Tuesday, 4 March 2025

தமிழில் குறள்வெண்பா எழுதும் அமெரிக்கர்…வாழ்க்கையையும் சேர்த்துச் சொல்லவேண்டும்… (சென்ற இதழ் தொடர்ச்சி)- முனைவர் வா.நேரு

தமிழில் குறள்வெண்பா எழுதும் அமெரிக்கர்…- முனைவர் வா.நேரு

March 4, 2025 

வாழ்க்கையையும் சேர்த்துச் சொல்லவேண்டும்…

(சென்ற இதழ் தொடர்ச்சி)

கேள்வி: திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. சிலர் இன்பத்துப் பாலைப் படிப்பதில்லை; அதைப் பற்றி பேசுவதில்லை; இன்னும் கேட்டால் இன்பத்துப் பாலைப் படிக்காதே என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். உங்களுடைய கருத்து என்ன?



பதில்: இது தப்பான கருத்து. மூன்றையும் படிக்க வேண்டும். சில பேர் காமத்துப்பால் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் அய்யய்யோ, இது ஏதோ காமத்தைப் பற்றியது என்று நினைப்பார்கள். அப்படி இல்லை. திருக்குறளில் இருக்கும் காமத்துப்பால் காமத்தைப் பற்றியது அல்ல, மனதைப் பற்றியது. ஒரு தலைவன், தலைவி அவர்களுடைய மனதைப் பற்றியதுதான் காமத்துப்பால், அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையா?. காமத்துப்பாலில் வரும் ஊடலைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி அல்லது இரண்டு நண்பர்களுக்குள் பிரச்சனைகள் வரும். அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, பிரிந்து போன பின்பு நாம் புரிந்து கொள்ளவில்லையோ என்பதைப் புரிந்து கொள்வதற்குத் திருக்குறள் உதவும். அதன் மூலம் பிரிந்த உறவு கூடி மேலும் பலமாகும். முன்பிருந்ததைவிட வலுவாகும்.

கேள்வி: எல்லோருக்கும் எல்லா நாடுகளுக்கும் செல்வம் சேர்க்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. திருவள்ளுவரும் செல்வத்தைச் சேருங்கள் என்று சொல்கின்றார். இன்றைக்குக் கார்பரேட் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் செல்வத்தைச் சேருங்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் சேர்க்கச் சொல்லும் செல்வத்திற்கும், திருவள்ளுவர் சேர்க்கச் சொல்லும் செல்வத்துக்கும் என்ன வேறுபாடு?

பதில்: முதலில் செல்வம் என்றால் என்ன என்பது தெரிய வேண்டும்; புரிய வேண்டும். கல்வி என்னும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறள்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கல்விதான் செல்வம். மற்றவை எல்லாம் செல்வங்கள் அல்ல. செல்வம் என்றால் என்ன என்று நான் சொல்லித் தருகிறேன் என்று திருவள்ளுவர் வருகிறார். வந்து கல்விதான் செல்வம் என்று சொல்கின்றார். இதற்குப் பன்னாட்டு நிறுவனத்தார் என்ன செய்வார்கள்? ஒன்றும் செய்யமாட்டார்கள்.

திருக்குறளில் இருக்கும் காமத்துப்பால் காமத்தைப் பற்றியது அல்ல, மனதைப் பற்றியது.
ஒரு தலைவன், தலைவி அவர்களுடைய மனதைப் பற்றியதுதான் காமத்துப்பால்

கேள்வி: கல்வி அதிகாரத்தில் 10 குறள்கள் கல்வியின் தேவை பற்றியும் கல்லாமை அதிகாரத்தில் 10 குறள்கள், கற்காமல் இருப்பதன் துன்பம் பற்றியும் இருப்பதைப் பற்றித் தங்கள் கருத்து…

பதில்: ஆமாம், மிகச்சிறப்பான அதிகாரங்கள். திருக்குறள் எல்லோருக்குமானது. ஒரு குறளைப் பார்க்கும்போது அது யாருக்கு? அரசருக்கா, அமைச்சருக்கா, மக்களுக்கா என்பதை நாம் பார்க்க வேண்டும். கல்வி இல்லை என்றால் செஸ் போர்டு இல்லாமல் செஸ் விளையாடுவது போல என்றும், தோற்றுப் போய்விடுவீர்கள் என்றும் கல்லாமை அதிகாரத்தில் கூறுகிறார்.

கேள்வி : திருக்குறள் பல
மொழிகளில் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளது. திருக்குறளை மொழி பெயர்ப்பது பற்றித் தங்களின் கருத்து?

பதில் : திருக்குறளின் கருத்தை மட்டும் மொழி பெயர்ப்பது, அது வெறும் உரை.அது மொழிபெயர்ப்பு ஆகாது. திருக்குறளில் கருத்து மட்டும் அல்ல ஓசை நயம் இருக்கிறது, இசை இருக்கிறது, நகைச்சுவை இருக்கிறது.விளையாட்டுத் தன்மை இருக்கிறது.ஆழம் இருக்கிறது. இன்னும் எத்தனையோ இருக்கிறது.இது அனைத்தும் மொழிபெயர்ப்பிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த மொழிக்காரரும் விரும்பிப் படிப்பார்கள்.உலகத்தில் இன்னும் பலர் திருக்குறளைப் படிக்கவில்லை. மொழிபெயர்ப்பையும் ஒரு பாட்டாகவோ, செய்யுளாகவோ கொடுக்கவேண்டும். இரசித்துப் படிக்கும்படி மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.

கேள்வி: பிள்ளைகளுக்குத் திருக்குறளின் மேல் ஆர்வம் உண்டாக என்ன செய்ய/வேண்டும்?

பதில்: பல வகைகளில் செய்யலாம். ஒரு குறளுக்கு ஏற்ப நாடகம் போடச் சொல்லலாம்.

கேள்வி: அமெரிக்காவில் உள்ள மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள், ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஒரு திருக்குறள்.அதன் கருத்தை விளக்கும் வகையில் ஒரு சிறிய கதை. அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?

பதில்: நல்ல முயற்சி.கருத்தோடு வாழ்க்கை யையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட ஒரு திருக்குறளை நான் எப்போது, எப்படி, எந்த நேரத்தில் புரிந்து கொண்டேன் என்று எழுதவேண்டும். 20 வயதில் அல்லது 40 வயதில் நமக்கு ஒரு குறளின் பொருள் முழுமையாக விளங்கும். நாம் ஒரு சிக்கலில் இருக்கும் போதோ, மகிழ்ச்சியில் இருக்கும்போதோ குறளின் பொருள் நமக்கு முழுமையாக விளங்கும். அதை எழுத வேண்டும். திருக்குறள் நமது சொத்து. வாழ்க்கை முழுக்கப் பயன்படும் சொத்து.

கேள்வி: கல்வி என்பது இன்று அகடாமிக்காகப் பார்க்கப்படுகின்றது. கல்வி என்பதன் அளவுகோலாகத் திருவள்ளுவர் எதைக் குறிப்பிடு
கிறார்?..

பதில்: திருவள்ளுவர் குறிப்பிடும் கல்வி அகடாமிக்கு உரியது மட்டுமல்ல; வாழ்க்கைக்கு உரியது. அரசனாக வேண்டுமா? நீ எப்படிக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத் திருக்குறள் சொல்கிறது. அப்புறம், மெய்ப்பொருள் காண்பதற்கான அறிவைக் கற்றுக்கொள்வதுதான் திருவள்ளுவர் கூறும் கல்வி.

ஓர் அய்ம்பது நிமிட உரையாடல். ஆசை ஆசையாக திருக்குறளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார். மிக அருமையாக இருந்தது.மிகவும் தோழமையோடு திருக்குறள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் (1-15),2025

சென்ற இதழின் இணைப்பு 

\https://vaanehru.blogspot.com/2025/02/blog-post_75.html


No comments: