Saturday 25 March 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள் (2) --- வா. நேரு

 

                                   வேலை கிடைத்து வேலையில் சேராமல் திரும்பி வந்தேன்...


இந்தக் கட்டுரைகளின் நாயகர் திரு.வி.வீரி சார் அவர்கள் இப்போது இல்லை.2022,நவம்பர் 24-ஆம் நாள் கற்றுக்கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.கடந்த 22,23 ஆண்டுகளாக ஒரு நெருங்கிய நண்பரைப்போல பழகி அறிவுரைகள் கூறி ஆற்றுப்படுத்தியவர் அவர். மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் நான் வேலைபார்த்தபோது,அவரைப் பெரும்பாலும் வேலை நாட்களில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். மதுரை தல்லாகுளம் மைதானத்திற்கு அருகில் உள்ள கருப்பசாமி கோயில் என்பது மிகப்புகழ் பெற்றது. காலை 11 மணி அளவில் அங்கு கூட்டம் எதுவும் இருக்காது. உட்காருவதற்கு ஒரு நல்ல திண்ணை இருக்கும்.மாவட்ட கல்வி அதிகாரியாக(CEO) இருந்து ஓய்வு பெற்றாலும்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தி அதில் அவர் பொறுப்பிலும் இருந்தார்.அவரோடு தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்கள்,ஆசிரியராகப் பணியாற்றியவர்கள்,அவரோடு பேச விரும்புகிறவர்கள் என்று எல்லோரும் காலையில் 11 மணிக்கு கருப்பசாமி கோயில் திண்ணை அருகில் கூடுவார்கள். நானும் தேநீர் குடிக்க கிடைக்கும் இடைவேளையில் அல்லது மதியம் 1 மணிக்கு சாப்பாட்டு இடைவேளையில் அவரைப் போய்ப் பார்ப்பேன்.பேசுவேன். நாத்திகனான நான் கருப்பசாமி கோயில் திண்ணையில் அவரோடு உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து சில நண்பர்கள் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர் நிறையப்  புத்தகங்கள் படிப்பவர் என்பது தெரியவந்தது.நானும் தோளில் போட்டிருக்கும் ஒரு பையில் பெரும்பாலும் புத்தகங்கள் இருக்கும்.கொஞ்ச நாட்களில் நானும் அவரும் அவரவர் புத்தகங்களைப் பரிமாறக்கொள்ள ஆரம்பித்தோம்.


2000 ஆண்டுகளில் அவருக்கு வயது 60-தைத் தாண்டி இருந்தது.எனக்கு 36 வயது.நான் இருசக்கர வாகனம் வாங்கி அலுவலகத்திற்கு வர ஆரம்பித்திருந்தேன்.அவர் சைக்கிளில்தான் வருவார்.அவர் கருப்பசாமி கோயில் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அவரின் சைக்கிள் ஓரமாக இருக்கும்.ஒரு நாள் சைக்கிள் இல்லாமல் பஸ்ஸில் போகப்போகிறேன் என்றார். ஏன் சைக்கிள் ரிப்பேரா சார் என்றபோது. " இல்லை நிறுத்தி வைத்திருந்தேன்,யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.சரி,இல்லாதவன்தானே,எடுத்துப்போயிருப்பான்,விடுங்கள் " என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாளில் புது சைக்கிள் வாங்கி சைக்கிளில் வர ஆரம்பித்தார். அவர் ஆரோக்கியமாக இருந்த காலம்வரை,ஏறத்தாழ அவரின் 75,76 வயதுவரை மதுரையில் சைக்கிளில்தான் பயணம் செய்தார்.வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,சட்டைக் காலருக்குப் பின்னால் ஒரு கைக்குட்டை.ஒரு சைக்கிள் இதுதான் அவரின் அடையாளம்.


ஒரு முறை "சார், நீங்கள் ஆசிரியர் பணிக்குத்தான் வரவேண்டும் என்று சின்னப்பிள்ளையாக இருக்கும்போதே நினைத்தீர்களா?" என்று கேட்டேன். " இல்லை " என்றார். ஆசிரியர்கள் பணிக்கு வருபவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்குத்தான் வரவேண்டும் என்று படித்தவர்கள் இல்லை.எனது இலட்சியம் ஆசிரியர் பணிதான் என்று வரித்துக்கொண்டவர்கள் இல்லை.ஏதேனும் ஒரு பணிக்கு,வேலைக்கு என்றுதான் படிக்கின்றார்கள்.ஆனால் உலகத்திலேயேமிக உயர்ந்த பணியான ஆசிரியர் பணிக்கு வந்தபிறகு அந்தப் பணிக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டவர்கள், வடிவமைத்துக் கொண்டவர்கள், மாணவர்களின் நலனில் உண்மையான அக்கறை காட்டித் தங்களை மாற்றி ஆசிரியர் பணிக்கு,மாணவர்களின் நலனுக்குத் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள் என்றென்றும் மாணவர்கள் மனதில் நிற்கின்றார்கள்.அப்படித்தான் எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி சாரின் வாழ்க்கையும் இருந்திருக்கிறது.அவர் பணிக்கு வந்த காலம் 1960.நான் எல்லாம் பிறக்காத காலம்.தொலைபேசிகள் கூட இல்லாத,தகவல் தொடர்புகளே இல்லாமல் இருந்த காலம். தான் படித்த மதுரை தியாகராசர் கல்லூரியை நிறையப் புகழ்ந்து பேசுவார்.தன்னைப் போன்று கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு அறிவுக் கதவு திறக்கக் காரணம் அந்தக் கல்லூரிதான் என்பார்.அந்தக் கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள் பற்றியெல்லாம் நிறையச்சொல்வார்.


 பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,பேராசிரியர் அன்பழகன் போன்ற பெரும் தலைவர்கள் எல்லாம் தான் படித்த நேரத்தில் ,தங்கள் கல்லூரியில் வந்து பேசிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார். பெரும் பெரும் காங்கிரசு தலை வர்களும் அந்தக் கால கட்டத்தில் தங்கள் கல்லூரியில் வந்து பேசியதை எல்லாம் நினைவு வைத்துக் கூறுவார்.அந்தக் கல்லூரியின் நூலகத்தை எப்படியெல்லாம் தான் பயன்படுத்தினேன் என்பதைப் பற்றி எல்லாம் அடிக்கடி என்னோடு பேசிய நேரங்களில் குறிப்பிடுவார்.


1960-களில் வேலை வாய்ப்பு எல்லாம் எப்படி இருந்தது. எளிதாக இருந்ததா என்று ஒருமுறை கேட்டேன்.அதற்கு அவர் அளித்த பதிலை அவருடைய சொற்களிலேயே படியுங்கள்." வணக்கம். நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்தபொழுது பொதுவாக ஏதேனும் ஓர் அரசுப்பணி கிடைக்குமா? என்ற தேடல்தான் இருந்தது.தற்போது உள்ளது போலவே மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழிற்கல்வி முறை போன்ற பிரிவுகள் அன்றும் இருந்தன.அது போக வேறு என்னென்ன பணிகள் உள்ளன என்ற பொதுஅறிவு கூட எங்களுக்குத் தெரியாது.தேடிப்பிடித்து  பல பெரியவர்களை அணுகி நாம் அரசுப்பணிக்கு செல்ல நாம் செய்யவேண்டிய வேலைகள் என்ன என்ன என்பதனை அறிந்து அரசு இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்வு எழுதினேன்.அதில் வெற்றியும் பெற்றேன்.கோவை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டிருந்தது.நான் 1960-ல் பணியில் சேரச்சென்றபோது அப்போது அங்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் நான் ஒரு பட்டதாரியாக இருப்பதைக் கண்டு எனக்கு அறிவுரை கூறினார்."பட்டதாரிகளுக்கு உரிய வேலை இது இல்லை.நீங்கள் தொடர்ந்து படியுங்கள்.மேலும் முன்னேறி வரவேண்டும்.கல்லூரிப் படிப்பு வீணாகக் கூடாது " என்று கூறி என்னை அனுப்பி விட்டார். நானும் வந்து விட்டேன்".

உண்மையிலேயே 1960-ல் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தவருக்குத்தான் என்னைப் போன்ற வி.வீரி-சாரிடம் படித்த மாணவர்கள் எல்லோரும் நன்றி சொல்லவேண்டும். அவர் இவரைத் திருப்பி அனுப்பாவிட்டால், ஓர் அருமையான ஆசிரியர்,தலைமை ஆசிரியர் எங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்திருக்க மாட்டார்."வேலையில் சேராமல் திரும்பி வந்தீர்களா? ": வீட்டில் திட்ட வில்லையா?..மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லையா?மறுபடியும் ஒரு வேலை கிடைப்பது கடினம் என்று நீங்கள் நினைக்கவில்லையா ? " என்று தொடர்ந்து பல கேள்விகளை அவரிடம் கேட்டேன்.படிக்கும் காலத்தில் அவரிடம் கேட்ட கேள்விகளை விட மதுரைக்கு பணிக்கு வந்த பின்பு கேட்ட கேள்விகள் அதிகம். அவரின் பதில் அடுத்த கட்டுரையில்...

5 comments:

Anonymous said...

அருமையான அனுபவம் நேரு சார்.... தலைமையாசிரியர் கிரி சார்..என்ன பதில் சொல்லியிருப்பார்? என்ற ஆர்வத்தை தூண்டி, கட்டுரையை முடித்த இடம் அருமை..

முனைவர். வா.நேரு said...

நன்றி வினோத்...எங்கள் தலைமை ஆசிரியரின் பெயர் வீரி சார். அவருடைய சான்றிதழ் பெயரே வீரி(செட்டி) என்பது.

கருப்பையா.சு said...

நல்ல மனிதர்களின் செயல்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும். திரு வீரி செட்டி அதற்குத் தகுதியானவர். மிகவும் நன்று முனைவர்.நேரு.

முனைவர். வா.நேரு said...

எப்போதும் என்னையும் என் எழுத்தையும் ஊக்கப்படுத்தும் தங்களின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.எழுதி ஆவணப்படுத்துகிறேன் அண்ணே...

Anonymous said...

அருமை