Tuesday 6 April 2021

திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்....

 

அவள் இருதலைக் 

கொள்ளி எறும்பு

போலத் திணறுகிறாள்..

எது சரி என

முடிவெடுக்க முடியாமல்

திணறுகிறாள்...


நடக்கப்பழகிய 

காலம் முதலே 

அவள் மனதில்

கடவுள் நம்பிக்கையை

புகுத்திய பெற்றோர்.....


இதிகாசப் புராணக் 

கதைகள் எல்லாம்

உண்மையென்றே நம்பி

கேட்டு வளர்ந்த பெண் அவள்..


தும்மும்போதும்

கதவில் இடிக்கும்போதும்

இடியோசை கேட்கும்போதும்

இறைவனை அழைத்தே

பழக்கப்பட்டவள் அவள்....


எத்தனை முறை 

அழைத்திருக்கிறாய் கடவுளை...

எப்போதாவது வந்திருக்கிறாரா?...

என ஒரு கேலிப்புன்னகையோடு

கேள்விகளாகக் கேட்கிறான்

காதல் கணவன்...


'சாதலும் வாழ்தலும் அற்ற

இடமாய்' 

காதல் களிப்பினில்

கட்டிலில் திளைத்திருக்கும்

வேளையில்

எல்லா இடத்திலும் 

இருக்கும் கடவுள்

இப்போதும் பார்த்துக்

கொண்டிருக்கிறாரா? 

எனக் கேட்கிறான்....

காது ஓரத்தில்

முத்தங்களைக் கொடுத்தபடி...


அன்பு மழையில் 

நனைக்கும் கணவனின்

அன்பினில் எக்குறையும்

இல்லை இல்லறத்தில்...


நம்பிக்கைகள் மேல்

கேலி கிண்டல்களின்

வழியாக வந்து விழும்

அடியால்

உண்மை எது?பொய் எது?

என முடிவெடுக்க முடியாமல்

திக்கித் திணறி

இல்லறத்திற்குள் 

நுழைந்தவுடனேயே

முடிவெடுக்க முடியாமல்

திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்,,,


                           வா.நேரு,07.04.2021

No comments: