Tuesday 21 March 2023

என்ன செய்யும் கவிதை?

 என்ன செய்யும் கவிதை?

எதை எதையோ செய்யும்...


"இருட்டில் வாங்கினோம்

இன்னும் விடியவே இல்லை" ..

எதார்த்தத்தை ஒரு சில 

வரிகளில் போட்டுடைத்து செல்லும்...


"எல்லாந்தான் படிச்சீங்க..

என்ன பண்ணி கிழிச்சீங்க..."

எனப் படித்தவனை

நார் நாராய்க் கிழிக்கும்...


மானே என்றாய் தேனே என்றாய்

மனுசி என்று எப்படா

எங்களை நினைக்கப்போறீங்க...?

என்று கோபத்தை எல்லாம்

கொட்டித் தீர்க்கும்...


"மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னைப் போல அவனைப்போல

மனுசங்கடா நாங்க மனுசங்கடா"

என மண்டையில் அடிக்கும்....


கறுப்பு உயிர்களும் உயிர்களே

இயக்கத்து தோழிகள்

கொட்டித் தீர்த்தார்களே...

பல நூற்றாண்டுக் கோபத்தை

எல்லாம்  கவிதைகளாக..

உலகம் முழுக்க பரவ வைத்தார்களே

அப்படிப் பரவவைப்பது கவிதை..

புரட்சியைப் பற்றவைப்பது கவிதை...


காதலை எழுதுவது மட்டும் கவிதையல்ல

உள்ளத்துக் கனலை எழுதுவது கவிதை

ஆர்ட்டீசியன் ஊற்று போல

அடக்குமுறைகளுக்கு எதிராக

பொங்கி வருவது கவிதை....

உணர்ச்சிகளை சொற்களுக்குள் செலுத்தி

வாசிப்பவனின் மனதில்

கருத்து வெடிகுண்டுகளை 

வெடிக்கச்செய்வது கவிதை...


உலகத்து கவிதைகளை 

எல்லாம் வாசிப்போம்...

அடக்குமுறைகளுக்கு எதிராக

ஆர்த்தெழுந்து கவிதையெழுதும்

கவிஞர்களை என்றும் நேசிப்போம்...

உலகக் கவிதை நாள் வாழ்த்துகள்..


                           வா.நேரு,

                            21.03.2023


No comments: