Monday 27 March 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(3)....முனைவர்.வா.நேரு

 

                                        வானத்தில் மிதப்பது போன்ற உணர்வு இருந்தது........


"வேலையில் சேராமல் திரும்பி வந்தீர்களா? ": வீட்டில் திட்ட வில்லையா?..மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லையா?மறுபடியும் ஒரு வேலை கிடைப்பது கடினம் என்று நீங்கள் நினைக்கவில்லையா ? " என்று கேட்ட  எனது அத்தனை கேள்விகளுக்கும் "இல்லை " என்ற பதிலைச்சொன்ன எங்கள் ஆசிரியர், " நான் தான் வீட்டில் மூத்த பிள்ளை,எனது அப்பா கடுமையான உழைப்பாளி,விவசாயி.படிப்பு,வேலை பற்றி அதிகம் தெரியாது. உனது விருப்பம் என்று எனது விருப்பத்தின்படியே விட்டு விட்டார் "என்றார்.


"சரி,வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்த பின்பு அடுத்ததாக என்ன செய்தீர்கள் ? " என்று கேட்டபோது 


" ஓராண்டு ஆசிரியர் பயிற்சியை புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முடித்து ஆசிரியர் பணிக்கு வந்தேன். நான் ஆசிரியர் பணிக்கு வந்த காலத்தில் தமிழ் நாடு அரசாங்கத்தில் பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்தார்.அப்போதுதான் கிராமப்புறங்களில் ஏராளமான அரசு உயர் நிலைப்பள்ளிகளைத் தோற்றுவித்தார்கள்.கல்லூரியில் படித்தவர்கள் கிராமபுறத்தில் சென்று வேலை பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.நானும் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.கிராமப்புற உயர் நிலைக்குப் பள்ளிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்டேன்.அதுவும் கொடைக்கானல் பகுதியில் பண்ணைக்காடு என்னும் கிராமத்தில் நியமிக்கப்பட்டேன் " என்று குறிப்பிட்டார்.ஆசிரியர் பணி முடித்தவுடன் அந்தக் காலத்தில் பட்டதாரி ஆசிரியருக்கு உடனே அரசு ஆசிரியர் வேலை கிடைத்திருக்கிறது.அன்றைக்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மிகக் குறைவு.தேவை அதிகமாக இருந்திருக்கிறது.


பண்ணைக்காடு என்னும் பேரூராட்சி பற்றி ,""மேற்கு தொடர்ச்சிமலையில் அடுக்கடுக்கு மலைத்தொடருக்குள் கடல் மட்டத்தில்  இருந்து 7200 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது பண்ணைக்காடு.. மலைகளின் இளவரசி எனப் புகழ் பெற்ற கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலக்குண்டு-வில்  இருந்து 32-வது மைலில் நாற்புற்மும் மலைகளாலும் மலையில் தோன்றும் நதிகளாலும் சூழப்பட்டு கடல் மட்டத்திலிருந்து 4250 அடி உயரத்தில் எங்கு நோக்கினாலும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் அமைந்துள்ள ஊர் பண்ணைக்காடு பேரூராட்சி ஆகும். பண்ணைக்காடு மேற்கு தொடர்ச்சிமலைகளின் கீழ் மிளகுசுழி. அருங்கனால் மற்றும் சோலைவயல் போன்ற ஆறுகளினாலும். நீர் வீழ்ச்சிகளிலிருந்தும் சுத்தமான குடிநீர் புவீஈர்ப்பின் மூலம் பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளிலும் தங்கு தடையின்றி தினசரி பண்ணைக்காடு பேரூராட்சி பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பது ஒரு வரப்பிரசாதமாகும். 

பண்ணைக்காடு, கொடைக்கானல் போன்ற கூடுதலான குளிர்ச்சியாகவும் இல்லாமல், கீழ் நாடுகள் போன்று கூடுதல் வெப்பத்துடன் இல்லாமல் அனைவரும் விரும்பும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு கோவிலகள் அதிகமாக உள்ளது. பளியர்... போன்ற மலைச் சாதியினரும், மண்ணாடியார் என்ற இனத்தவரும் ஆங்காங்கே குடிசைகள் போட்டு தங்கி, காடுகளை அழித்து பண்ணைகள் அமைத்து வாழ்ந்த காரணத்தினால் பண்ணைக்காடு எனப் பெயர் பெற்றிருக்கலாம் என ஆன்றோர் கூறுகின்றனர். கற்கால மனிதர்கள் வசித்து வந்த பாறை வீடுகள் இப்போதும் காண இயலும் மற்றும் எதிரொலிக்கும் பாறை,. மாவிலிப்பாறை ஆகிய சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளது. தேக்கு, குமுழ், சிங்கிட்டார். நாவல், வேங்கை, ஆமான் மற்றும் சந்தனம் போன்ற மரவகைகளும், முக்கனி வகைகளுடன் ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, சீத்தா, அவகோட, நாரத்தை மற்றும் எலுமிச்சை போன்ற கனி வகைகளும் காப்பி, இஞ்சி, ஏலம், மிளகு, கொக்கோ, நெல்லி , கடுக்காய் போன்ற பணப்பொருட்களும், பீன்ஸ், செளசெள, முட்டைகோஸ்.கராட், பீட்ருட், காலிபிளவர் போன்ற காய்கறிகளும், கலைமன், சருகுமான், கேலையாடு, வரையாடு, காட்டு எருமை, காட்டுப் பன்றிகள், காட்டு முயல், சிறுத்தை, வரிப்புலி, மந்தி, குரங்குகள், வெளவால், போன்ற விலங்குகளும் காட்டு கோழி, காடை,கெளதாரி, பச்சைபுறா, கரும்புறா, தெல்லுபுறா, மாப்புறா நிறைந்துள்ள பகுதியே பண்ணைக்காடாகும். பட்டம் பெற்று பதவிகளில் இருக்கின்ற தொழிலதிபர்கள். பெரும் விவசாயப் பெருங்குடி மக்கள் நிறைந்த்து இவ்வூராகும்....." என்று இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.


ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்தவுடன் நேரடியாகக் களப்பணி.அதுவும் மலைப்பகுதிக் கிராமத்தில்..எப்படி இருந்தது அந்த அனுபவம்.அவரின் சொற்களில் இருந்தே...


"உண்மையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றிருந்தாலும் கூட சமூகப்பயிற்சி ஓராண்டாவது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கவெண்டும்.அது இல்லாததால் கல்லூரி மாணவர்களைப் போலவே நாங்களும் நடந்துகொண்டோம்.அதாவது கல்லூரியில் நாம் செய்யும் பணி உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் மனதில் ஊறிய ஒன்று.இதில் எந்த வகையிலும் சுய நலம் தலைகாட்டவே இல்லை.எங்களின் அந்த மனப்பாங்கு மாணவர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பணியில் இருக்கும்போது வானத்தில் மிதப்பது போன்ற உணர்வு இருந்தது.இந்த சிந்தனைகள் இருந்ததனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நன்மைக்காக நாங்கள் செயல்பட முடிந்தது" என்று குறிப்பிட்டார்.


ஆசிரியராக பணியில் சேர்ந்தவுடன் எல்லாம் நமக்குத் தெரிந்துவிடுமா? உறுதியாக மாணவர்களிடம் பழகப் பழக,கற்பிக்க கற்பிக்கத்தான் தெரிந்தது எது தெரியாதது எது என்பது தெரியும். ஆசிரியராக முதன் முதலில் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை " கல்விக்காக அரசு எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுத்துக்கொண்டுதான் இருந்தது.அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டியதுதான் இருந்தது.அதைச்செய்தோம்.வகுப்பில் பாடம் கற்பிக்கும்போதுதான் ஆசிரியர்களாகிய எங்களுக்கு என்ன தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டோம் .அதாவது கற்பிப்பதுதான் பாடப்பகுதியிலும் சரி,மாணவர்களைக் கையாளுவதிலும் சரி,எங்களுக்கு இருந்த குறைபாடுகளைத் தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருந்தது.இந்தக் குறைகளைச் சரி செய்வதற்கு ,தவறு இல்லாமல் செய்வதற்கு ,ஆலோசனைகள் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல்தான் இருந்தது. நம்மை நாமே மாற்றிக்கொண்டால்தான் உண்டு என்ற நிலைதான் இருந்தது " என்றார்.

அன்றைய காலகட்டத்தில் 1960-களில் ஓர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு இருந்த அதிகாரம் எவ்வளவு?...அவர் சொன்ன சில தகவல்கள் வியப்பாக இருந்தது..அடுத்த கட்டுரையில் பார்ப்போம் அதனை...



(குறிப்பு : பண்ணைக்காட்டைச்சார்ந்த ,திரு.வீ.வீரிசெட்டி சாரின் பழைய மாணவர்களுக்கு இன்றைக்கு 78,80 வயது இருக்கும் ...இந்தப் பதிவைப் பார்க்கின்ற பண்ணைக்காட்டைச்சார்ந்த தோழர்கள்,நண்பர்கள் 78-80 வயதினைச்சார்ந்தவர்கள் யாரேனும் வீரிசெட்டி சாரின் பழைய மாணவர்கள் பண்ணைக்காட்டிலோ அல்லது வேறு ஊரிலோ இருக்கிறார்களா என்பதனை விசாரித்து ,இருந்தால் அவர்களிடம் கேட்டு,அவர்களின் நினைவுகளையும் பின்னோட்டமாக இந்தப் பதிவில் பதிவிடக் கேட்டுக்கொள்கின்றேன்).


No comments: