Tuesday 29 October 2013

நிகழ்வும் நினைப்பும் (7) : உடல் வலியும் உள வலிமையும்

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை. சிறு நீரகக் கல் இருக்கிறது என்று மருத்துவப்பரிசோதனையில் தெரிந்து அதனை எடுப்பதற்காக மருத்துவமனையில் இருந்த நேரம். மயக்க மருந்தைக் கொடுத்து ,க்ல்லை உடைத்து  பின்பு அறையில் வந்து போட்டிருந்தார்கள். மயக்கம் தெளிந்த பின்பு , சிறு நீர் போகும் பாதையில் ஒரு குழாயை மாட்டி அதன் வழியாக சிறு நீர் கழிக்கும் நிலமை. பெரிய வேதனையாக இருந்தது. உடைக்கப்பட்ட கல் துகள்கள், ஒவ்வொரு முறையும் சிறு நீரோடு கழிந்து போகும்போது கொடுக்கும் வேதனை , மரண வேதனையாக இருந்தது. அதனைப் போல எழுந்து நடப்பது, படிப்பது, படுத்து தூங்குவது என்று ஒவ்வொரு நிலையும் மிகப்பெரிய துன்பமாக இருந்தது,

                                அருகில் இருந்த எனது இணையர் சொர்ண்ம் வலி அதிகமாக இருக்கிறதா என்றார் . ஆமாம் என்றேன். இந்த நிலையில் வெளியில் போவது, அல்லது இதோடு  பொது நிகழ்வில் கலந்து கொள்வது நினைத்துப்பார்க்கமுடியுமா ? என்றேன். எப்படி போக முடியும் ?என்றார். தந்தை பெரியார் போயிருக்கின்றார். ஆண்டுக் கணக்கில் போயிருக்கின்றார். குழாயை மாட்டிக்கொண்டு, அது போய்ச்சேர ஒரு மூத்திரச்சட்டியையும் வைத்துக்கொண்டு போய் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். வேதனையோடு சில நேரங்களில் வலியால் சத்தமிட்ட நிலையிலும் பேசியிருக்கின்றார். 10 நிமிடம் , 15 நிமிடம் அல்ல, 3 மணி நேரம் 4 மணி நேரம் பேசியிருக்கின்றார். எதனைப்பற்றியும் கவலைப்படாமல், வரக்கூடிய எதிர்ப்புக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசியிருக்கின்றார். எப்போது செத்தாலும் பரவாயில்லை, எப்படி செத்தாலும் பரவாயில்லை என்று 100 சதவீத கமிட்மெண்ட் என்று சொல்வார்களே அந்த உணர்வோடு பேசியிருக்கின்றார் என்றேன்.

                                    நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எம்பதி எம்பதி என்று சொல்கின்றார்களே, அதனை நடைமுறையில் நடத்திக்காட்டியவர் தந்தை பெரியார். இப்படி சதிகாரர்களில் வலைகளில் சிக்கி நமது மக்கள் துன்பச்சகதியில் உழல்கிறார்களே, இவர்களுக்கு உண்மையைச்சொல்ல வேண்டும். இதிகாச, புராண, பண்டிகைப்புரட்டுக்களை மக்க்ளிடம் பிட்டுப்பிட்டு வைக்க வேண்டும். சாதி என்னும் இழிவினைச் சமூகத்தில் இருந்து துடைக்க வேண்டும் என்ற உணர்வோடு பயணித்த அவரின் பயணம் மிகக் கடினமானது. பார்ப்பனர்களால் விளைந்த கேடுகளை விட அவருக்கு , அவர் யாருக்காக பாடுபட்டரோ அவர்களிடம் இருந்து கிடைத்த கேடுகள்,குறுக்கீடுகள்  அதிகம் . எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச்சாதித்தவர்களின் சாதனை எளிது. ஆனால் இந்தச் சாதி வெறி பிடித்த முட்டாள்களின் மத்தியில், உடல் வேதனையைப் பற்றிக் கவலைப்படாமல் உள வலிமையோடு பயணித்த அவரின் பயணமும் , அவர் அடைந்த வெற்றியும் நினைக்கும் போதெல்லாம் தெம்பு ஊட்டக்கூடியதாய் இருக்கின்றது.  நமக்கு ஏற்படும் சின்னச்சின்ன வலிகளை மறக்க வைப்பதாக  இருக்கிறது 

6 comments:

கருப்பையா.சு said...

தோழர்.நேரு , நீங்கள் ஒரு சில மணித்துளிகளைக் கூட வீணாக்குவதில்லை என்பது தெளிவாகப் புரிகிறது. வாசிப்பது, வாசிப்பதை பகிர்ந்து கொள்வது, அதை எழுதுவது என்ற பணியை விடாமல் தொடர்ந்து செய்கிறீர்கள், மகிழ்ச்சி!

anandam said...

தந்தை பெரியாரைப் பற்றி பேசாத நேரம் பிழை செய்த நேரமென வாழும் உங்களைப் போன்றோரால்தான் பெரியாரியம் தலை நிமிர்ந்து நிற்கிறது.வாழ்த்துகிறோம் உங்கள் வழிகாட்டுதலுக்கு.....!!

Unknown said...

அய்யா வணக்கம்... வலிகள் தான் ஒளியின் பாதையை அறியச்செய்கின்றன... என்றும் நலம் விழையும்... செந்தில்

முனைவர். வா.நேரு said...

உற்சாகப்படுத்தும் உங்களைப்போன்றவர்களின் ஆதரவும் ,ஊக்கமும் காரணம் . நன்றி.

முனைவர். வா.நேரு said...

என் வலைத்தளத்திற்கு தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி செந்தில்.

முனைவர். வா.நேரு said...

நாம் உணர்ந்து கொண்டால், பெரியாரியம் நம்மையும் உயர்த்தும், நம் சமூகத்தையும் உயர்த்தும் மானத்தால்,அறிவால். நன்றி.