Thursday 29 April 2021

நாய் எரிக்கும் இடத்தில்........

 

நாய் எரிக்கும் இடத்தில் 

நாட்டுக் குடிமக்களை

எரித்துக்கொண்டிருக்கிறார்கள்

எதற்கு இத்தனை 

ஆயிரம் கோயில்கள் நம் நாட்டில்

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


பரந்து கிடக்கிறது பிரபஞ்சம்

இருண்டு கிடக்கிறது 

சாதிகளால்,மதங்களால்

இந்தியனின் மனம்...

ஒட்டு மொத்தமாய்

ஒரே வண்டியில் 

22 சடலங்கள்....

வர்ணப்படி-சாதி பார்த்து 

அடுக்கினாயா இறந்த உடல்களை?

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப்

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


அரசு இடத்தை எல்லாம்

ஆக்கிரமித்து

வழிபாட்டுத்தலங்கள் 

அமைத்தார்கள்...

அமைக்கிறார்கள்....

எல்லா வெற்று இடங்களையும்

சடலம் எரிக்கும் சுடுகாடுகளாய்

மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

நம் தலைநகர் வாசிகள்..

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப்

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது..


மற்ற நோயாளிகளுக்கு

மருத்துவமனைகளில்

குருதியே கிடைக்கவில்லை....

எந்த மதமானால் என்ன?

எந்த சாதியானால் என்ன?

எனது உறவின் உடம்பில்

ஓடுவதற்கு 

அவர் உயிர் பிழைப்பதற்கு

கொஞ்சம் உங்கள் குருதி

கொடுக்க இயலுமா?

வேண்டுகோள்கள் வந்தவண்ணம்....

எது தேவை மக்களுக்கு?

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.. 


செத்து விழுகிறார்கள் மக்கள்...

இந்த நிலையில் 

தேவையா  ஐ.பி.எல்.

கிரிக்கெட்டு விளையாட்டுகள்?

விளையாடிய வீரரே

வெறுத்துப்போய் வெளியேறுகிறார்..

எது தேவை மக்களுக்கு?

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.


ஐ. நா.வின் உதவிகள்

எங்களுக்கு வேண்டாம்..

சீனாவின் ஒத்துழைப்பு

எங்களுக்கு வேண்டாம்...

இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

வெளிநாட்டு பத்திரிக்கைகள் எல்லாம்

திமிர்பிடித்த....

திறனற்ற மோடி அரசென

விமர்சித்திருக்கின்றன....


அகண்ட பாரதக்கனவு காணும்

ஆட்சியாளர்கள்

நாட்டின் அவலங்களைத் 

திரையிட்டு மறைக்க நினைக்கிறார்கள்...

ஆக்ஸிஜன் தேவை எனக் ககறியவர்

மேல் வழக்குப் பதிவு

சாமியார் ஆளும் உ.பி..யில்..

எப்படிப்பட்ட  ஆட்சி 

தேவை மக்களுக்கு.?..

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...



உடை வெளுக்கும் தோழரைக்

கடவுள் முன்னேற்றுமா?

அவர் வளர்க்கும்

கழுதை முன்னேற்றுமா ?

எனக் கேட்ட புரட்சிக்கவிஞரின்

பிறந்த நாள் இன்று....

கடவுளின் பெயரால் 

கலகம் செய்து

ஆட்சியைப் பிடித்தவர்கள்

வெறும் காட்சியாளர்களாய்...

மூட நம்பிக்கை முடைநாற்றம்

வீசுகின்ற பழமைவாதிகளாய்...

எப்படிப்பட்ட  ஆட்சி 

தேவை மக்களுக்கு.?..

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


                                  வா.நேரு,

                                         29.04.2021




1 comment:

கருப்பையா.சு said...

கவிதையில் உங்கள் கோபமும் வருத்தமும் தெரிகிறது.இந்த பாசிஸ்டுகள் ஆட்சியில் சுடுகாடுகள் கூட அமைதியாக இல்லை.