Thursday 19 February 2015

நிகழ்வும் நினைப்பும் (33): உழைக்கத்தானே வேண்டும் ......

நிகழ்வும் நினைப்பும் (33): உழைக்கத்தானே வேண்டும் ......
மதுரை அகில இந்திய வானொலி நிலையம் - 28.02.2015 சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு புத்தக விமர்சனம் பகுதியில் " :கனவு ஆசிரியர்".   என்னும் புத்தகம் விமர்சனத்திற்கு என்னால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாசிரியர் திரு. க. துளசிதாசன். வெளியிட்டவர்கள் : புக்ஸ் பார் சில்ரன் -பாரதி புத்தகலாயத்தின் ஓர் அங்கம் ,சென்னை-18  முதல் பதிப்பு: மே 2012  விலை ரூ 90 - மொத்த பக்கங்கள் : 144. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களுள் ஒன்றான இந்தப்புத்தகத்தின் விமர்சனத்தை வாய்ப்பிருந்தால் கேட்டுப்பாருங்கள். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பிரபஞ்சன், பொன்னீலன், பேரா.ச.மாடசாமி, ச.தமிழ்ச்செல்வன், பாமா, ஞாநி, ஆயிஷா இரா.நடராசன், த.வி.வெங்கடேஸ்வரன்,ஜாகீர் ராசா, பவா.செல்லத்துரை ஓவியர் டிராட்ஸ்கி , வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.,ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ,பேரா.இரத்தின நடராசன், நாடகக் கலைஞர் பிரளயன் போன்றோரின் கட்டுரைகளை எனது பார்வையில் சுருக்கமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கின்றேன். கேட்டுப்பாருங்கள், கேட்டுவிட்டு முடிந்தால் கருத்தைச்சொல்லுங்கள் எனக்கு.

                             புத்தக மதிப்புரை , 4 புத்தகங்களை ஒன்றாக , ஒரே நேரத்தில் பதிவு செய்ய பேச வேண்டியிருக்கிறது என்று என் மகளிடம் சொன்னேன். நல்லதுதானே அப்பா , என்றார் என் மகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்றேன் நான் . என் மகள் சிரித்துவிட்டு, அப்பா, தொலைக்காட்சி பேச்சைப் பதிவு செய்வதைப் பற்றி சொல்லியிருக்கின்றீர்களே, மறந்து விட்டீர்களே என்றார். என்ன ? என்றேன். அய்யா சுப.வீ அவர்கள் கலைஞர் டி.வி.யில் பேசுவது, இறையன்பு சார் புதுயுகம் டி.வி.யில் பேசுவது, அய்யா கு.ஞானசம்பந்தன் ஜெயா டி.வி.யில் பேசுவது எல்லாம், ஒரே நாளில் உட்கார்ந்து பேசிப்பதிவு செய்து  பத்து நாட்கள், பதினைந்து நாட்களுக்கு பேசி விடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றீர்கள். அவர்கள் 10 நாட்கள், பதினைந்து நாட்களுக்கு பேசுவதை ஒரே நாளில் பேசி விடுகின்றார்கள், நீங்கள் ரேடியோவில் நாலு நாட்களுக்கு பேசுவதை ஒரே நாளில் பேசமாட்டீர்களா ? , ஊடகத்தில்  பேச வேண்டும் என்றால் உழைக்கத்தானே வேண்டும் என்றார். ஆமாம் என்று சொல்லிவிட்டு நான் அமைதியாகி விட்டேன். பிள்ளைகளிடம் ரொம்ப விரிவாகப் பேசக்கூடாது போல....

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் நூலினை வாங்கிப் படிக்கின்றேன் ஐயா

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா. வாங்கிப் படியுங்கள். வீட்டு நூலகத்தில் வைக்க வேண்டிய புத்தகம்.