில் (அப்போது ஆங்கிலத்தில் மட்டுமே முதல் குரூப் இருந்த்து ) படித்தது, பாடம் புரியாமல் மதிப்பெண் குறைவாக எடுக்க வழி வகுத்தது.

                     சாப்டூரில் 10-ம் வகுப்புவரை டவுசர் சட்டையோடு திரிந்து கொண்டிருந்த எங்களுக்கு, +1,+2-வில் வெள்ளை வேட்டி கட்டவேண்டும் என்பது பெரிய சுமையாகத் தெரிந்தது. நான் படாத பாடுபட்டுப்போனேன். வாரா வாரம் வெள்ளிக்கிழமை , காந்தி நிகேதன் ஆசிரமத்துப்பள்ளியில் கூட்டுப்பிரார்த்தனை நடக்கும். " ரகுபதி ராகவ ராஜராம் " பாட்டும், " அகிம்சா சத்தியஸ்தேய ..." என்னும் பாட்டும் இன்றைக்கும் கூட மனப்பாடமாகத்தெரியும் . அன்று 2 வருடங்கள் கூட்டுப்பிரார்த்தனைக்கூட்டங்களில் உட்கார்ந்த பலன் அது. ஒரு நாள் கூட்டுப்பிரார்தனை முடிந்தபிறகு , மாணவர்கள் தங்கள் மனதில் இருக்கும் என்ன பிரச்சனை பற்றியும் கேள்வி கேட்கலாம் . பதில் கூறுகின்றோம். கேள்வி கேட்டதற்காக உங்களைத் தண்டிக்க மாட்டோம் என்றார். நான் எழுந்து " அய்யா காந்தி, நேரு, விவேகானந்தர் பற்றியெல்லாம் பேச்சாளர்களைக்கூப்பிட்டு வந்து பேசச்சொல்கின்றீர்கள், விழா எடுக்கின்றீர்கள். பெரியார், பகத்சிங் போன்றோருக்கு ஏன் விழா எடுப்பதில்லை ? " என்று கேட்டேன் . அய்யா  .பால்ராஜ்  அவர்கள், "பெரியாருக்கு விழா காந்தி நிகேதன் ஆசிரமத்தில் எடுக்கணுமா? எடுப்போம், எடுப்போம். உன்னையே சிறப்பு பேச்சாளராகப் பேசச்சொல்லிவிடுவோம் " என்றார். மறு நாள் அய்யா முனியாண்டி, அய்யா  பால்ராஜ்  அவர்களைக் கதர் கடையில் பார்த்து எனது தாயார் திருமதி முத்துக்கிருஷ்ணம்மாள் வணக்கம் சொல்லியிருக்கின்றார். அய்யா, முனியாண்டி அவர்கள் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, "இவர்கள் யார் ? "என்று அடையாளம் தெரியவில்லையே என்று பக்கத்திலிருக்கும் அய்யா  .பால்ராஜ்  அவர்களிடம் கேட்க, நேற்று வில்லங்கமா ஒரு பையன் கேள்வி கேட்டானே, அவனது அம்மா " என்று சொல்லியிருக்கின்றார். எனது அம்மா, வீட்டில் வந்து ,டேய் பள்ளிக்கூடத்துக்கூட்டத்தில் அவ்வளவு பெரியவங்ககிட்ட என்னடா கேள்வி கேட்ட , என்று என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்.
                     மாணவர்களைத் திட்டினாலும் , அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று நினைத்தவர்   அய்யா  பால்ராஜ் அவர்கள். ஆசிரியர்களிடமும் அவ்வளவு கண்டிப்புடன் இருப்பார். எங்கள் பள்ளிக்கூடம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம். சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமத்துப்பையன், பெண்கள் ஒழுங்காகப் படிப்பதற்கான இடமாக இருந்தால் போதும் என்பார். ஆசிரமத்திற்கான தொடர்பு அவருடைய கடைசிக்காலங்களில் துண்டிக்கப்பட்டது அவருக்கு மிகப்பெரிய வேதனையாக இருந்திருக்கின்றது. இறுதி வணக்கம் செலுத்தி அவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தபோது , 35 வருடத்திற்கு முந்தைய அனுபவங்கள் வரிசையாக மனதிற்குள் வந்து வந்து போனது.
   

No comments: