Monday 26 January 2015

நிகழ்வும் நினைப்பும் (31) : வேப்பந்தோப்பும் திருக்குறளும் :

நிகழ்வும் நினைப்பும் (31) : வேப்பந்தோப்பும் திருக்குறளும் :



                                                        ஓய்வுபெற்ற  தமிழ் நாடு அரசு தலைமைப்பொறியாளர் (வேளாண்பொறியியல்  துறை ) பொறிஞர் அய்யா க.சி.அகமுடைநம்பி  அவர்களைச்சில ஆண்டுகளாக அறிவேன்.படித்தது வேளாண் பொறியியல் என்றாலும் தமிழின் மீது குறிப்பாகத் திருக்குறள் மீது பெரும் விருப்பம் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார். கடந்த பத்து ஆண்டுகளாக தனது 'மலர் ' அறக்கட்டளை மூலமாக , தனக்குச்சொந்தமான , மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, தே.கல்லுப்பட்டி , குன்னத்தூர் அருகில் உள்ள வேப்பந்தோப்பில் வருடந்தோறும் ஜனவரி மாதம், (பெரும்பாலும் ஜனவரி 25 அல்லது 26 ஆக இருக்கும்) திருக்குறள் குறித்து  ஒரு தலைப்புக் கொடுத்து கருத்தரங்கம் நடத்தி வருகின்றார். கருத்தரங்கத்தின் முடிவில்  கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகின்றார்.

                        பத்து வருடங்களாக, தொடர்ந்து அவரது கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருகின்றது. ஒருவருடம் திரு வெ.இறையன்பு அவர்கள் கலந்து கொண்டார். தொடர்ச்சியாக பேராசிரியரின் இளவல் பேராசிரியர் அய்யா க.திருமாறன் அவர்கள் விருதுநகரிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார். அய்யா தமிழண்ணல், தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார், பேரா.இரா.மோகன்  மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். பல பேராசிரியர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். பல துறை சார்ந்த ஆனால் திருக்குறள் மேல் விருப்பம உள்ள தமிழர்களும்  கலந்து கொள்ளும் அருமையான கருத்தாக்க விழாவாக, வேப்பந்தோப்பு கருத்தரங்கம் அமைகின்றது. சில ஆண்டுகளாக மதுரை யாதவர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் அய்யா முனைவர் இ.கி.இராமசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றார்.

                              தனி ஒரு ராணுவம் போல, இந்தக் கருத்தரங்கத்திற்காகவும், தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காகவும் அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் மிகவும் வியப்புக்குரியது. மதுரையின் தெருக்களில் பேருந்து மூலமாகவும் , நடந்தும், அச்சிடக்கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் திருத்துதல், மீண்டும் கொடுத்தல், அச்சிட ரேப்பர்  வடிவமைத்தல் என்று ஓயாது அலைந்து கொண்டிருப்பார். மிக உயர்ந்த பொறுப்பில் தமிழக அரசின் வேளாண் துறையில் இருந்தவர். ஓய்வு பெற்று இன்றைக்கு ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு மேலானவர். 75 வயதுக்கு மேல் இருக்கும் அவரின் வயது. ஆனால் இந்த நிகழ்வுக்காக 20 வயது இளைஞரைப்போல அலைந்து கொண்டிருப்பார். உடல் உழைப்பு, அலைச்சல், பணச்செலவு இவற்றிப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே குறிக்கோளோடு செயல்பட்டுக்கொண்டிருப்பவர்.ஜெ.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும் , ஆய்வியல் நோக்கில் பாரதியாரைப்பற்றியும் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.

                           இந்த ஆண்டு, மலர் அறக்கட்டளையோடு மற்றும் ஒரு அறக்கட்டளை இணைகிறது என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். ஈரோடைச்சேர்ந்த வள்ளுவத்தமிழ் உதய முரசகம் அறக்கட்டளையும் , மலர் அறக்கட்டளையும் இணைந்து நடத்துகிறோம் என்றார். ஈரோட்டைச்சார்ந்த மின்வாரிய முதன்மைப் பொறியாளர் சி.சண்முகம் அவர்கள் , ' வள்ளுவத் தமிழ் உதய முரசகம் அறக்கட்டளை ' வைத்து நடத்துகின்றார் என்றார் .   ' திருக்குறளில் உறவும் நட்பும் ' என்பது தலைப்பு. 'தினமணி ' பத்திரிக்கையில் அறிவிப்பு வந்தது. தமிழகம் மற்றும் இந்தியா முழுமையும் இருந்து தலைப்பின் கீழ் கட்டுரை வந்தது. ஈரோடைச்சார்ந்த வள்ளுவத்தமிழ் உதய முரசகம்  அறக்கட்டளை நிர்வாகிகள்தான் தரமான 20 கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்றார். மதுரை, மதுரை சுற்றுப்புறங்களிலிருந்து நிறையக் கட்டுரைகள் போயிருக்கின்றன. ஏறத்தாழ 85 கட்டுரைகள் வந்தன, அதில் தகுதியான 20 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்லி ,அறிவிப்பு கொடுத்திருந்ததன்படி எடுத்து கடிதம் அனுப்பியிருந்தார்கள். மதுரையில் எனது (வா.நேரு) கட்டுரையும், போடி தோழர் நந்தா கட்டுரையும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையில் எனது கட்டுரையும் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை, பெங்களூரு, மும்பை என இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் அந்த 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கட்டுரைகளில் முத்னமையான கட்டுரைக்கு ஒரு பவுன் தங்கக்காசு பரிசு என்று அறிவித்திருக்கின்றார்கள். பாராட்டுக்குரிய செயல்.சென்ற 18.1.2015 அன்று வேப்பந்தோப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரைக் கருத்துக்களைத்தொகுத்தும், எனது கருத்தையும் இணைத்து உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தது.பல அறிஞர்கள் திருக்குறள் பற்றி அரிய பல கருத்துக்களைக் கொடுத்தனர்.

                                  பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவன் என்ற முறையிலும், தமிழின் மீது விருப்புக்கொண்டவன் என்ற முறையிலும் திருக்குறள் மீது விருப்பம் உண்டு எனக்கு. ஆனால் அதனை பல கட்டுரைகளாக  வடிக்கக்கூடிய அளவிற்கு ஒரு ஊக்க சக்தியாக இருந்தவர் அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்கள். 'குறள் கூறும் ஊழும் கூழும் ' , 'முப்பாலின் ஒப்புரவு', 'திருக்குறளில் பொதுமை ', 'குறள் கூறும் குடிமை', 'திருக்குறளில் இறைமை', 'திருக்குறளில் தவமும் துறவும்', ' திருக்குறளின் காமத்துப்பால் ' போன்ற பல்வேறு பொதுத்தலைப்புக்களைக் கொடுத்து பல்வேறு கருத்தோட்டமுடையவர்கள், பல்வேறு துறைகளைச்சார்ந்தவர்களை அழைத்து, அவர்களின் கருத்துக்களை தொகுத்து நூலாக்கி கொடுப்பது என்பது மிகப்பெரிய செயல். எந்தக் கல்லூரியும், எந்தப்பல்கலைக் கழகமும், அரசு நிறுவனங்களோ இல்லாமல் - கல்லூரிப்பேராசிரியர்களை மட்டும் நம்பி இராமல் தொடர்ந்து ஒற்றை இலக்கான 'திருக்குறளைப் பரப்புதல் ' என்னும் நோக்கில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்கள் இதுவரை அரசின் எந்த விருதும் பெற்றவரல்ல. எல்லா விருதுகளுக்கும் மேலான, திருக்குறள் விரும்பிகள் மனதில் மிகப்பெரிய ஆளுமை விருது அவருக்கு உண்டு. தொடர்கிறது அவர் பணி. இன்னும் பல ஆண்டுகள் அவர் பணி தொடரவேண்டும். நீடூழி அவர் வாழவேண்டும்.

No comments: