Saturday 18 June 2016

சாமானியர்களின் சாதனைகள்(2)...நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்



சாமானியர்களின் சாதனைகள்(2)

நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்- "The Real State Rank Holder"


“5 வயசுக்குள்ள பல நோய்களால் உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு; எப்பவும் சோர்வாகவே இருக்கும்; படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது; புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது; போர்டுல எழுதிப் போடுறதை எழுத முடியாது; அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல் குறைபாடு’ தான்ன்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும் போது தான் தெரிய வந்துச்சு.
ஒரு வழியா 8-ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்கு மேல என்னைச் சிரமப்படுத்த அப்பா விரும்பல. படிப்பு தான் வரல.. லாட்டரிச்சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோன்னு ஆவடியில இருந்த கடையில உட்கார வச்சுட்டார். தெருக்கள்ல போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். தீடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க. கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்கு போனேன். என் உடல்வாகுக்கு செங்கல்லும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ், டி.வி. மெக்கானிக் சென்டர் என வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன்.
கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சிக்கிட்டே +2க்குப் அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கானமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில் பெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கல. கடைசியில வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் B.A English சேர்ந்தேன்.

கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் என்னுடைய ஆங்கில அறிவைப் பார்த்து மிரண்டு போன பேராசிரியர்கள் நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ண முடியாது…ஒர்க்ஷாப்புக்கு போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ என்று அறிவுரை சொன்னார்கள். போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செம்-ல அம்மை நோய் அடுத்த செம்-ல ஒரு பெரிய விபத்து இப்படி பல தடைகளை தாண்டி இறுதியா என் பேட்சுல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும் தான். பி.ஏ-வுக்கு முடிச்சதும் எம்.ஏ-வுக்கு நிறைய கல்லுரியில் அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில் 'வராண்டா அட்மிஷன்' கிடைச்சது. வராண்டா அட்மிஷன்னா போனாப் போகுதுன்னு கொடுக்கிறது. அங்கு தான் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

TNPSC, UPSC தேர்வுகளை எல்லாம் அறிமுகம் செய்தார்கள். எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்கு படிக்க முடியலே. ஆனாலும் ஆர்மில செகண்ட் லெப்டினென்ட் வேலைக்கு தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. 54 கிலோவாக இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க. ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்து மீண்டு வந்தேன். ஆனா, வேலை கைவிட்டுப் போயிடுச்சு.
பின்பு TNPSC குரூப் 2 எழுதி பாஸ் பண்ணினேன். A.S.O-வாக வேலை கிடைச்சுச்சு. அடுத்து குரூப் 1 தேர்வு எழுதினேன்…வெற்றி! கூட்டுறவு துறையில் துணைப் பதிவாளராக 3 வருஷம் வேலை செஞ்சேன். D.C ரேங்க் வர்ற நேரம், UPSC பாஸ் பண்ணிட்டேன். I.P.S கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கல. அதனால I.R.S-ல சேர்ந்துட்டேன்..." என சிலிர்க்க வைக்கிறார் இந்திய வருமான வரித்துறையின் இணை ஆணையர் நந்தகுமார்.
நன்றி :rackyrajesh.blogspot.com/.../real-state-rank-holder.ht..




சென்னைக்கு அருகில் இருக்கும் ஆவடியில் நந்தகுமாரின் இளமைப்பிராயம் கழிந்தது. பண்ணிரண்டு வயது. ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyslexia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது.
பள்ளிக்குச் செல்வதை நிறுத்தும் மாணவர்கள் வழக்கமாக நம்மூரில் என்னவெல்லாம் செய்வார்களோ, அதையே தான் நந்தாவும் செய்தார். லாட்டரி டிக்கெட் விற்றார். வீடியோ கடையில் எடுபிடியாக வேலை பார்த்தார். மெக்கானிக் ஷெட்டில் கையில் க்ரீஸ் அழுக்கோடு நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருந்தது. ஜெராக்ஸ் கடையில் சில காலம். இப்படியாக எதிர்காலம் குறித்த எந்த தெளிவான முடிவும் அவரிடம் இல்லாமல் வாழ்க்கை சக்கரம் சுற்றிக் கொண்டிருந்தது.
பிரச்சினை நந்தகுமாரோடு முடிந்துவிட்டிருந்தால் தேவலை. நந்தகுமாருக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முன் ஏர் எப்படிப் போகுமோ, அப்படித்தான் பின் ஏரும் போகும் என்பது ஊர்களில் பேசப்படும் சொலவடை. நந்தகுமாரைப் பின்பற்றி அவரது தங்கைகளும், தம்பியும் மிகச்சரியாக, சொல்லி வைத்தாற்போல் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள்.

ஒரு குடும்பத்தின் நான்கு வாரிசுகளுமே கல்வியை பாதியில் விட்டால், சமூகம் அந்தக் குடும்பத்தை எப்படிப் பார்க்கும்? இத்தனைக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையெல்லாம் அக்குடும்பத்தில் இல்லை. தெருப்பிள்ளைகள் இவர்களோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. “அந்தப் பசங்க மக்குப்பசங்க. அவங்களோட சேர்ந்தா நீங்களும் மக்காயிடுவீங்க!” உற்றாரும், உறவினரும் கேலியாகவும், கிண்டலாகவும் நால்வரையும் பார்த்தார்கள்.

புத்தருக்கு ஞானம் கிடைக்க போதிமரம் கிடைத்தது. போதிமரத்தடியில் உட்காராமலேயே திடீரென ஒருநாள் புத்தர் ஆனார் நந்தகுமார். பள்ளிக்குப் போகாமலேயே பிரைவேட்டாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் என்ன? நண்பர் ஒருவர் அதுபோல எழுதலாம் என்று ஆலோசனை சொல்ல எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் நந்தா. இந்த வெற்றி தந்த பெருமிதம் பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதவைத்தது. இதுவும் பாஸ். “அடடே. எல்லாமே ஈஸியா இருக்கே? பள்ளியிலேயே சேர்ந்து படிக்கலாம் போலிருக்கே?” என்று எண்ணினார் நந்தா. எட்டாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் பிரைவேட்டாக எழுதிய அவரை +1 வகுப்பில் சேர்க்க பள்ளிகள் மறுத்தன. போராடிப் பார்த்தார். முடியவில்லை. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல +2 தேர்வையும் பிரைவேட்டாகவே எழுதி வென்றார் நந்தா.

இப்போது கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஆசை நந்தாவுக்குள் முளைவிட்டிருந்தது. பள்ளியில் படிக்காமல் எட்டு, பத்து, பண்ணிரெண்டு என்று எல்லா வகுப்புகளையுமே பிரைவேட்டாக தேறியிருந்த நந்தாவை சேர்த்துக்கொள்ள கல்லூரிகளுக்கு மனமில்லை. கல்லூரிதோறும் கால்கடுக்க ஏறி, இறங்கி கடைசியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆங்கிலம் இளங்கலை படிப்பை படிக்க ஆரம்பித்தார் நந்தா. அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலை முடிந்ததும் சென்னை மாநிலக்கல்லூரியில் அதே ஆங்கில இலக்கியத்தை முதுகலையாக கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்வி தவிர்த்து, என்.சி.சி. போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

முதுகலைப்பட்டம் பெற்ற பிறகும் ‘என்னவாக ஆகப்போகிறோம்?’ என்று எந்த முன்முடிவும் நந்தாவிடம் இல்லை. என்.சி.சி.யில் இருந்ததால் இராணுவம் தொடர்பான பணி எதிலாவது சேரலாம் என்று நினைத்தார். சென்னையில் இராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி (OTA)-யில் சேர்ந்தார். இடையில் ஒரு விபத்து ஏற்பட, அந்தப் படிப்பையும் பாதியில் விட வேண்டியதாயிற்று. அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து அறிந்தார். அதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் பட்டப்படிப்பு போல மூன்று வருடங்கள் படிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல நந்தாவும் நினைத்திருந்தார். சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டித்தேர்வு போதுமானது என்ற விஷயமே நந்தாவை மிகவும் கவர்ந்தது.

இன்று நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தில் துணை ஆணையளராகப் பணிபுரிகிறார். ஒரு காலத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் சேர்க்கத் தயங்கிய மாணவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, நாட்டை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்.

முப்பத்து மூன்று வயதான நந்தகுமாரை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

“எனக்கே எல்லாமே ஆச்சரியமா தாங்க இருக்கு. திடீருன்னு மறுபடியும் படிக்கணும்னு ஆர்வம் வந்தது. விடாமுயற்சியோடு, கடுமையாகப் படித்தேன்னு எல்லாம் சொல்லமுடியாது. சின்சியரா படிச்சேன். அவ்ளோதான்” என்று அளவாகப் புன்னகைக்கிறார். “கல்வி மிக மிக முக்கியமானதுங்க. ஆனா நம்மோட கல்விமுறையிலே எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. நம்ம கல்விமுறை படிப்பாளிகளை உருவாக்குதே தவிர, அறிவாளிகளை உருவாக்குவதாக தெரியவில்லை. மாணவர்கள் கல்வி என்றால் கசப்பானது என்று நினைக்காமல் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரும் வகையில் நம்ம கல்விமுறையை மாற்றணும்.

கொடுமை பாருங்க. நான் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகும்போது படிச்சதெல்லாம் ஏற்கனவே பள்ளியில் படிச்சதா தானிருக்கு. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் படிச்சிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ஒருவன் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த வயதுக்கு தேவையான வாழ்க்கைக்கல்வி இன்றைய சூழலில் அவசியம்!

அப்புறம், சிவில்சர்வீஸ் எக்ஸாம்னாலே எல்லோரும் ஏதோ பெரிய பட்டப்படிப்பு மாதிரி பயப்படுறாங்க. இது ஒரு போட்டித்தேர்வு, பட்டப்படிப்பு அல்ல. பயமில்லாம நிறைய பேர் இந்த தேர்வுகளை எழுதணும். நம்ம இளைய தலைமுறை எதிர்ப்பார்க்கிற அட்வெஞ்சர் கேரியரா நிச்சயமா சிவில் சர்வீஸ் அமையும். ஆறாவது ஊதியப்பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த்துக்கு அப்புறமா நல்ல சம்பளமும் கிடைக்குதுங்க!” என்கிறார். கற்றல் தொடர்பான டிஸ்லெக்சியா பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட வென்றுவிட்டேன் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.

“அதிருக்கட்டும் சார், உங்களைப் பார்த்து படிப்பை பாதியில் விட்ட உங்க தங்கைகள், தம்பி என்ன ஆனாங்க?” என்று கேட்டால், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார்.
“சொன்னா நிச்சயமா நம்பமாட்டீங்க. நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ன்னு அவங்களும் என்னை பின் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்கன்னா உங்களால நம்ப முடியுதா?”

படிப்பை பாதியில் நாலுபேரும் அடுத்தடுத்து விட்டதை கூட நம்பிவிடலாம். மீண்டும் தன்னெழுச்சியாக படித்து நல்ல நிலைக்கு சொல்லிவைத்தாற்போல நான்கு பேருமே உயர்ந்திருப்பது என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், நந்தகுமாரின் குடும்பத்தில் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி அடிப்படையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான குடும்பம் இன்று, அதே கல்வியாலேயே தலைநிமிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம்தான் இல்லையா?
டிஸ்லெக்சியா!
அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ படம் வெளியானதற்குப் பிறகு இந்த குறைபாடு குறித்த விவாதங்கள் அதிகளவில் எழுந்த்து. கற்றல் குறைபாடு இருப்பவர்களும் சராசரியானவர்களே. ஆனால் அவர்களிடம் வாசிப்புத்திறன் குறைவாக காணப்படும். கவனம் பிறழ்வது, எழுத்துத்திறன் குறைவது, கணிதப்பாடத்தை புரிந்துகொள்ள முடியாமை ஆகியவை டிஸ்லெக்சியாவின் பாதிப்புகள். எழுத்துக்களையும், அதற்கான உச்சரிப்புகளையும் அவ்வப்போது மறந்துவிடுவதாலேயே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த கற்றல் குறைபாடுக்கும், அறிவுவளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிறுவயதில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சமூகத்தின் உயர்ந்த நிலைகளுக்கு உயர்ந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், வால்ட் டிஸ்னி போன்றவர்களுக்கும் சிறுவயதில் இக்குறைபாடு இருந்திருக்கிறது.

இக்குறைபாடுக்கு காரணமான மூளைதிசுக்களை முற்றிலுமாக சரிசெய்ய முடியாது என்றாலும், மனநல மருத்துவரின் ஆலோசனைகளோடு தகுந்த மாற்றுச் சிகிச்சைகளின் மூலமாக குறைபாட்டினை போக்க முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை - எழுதியவர் யுவகிருஷ்ணா )

2 comments:

அபயாஅருணா said...

நந்தகுமாரின்விடா முயற்சி நிஜமாகவே பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்

முனைவர். வா.நேரு said...

உண்மைதான். நன்றி, தங்கள் கருத்திற்கு.